Raja Muthirai Part 2 Ch64 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 64 சகுனம்
Raja Muthirai Part 2 Ch64 | Raja Muthirai | TamilNovel.in
இடங்கணிப் பொறியும், எரிமுகப் பேரம்பும் இணைந்த பயங்கர ஆயுத சிருஷ்டியைப்பற்றி விளக்கமாகக் கூறினாள் குறிஞ்சி வீரரவி உதயமார்த்தாண்டவர்மனுக்கு. அம்மாதிரி அழிவு ஆயுதங்கள் பத்து பரலிமாநகரின் கிழக்கு வாயிலுக்கெதிரேயுள்ள காட்டில் மறைத்து நிறுத்தப் பட்டிருப்பதைப் பற்றியும் எடுத்துரைத்தாள் அந்த ஏந்திழை. மூன்று வாசல்களுக்கும் முன்பாகப் பாண்டியன் படைகள் பகிர்ந்து நிற்குமென்றும் விளக்கந் தந்தாள் விஜயவர்மன் மகள். தான் பாண்டியப் பாசறைக்குச் சென்றது முதல் திரும்பி வந்தது வரை நடந்த அனைத்தையும் ஒளிவு மறைவில்லாமல் கூறினாள் பணிப்பெண்.
அதைக் கேட்ட வீரரவி வெகு நேரம் சிந்தனையின் வசப்பட்டு உட்கார்ந்திருந்தான். அத்தனை பயங்கர ஆயுதங்களைப் பற்றியும் பாண்டியர் முற்றுகை ஏற்பாடுகளைப் பற்றியும் பணிப்பெண் சொல்லக் கேட்ட பின்பும் அவன் முகத்தில் எள்ளளவும் கவலை தோன்றவில்லை சித்தம் சிந்தனையில் தீவிரமாக லயித்துவிட்டதைக் குறிக்கும் ஆழ்ந்த பார்வையே கண்களில் விரவிக் கிடந்தது. நீண்ட நேர சிந்தனைக்குப்ḥ பிறகு பரதபட்டனை நோக்கிய சேரமன்னன், “குருநாதரே! குறிஞ்சி கூறிவிட்டாள் பாண்டியன் ஏற்பாடுகளைப்பற்றி, பயங்கர ஆயுதத்தைப் பற்றி. நீர் என்ன நினைக்கிறீர் தலைநகர் நிலைபற்றி?” என்று வினவினான் சர்வசாதாரணமாக.
“பரலியின்கதி அதோகதி என்று நினைக்கிறேன்” என்றான் குருநாதன் கவலை அதிகமாகப் பாய்ந்து கிடந்த தன் குரலில்.
வீரரவியின் இதழ்களில் லேசாகப் புன்முறுவல் படர்ந்தது. “பரலியில் இருபதினாயிரம் படைவீரர் இருக்கிறார்கள்.” என்று சுட்டிக் காட்டினான் சேரமன்னன்.
“ஆம். பாண்டியப் படையைவிட நான்கு மடங்கு பெரிது,” என்று ஒப்புக்கொண்டான் குருநாதன்.
“சேரர் தலைநகரின் கோட்டை யவனர்களால் நிர்மாணிக்கப்பட்டது. கோட்டைக் கதவுகள் பெருங்கதவுகள், “வைரம் பாய்ந்த மரங்களால் செய்யப்பட்டவை. பெருமரங்களின் இடியையும் தாங்கவல்லவை,” இந்த இரண்டாவது பலத்தையும் சுட்டிக் காட்டினான் சேர மன்னன் புன்சிரிப்புடன்.
“உண்மை ” என்றான் குருநாதன்.
“எல்லாவற்றுக்கும் மேலாக ஒன்றிருக்கிறது” என்றான் மன்னன் மீண்டும்.
“அது தெரியும் எனக்கு” என்றான் குருநாதன்.
“சொல்லும் பார்ப்போம்” என்று அலட்சியமாகக் கேட்டான் மன்னன்.
