Raja Perigai Part 3 Ch27 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
ராஜ பேரிகை – சாண்டில்யன்
மூன்றாம் பாகம் அத்தியாயம் – 27 .பழைய சாத்திரம் பழைய நினைவுகள்
Raja Perigai Part 3 Ch27 | Raja Perigai | TamilNovel.in
பழைய நினைவுகள் பெண்களின் வாக்கில் சத்தியமும் இருக்கும், சனியுமிருக்கும் என்று பழமொழியொன்று நெடுங்காலமாக வழங்கி வருகிறதென்றால், அதற்கு அத்தாட்சியாக மேடம் டூப்ளே விளங்கினாள். ‘உன்னையும் மான்ஷியர் லாவையும், மேஜர் லாரன்ஸ் ஏமாற்றி விடுவார். இந்த ஜன்மத்தில் சந்தாசாகிப் இந்தப் போரில் வெற்றி கொள்ள முடியாது” என்று மேடம் டூப்ளே அஸ்து கொட்டினாளோ, அது நூற்றுக்கு நூறு உண்மையாகும் நிலை திருச்சிக்கு அருகில் உருவாகிக் கொண்டிருந்ததை அடுத்த நாலைந்து நாட்களில் கவர்னர் டூப்ளே உணர்ந்தார்.
திருச்சியிலிருந்த நிலையில் டூப்ளேயைத் தவிர வேறு யாராயிருந்தாலும் கண்டிப்பாகப் பிரிட்டிஷ் மேஜருடன் சமாதானம் செய்து கொண்டிருப்பார். மைசூரில் ஏராளமான படை, மைசூர் ரீஜன்டால் அனுப்பப்பட்ட முராரிராவின் காற்று வேகக் குரிரைப் படை, போதா குறைக்கு மானாஜி அப்பாவின் தஞ்சைப் படை இத்தனையும் திருச்சியில் திரண்டிருக்க, சந்தாசாகிபும் பிரஞ்சுக்காரர்களும் அந்தச் சைன்னியத்தை வெற்றி கொள்வது பிரம்மப் பிரயத்தனம் என்பதைப் போர்த்தந்திம் அறிந்த யாரும் அறிவார்கள். ஆனால் டூப்ளே மற்றவர்களைப் போல் சாதாரண மனிதரல்ல. எப்படி ஆற்காட்டுப் படையும் பிரஞ்சுப் படையும் கிளைவை அசர வைக்கவில்லையோ, அப்படியே டூப்ளேயைத் திருச்சியிலிருந்த பெரும்படை அசர வைக்கவில்லை.
ஆகையால் எப்படியும் மேஜர் லாரன்ஸின் படையைத் திருச்சிக் கோட்டையிலுள்ள படைகளுடன் இணையவிடக் கூடாதென்றும், இடைமறித்துப் போராடும்படியும் டூப்ளே கடுமையான உத்தரவை மான்ஷியர் லாவுக்கு அனுப்பியிருந்தார். ஆனால் லா அசைய மறுத்தார். கோவிலடிப்பாக்கம் வந்தால் லாரென்ஸை மடக்க அங்கே படைகளை வலுப்படுத்தினார். கோவிலடியைச் சுற்றிச் சென்றால் எறும்பீசுவரத்துக்கும் காவிரிக்குமிடையிலுள்ள குறுகிய நிலப்பரப்பில் லாரென்ஸை மடக்கக் கோவிலடியை விட்டுக் கிளம்பி, காவிரியை அடுத்துத் திருச்சிக்கு கிழக்கே அமைத்திருந்த தமது தளத்துக்கு வந்து சேர்ந்தார். எப்போதும் பிரிட்டிஷ் படையின் மீது இயக்க, அங்கே இருபது பிரஞ்சு பீரங்கிகளைத் தயாராக வைத்திருந்தார். தமது தளத்திலிருந்து சிறிது மேற்கில் சந்தா சாகிபின் அரபுப் புரவிப் படையையும் எதிரிமீது பாய ஏற்பாடு செய்தார்.
