Raja Muthirai Part 2 Ch62 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 62 படை நகர்ந்தது
Raja Muthirai Part 2 Ch62 | Raja Muthirai | TamilNovel.in
பாண்டியனின் நான்காவது படைப்பிரிவு ஒரு பாவையின் கீழ் இயங்கும் என்று வீரபாண்டியன் கூறியதுமே அதை ஆட்சேபித்த உபதலைவர்கள் அது எப்படி இயங்கும் என்பதைக் கேட்டபின் திக்பிரமையே அடைந்தார்கள். “இது தவறு இளவரசே! கேவலம் வேவு பார்க்கும் ஒரு பெண்ணை இத்தகைய முக்கியப் பணிக்கு ஏவுவது தவறு,” என்றான் ஓர் உபதலைவன்.
“ஏன் எங்களில் ஒருவர் அந்தப் பணியைச் செய்ய முடியாதா?” என்று வினவினான் இன்னோர் உபதலைவன்.
“இதை விட்டுவிடு தம்பி, குறிஞ்சி அழிந்து விடுவாள்,” என்று பாண்டிய மன்னனும் கூறினான்.
வீரபாண்டியன் குறிஞ்சிக்குப் பணித்திருந்தது. அத்தனை பயங்கரமான, துணிகரமான செயல். “பாண்டிய மன்னரின் எரிபரந்தெடுத்தல் கொள்கையின் விளைவாகவும் அவர் காட்டிய கருணையின் விளைவாகவும் நமது படையில் சேர்ந்திருக்கும் ஆயிரம் வீரர்கள் நமது படையின் நான்காவது பிரிவாகப் பணியாற்றுவார்கள். ஆனால் அந்த நான்காவது பிரிவு நம்முடன் பரலியின் பிரதான: வாயிலுக்கு வராது. குறிஞ்சியின் தலைமையில் பரலிக்கு அரைக்காத தூரத்துக்கு முன்பே மலையை விட்டிறங்கிக் கடலோரப் பாதை வழியாக வடதிசையில் பரலி மாநகருக்குள் நுழையும்,” என்று கூறிக்கொண்டே போன வீரபாண்டியனை இடைமறித்து. உபதலைவர்கள் தங்கள் ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள். அந்த ஆட்சே பணையை ஏற்றுக் கொண்ட முறையில்தான் பாண்டிய மன்னனும் தன் கருத்தைத் தெரிவித்தான். அவன் கருத்தைத் தெரிவித்த பின்பு இன்னோர் உபதலைவனும் கேட்டான், “வடக்கு வாசலைக் காவல் புரியும் பலமான சேரர் படையை இந்த ஆயிரம் வீரர்கள் எப்படித் தாக்கி வெற்றி பெற முடியும்?’ என்று.
“தவிர அங்கு சாதாரண மக்களுக்கும் ஆயுதங்கள் அளிக்கப்பட்டிருப்பதாகவும், அதுவும் பெருத்த கும்பலென்றும் செய்தி கிடைத்திருக்கிறதே,” என்று ஒத்துப் பாடினான் இன்னோர் உபதலைவன்.
இத்தனை ஆட்சேபணைகளையும் காதில் வாங்கிக் கொள்ளாத வீரபாண்டியன் புலித்தோலைக் கூடாரத்துத் தூணொன்றில் அறைந்து, “இதைக் கவனியுங்கள்” என்று அதிலிருந்த பல கோடுகளையும் குறிகளையும் காட்டித் தனது போர்த் திட்டத்தை விளக்கலானான். “இதுதான் பரலிமா நகரின் கிழக்குக் கோட்டை வாயில். இதுதான் அதன் எதிரில் காட்டு முகப்பை அழித்ததால் ஏற்பட்டுள்ள இடைவெளி, அந்த இடைவெளியையும் தாண்டி மலையின் மேற்பகுதியில் இன்னும் அடர்த்தியான காடு இருப்பதை இந்தக் குறிகள் காட்டுகின்றன. காட்டின் முகப்பை சேரன் அழித்தற்குக் காரணம் அதன் மறைவில் நாம் கோட்டைச் சுவரை அணுகாதிருப்பதற்குத்தான். தவிர, நமது அம்புகளும் வேல்களும் வெறும் பொறி வீச்சினால் மட்டும் கோட்டைப் பாதுகாப்பை அழிக்க முடியாதிருப்பதற்கும் அந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே நமது விற்பொறிகளும் வேல் பொறிகளும் காட்டு மறைவிலிருந்து வாள்களையும் வேல்களையும் வீசினால் அவை கோட்டைச்சுவரை அணுகா. நாம் அந்தப் பகிரங்க இடை வெளியில் இறங்கினாலோ கோட்டை விற்பொறிகளும் வேல் பொறிகளும் நம்மை அழித்துவிடும். நமது நிலைமை புரிகிறதா?” என்று வினவினான் வீரபாண்டியன்.
“புரிகிறது,” என்று ஓர் உபதலைவன் சொன்னான்.
“அபாயமான நிலைமைதான்,” என்றான் இன்னொருவன்.
அப்படிச் சொன்ன இருவர் குரலிலும் கூட அச்சம் சிறிதும் ஒலிக்காததையும், தான் கேட்பதற்குப் பதில் தான் அவர்கள் சொன்னார்களேயொழிய அந்த ஆபத்தைப் பற்றி அவர்களுக்கு லவலேசமும் லட்சியமில்லாததையும் கண்ட இளவரசன் பாண்டியர் நெஞ்சுறுதியை உள்ளுக்குள் வியந்து கொண்டான். அந்த வியப்பினால் வலுத்த குரலுடன் மேலும் சொன்னான்: “ஆகையால் தான் இடங்கணிப் பொறியும், எரிமுகப் பேரம்பும் கலந்த புதுப்பொறிகளை நாம் செய்தோம். இந்தப் பொறிகள் பத்தும் நம்முடன் வரும். மலையின் மேற்பகுதியில் நம்முடனிருக்கும். நம்முடன் என்றால் நானும் பாண்டிய மன்னரும் இருக்கும் நடுப்பகுதியில் இருக்கும். சமயம் வரும்போது அதை உபயோகப் படுத்துவோம். நிற்க. பணிப்பெண் குறிஞ்சி அழைத்துச் செல்லும் நான்காவது பிரிவு பரலிக்கு அரைக்காத தூரமிருக்கையில் மலையை விட்டிறங்கிக் கடலோரப் பாதையில் செல்லும். ஆனால் படைப் பிரிவாகச் செல்லாது. எரிபரந்தெடுத்தல் கொள்கையால் பாதிக்கப்பட்ட சாதாரண மக்களாக ஆயுதந்தரிக்காமலும் போர்க்கோலமின்றியும் கூட்டம் கூட்டமாக அணிவகுப் பின்றிச் சென்று கடற்கரையோரத்திலிருக்கும் சாதாரண மக்களோடு கலந்து கொள்ளும். இப்பொழுது சேரன் கையாளும் கொள்கை காரணமாக அவர்களுக்குச் சேரர் படைத்தலைவர்கள் ஆயுதங்களை அளிப்பார்கள். இந்த ஆயிரம் பேரும் சேரநாட்டு ஆயுதங்களைப் பெற்று வடக்குவாசல் மக்களோடு சேர்ந்துவிடுவார்கள். சமயம் வரும்போது தாக்குவார்கள்.” என்று.
“எப்படித் தாக்குவார்கள்? திடீரென்று அணி வகுத்தா? பணிப்பெண்ணின் தலைமையிலா?” என்று ஓர் உபதலைவன் கேட்டான்.
”அணிவகுத்தல்ல. அணிவகுத்து வரும் நமது படையைத்தான் சேரன் அங்கு எதிர்பார்க்கிறான். அணி வகுத்து வரும் படையை எதிர்க்க சாதாரண மக்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்துப் பயிற்சியும் அளிக்கிறான்,” என்றான் . வீரபாண்டியன்.
“பயிற்சி அத்தனை சுலபத்தில் வரக்கூடியதா?” என்று வினவினான் இன்னோர் உபதலைவன்.