“உன் பேரறிவு” என்று சலிப்புடன் கூறினான் குருநாதன்.
வீரரவி தலையை அசைத்தான் மகிழ்ச்சியுடன். “நன்றாக ஊகித்துவிட்டீர் குருநாதரே” என்று சிலாகிக்க வும் செய்தான்.
குருநாதன் இதழ்களில் விரிந்த இளநகையில் வெறுப்பு மண்டிக் கிடந்தது. “சிலருக்கு அது கிடையாது” என்று பட்டன் உதடுகள் உதிர்த்த சொற்களிலும் வெறுப்பு நன்றாக ஒலித்தது.
“எனக்கு ஊகம் இல்லையென்கிறீரா?”
மன்னன் கேள்வி சற்றே சூடேறியிருந்தது.
“நான் சொல்லத் தேவையில்லை” என்றான் குருநாதன்,
“ஏன்?”
“நிகழ்ச்சிகளே அதை நிருபிக்கின்றன.”
“எந்த நிகழ்ச்சிகள்!”
“சில நாட்களாக இங்கு ஏற்பட்டுள்ள நிகழ்ச்சிகள். உதாரணமாக சொந்த ஊகமிருப்பவர் பிறர் ஊகத்தால் பயனடைவதில்லை.”
மன்னன் முகம் அப்பொழுதும் பார்வைக்கு சாதாரணமாயிருந்தாலும் அவன் சொற்களில் மட்டும் கடுமை லேசாகத் தெரிந்தது. “யார் ஊகத்தால் யார் பயனடைந்தது?” என்று வினவினான் மன்னன்.
“பரலியின் பிரதான வாயிலுக்கெதிரே காட்டையழித்து இடைவெளி ஏற்படுத்தினால் எதிரியின் தாக்குதல் எளிதல்ல என்று ஊகித்தது நான். கடற்படையை மேற்குத் திக்கில் அரணாக நிற்கச் செய்து அவற்றின் மீது விற்பொறி வேற்பொறிகளை ஏற்றச்சொன்னது நான். பரலியின் வட கிழக்கிலிருந்து சாரி சாரியாக வந்து தெற்கே அனுப்பப்பட்டு வந்த மக்களை வடக்கு வாயிலுக்கெதிரேயுள்ள கடலோரப் பாதையில் நிராயுதபாணிகளாக நிறுத்தி வீர பாண்டியன் அவ்வழி வருவதைத் தடுத்ததும் நான். இவற்றால் பயனடைந்தது யாரென்று புரியவில்லை,” என்ற குருநாதன் லேசாக நகைத்தான்.
“ஏன் தெரியவில்லை? நான்தான் பயனடைந்தேன். அதைச் சொல்லிவிடுவதுதானே!” என்று கேட்டான் மன்னன்.
“சொல்ல இஷ்டப்படவில்லை நான்” என்றான் குருநாதன்.
“ஏன்?” சினத்துடன் எழுந்தது வீரரவியின் கேள்வி.
“நான் செய்த ஏற்பாடுகளால் பயனடைந்திருக்கிறாய் தற்காலிகமாக. ஆனால் அந்தப் பயனின் பூர்த்தி வெற்றியிலிருக்கிறது” என்றான் குருநாதன்.
வீரரவி தனது ஆசனத்திலிருந்து எழுந்து குருநாதன் அருகில் வந்து, “குருநாதரே! வெற்றி என் கையிலிருக்கிறது” என்று வேகத்துடன் ஒரு கையால் இன்னொரு கையை அடித்துக் காட்டினான்.
“பொறுத்துப் பார்ப்போம்,” என்றான் பரதப்பட்டன்.
“பொறுத்துப் பார்க்க அவசியமில்லை. சொல்வதைக் கேளும் குருநாதரே! வீரபாண்டியன் எதிர்பார்க்கிறபடி விற்பொறிகள் அனைத்தும் கோட்டையின் பிரதான வாயில் மீதில்லை ” என்றான் மெள்ள வீரரவி.