ஆனால் மேஜர் லாரன்ஸ் இந்த வலை எதிலும் அகப்பட்டுக் கொள்ளாமல் கோவிலடிக்குக் கிழக்கில் காவிரியைக் கடந்து தெற்கே நன்றாக இறங்கி எறும்பீசுவரத்துக்கும் தெற்கே சுற்றிவளைத்து; திருச்சிக்குப் பத்து மைல் தூரத்தில் கிழக்கே தனது படையை நிறுத்தினார். அன்றிரவு அந்தப் படை இளைப்பாற அவகாசமும் அளித்தார். அப்போதும் லா நகரவில்லை. அவரது மசமசப்புத்தனத்தைக் கண்ட காப்டன்ஜின்ஜின்ஸின் மூளைகூடத் துரிதமாக வேலை செய்தது.
திருச்சிக் கோட்டையின் உயர்ந்த மதிள் மீதிருந்து டெலஸ்கோப்பின் மூலம் பிரிட்டிஷ் படையின் வருகையைக் கவனித்த அவன், லாரன்ஸுக்கு உதவியனுப்பத் தீர்மானித்து, காப்டன் டால்டனை இருநூறு சோல்ஜர்களுடனும் நாநூறு சிப்பாய்களுடனும், நாலு பீரங்கிகளுடனும் அனுப்பினான். தவிர காப்டன் டால்டன் புறப்பாடு தெரியாதிருப்பதற்காக மைசூர் தஞ்சைப் படைகளின் புரவிப் பிரிவால் ஒரு திரையும் போட்டான், எதிரியின் கண்களுக்கு. மறுநாள் காலை அதாவது மார்ச் முப்பதாம் தேதி காப்டன் டால்டன் தனது படையை மேஜர் லாரன்ஸின் படையுடன் இணைக்கக் கிளம்பினான்.
தஞ்சைப் படையின் உபதளபதியான விஜயகுமாரன் காப்டன் ஜின்ஜின்ஸின் இந்த ஏற்பாடுகளைக் கவனிக்கவே செய்தான். தவிர தனது புரவிப் படையால் எதிரியின் கவனத்தை ஈர்க்க காப்டன் ஜின்ஜின்ஸ் உத்தரவிட்டபோது அதையும் மகிழ்ச்சியுடனேயே ஏற்றான். காப்டன் டால்டன் தனது படைகளுடன் கிழக்கு நோக்கிக் கிளம்பியபோது விஜயகுமாரன் சற்றே மேற்குநோக்கித் திரும்பினான் தனது புரவிப் படையுடன், சந்தாசாகிபின் அரபுப் புரவிப் படை அவனை எதிர்கொள்ளத் தயாராயிருந்த அரை மைல் தூரத்தில். மான்ஷியர் லாவும் பிரெஞ்சுப் படைகளை நன்றாக அணிவகுத்துச் சமவெளியில் நிறுத்தியிருந்தார்.
விஜயகுமாரன் நிலையை ஆராய்ந்தான். சந்தாசாகிபின் படையின் மீது மோதினால் தனது சிறிய படை தகர்ந்துவிடும் என்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்ததால் தனக்கு அடுத்தபடியிருந்த வீரனைக் கூப்பிட்டு, நான் சற்றுப் பிரிந்து செல்கிறேன். மேஜரின் படையோடு டால்டன் படை இணைந்தால் அவற்றுக்கு மறைவு கொடுக்க நீ நமது படைகளைப் பின்வாங்கி அழைத்துப் போ. மேஜர் திருச்சி கோட்டைப் பக்கம் வந்ததும் நீ கோட்டைக்குள் சென்று விடு. நீ செய்ய வேண்டியதெல்லாம் போர் புரிவதைப் போல் பாசாங்குதான். போரில் இறங்காதே” என்று எச்சரித்துவிட்டுத் தான் மட்டும் தனியே நகர்ந்தான்.
கோடை வெயில் தகித்துக் கொண்டிருந்ததால் திருச்சி கோட்டை மதிள் சுவர்கள் மிகப் பயங்கரமாகத் தெரிந்தன. திருச்சிமாநகரின் மத்தியில் கோட்டைக்கு நட்ட நடுவிலிருந்த மலைக் கோட்டையின் பாறாங்கல் வேறு சூரிய உஷ்ணத்தை வாங்கித் திருப்பிவிட்டதால் காற்று உயிரை உறிஞ்சி விடும் போலிருந்தது. கோட்டையின் உக்கிரமுள்ள நாட்டில் பிறந்த தனக்கே வெயில் தாளாதிருந்தால் வெள்ளைக்காரர்களுக்கு அதைவிட நரக வேதனை வேறு வேண்டியதில்லை என்பதை விஜயகுமாரன் நன்றாக உணர்ந்திருந்தான். ஆகையால் உள்ளடங்கிப் போரிட ஓர் இடம் கிடைத்தாலொழிய கிளைவும் மேஜர் லாரன்ஸும் திண்டாடிப் போவார்களென்று தீர்மானித்துக்கொண்ட விஜயகுமாரன் மெள்ள மெள்ளச் சற்று எட்டி இருந்த ஒரு தோப்பில் புகுந்தான்.
