Raja Perigai Part 3 Ch26 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
ராஜ பேரிகை – சாண்டில்யன்
மூன்றாம் பாகம் அத்தியாயம் – 26 .மேடம் டூப்ளேயின் யோசனை
Raja Perigai Part 3 Ch26 | Raja Perigai | TamilNovel.in
பிரெஞ்சுப் படைத் தலைவரான மான்ஷியர் ஜேக்ஸ் லா, வட்டிக்குப் பணம் கொடுத்து வந்த ஜான் லாவின் புதல்வ ரானாலும், அவர் உடலில் போர் வீரர்களின் வம்ச ரத்தம் ஓட வில்லையென்பது பொதுக் கருத்தானாலும், போரிலோ போர்த் தந்திரத்தாலோ அவர் யாருக்கும் சளைத்தவரல்ல.* அவரை நம்பித்தான் கவர்னர் டூப்ளேயும் தம்மிடமிருந்த அத்தனை சோல்ஜர்களையும் திருச்சியைத் தகர்க்க அனுப்பியிருந்தார். அப்போர்ப்பட்ட கமாண்டர் லா அன்றிரவு கோவிலடிக் கோட்டையின் பிரதான அறையில் பெருங்குழப்பத்துடன் உலாவிக்கொண்டு, அடிக்கடி சாளரத்தண்டை நின்று காவிரியை வெறித்துப் பார்த்துக் கொண்டும் இருந்தாரென்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. மேஜர் லாரன்ஸ் தாம் எதிர்பார்த்தபடி நடக்காமல் பைத்தியக்காரத்தனமாக அவரது படையை அழைத்துக்கொண்டு எங்கோ சென்றுவிட்டார் என்ற செய்தி அவரைப் பைத்தியமாக அடித்திருந்தது.
அதனால் வெகுண்ட அவர் அடிக்கடி காவிரியை உற்றுப் பார்த்தாரானாலும், காவிரி அவருக்கு உதவாதது தவிர, கோட்டைக் சுவரை அணைத்து ஓடிக்கொண்டிருந்த அதன் நீர் சலசலவென மண்ணை அரித்து அவரை நோக்கிப் பரிகசித்துக் கொண்டிருந்தது. ”வாத் ஈஸ் திஸ் மேஜர் தூயிங்? ஈஸ் ஹி எ ஸோல்ஜர் ஆர் மாத்காப்? (இந்த மேஜர் என்னதான் செய்கிறான்? அவன் சோல்ஜரா பித்துக்குளியா?)” என்ற ‘ட’ வர வேண்டிய இடங்களை த’ வென்றும் து’ வென்றும் பிரெஞ்சு மொழிப்படி மென்மையாக உச்சரித்து மேஜர் லாரன்ஸ்மீது தன்னந்தனியே எரிந்து கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் தனியே உள்ளே நுழைந்த கோட்டை உபதளபதியை நோக்கி, ”ஹொய் தித் யூகம் ஷியர்? யூ மேஜர் லாரன்ஸ்? (இங்கு ஏன் வந்தாய்? நீ மேஜர் லாரன்ஸா ?)” என்று சீறவும் செய்தார்.
கோட்டை உபதளபதி சொன்னான். ‘ஐ ஆம் நோ மேஜர் லாரன்ஸ். பத்ஐ பிரிங் நியூஸ்” என்று.
பிரெஞ்சு கமாண்டர் லா உபதளபதி மீது சீற்றம் ததும்பிய விழிகளைத் திருப்பினார். “யூ பிரிங் நியூஸ்? வாத் நியூஸ்? யூ காத் லாரன்ஸ்? (செய்தியா! என்ன செய்தி? மேஜர் லாரன்ஸைப் பிடித்து விட்டாயா?)” என்று சீற்றமும் சற்று இகழ்ச்சியும் குரலில் ஒலிக்கக் கேட்டார் கமாண்டர் ஜேக்ஸ் லா.
உபதளபதியான அந்தப் பிரெஞ்சுக்காரனும் இகழ்ச்சியைப் பதிலுக்குக் காட்டினான். ”கவர்னர் தூப்ளே வான்ட்ஸ் யூ டு காப்சர் மேஜர், நாத் மி (மேஜரைப் பிடிக்க கவர்னர் டூப்ளே தங்களைத்தான் எதிர்பார்க்கிறார், என்னையல்ல)” என்று கூறினான் உபதளபதி.
மான்ஷியர் லா உபதளபதியை உற்றுப் பார்த்தார். ”எனக்கு இந்த ஊர் தெரியும். உனக்குத் தெரியுமா?” என்று தமிழில் கேட்டார் வேண்டுமென்றே.
“தெரியும்” என்றான் உபதளபதியும் தமிழில்.
”என்க்கு இந்த ஊர் பாஷை தமிழ் தெரியும். உனக்குத் தெரியுமா?”
”தெரியும். நன்றாகத் தெரியும். நான் கர்நாடிக் வந்து பத்து வருஷம் ஆகிறது” என்று உபதளபதி சொன்னான், மான்ஷியர்லா வந்து அத்தனை ஆண்டுகள் ஆகவில்லையென்பதைக் குறிப்பிட.
”ஐ ஹாவ் ஐஸ் (எனக்குக் கண்கள் இருக்கின்றன)” என்றான் உபதளபதி.
”வாத் தூ யூ வித் யுவர் ஐஸ்? (உன் கண்களை வைத்துக் கொண்டு என்ன செய்கிறாய்?)”
”ஐ ஸீ (பார்க்கிறேன்).”
“வாத்தூ யூ n? (என்ன பார்க்கிறாய்?)’’
”உங்கள் காலுக்குக் கீழே இருக்கும் நதியை.”
“என்ன!”
”ஆம் உங்கள் காலடியில் கண்ணுக்கெதிரே காவிரி இருக் கிறது. வடக்கே கொள்ளிடம் இருக்கிறது.”
உபதளபதி தன்னைப் பார்த்து நகைக்கிறான் என்பதை லா புரிந்து கொண்டார். இருப்பினும் இகழ்ச்சியுடன் கேட்டார்:
“இந்த ஊர் தெரியும் உனக்கு. இரண்டு நதிகள் தெரியும். பத் யூ தூ நாத் நோ எனிதிங் பௌத்த பிரித்திஷ் மேஜர். (ஆனால் பிரிட்டிஷ் மேஜரைப் பற்றி உனக்கு எதுவும் தெரியாது)” என்று.
”ஐ நோதத் தூ (அதுவும் தெரியும்)” என்றான் உபதளபதி.
இதைக் கேட்ட மான்ஜியர் லா சரேலென்று உப தளபதியை நோக்கித் திரும்பி, “இதுவரை ஏன் சொல்லவில்லை? ஹொய் தித் யூ நாத் தெல் மிதில் நௌ?” என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் கலந்து எரிந்து விழுந்தார்.
”யூ தித் நாத் அலவ் மி (நீங்கள் சொல்லவிடவில்லை)” என்றான் உபதளபதி.
”நௌ தெல் (இப்பொழுது சொல்லித் தொலை)” என்றார் லா.
உபதளபதி உடனடியாகப் பதில் சொல்லவில்லை. பிரெஞ்சுக் காரர்களுக்கு இயற்கையாகவுள்ள நகைச்சுவையைக் காட்டினான். ”பிரித்திஷ் மேஜர் க்ளெவர், வெரி க்ளெவர் (பிரிட்டிஷ் மேஜர் கெட்டிக்காரர். மிகவும் கெட்டிக்காரர்)” என்றான் உபதளபதி. ”ஐ நோ, தெல் மீ ஹொயர் ஈஸ் லாரன்ஸ்? (எனக்குத் தெரியும் அது. லாரன்ஸ் எங்கே?)” என்று கேட்டார் லா. ”பிகாஸ் ஹி ஈஸ் க்ளெவர் ஹி சீ தத் யூ (அவர் கெட்டிக்கார ராகையால் உங்களை ஏமாற்றிவிட்டார்)” என்றான் உபதளபதி.
”எப்படி?” என்று வினவினார்லா.
