Raja Muthirai Part 2 Ch8 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 8 கண்கள் புரிந்துவிட்ட பாவம்
Raja Muthirai Part 2 Ch8 | Raja Muthirai | TamilNovel.in
சிறையிலிருந்த அறையின் காரிருளில், புதுக் காவலன் கைகளில் சிறைபுகுந்த அந்தச் சில விநாடிகளில் பாண்டிய குமாரியின் இதயம் உணச்சிப் பெருக்கால் பலமாக எழுந்து ‘குமரி’ என்ற அவன் குரலொலிக்கு எதிரொலி செய்ததன்றி, சிறை பிடித்த கர்ங்களையும் அவள் பூவுடல் உதறித் தள்ளாமல் வரவேற்கவே செய்தது. உணர்ச்சிகள் அனைத்தும் தனது எண்ணத் தளைகளைக்களைந்து கொண்டு அந்த விகார முக வாலிபனுடைய உணர்ச்சிகளுடன் உறவாடத் தொடங்கிவிட்டதையும். தன் உடலும் தன் வசமின்றி அவனிஷ்டத்துக்கு வளைய முற்பட்டுவிட்டதையும் கண்ட முத்துக்குமரி தன்னைத் தானே வெறுத்துக் கொண்டாள். ஆனால் அந்த வெறுப்பு மேலுக்கு ஏற்பட்ட வெறுப்பே என்பதையும் புரிந்து கொண்டாள். அந்த வாலிபன் தனக்குப் பின்னாலிருந்தாலும் அவன் நெருக்கம் தனக்கு ஏதோ வேதனையைத் தந்ததையும் லேசாகவே தனது முதுகில் அடித்துக் கொண்டே அவன் இதய ஒலி முதுகு வழியாக உட் புகுந்து தன் இதயத்துடன் உறவாடுவதையும், அந்த உறவாட்டத்தின் காரணமாகவே தனது இதயம் பெரிதாக ஒலி செய்ததையும் உணர்ந்த அவள் ஏதும் செய்யச் சக்தியற்று நிலைகுலைந்து நின்றாள். தன்னைச் சிறை செய்த கைகளும், மலைநாடான சேரநாட்டின் கடுங்காற்றைப் போலவே கடுமையையும் இன்பத்தையும் இணைத்தே பரிமாறியதையும் கண்ட அவள் நிலைகுலைந்து மதிமயங்கி நின்றாள். இத்தனைக்கும் தன் உள்ளமும் உடலும் எப்படி இடம் கொடுக்கின்றன என்பதைக் கேட்டுக் கொண்டு விடை புரியாமல் தவித்தாள். அவள் உடல் வளைந்தது, இழைந்தது. குழைந்தது.
இது இந்திரபானுவைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாதென்பதை முடிவாக உணர்ந்து கொண்ட முத்துக்குமரி பெருமூச்சு விட்டாள்.
இன்பமாக மென்மையாக வந்த அந்தப் பெருமூச்சு அதுவரை அவள் மனத்திலிருந்த சந்தேகக் கயிறுகளை அறுத்தெறிந்தது. சந்தேகமில்லை . இவர் இந்திரபானுதான்’ என்று தனக்குள் இருமுறை சொல்லிக் கொண்டது தன்னை ஏமாற்றிக்கொள்ளவா, சாந்தப்படுத்திக்கொள்ளவா என்பது அவளுக்கே புரியவில்லை. எந்த மங்கைக்கும் தனக்குச் சொந்தமான ஆடவன் கர ஸ்பரிசம் தெரிய இயற்கை அளித்திருக்கும் விவரம் புரியாத ஒரு தனி விவேக உணர்ச்சி. அவன் இந்திரபானுவென்பதை அவளுக்குச் சந்தேகமற உணர்த்தியது. ஆகவே “இப்பொழுது ஒப்புக் கொள்கிறாயா குமரி?” என்று அவள் கேட்ட கேள்விக்கு “உம்” என்று பதில் ஒலி கிளப்பினாள் பாண்டியன் மகள்.
இந்திரபானு தன் கைகளை நிலைக்க வைத்து அலைந்து கொண்டிருந்த தனது உணர்ச்சிகளையும் ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தான். தானும் முத்துக்குமரியும் இருக்கும் அபாய நிலை அவனுக்குத் தெள்ளெனப் புரிந்ததால் அவன் மெள்ளச் சொன்னான்! “குமரி! இந்த நிலையை நான் தவிர்த்திருப்பேன், நீ மட்டும் என்னை இந்திரபானுவென்று ஒப்புக் கொண்டிருந்தால். இந்த நிலையை எய்தாமலே உனக்கு நம்பிக்கையூட்ட என்னாலான ருசுக்களைக் காட்டினேன். முத்தை காட்டினேன். முத்தைக் கண்டெடுத்த இடத்தைச் சுட்டிக் காட்டினேன். அருவிக் கரையில் நீ அமர்ந்திருந்த நிலையை யும் சொன்னேன். நீ நம்பவில்லை. முத்தை கண்டெடுத்த இடத்தைப் பற்றி இருமுறை குறிப்பிட்டேன். இரண்டாம் முறை நீ வியப்பது போல் பாசாங்கு செய்து மீண்டும் விவரம் கேட்டாய். அப்பொழுதும் திட்டவட்டமாய்த் தெரிவித்தேன், முத்து கிடைத்த இடம், சூழ்நிலை இரண்டையும். அப்படியும் நீ நம்பவில்லை. புறச்சான்றுகள் பயனற்றுப் போகவே கடைசியாக அகச்சான்றுகளுக்கு வந்தேன்…” இப்படிச் சொல்லி ஒரு வினாடி நிதானித்து விட்டு, “இப்பொழுது புரிகிறதா?” என்றும் கேட்டான்.
அந்த இருட்டில் மெள்ளப் புன்முறுவல் செய்தாள் முத்துக்குமரி. அவளுக்கு நன்றாகப் புரிந்துவிட்டது விஷயம். உடல் பின்புறத்தில் பட்டமாத்திரத்திலேயே அவன் இன்னாரென்று புரிந்துகொண்டாள் அவள். ‘எனக்கு தன்னைப் புரியவைக்க எத்தனை சிரமம் எடுத்துக் கொண்டிருக்கிறார் இவர்?’ என்று நினைத்துப் பார்த்து அதன் விளைவாக இளநகையும் கொண்டாள். அதன் ஊடே சொன்னாள், “புரிகிறது. புரியாமல் எப்படியிருக்க முடியும்?” என்று.
“புரியாமல் எப்படியிருக்க முடியுமா?” என்று வியப்புடன் வினவினான் இந்திரபானு பின்புறத்திலிருந்து.
“ஆம்,” என்று அவள் மிக மிருதுவாகச் சொன்னாள்.
“நீ சொல்வது விளங்கவில்லை எனக்கு,” என்றான் இந்திரபானு.
“விளங்காததற்கு என்ன இருக்கிறது இதில்? எனக்குப் புரியவில்லை முதலில், பிறகு நீங்கள் புரியவைத்து விட்டீர்கள். அதற்குப் புது வழிகளைக் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள்,” என்று கூறி லேசாக நகைக்கவும் செய்தாள். பின்புறமாக அவன் மீது நன்றாகச் சாயவும் செய்தாள்.
மந்த மாருதத்தைப்போல் மிக மென்மையாக இருளில் விரிந்த அந்த நகைப்பொலி அவன்செவிகளில் மிக சுகமாகப் பாய்ந்தாலும் அவள் சொன்ன புது வழி ஏதென்று தெரியாததால், “புது வழிகளா?” என்று வினவினான்.
“ஆம். புது வழிகள் தான்,” என்றாள் மீண்டும் அவன் கைச்சிறையில் அசைந்து.
“என்ன புது வழிகள்?”
“அடையாளங்களைக் காட்டுவது முதலியன பழைய வழிகள். அவற்றுக்குப் புராண இலக்கியச் சான்றுகள் உண்டு. ஆனால் அடையாளங்களை உணர்த்துவதென்பது புது முறை. அதன் பூர்வாங்கமும் புதுமுறை.’
“அடையாளங்களை உணர்த்துவதா?”
“ஆமாம், கண்ணுக்கெதிரே அடையாளங்களைக் காட்டுவதுண்டு. வாயால் செய்தி சொல்வதுண்டு. இவை பழைய முறைகள். ஆனால் விளக்கை ஊதுவது, கண்ணை மறைப்பது உடலை வளைப்பது, குரலை மெல்ல ஒலிப்பது, உணர்ச்சிகளைத் தூண்டுவது, இவை புது வழிகள். நான் மட்டும் பாண்டிய மன்னனாயிருந்தால்….” வார்த்தைகளை முடிக்காமல் இழுத்தாள் அந்த இன்பத்தரசி.
“என்ன செய்வாயாம்?” என்று குறுக்கே புகுந்தான் இந்திரபானு.
“இந்த மாதிரி அடையாளம் உணர்த்தும் காளை களைத் தூதர்களாக நியமிக்கமாட்டேன். அதுவும் பெண்களைக் காக்கவோ, தூது செல்லவோ அனுமதிக்க மாட்டேன்,” என்று முத்துக்குமரி நகைத்தாள்.
அவன் ஒரு கையை எடுத்து அவள் வாயைப் பொத்தி னான். அவள் திமிறி, “வாயை ஏன் பொத்துகிறீர்கள்,” என்று கேட்டாள்.
”பெண்கள் வாயைப் பொத்த வேண்டியது அவசியம்.”
“ஏன்?”
“அவர்கள் வாய் சும்மா இருக்காது.”
“என்ன செய்யும்?”
“நகைக்கும்,”
“நகைத்தாலென்ன?”
“போர் நடக்கும், பிராணன் போய்விடும்.”
“விசித்திரமாயிருக்கிறது.”
“விசித்திரமேதுமில்லை இதில், திரௌபதி நகைத்துத்தான் பாரதம் நடந்தது.”
“நன்றாகப் புராணம் படிக்கிறீர்கள்,” என்ற முத்துக் குமரியின் சொற்களில் பொய்க் கோபம் தெரிந்தது.
“என் புராணத்திற்கு என்ன கேடு?” என்று வினவினான் இந்திரபானு.
“நான் திரௌபதியா:” என்று வினவினாள் முத்துக் குமரி.
“இருந்தாலென்ன?”
“அவளுக்கு….”
“ஓகோ…’
“தவிர, நீங்கள் என்ன தருமனா, பீமனா….”
“இல்லை, இல்லை. அர்ச்சுனனாக வைத்துக்கொள்.”
“ஏனாம்?”
“அவனுக்கும் இந்திரனுக்கும்தான் சம்பந்தம். நான் இந்திரபானுவல்லவா?”
முத்துக்குமரி வாய்விட்டு நகைத்தாள். “உஷ்! சிரிக் காதே, சந்திரன் கெட்டதும் பெண்ணாலே இந்திரன் கெட்டதும் பெண்ணாலே என்று பழமொழி இருக்கிறது.”
“நீங்கள்…”
“இந்திரபானுவல்லவா? உண்மை தெரிந்தால் சேரன் தலையைச் சீவிவிடுவான்.”
இதற்குமேல் பாண்டியன் மகள் பேசவும் இல்லை, நகைக்கவும் இல்லை. சற்று நேரம் மௌனம் சாதித்தாள். கடைசியில் கேட்டாள், “உங்கள் முகத்தில் இந்த விகாரவடுக்கள் எப்படி ஏற்பட்டன?” என்று.
“அதை மட்டும் கேட்காதே.” என்றான் இந்திரபானு.
“ஏன்?” என்ற முத்துக்குமரியின் குரலில் வருத்தம் மிதமிஞ்சி ஒலித்தது.
“இங்கு சுவர்களுக்கும் செவிகளுண்டு. தவிர, இந்த விகாரம் என் உயிரைக் காப்பாற்றுகிறது,” என்று சுட்டிக் காட்டினான் இந்திரபானு.
அவன் குரலில் இருந்த உறுதியைக் கவனித்தாள் முத்துக்குமரி. எப்படியும் பதில் சொல்லமாட்டானென் பதையும் புரிந்து கொண்டதால் பெருமூச்செறிந்து விட்டுச் சொன்னாள் அவள், “எனக்காக முகத்தைப் புண்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்,” என்று.
அவள் குரலிலிருந்த சோகத்தைக் கவனித்தான் இந்திரபானு, அவள் தன்னைக் குறித்து வருந்துகிறா ளென்பதே அவனுக்குப் பெருமகிழ்ச்சியாயிருந்தது. ஆகவே சொன்னான், “பாண்டியன் மகளே! முகம் புண்பட்டாலென்ன? உள்ளம்தான் புண்படக்கூடாது. அதற்கு அமுதமளிக்க உன் அன்பிருக்கிறது. தவிர அரசகாரியம், நாட்டுப் பணி இவற்றில், தியாகம் அவசியம். நாட்டுப் பணிக்கு எத்தனை பேர் உயிரை அர்ப்பணித்திருக்கிறார்கள். நான் கேவலம் காலத்தால் அழியக்கூடிய அழகைத்தானே கொடுத்திருக்கிறேன்,” என்று.
இதைச் சொன்ன அவன் உறுதி, மகிழ்ச்சி இரண்டும் மண்டிக் கிடந்தன. அந்த மகிழ்ச்சியில் உற்சாகத்தில் அவன் கைகள் அவளை விடுவித்தன. அவளிடமிருந்து பிரிந்து நின்ற நிலையில் சொன்னான்; “பாண்டியன் மகளே! எந்தக் காரணத்தை முன்னிட்டும் என்னை நீ கண்டு கொண்டதை வெளிக்குக் காட்டாதே. என்னைக் காணும் போதெல்லாம் முகத்தில் அருவருப்பைக் காட்டு. சேர மன்னன் வந்தால் என்னைக் காவலிலிருந்து விலக்கும்படி விண்ணப்பித்துக் கொள். நீ கேட்கக் கேட்க அவன் மறுப்பான். நீ என்னிடம் காட்டும் வெறுப்பு அவனுக்கு என்னிடம் விருப்பை அளிக்கும். உன் முகத்தில் தோன்றும் சீற்றம் அவன் முகத்தை என்மீது கனிய வைக்கும். இன்றிலிருந்து நீயும் நானும் ஒருவரையொருவர் வெறுக்கிறோம்” என்று.
“எப்பொழுது?” என்று கேட்டாள் முத்துக்குமரி.
“எப்பொழுது என்றால்?” புரியாமல் கேட்டான் இந்திரபானு.
“நாம் பரஸ்பரம் வெறுப்பது பகலிலா, இரவிலா?” என்று கேட்டாள் முத்துக்குமரி.
இந்திரபானுவின் இதழ்களில் இளநகை பூத்தது. அவன் மேற்கொண்டு ஏதும் பேசாமல் அறைக்கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்று எட்ட இருந்த பந்த வெளிச்சத்தில் சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் அந்தப் பக்கம் வரவில்லையென்பதைப் புரிந்து கொண்டதோடு அடுத்த கட்டுக் காவலன்கூடச் சாதாரணமாகவே காவல் புரிந்து கொண்டிருந்ததையும் கண்டான். பிறகு பந்தத்தை எடுத்துக்கொண்டு அறைக்குள் சென்று உள் விளக்கைக் கொளுத்திவிட்டு மறுபடியும் வந்து வெளிப்படியில் காவலுக்கு அமர்ந்து கொண்டு உள்ளூற நிகழ்ச்சிகளை மனத்தில் திரும்பத் திரும்ப எண்ணி எண்ணி அந்த இரவுக் காவலைக் கழித்தான். காலையில் காவல் முடிந்தவுடன் திரும்பக் கூத்தனிருந்த மலைக்குடிசைக்குச் சென்றான். அங்கு விசாரித்ததில் மேற்கொண்டு சேரவீரர்கள் வரவில்லை யென்பதையும், எந்த விசாரணையோ சோதனையோ இல்லையென்பதையும் தான் கூறிச் சென்றபடி கூத்தனின் ரத்தக் கறை படிந்த உடைகள் வெளியில் புதைக்கப்பட்டு விட்டதையும் உணர்ந்தான். அப்படிச் சோதனை விசாரணை ஏதும் இல்லாதது அவனுக்குச் சிறிது சந்தேகத்தை அளித்தாலும், அவன் அதை லட்சியம் செய்யாது தன் அலுவலைக் கவனிக்கலானான். தப்பிய இரவில் அலங்கோலப்படுத்தப் பட்ட குடிசையின் உட்புறத்தை மீண்டும் சீர்படுத்தினான். கூடை, பாண்டங்கள் அனைத்தையும் ஒரு மூலையில் அடுக்கினான். பிறகு சற்று எட்ட இருந்த காட்டுக்குள் சென்று மறைந்தான். பகலவன் உச்சியை எட்டிய சமயத்தில் காட்டிலிருந்து வேட்டையாடிய கடம்பம் ஒன்றைத் தோளில் போட்டுக்கொண்டு திரும்பி அதைக் குடிசை வாசலில் போட்டுவிட்டு நீராடி உள்ளே சென்று பானையில் அண்ணி வைத்துவிட்டுப்போன பழஞ் சோற்றை எடுத்து உணவை முடித்துக்கொண்ட சமயத்தில் அரண்மனைக் காவலரிருவர் வந்து அவனைக் கிளம்பும்படி உத்தரவிட்டனர்.
வந்த இரு வீரர்களையும் நோக்கிய இந்திரபானு, “எங்கு செல்ல?” என்று வினவினான்.