அவனது சிந்தனையெல் லாம் இக்கதையின் ஆரம்ப நிகழ்ச்சிகளுக்குச் சென்றதால் திருச்சிக்குச் சற்று அப்பாலிருந்த சத்திரத்தைப்பற்றி அவன் எண்ணங்கள் சுழன்றன. சந்தாசாகிபின் வலக் கரம் போன்ற இப்ராஹிமைத் தானும் அரசகுமாரியும் சந்தித்ததைப் பற்றியும் அந்தச் சிக்கலில் கிளைவ் நுழைந்ததும், முதன் முதலாக கிளைவின் பரிச்சயம் தனக்கு ஏற்பட்டதையும் எண்ணிக் கொண்டே அந்தச் சத்திரத்தை அணுகினான்.
இத்தனைக்கும் சத்திரம் பிரெஞ்சு தளத்துக்கு எண்ணூறு கஜ தூரத்திலிருந்ததால் அதை நோக்கி எப்போதும் பிரெஞ்சுப் படை நகர முடியும் என்பதையம், அப்படி நகர்ந்தால் தன் கதி அதோகதி என்பதையும் விஜயகுமாரன் உணர்ந்திருந்தாலும், அவன் மனத்தில் எப்போதும் எரிந்து கொண்டிருந்த சபதச் சடர், தன் அன்னைக்காகப் பழி வாங்கவேண்டும் என்ற உக்ரத் தீக்கொழுந்து, ஆபத்தை அலட்சியம் செய்யத் தூண்டியது.
அத்தகைய அலட்சிய மனோபாவத்தால் சத்திரத்தை அடைந்த விஜயகுமாரன் அதிக ஆளரவம் இல்லாததைக் கண்டு வியந்தான். இத்தனை அருகிலிருக்கும் கருங்கல் சுவர்களையுடைய சத்திரத்தை எதிரிகள் ஏன் ஆக்ரமிக்கவில்லை என்பது அவனுக்குப் புரியவில்லை . இதை மட்டும் பிரிட்டிஷார் ஆக்கிரமித்துக்கொண்டால் எதிரிகள் நிலைமை எத்தனை அபாய மாகிவிடும் என்று நினைத்துப் பார்த்த விஜயகுமாரன், எதிரிகளின் இந்த அசிரத்தைக்குக் காரணம் காணமுடியாமல் எதற்கும் சத்திரத்தின் உள்ளேயும் கவனிப்போம் என்று தீர்மானித்து, புரவியை வாயிலிலிருந்த தூணில் பிணைத்துவிட்டுக் கையில் துப்பாக்கியை எடுத்துப் பிடித்தவண்ணம் சத்திரத்துக்குள் நுழைந்தான். நுழைந்து அறை அறையாகத் தாண்டிச் சென்றான்.
தஞ்சாவூர் அரசர், வழிப் பயணிகளுக்காகக் கட்டிவைத்த அந்தச் சத்திரம், போரின் காரணமாக அடியோடு உபயோகப்படுத்தப்படவில்லை என்பதைப் பஞ்சு படிந்த கிழிந்த தலையணைகளாலும் கட்டைக் காலுடைந்த கட்டில்களாலும் அவன் புரிந்து கொண்டான். இந்த இடத்துக்குத் தஞ்சைப் படையைக் கொண்டு வந்தால் எதிரியைத் தாக்குவது எத்தனை சுலபம்?” என்றும் நினைத்துப் பார்த்தான்.
அப்படி நினைத்த வண்ணம் ஹாலில் இருந்த பஞ்சு பறக்கும் பஞ்சணை ஒன்றில் அமர்ந்துகொண்டு கைத்துப்பாக்கியைப் பிடித்த வண்ணம் உட்கார்ந்த விