Raja Perigai Part 3 Ch12 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
ராஜ பேரிகை – சாண்டில்யன்
மூன்றாம் பாகம் அத்தியாயம் – 12. விபரீத விளைவு
Raja Perigai Part 3 Ch12 | Raja Perigai | TamilNovel.in
ஆற்காட்டுக் கோட்டைக்குள் ஒதுக்குப்புறமான ஓர் இடத்தில் இருந்த அந்த அரசு பீரங்கியைக் கிளைவ் எழுப்ப முயன்றது அதன் உபயோகத்தால் அசாத்திய பலன் ஏற்பட்டு விடும் என்ற நம்பிக்கையாலல்ல. பெரிய படுதாக்கள் போட்டு மூடப்பட்டு மிகுந்த பயபத்தியுடன் ஒரு மூலையில் பந்தோ பஸ்தாக வைக்கப்பட்டிருந்த அந்தப் பீரங்கியை அவன் பத்து நாட்களுக்கு முன்புதான் பார்த்தான். பழுதடைந்து விட்ட ஆற்காட்டுக் கோட்டைச் சுவர்களை அவன் பழுது பார்த்து, பலப்படுத்திக் கொண்டிருந்த ஒரு சிப்பாயை நோக்கி, ”இது என்ன?” என்று விசாரித்தான்.
”அவுரங்கசீப்பின் பீரங்கி” என்று சிப்பாய் பதிலுரைத்த தன்றி அந்தப் பீரங்கியை நோக்கித் தலை தாழ்த்தவும் செய்தான்.
கிளைவ் தனது சிப்பாயையும் பார்த்து, போர்த்து வைக்கப் பட்டிருந்த அந்த மலையையும் பார்த்து, ”அவுரங்கசீப்பின் பீரங்கியா?” என்று வியப்புடன் விசாரிக்கவும் செய்தான். ”சரி, இதன் மீதுள்ள படுதாக்களை எடு, பார்ப்போம்’ என்ற உத்தரவும் இட்டான்.
பீரங்கி ஓர் ஆள் உயரத்துக்கும் பத்து ஆள் நீளத்துக்கும் இருந்தபடியால் அந்தச் சிப்பாய் மற்றும் சில சிப்பாய்களை அழைத்து வந்து போர்வையை நீக்கினான்.
பீரங்கியைப் பார்த்த கிளைவ் மலைத்து நின்றான் பல விநாடிகள். அப்பொழுது சந்தாசாகிப்பிடமிருந்த கோபங்கூட அவனுக்கு அதிகமாயிற்று. இப்பேர்ப்பட்ட பீரங்கியைச் சந்தா சாகிப் பயன்படுத்தாமல், எண்ணெய் முதலியவற்றைப் போட்டும் அடிக்கடி வெடி மருந்தைத் திணித்துச் சுடும் பக்குவத்தில் வைக்காமல், எதற்காகப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார் என்று உள்ளுக்குள் சந்தாசாகிபைச் சபித்தான். பிறகு பீரங்கி வண்டிமீது ஏறி அதன் நிலையையும் பரிசோதித்தான். அந்த அரசு பீரங்கி நீண்ட காலம் உபயோகப்படுத்தாமலே வைக்கப்பட்டிருந்த படியால் மழையிலும் பனியிலும் நனைந்து பல இடங்களில் துருப்பிடித்துக் கிடந்தது. பீரங்கித் தண்டின் பல இடங்களைத் துரு சாப்பிட்டுச் சின்னஞ்சிறு துளைகளையும் உண்டாக்கியிருந்தது. அந்த இடங்களை அதிகமாகத் தேய்த்தால் துளைகள் இன்னும் அகன்று விடுமென்பதை அறிந்த கிளைவ் அவற்றை ஏதும் செய்ய வேண்டாமென்று உத்தரவிட்டான். அந்த நிலையிலும் பார்ப்பதற்குப் பயங்கரமாயிருந்த அந்தப் பீரங்கியை உற்று நோக்கிய கிளைவ் மீண்டும் சிப்பாய்களில் ஒருவனை நோக்கி,
“இந்தப் பீரங்கியை அவுரங்கசீப் எப்போது கொடுத்தார்?” என்று வினவினான்.
”முதன் முதலாக ஆற்காட்டுக்கு நவாபை நியமித்த போதே இதைச் சக்கரவர்த்தி டில்லியிலிருந்து அனுப்பினார், தமது அதிகாரம் இங்கும் ஓங்கியிருப்பதற்கு அடையாளமாக” என்று கூறினான் சிப்பாய்.
‘’டில்லியிலிருந்து அனுப்பினாரா? டில்லியிலிருந்து இதை எப்படி இங்கே கொண்டுவர முடிந்தது?” என்று வியப்பின் மிகுதி யால் வினவினான் கிளைவ்.
”நுகத்தடிகளில் ஆயிரம் காளைகள் கட்டப்பட்ட பலமான ஒரு வண்டிமீது பீரங்கி உயர்த்தி அமர்த்தப்பட்டிருந்தது. இந்தப் பீரங்கி வந்தபோது இதைக் கண்ட மக்களும் மகாராஷ்டிரர் களுங்கூடப் பயந்ததாக இந்த ஊர்ப் பழங்குடிகள் சொல்லு கிறார்கள்” என்றான் சிப்பாய்.
கிளைவ் சிந்தித்தான் நீண்ட நேரம். அவுரங்கசீப் அந்த ராட் சதப் பீரங்கியை அனுப்பியதற்குக் காரணத்தை நன்றாகப் புரிந்து கொள்ளவும் செய்தான். இத்தகைய ஒரு பீரங்கியை அவரங்கசீப் அனுப்பியதற்குக் காரணம் தனது பலத்தின் எல்லை யைத் தட்சிணப் பிராந்தியத்துக்கு அறிவுறுத்தவும், ஏதாவது கலவரம் ஏற்படும் பட்சத்தில் இப்படிப்பல பீரங்கிகள் வரும் என்று மிரட்டவும் சக்கரவர்த்தி அதை அனுப்பியிருக்க வேண்டும் என்று தீர்மானித்தான். பிறரைப் பயமுறுத்த இந்தப் பீரங்கி அவுரங்கசீப்புக்கு உபயோகப்படுமானால் தனக்கு ஏன் உபயோகப்படக் கூடாது என்று தன்னைத்தான் கேட்டுக் கொள்ளவும் செய்தான். இப்படி நீண்ட நேரச் சிந்தனைக்குப் பிறகு சிப்பாய்களை நோக்கி, ‘’இந்தப் பீரங்கியைக் கோட்டையின் பிரதான வாயிலுக்கருகில் இழுத்துவர ஏற்பாடு செய்யுங்கள்” என்று கூறிச் சென்றான்.
அங்கிருந்து கிளம்பிக் கோட்டையின் ஒரு புறத்திலிருந்த தனது விடுதிக்கு வந்ததும் ஓர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு தீவிர சிந்ததனையில் ஆழ்ந்தான். தனது நிலையும் படைகளின் நிலையும் மிகப் பயங்கரமானது என்பதைச் சந்தேகமறப் புரிந்து கொண்டிருந்தான் கிளைவ். ஆற்காட்டை அவன் பிடித்திருந் தாலும், பிடித்தபின் இருமுறை கோட்டையை விட்டு வெளியே சென்று ஆற்காட்டின் பழைய காவற்படைகளை விரட்டியிருந் தாலும் தானிருக்கும் நிலை அத்தனை திருப்திகரமானதல்ல என்ப தைக் கிளைவ் உணர்ந்தேயிருந்தான்.
செப்டம்பர் 10-ஆம் தேதியும் 29-ஆம் தேதியும் ஸெயின்ட் டேவிட் கோட்டையிலிருந்து கவர்னரின் வலக் கரம் போன்ற ரிச்சர்ட் பிரின்ஸ் எழதிய கடிதங்களில் எதிரிகள் நடவடிக்கைகளைப் பற்றிய பயமுறுத்தல் அதிகமாக இருந்ததேயொழிய உதவியைப் பற்றி எவ்வித பிரஸ் தாபமும் இல்லையென்பதை நினைத்துப் பார்த்து, பெருமூச்செறிந்தான். இத்தனைக்கும் சந்தாசாகிப் திருச்சியில் கையைக் கட்டிக்கொண்டு உட்காந்திருக்காமல் தனது மகன் ராஜாசாகிபை ஆற்காட்டைத் திரும்பிப் பிடிக்க நாலாயிரம் சிப்பாய்களுடன் அனுப்பிவிட்டதையும், அந்த ராஜா சாகிப்பும் கோட்டைக்கு வெளியே கூப்பிடு தூரத்திலிருந்த பழைய நவாப்பின் அரண்மணையில் தங்கித் தனது துருப்புக்களைக் கொண்டு கோட்டையை முற்றுகையிட்டு விட்டதையும் எண்ணியும் பார்த்தான். போதாக்குறைக்குப் பிரெஞ்சு கவர்னர் டூப்ளேயும் அசைந்து விட்டதாகவும், 150 பிரெஞ்சு சோல்ஜர்கள் தகுந்த தளவாடங்களுடன் ராஜா சாகிபுக்கு உதவ விரைந்து விட்டதாகவும் செய்தி வந்திருக்கிறது. ‘அசையாதவர்கள் பிரிட்டிஷ்காரர்கள், முராரி ராவ், மைசூர் ரீஜண்ட் இவர்கள்தான். எல்லாம் நம்மவர்’ என்று தனக்குள் வெறுப்புடன் சொல்லிக் கொள்ளவும் செய்தான் கிளைவ்.
இந்த அபாய நிலைகூடக் கிளைவுக்கு ஒரு திருப்தியை அளித்தது. ”உதவி வருகிறபடி வரட்டும். அதற்காக இந்தக் கோட்டையை விட்டுவிடப் போவதில்லை” என்று தனக்குள் கறுவிக் கொண்ட கிளைவ், அவுரங்கசீப்பின் அந்தப் பழைய பீரங்கியை நினைத்து மெல்லச் சிரித்துக் கொண்டான். அந்தச் சிரிப்புடன் தனது படையில் என்ஸைனாக இருந்தவனும், சிறந்த வீரர்களில் ஒருவனுமான க்ளாஸ் என்ற பிரிட்டிஷ் சோல்ஜரை வரவழைத்தான். அவன் வந்ததும், ”என்ஸைன் க்ளாஸ்! டிட் யூ ஸி தி எம்பரர்ஸ் கானன்?” என்று விசாரித்தான்.
”எஸ் காப்டன், ஐ ஸாதி டெவில்” என்றான் என்ஸைன் க்ளாஸ்.
”ஹாய்ஸ்ட் இட் இன் தி ஸெண்டர் ஆப்தி போர்ட். லெட் இட் பீடர்ன்ட்டுவோர்ட்ஸ் பாலஸ் (அதைக் கோட்டை நடுவில் ஏற்றிவிடு. அதை நேராக அரண்மனையைப் பார்க்கும்படி திருப்பிவை)” என்று கூறினான் கிளைவ்.
‘’பாலஸ்?”
”எஸ். ராஜாசாகிப்ஸ் பாலஸ்.”
”தி கானன் ஈஸ் யூஸ்லெஸ். இட் ஹாஸ் ரஸ்ட் அண்டு ஹோல்ஸ் (அந்தப் பீரங்கி பயனற்றது. துருப் பிடித்திருக்கிறது; துளைகள் இருக்கின்றன)” என்றான் க்ளாஸ்.
”ஐ நோ” என்ற கிளைவ் புன்முறுவல் செய்து, ‘ஸம் டைம்ஸ் ஒல்ட் பீபிள் ஆர் யூஸ்புல், ஸோ ஆல்ஸோ ஒல்ட் திங்ஸ்
(சில வேளைகளில் வயதானவர்கள் உபயோப்படுகிறார்கள். பழைய சாமான்களுக்குக்கூட உபயோகம் உண்டு.)” என்றான்.
எந்த உபயோகத்தை அந்தப் பீரங்கியிடமிருந்து கிளைவ் எதிர்பார்க்கிறான் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்ஸைன் க்ளாஸினால்.