“அங்கில்லையா?”
“இல்லை. கோட்டைச் சுவர்மீது பாதிப் பொறிகளே இருக்கின்றன. மீதிப் பொறிகளை சுவரிலிருந்து கீழே இறக்கிப்பத்தடி தள்ளி ஒவ்வொரு வாயிலுக்கெதிரிலும் நிறுத்தியிருக்கிறேன். பாண்டியன் அவன் எரிமுகப் பேரம்பை வீசியதும் தடதடவென்று புரவிப்படையுடன் பிரதான கோட்டை வாசலில் வர இருக்கிறான். வந்து எரியும் கோட்டைக் கதவை இடித்துத் தள்ளி உள்ளே புகப் பார்க்கிறான். கதவை அவன் இடிக்க அவசியமில்லை . கதவு தானாகத் திறக்கும். திறந்ததும் விற்பொறிகளும் வேற் பொறிகளும் இயங்கும். சாதாரண நிலையில் அல்ல. நேரே குதிரை வீரர்கள் மார்புகளை நோக்கி இயங்கும். நமது கிழக்குப் பெருவாயிலில் ஏககாலத்தில் ஆயிரம் வீரர்கள் நுழையலாம். அந்த ஆயிரம் வீரரையும் நோக்கி அம்புகளும் வேல்களும் கண்ணிமைக்கும் நேரத்தில் பறக்கும்; பெரும் நாசம் அங்கு விளையும். அதே சமயத்தில் தெற்கு வடக்கு வாயில்கள் திறக்கும். அங்கும் பொறிகள் காத்து நிற்கும் பாண்டியனுக்கு. ஒவ்வொரு வாயிலிலும் காலபாசங்களைப் போல் காத்திருக்கும் எனது பொறிகள். அவற்றுக்குப் பின்புறம் எனது படைப்பிரிவுகள் நிற்கும். ஒவ்வொரு வாயிலுக்கும் வெவ்வேறு பிரிவு. ஒரு வாயிலில் புரவிப்படை, இன்னொரு வாயிலில் காலாட்படை, மற்று மொரு வாயிலில் யானைப்படை. மேற்கில் தான் கடற்படை இப்படி நிற்க உத்தரவிட்டிருக்கிறேன்.” என்று சொற்களை அழுத்தமாகவும் உறுதியுடனும் உதிர்த்தான் சேரமன்னன். அத்துடன் குறிஞ்சியையும் நோக்கி ஒரு வார்த்தை சொன்னான், “குறிஞ்சி! உன்னுடன் வரும் எந்தக் கூட்டத் தையும் தனித்துத் தேக்கி வைக்கும்படி உத்தரவிட்டிருக் கிறேன். இத்தனை நேரம் உனது நண்பர்கள் சிறை செய்யப்பட்டிருப்பார்கள்” என்று கூறினான்.
பரதப்பட்டனும், குறிஞ்சியும் வியப்பு நிரம்பிய கண் களுடன் மன்னனை நோக்கினார்கள். குறிஞ்சி மட்டும் வாயைத் திறந்து சொன்னாள், “என்னுடன் வந்த கூட்டத்தை மற்ற மக்களுடன் கலக்க உத்தரவிட்டானே காவலர் தலைவன்” என்று.
“அது உனக்காகச் சொல்லப்பட்டது குறிஞ்சி” என்ற சேரமன்னன் குருநாதனை நோக்கி, “குருநாதரே! உமக்குப் பாண்டியர் வசம் இருக்கும் பரிவை நான் அறிவேன். ஆனால் இம்முறை பாண்டியர் அழிவது திண்ணம்” என்று திட்டவட்டமாகக் கூறினான்.
பரதபட்டன் மன்னனை நன்றாக ஏறெடுத்து நோக்கினான், “அவர்களை அழித்த பின்பு தெரிவித்த மன்னவா” என்று மெல்லக் கூறினான்.
“ஏன் அழிக்க முடியாதென்று நினைக்கிறீரா? என் சக்தியில் உமக்கு நம்பிக்கையில்லையா?” என்றான் சேரன்.
“அழிப்பதில் உமக்கு நிகர் யார் இருக்க முடியும்?” என்று பதிலிறுத்தான் பரதபட்டன்.
“அந்த விஷயத்தில் நீங்களும் சளைத்ததவரல்லவே குருநாதரே”. என்று வீரரவி கூறினான் விஷமத்துடன்.
“நானா!”
“ஆமாம்.”
“நான் அழிப்பவனா!”
“ஆம். இந்திரபானுவின் முகத்தை அழிக்கவில்லை? அதைவிட ஈவிரக்கங்கெட்ட செயல் என்ன இருக்க முடியும் குருநாதரே? அதைவிட அவன் உயிரை அழித்திருக்கலாமே.”
இதைக் கேட்ட குருநாதன் இளநகை கூட்டினான் இதழ்களில். “மன்னவா! சற்று முன்பு உன் ஊகத்தின் சக்தியைப் பறை சாற்றினாயல்லவா? அதைச் சற்று உபயோகித்துப்பார்,” என்றார் இகழ்ச்சி குரலில் ஒலிக்க..
“ஊகத்துக்கு என்ன இருக்கிறது?” என்று வினவினான் மன்னன்.
“நிரம்ப இருக்கிறது. சரி அதைப்பற்றி என்ன இப் பொழுது? அது தனிப்பட்டவன் கதை. பரலியின் கதையைக் கவனிப்போம்,” என்ற பரதபட்டன் கேட்டான், “மன்னவா! இந்தப் போர் அவசியமா?” என்று.
“ஏன் அவசியமில்லை? பாண்டியர்படை நமது வாயிலில் நிற்கவில்லை ?” என்று வினவினான் வீரரவி.
“நிற்கிறது. இருப்பினும் போரைத் தவிர்க்க எனக்கு ஒருமுறை சந்தர்ப்பம் கொடு,” என்று இறைஞ்சினான் பரதப்பட்ட ன்.
“உமக்கா!”
“ஆம்.”
“கொடுத்தால் என்ன செய்வீர்?”
”பாண்டிய மன்னனிடம் மன்றாடிக் கேட்பேன் அழிவைத் தவிர்க்கும்படி.”
“வேறென்ன கேட்பீர்?”
“பரலிமீது அந்தப் புதுக் கணைகளை ஏவவேண்டா மென்று கேட்பேன்.
வீரரவி அறையில் இரண்டு முறை சிங்கம்போல் நடந்தான்! பிறகு சட்டென்று நின்று குருநாதனை நோக்கிக் ‘கூறினான். “பரசுராம நாட்டின் மன்னன் பல குற்றங்களைக் செய்திருக்கலாம். கோழையாகி எதிரி வாயிலில் நிற்கும் சமயத்தில் அவனிடம் சமாதானத்தை யாசிக்கும் குற்றத்தைச் செய்ய இஷ்டப்படவில்லை. போர் நாளை பகலில் துவங்கும். கதிரவன் சாட்சியில் தாக்குதலைத் துவக்குகிறேன். குருநாதரே, பரலி மன்னன் செய்யக் கூடியதை நாளை பாரும். பாண்டியரின் பேரழிவை உமது கண்களால் காணும்,” என்று இரைந்து கூறினான் வீரரவி. அதே சமயத்தில் பிரதான கோட்டை வாயிலில் முரசு மிகப் பலமாக ஒலித்தது. “சகுனத்தைப் பார்த்தீரா குருநாதரே?” என்றான் மன்னன் குதூகலத்துடன்.
”சகுனம் யாருக்கு நல்லது என்பது தான் புரியவில்லை.” என்று பதில் கூறினான் பரதப்பட்டன்.