Raja Perigai Part 3 Ch25 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
ராஜ பேரிகை – சாண்டில்யன்
மூன்றாம் பாகம் அத்தியாயம் – 25 .மான்ஷியர் லா
Raja Perigai Part 3 Ch25 | Raja Perigai | TamilNovel.in
நானூறு ஐரோப்பிய சோல்ஜர்களுடனும், ஆயிரத்து நூறு இந்திய சிப்பாய்களுடனும் எட்டு பெரிய பீரங்கிகளுடனும் மேஜர் லாரன்ஸின் தலைமையில் ஸெய்ன்ட் டேவிட் கோட்டையை விட்டுக் கிளம்பிய ராபர்ட் கிளைவ் படைகளைத் துரிதமாக நடத்திச் செல்ல விரும்பினாலும், இந்தியாவின் பிரிட்டிஷ் படைகளின் கமாண்டர் இன் சீப்பாக ஈஸ்ட் இந்தியா கம்பெனி டைரக்டர்களால் நியமிக்கப்பட்டிருந்த மேஜர் லாரன்ஸ் மட்டும் அதற்கு உடன்படாமல் படைகளை நிதானமாகவே நடத்திச் சென்றார். கிளைவ் அதைப்பற்றி விசாரித்த போது ஜெனரல் லாரன்ஸ் புன்முறுவல் கொண்டு, “காப்டன்! போர்களில் துரிதத்துக்கும் சமயம் உண்டு, நிதானத்துக்கும் சமயமுண்டு, இது நிதானிக்க வேண்டிய சமயம்” என்றார்.
கிளைவ் தனது புரவியை அருகில் செலுத்திக்கொண்டே வினவினான். “நாம் திருச்சியை அடைவதற்குள் சந்தா சாகேப்பும் பிரெஞ்சு கமாண்டர் மான்ஷியர்லாவும் திருச்சிக் கோட்டையைக்குள் புகுந்துவிட்டதால் முகமது அலியின் நிலைமை என்ன?”
மேஜர் லாரன்ஸ் புரவியின் முதுகின்மீது பதிந்து அசைந்து கொண்டிருந்த தமது தொந்தியைச் சில விநாடிகள் கவனித்தார். பிறகு தலையைத் தாமாகவே அசைத்துக் கொண்டு, “மான்ஷியர் லா போருக்குப் புதியவரல்ல. அந்த மாதிரி ஒரு முட்டாள் தனத்தை அவர் செய்யமாட்டார்” என்று சொன்னார்.
”இதில் முட்டாள்தனம் எங்கிருந்து வருகிறது?” என்று வினவினான் காப்டன் கிளைவ்.
”இப்போது முகம்மது அலி திருச்சி கோட்டையிலிருந்து வெளியே வரமுடியாமல் அடைந்து கிடக்கிறார். மான்ஷியர் லா உள்ளே புகுந்துவிட்டால் முகம்மது அலியைச் சிறை செய்யலாம். ஆனால் அவர் இருக்கும் ஸ்தானத்தை இவர் பிடித்துக் கொள்வார். அண்ட் தட் வில் பீதி எண்ட் ஆப் திஸ் வார் (அது இந்தப் போரை முடித்துவிடும்)” என்ற ஜெனரல் லாரன்ஸ் பெரிதாக நகைத்தார்.
கிளைவ் அவரை ஊன்றிக்கனித்தான். ”ஐ ஆம் நாட் ஏபிள் டு பாலோ யூ (நீங்கள் சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை)” என்றும் கூறினான், சிந்தனை படிந்த முகத்துடன்.
ஜெனரல் லாரன்ஸ் மெள்ள விளக்கினார். ”மை பாய்! நௌ முகம்மது அலி இஸ் எப்ரிஸ்னர் இன்ஸைட் தி வால்ஸ் ஆப் ட்ரிச்சி! தென் லா வில் பி த பிரிஸ்னர் (இப்போது திருச்சி கோட்டைக்குள் முகம்மது அலி கைதிபோல் அடைந்து கிடக்கிறார். அங்கு லா சென்றால் முகம்மது அலிக்குப் பதில் அவர் அடைந்து கிடக்கும்படி நேரிடும்). அன்ட் மைன்ட் யூ, த டாஞ்சூர் ஆர்மி, தமைசூர் ஆர்மி அன்ட் மொராரிராவ்ஸ், லைட் ஹார்ஸ் ஆர் ஆல் தேர் டு ஸரௌன்ட் ஹிம். (தவிர தஞ்சைப் படைகளும், மைசூர் படைகளும், முராரிராவின் காற்று வேகக் குதிரைப் படையும் அவரை வளைத்துக் கொள்ள சித்தமாயிருக்கின்றன) ஸோலாவில் நாட் எண்டர்த போர்ட், ஹி உட் பி இன்த ஓபன் டு கிவ் அஸ் பாட்டில். லா ஈஸ் போல்ட், பட் நாட் ஸ்டுபிட் (ஆகையால் லா கோட்டைக்குள் புகமாட்டார். வெளியிலிருந்து நம்முடன் போரிடுவதையே விரும்புவார். லா தைரியசாலி. ஆனால் முட்டாளல்ல)” என்று விவரித்தார் ஜெனரல் லாரன்ஸ்.
கிளைவ் அவருடைய நுண்ணிய அறிவை வியந்தான். போரில் தனது திடீர்த் தாக்குதல் முறைக்கும் அநுபவம் வாய்ந்த தளபதியான மேஜர் லாரன்ஸின் முறைக்கும் எத்தனை வித்தியாசம் இருக்கிறதென்பதை நினைத்து மிகுந்த ஆச்சரியத்துக் குள்ளானான். மேஜர் லாரன்ஸ் அவன் சிந்தனையிலாழ்ந்து விட்டதைக் கவனித்தார். அதன் காரணமும் அவருக்குப் புரிந்தே இருந்தது.
ஆகவே தனது புரவியை அவன் புரவியுடன் உராயவிட்டு, “காப்டன் மை பாய்” என்று அன்புடன் அழைத்து, “போரில் இப்படித்தான் நடக்க வேண்டும் என்ற நிர்ணயம் கிடையாது. சில வேளைகளில் நிதானம் அவசியமாயிருக்கும். ஆகையால் உன் போர் முறை தவறென்று நினைக்காதே. நீ துணிவுடன் துரிதமாகச் சென்று ஆற்காட்டைப் பிடித்திராவிட்டால் இப்போது நாம் எதிர்நோக்கிச் செல்லும் போருக்கே அவசியம் இருக்காது” என்று சுட்டிக்காட்டினார்.
மேஜரின் வார்த்தைகளால் மனச்சாந்தியடைந்த கிளைவ் அதற்கு மேல் வாதத்தை வளர்த்தாமல் படைகளை அவர் உத்தரவுப்படி நடத்திச் சென்றான். அவரிடமிருந்து பிரிந்து சென்று அணிவகுத்த படைகளுக்கு முன்னும் பின்னும் தனது புரவியைச் செலுத்திப் படைகள் போக்கையும் கவனித்தான். மேஜர் லாரன்ஸ் அன்றிரவு சிதம்பரத்திலேயே முகாம் செய்தார், தனது படைகளுடன். மறுநாள் காலை தஞ்சையை நோக்கிக் கிளம்பினார். அந்த இரண்டு நாட்களில் தஞ்சையை அடைந்து படையை நகருக்கு வெளியிலேயே நிறுத்தி, காப்டன் பிரதாபசிம்ம மகாராஜாவைச் சந்திக்கச் சென்றார்.
மகாராஜா அவர்களை மாடியிலிருந்த தமது ஆஸ்தான அறையிலேயே சந்தித்தார். அவருடன் டபீர் பண்டிதரையும் நந்தினியையும் தவிர வேறு யாரும் இல்லாததைக் கண்டலாரன்ஸ் மகாராஜாவுக்குத் தலை வணங்கி, ”யுவர் மெஜஸ்டி பிரிட்டன் ஆபர்ஸ் இட்ஸ் அஸிஸ்டன்ஸ் டு யூ (மகாராஜா பிரிட்டன் தங்களுக்குத் தனது உதவியை அளிக்க முன்வந்திருக்கிறது)” என்று சம்பிரதாயமாக அறிவித்தார்.
பிரதாபசிம்ம மகாராஜாவும், “பிலீவ் மீ மேஜர் யுவர் கண்ட்ரீஸ் கெஸ்சர் இஸ் அப்ரிஷியேடட் (தங்கள் நாட்டின் இந்த உதவியை நாம் பெரிதும் பாராட்டுகிறோம்)” என்று சுத்தமான ஆங்கிலத்தில் பதிலளித்தார்.
மகாராஜாவின் பதிலைக் கேட்டதும் மறுமுறை தலை தாழ்த்திய லாரன்ஸ், “தட்ஸ் நைஸ் யுவர் மெஜஸ்டி. ஐ ஹாவ் கம் டு டிஸ்கஸ் ட்ரூப் பொஸிஷன்ஸ் அரௌன்ட் ட்ரிச்சி. (நல்லது மகாராஜா. திருச்சியைச் சுற்றியிருக்கும் படைகளின் நிலையை விவாதிக்க வந்திருக்கிறேன்)” என்று கூறி விட்டு நந்தினியையும் டபீர் பண்டிதரையும் பார்த்தார் ஒருமுறை.
பிரதாப சிம்ம மகாராஜா அவர் மனத்திலோடிய எண்ணத்தை விநாடி நேரத்தில் புரிந்து கொண்டாராகையால், ”மேஜர், திஸ் ஈஸ் மை ரெவின்யூ மினிஸ்டர், அன்ட் தட் ஈஸ் மை டாட்டர். யுமே ஸ்பீக் பிபோர் தெம். (மேஜர், இவர் என் வருமானத் துறை மந்திரி. அதோ அவள் என் புதல்வி. இருவர் முன்பும் நீங்கள் எதையும் பேசலாம்)” என்று கூறினார்.
அதுவரை மௌனமாயிருந்த காப்டன் கிளைவ் இடை புகுந்து, “எல்லாரையும்விட அரசகுமாரிக்கு விஷயங்கள் விவரமாகத் தெரியும்” என்று கூறினான்.
மேஜர் லாரன்ஸ் வியப்புடன் கிளைவையும் நோக்கி அரசகுமாரியையும் நோக்கினார். “ஹியர் ஈஸ் ப்யூட்டி. அன்ட் மை காப்டன் டெல்ஸ் மி தேர் ஈஸ் நாலட்ஜ் டூ. ரேர் காம்பினேஷன், ரேர் காம்பினேஷன். (இதோ அழகு இருக்கிறது. அறிவும் இருப்பதாகக் காப்டன் சொல்கிறார். அபூர்வ கலப்பு இது)” என்ற மேஜர் லாரன்ஸ், “பிரன்ஸஸ் கான் யூ என்லைட்டன் மி அபௌட் தட்ரூப்ஸ் அரௌன்ட் ட்ரிச்சி?” என்று வினவவும் செய்தார்.
இதைக் கேட்ட நந்தினி மிக அழகாகப் புன்முறுவல் செய்தாள். ”ஐ ஆம் ப்ளாட்டர்ட் மேஜர்| ஐ வில் டெல் யூ வாட் ஐ நோ. (உங்கள் பாராட்டினால் மெய்மறந்திருக்கிறேன் மேஜர். எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்)” என்ற நந்தினி, ”அப்பா! நமது தேசப் படம் எங்கிருக்கிறது?” என்று வினவினாள். பிரதாப சிம்ம மகாராஜா கண்ணைக் காட்ட டபீர் பண்டிதர் பக்கத்தறைக்குச் சென்று படத்தை எடுத்து வந்து மகாராஜாவுக்கு எதிரிலிருந்த ஒரு மேஜைமீது விரித்து, சாளரக்காற்றில் அது பறக்காதிருக்க நாற்புறங்களிலும் சிங்கத் தலைகள் உள்ள வெண்கலக் கட்டிகளையும் வைத்தார். இதற்குப் பிறகு மகாராஜா, மேஜரையும் கிளைவையும் அருகே வரும்படி அழைத்தார். அவர்கள் வந்ததும் நந்தினியை அழைத்து, “மகளே! நிலைமையை விளக்கு இவர்களுக்கு” என்று உத்தரவிட்டுத் தமது சிங்கப் பிடி ஆசனத்தில் நன்றாகச் சாய்ந்து கொண்டார்.
நந்தினி அந்தத் தேசப்படத்தை நன்றாக ஆராய்ந்துவிட்டு, “இப்படத்தை நீங்கள் ஏற்கனவே ஆராய்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்” என்றாள் மேஜரைப் பார்த்து.
”ஆம். பார்த்திருக்கிறேன். ஓரளவு நிலைமையையும் உணர்ந்திருக்கிறேன்” என்றார் மேஜர்.
‘திருச்சியை வளைத்து மைசூர் படைகள் பத்தாயிரம், தஞ்சைப் படைகள் பத்தாயிரம், முராரிராவின் புரவிப் படை ஐயாயிரம் நிற்கின்றன. பிரெஞ்சு சோல்ஜர்கள் அறுநூறு பேர், அவர்களைச் சேர்ந்த சிப்பாய்கள் ஆயிரத்து எண்ணூறு, புரவிப் படை பதினையாயிரம் இருக்கின்றன. இவற்றுள் சந்தா சாகிபின் புரவிப் படை மிக வலுவுள்ளது’ என்று அறிவித்த நந்தினி, ”மேஜர், தாங்கள் எந்தப் பக்கமாகப் போகப் போகிறீர்கள்?” என்று வினவினாள்.
மேஜர் தேசப் படத்தைப் பார்த்தார். “பிரின்ஸஸ்! கான் யூ டெல் மி ஹொயர் த பிரெஞ்ச் காரிஸன்ஸ் ஆர் (ராஜகுமாரி பிரெஞ்சுத் துருப்புகள் எங்கே இருக்கின்றனவென்று சொல்ல முடியுமா?” என்று கேட்டார்.
நந்தினி படத்தில் மூன்று இடங்களில் விரலை வைத்தாள். முதலில் காவிரியின் அணையைக் காட்டினாள். “இதற்குக் கிழக்கே கோவிலடிக் கோட்டை இருக்கிறது இங்கு…” என்று அதில் தன் மலர் விரலை வைத்தாள். அங்கிருந்து காவிரியைக் கடந்து மேற்கே வந்தால் திருச்சிக்கு வடகிழக்கில் பிரெஞ்சுத் தளம் இருக்கிறது இந்த இடத்தில்…” என்று அதையும் சுட்டிக் காட்டினாள். “இந்த இரண்டு இடங்களிலும் தங்களை வரவேற்க பிரெஞ்சு பீரங்கிகள் தயாராக இருக்கின்றன. சமவெளியில் சென்றால் சந்தாசாகிபின் புரவிப் படை பாயத் தயாராயிருக்கிறது” என்றும் வினக்கினாள்.
மேஜர் தலையசைத்தார். ”குட்! வெரிகுட்” என்றும் அரச குமாரியைப் பாராட்டிவிட்டு, ”பிரின்ஸஸ்! ஹொய் நாட் யூ பாலோ அஸ்? யூ வில் பி வெரிகுட் ஹெல்ப் (அரசகுமாரி! நீங்கள் ஏன் எங்களுடன் வரக்கூடாது? நீங்கள் எங்களுக்குப் பேருதவியா யிருக்கலாம்” என்று கேட்டார்.
நந்தினி நகைத்தாள். ”மேஜர் என்னைவிடச் சிறந்த இருவர் தங்களுக்கு உதவுவார்கள். எங்கள் தளபதி மானாஜியும் அவர் உபதளபதியும் போயிருக்கிறார்கள்” என்று கூறினாள் நகைப்பின் ஊடே.
”தாங்க் யூ பார் யுவர் இன்பர்மேஷன். நௌ ஐ நோ வாட் மான்ஷியர் லா வாண்ட்ஸ் (நீங்கள் சொன்ன செய்திக்கு நன்றி. மான்ஷியர் லா என்ன எதிர்பார்க்கிறார் என்பது எனக்குத் தெரிகிறது)” என்றும் சொன்னார். அன்றிரவே மேஜர் லாரன்ஸ் தம் படைகளுடன் கிளம்பினார் திருச்சி நோக்கி. கொள்ளிடத்தைக் கிட்டியதும் திடீரெனப் படையை நேர்கிழக்கில் திருப்பினார்.
”வழி இதுவல்ல” என்றான் காப்டன் கிளைவ்.
”வீ ஆர் டேகிங் அனதர் ரூட். வீ கோ ஈஸ்ட் (நாம் வேறு வழியில் போகிறோம். கிழக்கே செல்கிறோம்)” என்றார் மேஜர்.
“ஹொய்?”
”ஐ டோண்ட் லைக் டு ஒப்லைஜ் மான்ஷியர் லா (மான்ஷியர் லாவுக்கு உதவ நான் விரும்பவில்லை)” என்றார் மேஜர் திட்டவட்டமாக.
இது நடந்தது மார்ச் 28-ஆம் தேதியன்று. அதாவது ஸெயின்ட் டேவிட் கோட்டையிலிருந்து புறப்பட்ட பதின்மூன்று நாள் கழித்து மேஜர் லாரன்ஸ் என்ன காரணத்தாலோ வெகு தாமதமாகப் படைகளை அழைத்து வந்தார். ஒரு வாரத்தில் அடைய வேண்டிய கொள்ளிடக்கரையைப் பதின்மூன்று நாட்களில் அடைந்தார்.
இவர் தாமதம் கிளைவுக்கு எரிச்சலைக் கொடுத்தது. கிளைவுக்கு எரிச்சலைக் கொடுத்ததென்றால் மான்ஷியர் லாவுக்குக் குழப்பத்தை அளித்திருந்தது. மான்ஷியர் லா அன்று கோவிலடிக் கோட்டையில் குழப்பமும் சீற்றமும் ஒருங்கே கொண்டு தமது அறையில் உலாவினார், நின்றார், காவிரியைச் சுடுவதுபோல் பார்த்தார்.