அந்தப் பீரங்கி உயர்த்தப்படுவதற்காக நான்கு நாட்கள் வேலை நடந்தது. அந்த வேலையைக் கிளைவே மேற்பார்வை பார்த்தான். என்னஸ்ன் க்ளாஸ் அந்தப் பீரங்கியை ஏற்ற ஆள் உயரத்துக்கு மேடையை அமைத்து அதை இழுத்து மேலே ஏற்றச் சரிவான பாதையும் கட்டினான். உயர்ந்த பீடத்தில் ஆரோகணித்த அவுரங்கசீப்பின் பீரங்கி நேர் எதிரே சற்றுத் தூரத்தில் தெரிந்த ராஜா சாகிப்பின் அரண்மனையை நோக்கித் தனது பெரிய வாயைப் பயங்கரமாகப் பிளந்து கொண்டிருந்தது.
சந்தா சாகிபின் மகனான ராஜா சாகிபும் தனது அரண்மனையிலிருந்து அந்தப் பீரங்கியைக் கவனித்தான். அந்த அரண்மனையை அடுத்துக் கோட்டையைச் சுற்றியுமிருந்த வீடுகளில் பிரெஞ்சு பீரங்கிகளுடன் ஆற்காட்டுக் கோட்டையை முற்றுகையிட்டிருந்த அவன் வீரர்களும் கவனித்தார்கள். அது உபயோகமற்ற பீரங்கியானாலும் அது அவுரங்கசீப்பின் பீரங்கி யென்பதே சந்தாசாகிப்பின் வீரர்களுக்குக் கிலியை அளித்தது.
ஆனால் ராஜா சாகிப் அதைப் பார்த்துக் கிலி அடையவில்லை யென்றாலும் அந்த உபயோகமற்ற துருப்பிடித்த பீரங்கியைக் கிளைவ் எதற்காக உயர்த்திப் பயமுறுத்துகிறான் என்பது புரியவில்லை. ”அதனால் பெரும் பயனில்லை. ஆனால் எதிரி ஏதோ தந்திரம் செய்யப் பார்க்கிறான். பொறுத்திருந்து பார்ப்போம்” என்று தனது உதவிக்கு வந்த பிரெஞ்சுக் காப்டனுக்குக் கூறினான்.
நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. இருதரத்தாரும் ஒருவருக் கொருவர் பீரங்கிப் பிரயோகம் செய்தார்கள். ராஜா சாகிப்பின் சிறந்த திறமையால் கிளைவின் படையில் சேதமும் ஏற்பட்டது. சிலர் எதிரிகளால் சுடப்பட்டு இறந்தார்கள். சிலர் காயமடைந்தார்கள். இந்தச் சமயத்தில் ஒரு நாள் இரவு கோட்டைச் சுவரையடுத்த தாழ்வரையில் நடந்து கொண்டிருந்த கிளைவ், ”ஆல்ரைட் பயர்தட்கானன்” என்று உத்தரவிட்டான்.
உடனே வீரர்கள் விரைந்தனர். எழுபத்திரண்டு பவுண்டு எடையுள்ள ஓர் இரும்புக் குண்டு அந்தப் பீரங்கிக்குள் திணிக்கப் பட்டது. என்ஸைன் க்ளாஸ் அதற்குத் தீயிட பந்தத்துடன் தயாராக நின்று கொண்டிருந்தான், கிளைவின் கட்டளையை எதிர் பார்த்து. கிளைவ், ”பையர்!” என்று கூவினான்.
என்ளுைன் க்ளாஸ் பந்தத்தை வெடி மருந்தின்மீது வைத் தான். கரகரவென்று ஏதோ ஒரு சத்தம் பீரங்கிக்குள் பயங்கரமாகக் கேட்டது. அடுத்த விநாடி கோட்டையே அதிரும்படியாக வெடித்தது, அவுரங்கசீப்பின் பீரங்கி. அதன் பயன் விசித்திரமாக இருந்தது, எதிரிகளைக் கதிகலங்கவும் வைத்தது.