“வரக்கூடியதல்ல. அது சேரனுக்கும் தெரியும். பயிற்சியற்ற சாதாரண மக்கள் கூட்டத்தை நமது படை முன்பு தள்ளினால் நாம் அவர்களைக் கொல்லத் துணிய மாட்டோம். போர் செய்து அழிக்கவும் மாட்டோம். என்ன செய்வதென்றறியாது குழம்புவோம். நமது அணிவகுப்பும் பின் வாங்கும், அல்லது குழப்பத்தில் கலைந்துவிடும் என்று சேரன் நினைக்கிறான். அப்படி அங்கு படை ஏதும் செய்யமுடியாத நினையைச் சிருஷ்டித்திருப்பதால் நமது தாக்குதல் அந்தப் பகுதியில் ஏற்படாதவாறு செய்து விட்டான். ஆகவே அணிவகுத்துத் தாக்கக்கூடிய படை அங்கு பயனில்லை. அணிவகுக்காமல் தாக்கக்கூடிய படை, தந்திரத்தால் சாதாரண மக்களாக உள் நுழையும் படைதான் அங்கு தாக்க முடியும்” என்று கூறிய வீரபாண்டியன் மறுபடியும் புலித்தோலை நோக்கித் திரும்பி, “இதுதான் பரலியின் வடக்கு வாசல். இதைத்தான் கடலோரப் பாதை தொடுகிறது. இங்கு கோட்டைக்குள்ளும் வெளியிலும் சாதாரண மக்களின் பெருங்கூட்டம் இருக்கிறது. வெளியிலுள்ள மக்களுக்குத் தினசரி காலையும் மாலையும் போர்ப் பயிற்சி அளிக்கப்படுகிறது பலவந்தமாக. இந்த மக்களுடன் குறிஞ்சி நமது ஆயிரம் வீரர்களைக் கலந்து விடுவாள். அவள்கூட அதற்கு முயற்சி எடுக்க அவசியமில்லை . வடக்கு வாசல் சேர வீரர்களே அதற்கு வழி செய்வார்கள். நமது வீரர்களும் எரிபரந்தெடுத்தலால் கஷ்டப்பட்டு வந்த மக்களாதலால் சேரன் படைத் தலைவர்கள் அவர்களுக்கு ஆயுதம் கொடுப்பார்கள். பயிற்சியும் கொடுப்பார்கள்…” என்றான் வீரபாண்டியன்.
மேலும் சொன்னான் உணர்ச்சிமிகுந்த குரலில்: “இதோ கடற்கரைப் பகுதி இங்கு நீர் அலைகள் தொடுமிடத்திற்கு முன்பே பரலிக் கோட்டை மதில்சுவர் நின்றுவிடுகிறது. அது நிற்குமிடத்திலிருந்து வெறும் திறந்த வெளி, மணல். அந்த இடத்திற்கு நேர் எதிரே திறந்த வெளியைப் பாதுகாத்த வண்ணம் சேரன் போர்க் கப்பல்கள் நிற்கின்றன. அங்கு படை சென்றால் அழிந்து விடும், போர்க் கப்பல்கள் மீதுள்ள விற்பொறிகளால் ஆனால் சாதாரண மக்கள் அழியமாட்டார்கள்…”
இங்கே சற்று நின்று அண்ணனையும் உபதலைவர்களையும் நோக்கினான் வீரபாண்டியன். அவன் சொல்லியது அவர்களுக்குத் தெள்ளென விளங்கியது. ”அந்தப் பகுதியில் குறிஞ்சியைச் சேர்ந்த ஆயிரவர் இரவிலும் பகலிலும் சஞ்சரிப்பார்கள்,” என்பதை உணர்ந்தார்கள் உபதலைவர்கள். ஆனால் அவர்களைவிட ஒருபடி அதிகமாகத் தம்பியின் திட்டத்தை உணர்ந்து கொண்ட ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் சிங்கக் கண்கள் திடீரென ஜொலித்தன. தம்பியின் கண்களும் அண்ணனின் கண்களும் அரைவிநாடி சந்தித்தன. அந்த அரை விநாடியில் ஆயிரம் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டன. அதன் விளைவாக சுந்தரபாண்டியனே பேசினான்: “இப்படி நடமாடும் நமது வீரர்கள் இராக்காலத்தில் போர்க்கப்பல்களுக்கு தீ வைத்து விடமுடியும். கடற்படைக்குச் சேதமேற்படுத்தவும் முடியும். கப்பல்களை அரண்போல் நெருக்கமாக ஒரே இடத்தில் நிறுத்தியிருக்கிறான் சேரன், நாம் அந்தப் பகுதியில் வந்தால் சமாளிக்க. ஆகவே ஒரு கப்பலைப் பற்றும் தீ மற்ற கப்பல் களுக்கும் வெகுவிரைவில் பரவிவிடும். தவிர இது வட காற்று வீசும் காலம்,” என்றான் ஜடாவர்மன். ஆனால் ஓர் ஆட்சேபணையையும் உதிரவிட்டான் மன்னன். இருப்பினும் குறிஞ்சியின் நிலைமை இதில் கஷ்டமானது. அவளை வீரர்கள் நன்கறிவார்கள். அரண்மனைப் பாங்கியாக அரசன் அபிமானத்துக்குப் பாத்திரமானவளாகப் பெயர் வாங்கியிருப்பதால் படைத் தலைவர்களும் அறிவார்கள். அவள் பிடிபட்டால் அவள் கதி என்னவாகுமென்று சொல்ல முடியாது. பெண்ணைப் பலி கொடுத்து வெற்றி பெறுவது வெற்றியும் ஆகாது,” என்றும் சுட்டிக் காட்டினான்.