”ஆற்காட்டு ரஸ்தாவில் அவர் வந்தால் மடக்க நீங்கள் கோயிலடியைப் பலப்படுத்தினீர்கள். கொள்ளிடத்தையும் காவிரி யையும் கடந்தால் திருச்சிக்கு முன்பாகவே அவரை மடக்கத் திருச்சிக்குக் கிழக்கே காவிரிக் கரையில் பிரெஞ்சுத் தளம் அமைத்தீர்கள். ஆனால் பிரிட்டிஷ் மேஜர் இரு வழியிலும் வராமல் கோவிலடியையும் தாண்டிக் கிழக்கில் சென்று விட்டார். இனி அவர் கோவிலடியையும் தாண்டிக் கிழக்கில் கடந்து மீண்டும் மேற்கு நோக்கித் திருச்சிக்கு வருவார்” என்று உபதளபதி விளக்கினான்.
இதைக் கேட்ட மான்ஷியர் லா திகைத்து நின்றார், பல விநாடிகள். மேஜர் லாரன்ஸ் கோவிலடி மார்க்கத்தில் திருச்சியையடைய முயன்றால் இரு நதிகளுக்கும் இடையிலுள்ள குறுகிய நிலப் பரப்பில் மாட்டிக் கொள்வாரென்று லா எதிர்பார்த்தார். அப்படியன்றிக் கோவிலடிக்கு முன்புள்ள அணையைத் தாண்டினால் அவர் அமைத்திருக்கும் பிரெஞ்சுத் தளத்துக்கும், கோவிலடி, எறும்பீசுவரம் ஆகிய இரு கோட்டைகளுக்கும் இடையில் சிக்கிக் கொள்வார். அப்படிச் சிக்கிக் கொண்டால் அவர் பின்னால் கோட்டைகள் இருக்கும். முன்னால் பிரெஞ்சுத் தளம் இருக்கும். அந்த நிலையில் அவர் படைகளை நொறக்கிவிட முடியும். இப்படிக் கணக்கு போட்டிருந்தார் மான்ஷியர் லா. ஆனால் பல போர்களைக் கண்டிருந்த ஜாம்பவானான மேஜர் லாரன்ஸ் அவருக்குக் கடுக்காய் கொடுத்துவிட்டுக் கோவிலடியையும் தாண்டி நீண்ட தூரம் கிழக்கில் சென்றுவிட்டது அவருக்குப் பெரும் குழப்பத்தை அளித்தது. அந்தக் குழப்பத்தை உபதளபதியே நீக்கினான். “மேஜர் கோவிலடியையும் தாண்டி, எறும்பீசுவரத்தின் கிட்டயே வராமல் எல்லாவற்றையும் சுற்றி வளைத்துக்கொண்டு திருச்சியை அடைவார்” என்று கூறினான் உபதளபதி.
மேஜரின் தந்திரம் உபதளபதியால் மெள்ள மான்ஷியருக்குப் புலனாகவே அவர் டூப்ளேயைச் சபித்தார். ”ஹொய் தூப்ளே வாண்ஸ் வார் வித் பிரித்திஷ். ஷி மஸ்த் ஸீக் பீஸ் (டூப்ளேவுக்கு பிரிட்டிஷாருடன் போர் எதற்கு? அவர் சமாதானத்தை யல்லவா நாட வேண்டும்?)” என்று பிரெஞ்சு கவர்னர்மீது எரிந்து விழந்தார்.
எரிந்து விழுந்தது அவர் மாத்திரமல்ல. மேடம் டூப்ளேயும் அதே இரவில் டூப்ளேமீது எரிந்து விழுந்து கொண்டிருந்தாள். கவர்னரின் பள்ளியறையிலிருந்த கட்டிலில் பிரும்மாண்டமான தனது மார்பின் பெரு விளிம்புகள் நைட் கௌனையும் மீறித் தெரிய மல்லாந்து படுத்துக் கிடந்த மேடம் டூப்ளே, ‘ஜோஸப்! வாத் யூ ஹாவ் தன் வித் லாரன்ஸ்?” என்று வினவினாள்.
கட்டிலின் முகப்பில் உட்கார்ந்திருந்த டூப்ளேயின் முகத்தில் சிந்தனை படர்ந்து கிடந்தது. அவர் மூளையெல்லாம் திருச்சிக்கு அருகில் இருந்தபடியால் அவர் உடனடியாகத் தமது மனைவிக்குப் பதில் சொல்லவில்லை. மேடம் தனது பெருங்கையில் ஒன்றை எடுத்துக் கணவன் கையை எலும்பு நொறுங்கப் பிடித்தாள் ”மை தியர் யூ ஆர் நாத் ரிப்ளையிங் து மி (அன்பே, எனக்கு நீ பதில் சொல்லவில்லை)” என்றாள் லேசாகச் சினம் குரலில் ஒலிக்க.
அந்தக் கேள்வியால் புதுவைக்குத் திரும்பிய டூப்ளே, ”வாத்தித் யூ ஸே? (என்ன சொன்னாய்?)” என்று வினவிக் கொண்டே மனைவியை நோக்கியும் திரும்பினார்.
மேடம் டூப்ளே, வாகன வாரைகள் போலிருந்த தனது தொடைகளைச் சிறிது விலக்கி நெளிந்தாள். “யூ தித் நாத் ஹியர் மி? (நான் சொன்னது காதில் விழவில்லை)” என்று கூறிய வண்ணம் டூப்ளேயை நெருங்கவும் செய்தாள்.
“நான் யோசனை செய்து கொண்டிருக்கிறேன்” என்றார் டூப்ளே.
“என்ன யோசனை?”
”லாரன்ஸைப் பற்றி.”
“இன்னும் யோசனைதானா?”
”யோசனை இல்லாமல் போரை வெல்ல முடியாது.”
‘ஸோ யூ திங்? (அதற்கு யோசிக்கிறீர்கள்?)” என்று கேட்டாள் மேடம் டூப்ளே.
”எஸ்” என்று பதில் சொன்னார் டூப்ளே.
”பத்த்த இதியத் லா. தஸ் ஹீ ஆல்ஸோ திங் (ஆனால் அந்த முட்டாள் லா அவனும் யோசிக்கிறானா?)” என்று கேட்டாள் மேடம். அவள் பெரும் கையொன்று டூப்ளேயின் இடுப்பைச் சுற்றி வளைத்தது.
டூப்ளே குனிந்து மனைவியின் தடித்த உதடுகளில் முத்த மிட்டார் செல்லமாக. ”லா குத் ஸோல்ஜர் குத் ஜென்ரல் (லா நல்ல வீரர்; நல்ல படைத் தலைவருங்கூட)” என்று சொன்னார்.
மேடம் டூப்ளேயின் இடக் கை டூப்ளேயின் கழுத்தை வளைத்து முகத்தை இழுத்து மார்பு மீது பதிய வைத்துக்கொண்டது. அந்த நிலையில் சொன்னாள் மேடம் டூப்ளே. ”ஜோஸப் மை தியர் யூ திங்க், லா திங்க்ஸ், பத் லாரன்ஸ் அவுத் திங்க்ஸ் போத் ஆப் யூ (அன்பே நீங்கள் சிந்திக்கிறீர்கள், லா சிந்திக்கிறார். உங்கள் இருவரையும் மீறிய சிந்தனை லாரன்ஸுக்கு இருக்கிறது)” என்று சொன்னதுமல்லாமல், “சந்தாசாகிப் வில் நாத் வின் திஸ் வார். யூ மேக் பீஸ் வித் பிரித்திஷ் (சந்தாசாகிப் இந்தப் போரில் வெற்றி கொள்ள முடியாது. நீங்களும் பிரிட்டிஷுடன் சமாதானம் செய்துகொள்ளுங்கள்)” என்றும் கூறி டூப்ளேயின் முகத்தைத் தன் மார்பில் ஆழப் புதைத்தாள்.
டூப்ளே அங்குகூட அமைதியைக் காணவில்லை. அவர் நினைப்பு மேடம் டூப்ளேயை விட்டு மேஜரை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. அன்றிரவு லாரன்ஸ் எல்லார் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டுத் திருச்சியை அணுகிக் கொண்டிருந்தார்.