“அரண்மனைக்கு,” என்றான் ஒரு வீரன்.
“என் காவல் கடற்கரை மாளிகையில். அதுவும் முடிந்துவிட்டது,” என்றான் இந்திரபானு கோபத்துடன்.
“அது தெரியும் எங்களுக்கு. அரசர் அழைத்து வரச் சொன்னார். கிளம்பு,” என்றான் வீரர்களில் ஒருவன் கடுமையாக.
இந்திரபானுவுக்கு ஏதும் விளங்கவில்லை. ‘திடீரென்று மன்னன் எதற்காக அழைக்கிறான்?” என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். ஒருவேளை முந்திய இரவு நிகழ்ச்சிகளை அடுத்த கட்டின் காவலன் வேவு பார்த்திருப்பானோ என்ற சந்தேகமும் அவனுக்கு ஏற்பட்டாலும் அதற்கு நியாயமில்லை என்று சந்தேகத்தை ஒதுக்கினான். ஆகவே ஏதும் விளங்காமலே வந்த வீரர்களுடன் அரண்மனை சென்றான். அரண்மனையில் அவன் சிறிது நேரங்கூடக் காத்திருக்க அவசியமில்லாது போயிற்று. உடனடியாக மன்னன் அவனைச் சந்தித்தான்.
மன்னனுக்கு முன்பு தலை தாழ்த்திய இந்திரபானு, “மன்னர் திடீரென அழைத்த காரணம் தெரியவில்லை. எந்தப் பணியானாலும் நிறைவேற்றச் சித்தமாயிருக்கிறேன்,” என்றான்.
“பணியிடத்தான் உன்னை அழைக்க வேண்டுமா?” என்று வினவிய வீரரவி உதயமார்த்தாண்டவர்மன் இதழ்கள் இளநகை கூட்டின.
“வேறு எதற்கு அழைத்தீர்கள் மன்னவா?” என்று வினவினான் இந்திரபானு.
“ஒரு முக்கிய காரணத்தை முன்னிட்டு,” என்றான் வீரரவி.
“கட்டளை இடுங்கள் மன்னவா?” என்றான் இந்திர பானு.
வீரரவி அதற்கு நேரடியாகப் பதில் சொல்லவில்லை . “நீ இனி கூத்தன் குடிசையில் இருக்க வேண்டியதில்லை. இங்கு அரண்மனைக்கே வந்துவிடு,” என்றான்.
“வந்து?”
“அரண்மனைக் காவலர் விடுதியொன்றில் தங்கியிரு.”
“எதற்கு மன்னவா?”
“மணமாகாத காவலர் இருப்பதற்காகத்தானே காவலர் இருப்பிடங்களைப் பழைய நாளில் கட்டியிருக் கிறார்கள்.”
“நன்றி மன்னவா,” என்றான் இந்திபானு.
அத்துடன் மன்னன் சந்திப்பு முடிந்து விட்டது என்று நினைத்துத் திரும்ப முற்பட்ட இந்திரபானுவை, “சற்று இரு!” என்ற மன்னன் குரல் தடுத்தது.
இந்திரபானு மன்னனை ஏறெடுத்து நோக்கினான். ‘ஏன்? என்ற கேள்வி அவன் பார்வையிலேயே தொக்கி நின்றது.
“உனக்கு அளிக்கப்பட்டிருக்கும் அறை பெரிது. அதில் இருவர் தங்கலாம்,” என்றான் மன்னவன்.
மன்னவன் உள்ளத்தில் தான் அறியாத ஏதோ திட்டம் உருவாவதைப் புரிந்து கொண்ட இந்திரபானு, “சரி மன்னவா,” என்றான் உணர்ச்சிகளை வெளிக்குக் .. காட்டாமல்.
“இவரையும் அழைத்துப்போ,” என்ற மன்னவன் தனக்குப் பின்னிருந்த திரையை நோக்கி கையை ஆட்டினான். அதிலிருந்து வெளிவந்தான் ஒரு மனிதன். அவனைக் கண்டதும் எதற்கும் ஆடாத இந்திரபானுவின் இதயமும் ஆடியது. அஞ்சாத அவன் இதயத்திலும் அச்சம் எழுந்தது. அவன் கற்சிலையென நின்றான்.
“கண்கள் புரிந்துவிட்ட பாவம்” என்று உதயமார்த் தாண்டவர்மனின் உதடுகள் முணுமுணுத்தன. சற்றே கொடூரப் புன்னகையும் காட்டின.