Raja Perigai Part 3 Ch22 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
ராஜ பேரிகை – சாண்டில்யன்
மூன்றாம் பாகம் அத்தியாயம் – 22 .கடல் சொன்ன பதில்
Raja Perigai Part 3 Ch22 | Raja Perigai | TamilNovel.in
இரும்பு மனிதரான கவர்னர் தாமஸ் ஸாண்டர்ஸ் எதைப் பேசினாலும் பொருளுடன் பேசக் கூடியவர் என்பதை ராபர்ட் ஆர்ம் உணர்ந்திருந்தாலும்கூட, திருச்சி படையெடுப்பில் கிளைவுக்கு இருந்த கஷ்டங்களை அவர் எடுத்துக் கூறியபோது, கடலின் பிரபாவத்தைப் பற்றிக் கவர்னர் விவாதித்தது சிறுபிள்ளையின் பேச்சாகவே தோன்றியது கௌன்ஸிலருக்கு. தாம் கேட்ட கேள்விகளுக்குக் கடல்கூடப் பதில் சொல்லும் என்று கவர்னர் கூறியது வேப்பங்காயாக இருந்ததால் ராபர்ட் ஆர்ம் அவர் அறையிலிருந்து சிறிது கோபத்துடனேயே வெளியேறினார். அடுத்த நாளும், அதற்கடுத்த நாளும்கூட அவர் கவர்னரைப் பார்க்கவுமில்லை, அவருடன் படையெடுப்புப் பற்றிப் பேசவுமில்லை .
காப்டன் கிளைவ் மட்டும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனது படையை அணிவகுப்பதிலும் பொருள்களைத் திரட்டுவதிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்தான். அப்படி அவன் ஈடுபட்டிருந்த மார்ச் 15-ஆம் தேதி மாலையில் கவர்னர் அவன் இருந்த இடத்துக்கு வந்து, சேர்த்த உணவுப் பொருட்களை வண்டியில் ஏற்றிக்கொண்டிருந்த கிளைவை முதுகில் தட்டி, ”காப்டன் வேலையில் மும்முரமாக இருப்பதாகத் தெரிகிறது” என்று சொல்லிப் புன்முறுவல் செய்தார்.
காப்டன் கிளைவ் கவர்னரை நோக்கித் திரும்பி, ”கடமையில் மும்முரமாக இருக்கிறேன்” என்றும் சொன்னான், உற்சாகம் ஏதுமில்லாத குரலில்.
எக்ஸ்லென்ஸியின் புன்முறுவல் அவர் இதழ்களில் நன்றாக விரிந்ததால் வாயிலிருந்த புகைக் குழாயை அவர் பல்லில் கடித்துக்கொள்ள வேண்டியதாயிற்று. அப்படிக் கடித்த வண்ணம் சொன்னார், ”யூ டோண்ட் ஸீம் டு பி எந்தூஸியாஸ்டிக் (நீ உற்சாகத்துடைன் இருப்பதாகத் தெரியவில்லை )” என்று.
”கவர்னர் அளித்திருப்பது சுலபமான வேலையல்ல” என்று பதில் சொன்னான் கிளைவ்.
”ஹொய் டூ யூ ஸே தட்? (ஏன் அப்படிச் சொல்கிறாய்?)” என்று கவர்னர் வினவியதன்றி, ‘கேப்டன்! யூ ஆர் ஆன் எக்ரேட் மிஷன், நௌ யூ ஹாவ் மோர் சோல்ஜர்ஸ் அண்ட் கன்ஸ் தான் வாட் யூ ஹாட் அட் ஆற்காட் (காப்டன்! நீ பெரிய பணியை நோக்கிச் செல்கிறாய். ஆற்காட்டிலிருந்த சோல்ஜர்களைவிட அதிக சோல்ஜர்களும் உனக்கு இப்போது இருக்கிறார்கள். பீரங்கிகளும் அதிகம்)” என்றும் சுட்டிக் காட்டினார்.
காப்டன் கிளைவ் தன் கூரிய விழிகளைக் கவர்னர் கண்களோடு கலக்கவிட்டான். ”யுவர் எக்ஸலென்ஸி! எண்ணிக்கை ஜெயிப்பதாயிருந்தால் ஆற்காட்டில் ராஜாசாகிபுவும் பிரெஞ்சுக்காரர்களும் ஜெயித்திருக்க வேண்டும்” என்று சொல்லவும் செய்தான் திடமான குரலில்.
“ஐ அண்டர்ஸ்டாண்ட் ஐ டூ அண்டர்ஸ்டாண்ட். (புரிகிறது, நன்றாகப் புரிகிறது)” என்ற கவர்னர் ஸாண்டர்ஸ் மேலும் கேட்டார், ‘காப்டன் கான் யூஸ்பேர்மி ஆப் ஆன் அவர்? (காப்டன் எனக்கு ஒரு மணி நேரம் விட்டுக் கொடுக்க முடியுமா)” என்று.
கவர்னரின் கேள்விக்குக் காரணம் புரியாததால் கிளைவ் சரி யென்பதற்கு அறிகுறியாகத் தலையை மட்டும் ஆட்டினான். கவர்னர் மேலும் சொன்னார், “கான் யூ ப்ரிங் தட் ஹாட் ஹெடட் கௌன்ஸிலர் ஆர்ம்? (அந்த வெறி மூளைக் கவுன்ஸிலர் ஆர்மையும் அழைத்து வருகிறாயா?)” என்று.
காப்டன் கிளைவின் வியப்பு அதிகமாகியதால், “யுவர் எக்ஸலென்ஸி| ராபர்ட் ஆர்ம் ஈஸ் அண்டர் யுவர் கமாண்ட் (யுவர் எக்ஸலென்ஸி! ராபர்ட் ஆர்ம் உங்கள் கட்டளைக்கு உட்பட்டவர்)” என்று சுட்டிக்காட்டினான்.
”நாட் ஆல்வேஸ் மை பாய்! நாட் ஆல்வேஸ் (எப்பொழுது மல்ல தம்பி! எப்பொழுதுமல்ல)” என்றார் கவர்னர்.
அந்தச் சமயத்தில் அகஸ்மாத்தாக அங்கு வந்த ராபர்ட் ஆர்ம் கவர்னருக்குத் தலை வணங்கினார். ”ராபர்ட் ஆர்ம் அட் யுவர் எக்ஸலென்ஸீஸ் சர்வீஸ் (ராபர்ட் ஆர்ம் தங்கள் அடிமை)” என்று கடுப்புடன் கூறினார்.
”காப்டன்!” என்றார் கவர்னர்.
”எஸ் யுவர் எக்ஸலென்ஸி.” காப்டன் கிளைவின் கேள்வியில் வியப்பிருந்தது.
”யூ ஹேர்ட் ஹிஸ் டோன்? (இவர் குரலின் ஒலியைப் பார்த்தாயா?)” என்று கவர்னர் வினவினார்.
”வாட் ஈஸ் ராங் வித் மை டோன்? (என் குரலுக் கென்ன?)” என்று கேட்டார் ஆர்ம்.
கவர்னர் அவருக்குப் பதில் சொல்லவில்லை. கிளைவை நோக்கி, ‘நெள யூ அண்ட்ர்ஸ்டாண்ட்? (இப்பொழுது புரிகிறதா?)” என்று கேட்டார்.
‘’அண்டர்ஸ்டாண்ட் வாட்? (எதைப் புரிந்து கொள்ள வேண்டும்?)” என்றார் ராபர்ட் ஆர்ம் கடுப்பு சிறிதும் தளராமல்.
கவர்னர், ராபர்ட் ஆர்மைத் திரும்பி நோக்கி, ”இப்போதுதான் சொன்னேன் காப்டனிடம் உங்களுக்கு வெறி பிடித்திருக்கிறதென்று” என்றார் கவர்னர்.
”எனக்கா?”
“ஆம்.”
”மூளை தெளிவாயிருக்கிறது.”
”அதனால் தான் காப்டன் கிளைவின் பதவியை உயர்த்தாமல் திருச்சிக்கு அனுப்புகிறீர்கள்?”
”எஸ்” என்ற கவர்னர் ”ஐ டோல்ட் யூ தட் வீ மஸ்ட்• ஆஸ்க் த ஸீ (தங்களுக்கு முன்னமே சொன்னேன், கடலிடம் கேட்க வேண்டும் என்று)” என்று கூறினார்.
”தங்களுக்கு வெறியில்லை?” என்றார் ராபர்ட் ஆர்ம்.
“ஷ்யூர்.”
”யூ ஆர் நாட் மாட் ஐதர்? (பைத்தியமில்லை?)”
”டெபனட்லி நாட் (நிச்சயமாக எனக்குப் பைத்தியமு மில்லை)” என்ற ஸாண்டர்ஸ், ”காப்டன்! யூ அண்ட் மிஸ்டர் ஆர்ம் நௌ ஃபாலோ மி, என்று கூறிவிட்டுத் தமது மாளிகையி லிருந்து கடல் துறைக்குப் போகும் பாதையில் நடந்தார் வேகமாக.
அப்பொழுது இரவு மூண்டு விட்டது. மாளிகைப் பகுதியிலும் அந்தப் பாதையின் இருபுறங்களிலும்கூட விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. கவர்னர் வெளிச்சத்தில் தமது கையிலிருந்த வெள்ளிப் பிடியுள்ள பிரம்பால் காலைத் தட்டிக் கொண்டும் சில சமியம் சுழற்றிக்கொண்டும் நடந்தார். ராபர்ட் ஆர்மும் கிளைவும் அவரைப் பின் தொடர்ந்தார்கள். கடற்கரையில் அன்று காற்று வழக்கத்தைவிட அதிகமாயிருந்ததால் அலைகளும் பெரிதாக எழுந்து தரையைத் தாக்கின.
”நௌஐ ஃபீல் க்ரேட்” என்றார் கவர்னர்.
”ஷ்யூர் யூ ஆர்க்ரேட்” என்றார் ஆர்ம்.
கிளைவைப் பார்த்துக் கேட்டார் கவர்னர், ”காற்று எப்படி?” என்று.