“குறிஞ்சியைப் பிடிக்கலாம் சேரர்படைத் தலைவர்கள். ஆனால் அவள் சேர மன்னனுக்கு உதவியாகச் செல்லப் போவதால் அபாயமும் எதுவும் ஏற்படாது,” என்றான் வீரபாண்டியன்.
சுந்தரபாண்டியன் தம்பியை ஏறெடுத்து நோக்கினான். “என்ன! குறிஞ்சி சேரமன்னனுக்கு உதவப் போகிறாளா?” என்று வினவினான் வியப்புடன்.
தம்பியின் பதில் அண்ணனையும் தூக்கிவாரிப் போட்டது.
“ஆம். நம்மை வேவு பார்த்து அவள் செல்லட்டும். நமது ஆயிரவர் கடற்கரைப் பொதுமக்களுடன் கலந்ததும் அவள் அரண்மனைக்குச் சென்று நமது படைப்பிரிவுகள் கிழக்கு வாயிலுக்கெதிரே வந்துவிட்டதையும், நமது பொறிகளின் அபாயத்தைப்பற்றியும் சொல்லட்டும்,” என்றான் வீரபாண்டியன்.
இதைக் கேட்ட உபதலைவர்கள் பதின்மரும் ஒரே சமயத்தில் ஆசனங்களிலிருந்து துள்ளி எழுந்தார்கள். “இது தற்கொலையாகும். எதிரிக்கு நமது படைகளின் நிலைமையைச் சொல்வது என்ன விவேகம்?” என்று தைரியத்துடன் கேட்கவும் செய்தனர்.
வீரபாண்டியன் புலித்தோலிருந்த இடத்தைவிட்டுத் திரும்ப அவர்களை நோக்கினான். ”எதிரிக்கு நமது பலத்தைத் தெரிவித்து அவனை வெற்றி கொள்வது சிறப்பல்லவா?” என்று கேட்கவும் செய்தான்.
“வெற்றி கண்டால் சிறப்புதான் ” என்றான் ஓர் உபதலைவன். அவர்கள் அனைவரும் தனது திட்டத்தை ஆட்சேபிப்பதைப் புரிந்துகொண்ட வீரபாண்டியன் மன்னனை நோக்கினான்.
எப்பொழுதும் தர்மயுத்தத்தை விரும்பும் ஜடாவர்மன் கண்களில் மகிழ்ச்சி துளிர்த்தது. “அதுதான் சரி தம்பி. சேரன் நமது படைபலத்தை, நிற்குமிடத்தை. பொறிகளின் பயங்கரத்தை உணர்ந்து கொள்ளட்டும்,” என்று கூறினான்.
உபதலைவர்கள் மன்னன் உத்தரவுக்குச் சிரம் தாழ்த்தினார்கள். அன்று மாலையே படைகள் நகர்ந்தன. கொம்புகள் ஊதப்பட்டுப் பந்தங்கள் அசைந்ததும் தனது சாம்பல் நிறப்புரவி மீது ஏறி அண்ணனின் பட்டத்துப் போர்ப் புரவிக்கருகே சென்று நின்றான் வீரபாண்டியன். குறிஞ்சி மற்றொரு புரவிமீது அமர்ந்து அதைத் தாண்டி மன்னனின் மறுபுறத்தில் குறிஞ்சியும் இருப்பதைப் பார்த்த மன்னன், “குறிஞ்சி இடத்தில் இளநங்கையல்லவா இருக்க வேண்டும்?” என்று நினைத்தான் ஒரு விநாடி அடுத்த விநாடி தனது கையை உயரத் தூக்கினான் கம்பீரமாக. பிறகு தனது புரவியைத் தூண்டினான் முன் நடக்க. புரவி கம்பீர நடை நடந்தது. தம்பியின் புரவியும் குறிஞ்சியின் புரவியும் உடன் நடந்தன. படைகள் பின் நடந்தன.