Raja Muthirai Part 2 Ch63 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 63 குறிஞ்சியின் தூது
Raja Muthirai Part 2 Ch63 | Raja Muthirai | TamilNovel.in
பாண்டியப் படைகளைப் பரலியின் முன்பிருந்த மலையின் மேற்பகுதிக் காட்டில் கொண்டுபோய் நிறுத்த வீரபாண்டியன் உத்தேசித்திருந்த காலத்திட்டம் ஒன்றரை நாள்தானென்றாலும் உண்மையில் படைகள் அந்த இடத்தை அடைய இரண்டு நாட்கள் முழுதாகப் பிடித்தன. ஏற்கனவே வணிகர் வண்டிகளும், படைகளும் சென்ற பாதை வழியாகச் செல்லாமல் அந்தப் பாதையிலிருந்து நன்றாகக் கிழக்கே தள்ளி மலையின் கரடுமுரடான இடங்களிலும் காடுகளுக்குள்ளும் வீரபாண்டியன் படையை அழைத்துச் சென்றதால் அவன் வகுத்திருந்த பயணக் காலத்திட்டம் பலிக்கவில்லை. தவிர அடர்ந்த காடுகளில் அவன் படையுடன் சென்ற பத்து பயங்கரப் பொறிகளும் புகமுடியாது போகவே அவற்றைச் சில சமயம் மலைச்சரிவில் கீழிருந்த பாதை வழியாகவும், சிலசமயம் மேலிருந்த இடைவெளிகளுக்குள்ளும் இழுத்து வரவேண்டியதாயிற்று. படையின் புரவிப்பிரிவும் சிறிது கஷ்டத்துடனேயே நகர்ந்தது. புரவிகள் குத்தான கற்களிலும் செங்குத்தான பாறைகளிலும் நடக்கவேண்டியிருந்ததால் பயணம் கஷ்டமாகவே இருந்தது. குதிரைகள் சில சமயம் கால் இடறியும், சில சமயம் வழுக்குப் பாறையில் கால் சறுக்கியும் சிரமப்பட்டு நடந்தன. இருப்பினும் துணிவுள்ள படைத்தலைவனாலும், எதையும் லட்சியம் செய்யாத மன்னனாலும் நடத்தப்பட்டதால் அத்தனை கஷ்டத்திலும் ஆரம்ப அணிவகுப்பு கலையாமல் நகர்ந்தது பாண்டியன் படை. பயணம் செய்த இரண்டு நாட்களில் இரண்டு முறைதான் படையைத் தங்க அனுமதித்தான்
வீரபாண்டியன். அந்த இரு முறையும் அரை ஜாம நேரமே அனுமதித்தான், உணவு தயார் செய்து உண்பதற்கும் இளைப்பாறுவதற்கும். அப்படித் தேவைக்கு மிக முக்கியமான அவகாசத்திற்குள் உணவை முடித்துக்கொண்ட படை வீரர்கள் மிகுந்த குதூகலத்துடனேயே பயணத்தைத் துவக்கினார்கள். இத்தனைக்கும் மன்னனோ, இளவரசனோ அதிகமாக இளைப்பாறியதாகத் தெரியவில்லை .உணவருந்தினார்களோ என்னவோ அதையும் நிர்ணயிக்க முடியவில்லை உபதலைவர்களால். அவர்கள் அவகாசமளித்த அரை ஜாமம் முடிவதற்குள், படைவீரர் சித்தப்படுவதற்குள் அரச சகோதரர் இருவரும் தங்கள் புரவிகளில் சித்தமாக அமர்ந்திருந்தார்கள். இப்படி அல்லும் பகலும் இளைப்பாறாமல் படைகளை வெகு லாகவமாக நடத்திவந்த பாண்டிய சகோதரர்கள் பரலியை அடைய அரைக்காதம் இருக்கையிலேயே சற்று நின்றார்கள்.
அவர்கள் நின்ற காரணத்தைப் புரிந்து கொண்ட குறிஞ்சி வீரபாண்டியனை நோக்கி, “இளவரசே! உத்தரவா?” என்று வினவினான். இளவரசன் தலையசைத்துப் பக்கத்திலிருந்த ஒரு வீரனுக்கு சைகை செய்ய சிறிய கொம்பு ஒன்று லேசாக ஊதப்பட்டது. அதை அனாதியதும் குறிஞ்சிக்குப் பின் வந்து கொண்டிருந்த சிறு படையொன்று மொத்தப் படையிலிருந்து மெள்ளப் பிரிந்தது. அதை நோக்கிய குறிஞ்சி மன்னனை நோக்கினாள். மன்னன் வீரபாண்டியனை நோக்கினான். வீரபாண்டியன் கூறினான்: “குறிஞ்சி! சந்தேகப்படாதே. தான் சொன்னபடி சகலமும் நடக்கும். ஆகவே நீயும் நான் சொன்னபடி செய். நீ சேர மன்னனிடம் முழு உண்மையைக் கூறலாம். அப்படிக் கூறுவதால் சேரநாட்டுக் தடிமகளான நீ உனது கடமையைச் செய்தவளாவாய். . டன்னை மீறிப் போர் நிகழ்ந்தால் அதற்கு நீ பொறுப்பாளயல்ல” என்று.
குறிஞ்சி வீரபாண்டியனுக்குத் தலை வணங்கிப் புரவியை சரிவில் இறக்கி சற்றுக் கீழேயிருந்த சாதாரணப் பாறையை நோக்கிச் சென்றாள். சாதாரண உடை அணிந்த ஆயிரம் வீரர் கொண்ட காலாட்படை அவளைப் பின்பற்றிச் சென்றது. பண்பட்ட மலைப் பாதையை அடைந்ததும் குறிஞ்சி புரவியிலிருந்து இறங்கி புரவியைக் காட்டுக்குள் ஓட்டி விட்டாள். பிறகு தானும் நடந்து சென்றாள். அந்தப் பாதையில் சுமார் அரைஜாமம் பயணம் செய்ததும் கடற்கரையை நோக்கித் திரும்பிய கிளைப்பாதையொன்றில் திரும்பி நடந்தாள். ஆயிரம் வீரர்களும் அவளைப் பின்பற்றினர். மெள்ள மெள்ள பரலியின் கடற்கரையை அடுத்திருந்த வடக்கு வாசலும் கண்ணுக்கெதிரே எழுந்தது. அதை அடுத்திருந்த பாதையிலும், கடற்கரையோரத்திலுமிருந்த கும்பலும் கண்ணுக்கெதிரே விரிந்தது. அதை நோக்கிக்கொண்டு சற்று நேரம் நின்ற குறிஞ்சி தனது வீரர்களை நோக்கி, “உம் சித்தப்படுங்கள்,” என்றாள். வீரர்கள் தங்கள் தோள்களி லிருந்த மூட்டைகளை இறுக்கி வேறு உடைகள் உடுத்திக் கொண்டார்கள். ஏற்கெனவே அணிந்திருந்த ஆடைகளைத் திரும்பக் கட்டி மூட்டைகளாக முதுகிலும் தலையிலும் கைகளிலும் பலபடி தாங்கிக் கொண்டார்கள். அப்படி அசுதிகளாக மாறிவிட்ட அந்த ஆயிரவருடன் குறிஞ்சியும் கலந்து கொண்டாள். பிறகு அந்தக் கூட்டம் குழம்பிக் கலைந்து தடுமாறிக்கொண்டு பரலியின் கடற்கரைப் பாதையை அடைந்து வடக்கு வாயிலை நோக்கிச் சென்றது.
அது வடக்கு வாயிலை அடைவதற்கு முன்பே நடந்த நிகழ்ச்சிகள் குறிஞ்சிக்கே வியப்பை ஊட்டின. அவர்கள் வாயிலுக்குச் சற்று தூரத்திலிருந்தபோதே சேரர் காவல் படையொன்று அவர்களைச் சந்தித்தது. “யார் நீங்கள்?” என்ற கேள்வி காவற்படை தலைவனிடமிருந்து எழுந்தது. “பாண்டிய மன்னனால் வெளியேற்றப்பட்ட குடிமக்கள்,” என்றான் குறிஞ்சியுடன் வந்தவர்களில் ஒருவன்.
“நீங்கள் ஒற்றர்கள் அல்லவென்பதற்கு என்ன அத்தாட்சி?” என்று தலைவன் வினவினான்.
இந்தச் சமயத்தில் கூட்டத்தை விலக்கிக்கொண்டு வெளி வந்த குறிஞ்சி, “இதோ நானிருக்கிறேன் அத்தாட்சி ,” என்றாள்.
தலைவன் அவளைப் பார்த்ததும் பிரமித்தான். பிறகு கூட்டத்தில் ஒருவனைக் கேட்டான், “இவள் யார் தெரியுமா!” என்று.
“தெரியாது. வழியில் எங்களுடன் சேர்ந்து கொண்டாள். எங்களைப்போல் ஒருத்தியாகத்தான் இருக்க வேண்டும்,” என்றான் கூட்டத்திலிருந்தவன்.
தலைவன் பதிலேதும் சொல்லவில்லை அவனுக்கு. தன் வீரனொருவனைப் பார்த்து, “இந்தக் கூட்டத்தை மற்ற மக்களோடு சேர்த்துவிடு. இந்த வேவுகாரியைப் பிடித்து அரசரிடம் கொண்டு போ,” என்றான். அவன் சொற்படி நடந்தது. வீரர் இருவர் அவளை அணுகி, “உம், நட” என்று அதட்டி மன்னன் சன்னிதானத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்படிச் செல்லும்போதே பின்னால் கண்ணைச் செலுத்திய குறிஞ்சி தனது வீரர்கள் கடற்கரைக் கூட்டத்தை நோக்கி விரட்டப்படுவதைக் கண்டாள்.