‘இந்த நாட்டில் இந்தக் காற்றைத் தென்றல் என்று அழைக்கிறார்கள், தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வீசுவதால்” என்றான் கிளைவ்.
”இதில் என்ன அனுகூலம்?” என்றார் ராபர்ட் ஆர்ம்.
”எனி குட் ஸீ வின்ட் ஈஸ் யூஸ்புல் (எந்த நல்ல கடற்காற்றும் உபயோகமுள்ளது)” என்றார் கவர்னர்.
”ஹாவ் வீகம் ஹியர் டு என்ஜாய் த வின்ட்?) இங்கு நாம் காற்றை அநுபவிக்கவா வந்தோம்?)” வினவினார் ராபர்ட் ஆர்ம்.
“ஹோய் நாட்? ஹொய் நாட்?” என்றார் கவர்னர்.
ராபர்ட் ஆர்ம் பதில் சொல்லவில்லை சில விநாடிகள். பிறகு கேட்டார் விஷமமாக, ”கடல் ஏதோ பதில் சொல்லுமென்று சொன்னீர்களே. இப்போது கேட்பதுதானே?”
“குட் ஐடியா” என்றார் கவர்னர்.
”ஹொய் நாட்ப்ரே பார் ஏ மிரக்கிள் (ஏதாவது அதிசயம் விளையப் பிரார்த்தனைகூடச் செய்யலாமே)” என்றார் ஆர்ம்.
கவர்னர் சட்டென்று ஆர்மை நோக்கித் திரும்பினார். “குட் ஐடியா! யூ ஸெட் ப்ரே? ப்ரேயர் ஈஸ் குட். (நல்ல யோசனை. பிரார்த்தனை செய்யச் சொன்னீர்கள். பிரார்த்தனை மிகவும் நல்லது)” என்று பாராட்டிய கவர்னர் சட்டென்று மண்டியிட்டு வாயிலிருந்த குழாயை எடுத்து அதையும் பிரம்பையும் மண்ணில் வைத்துவிட்டுப் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார்.
கவர்னர் மாளிகை காங் ஒன்பது முறை டான் டான் என்று சப்தித்தது. அதே சமயத்தில் கடலில் சற்றுத் தூரத்தில் விளக்கு ஒன்றும் தெரிந்தது. அதைக் கண்ட கவர்னர், ”மை ப்ரேயர்ஸ் ஹாவ் பீன் ஆன்ஸர்ட் (எனது பிரார்த்தனைக்குப் பதில் கிடைத்துவிட்டது)” என்று கடலில் தோன்றிய அந்த விளக்கைச் சுட்டிக் காட்டிக் கூறினார்.
விளக்கு சற்று அருகில் வந்ததும் அது ஒரு பிரிட்டிஷ் கப்பல் என்பதை மற்ற இருவருங்கூடக் கண்டனர். அதிலிருந்து வேகமாக ஒரு படகு இறக்கப்பட்டுப் படகு தரையை நோக்கி வருவதையும் மூவரும் கண்டார்கள்.
கவர்னர் திடீரென எழுந்து கம்பீரமாக நின்றார். மற்ற இரு வரையும் எழுந்து நிற்கப் பணித்தார். மூவரும் அடென்ஷனில் நின்றதும் படகு தரை தட்டியது, அரை மணி நேரத்தில். அதிலிருந்து பெரிய தொப்பையுடன் இறங்கிய உருவத்தைச் சுட்டிக்காட்டிய கவர்னர் ஸாண்டர்ஸ், “காப்டன், யூ ஹாவ் யுவர் ஸால்வேஷன் இன் தட் சோல்ஜர் (காப்டன்! உனக்கு அந்த சோல்ஜர் மூலம் விடிமோட்சம் கிடைத்துவிட்டது)” என்றார்.
அந்த மனிதனும் இறங்கி, தொப்பை சற்றுப் பெரிய தாயிருந்தாலும் கம்பீரமாக ராணுவ நடை நடந்து வந்தார், மூவரையும் நோக்கி. அவரைப் பார்த்த கவர்னர் கையை நீட்டி, ”வெல்கம் மேஜர்” என்று பாராட்டிக் கை குலுக்கினார்.
காப்டன் கிளைவும், ராபர்ட் ஆர்மும் அவரை வரவேற்கத் திராணியற்றுச் சிலையென நின்றனர்.
”மை பாய் டோண்ட் யூ ரெகக்னைஸ் யுவர் ஒல்ட் காம்ரேட் (தம்பி! உன் பழைய தோழனை உனக்கு அடையாளம் புரிய வில்லையா?)” என்று கூறிய மேஜர், கிளைவை நோக்கி வெகு வேகமாக வந்தார்.
கவர்னர் ஆர்மை நோக்கி, “டிட் ஐ நாட் டெல் யூதட்த ஸீ வில் ரிப்ளை (கடல் பதில் சொல்லுமென்று சொல்லவில்லை?)” என்று கேட்டார் குதூகலத்துடன்.
உணர்ச்சிகள் மீறி நின்றதால் ராபர்ட் ஆர்ம் பதில் சொல்ல வில்லை.