அவள் மனம் பிரமிப்பில் ஆழ்ந்திருந்தது. அங்கு நடந்த ஒவ்வொன்றையும் முன்னதாக ஊகித்துச் சொல்லியிருந்தான் வீரபாண்டியன். “குறிஞ்சி! நீ திடீரென்று காணாமற் போன பிறகு சேரன் உன்னைப் பிடிக்க உத்தரவு பிறப்பித்திருப்பான். பரலியின் வடக்கு வாயிலுக்கு முன்பாக நீ சிறை செய்து மன்னனிடம் கொண்டு செல்லப்படுவாய். நீ சிறை செய்யப்பட்டதும் மற்ற வீரர்கள் கடற்கரைப் பெருங் கூட்டத்துடன் சேர்க்கப்படுவார்கள். ஆகையால் நீ சிறைப்பட்டபின் பாண்டியர் பக்கம் உன் பணி தீர்ந்து விடுகிறது. பிறகு நீ உனது நாட்டுக்கு உன் கடமையைச் செய்,” என்று சொல்லியிருந்தான்.
அதைப்பற்றி நினைத்துக் கொண்டே அவள் மன்னனை அடைந்ததால் மன்னன் அவளை நோக்கிப் புன்சிரிப்புக் கொண்டபோதும் அவள் அதைக் கவனித்தாளில்லை. அவன், “யார்? விஜயவர்மன் மகளா!
மீண்டும் பணிபுரிய . வந்திருக்கிறாயா?” என்று இகழ்ச்சியுடன் வினவியபோதும் அவள் கவலை கொண்டாளில்லை . கவலை முழுவதும் பரலியின் கதியை நோக்கியிருந்தது.
ஆகவே மன்னனைக் கவலை தோய்ந்த முகத்துடன் நோக்கிய குறிஞ்சி, “ஆம் மன்னவா! பணிபுரியவே வந்திருக்கிறேன்,” என்றாள்.
“இம்முறை என்ன பணியோ?” என்று கேட்டான் சேர மன்னன்.
“வேவுகாரியின் பணி,” என்றாள் குறிஞ்சி.
“பாண்டியனிடம் சென்றபோது அது முடிந்து விட வில்லை?” இம்முறை ஏளனம் ஒலித்தது வீரரவியின் குரலில்.
“இல்லை. இப்பொழுதுதான் முடிகிறது. சேரநாட்டில் தான் என் பணியும் முடியும். உயிரும் முடியும்,” என்றாள் குறிஞ்சி
வீரரவியின் இதழ்களில் இகழ்ச்சி நகை மறைந்து குரூரப் புன்முறுவல் மண்டியது. இரண்டாவது பகுதி சரி…” என்றான் மெல்ல.
“இரண்டாவது பகுதியா?”
“ஆம்; உயிரைப்பற்றிச் சொன்னாயே அது.”
“ஓகோ அதுவா! அது பற்றிக் கவலையில்லை மன்னவா! பரலியின் ஆயிரக்கணக்கான மக்கள் அழியும்போது இந்தக் குறிஞ்சி அவர்களில் ஒருத்திதானே?” என்ற குறிஞ்சியின் தொண்டையை அபரிமிதமான துக்கம் அடைத்துக் கொண்டது.
வீரரலி அவள் துக்கத்தைக் கவனித்தான். அவள் துக்கம் வெறும் பாசாங்கு அல்லவென்று புரிந்தது அவன் நுண்ணிய அறிவுக்கு. “சொல் குறிஞ்சி! உன் கதையைச் சொல். பிறகு வழங்குகிறேன் நீதியை,” என்றான் வீரரவி.
“குருநாதரையும், வரவழையுங்கள்,” என்றாள் குறிஞ்சி.
“அவரெதற்கு?”
“நான் சொல்லுவதற்கு ஒரு சாட்சி வேண்டும்!”
“எதற்குச் சாட்சி?”
“நான் என் கடமையைச் செய்துவிட்டேன். கடைசி வரை சேர நாட்டுக்குச் சேவை செய்தே உயிர் விட்டேன் என்பதை மக்களுக்குச் சொல்வதற்கு.” இதைச் சொன்ன குறிஞ்சி மன்னனை ஏறெடுத்து நன்றாய் நோக்கினாள்.
வீரரவியின் கண்கள் அவள் கண்களைச் சந்தித்தன. அவற்றிலிருந்த ஏதோ ஓர் அபரிமித சக்தி அவனையும் ஈர்த்திருக்க வேண்டும். ஆகவே காவலனொருவனை அழைத்து. “குருநாதரை சிறையிலிருந்து அழைத்து வா” என்றான்.
சிறிது நேரத்திற்கெல்லாம் அரண்மனைச் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்ட குருநாதரின் முன்பு தலை வணங்கி நின்ற குறிஞ்சி, “குருநாதரே! பரலி அழிந்து விடும் போலிருக்கிறது. அழிவை நீங்கள்தான் தடுக்க வேண்டும்,” என்று நெஞ்சம் குமுற, உதடுகள் துடிக்க, சொற்களில் சோகம் சொட்ட, வீரபாண்டியன் சிருஷ்டித்திருக்கும் பயங்கர ஆயுதங்கள் பற்றி விளக்கினாள்.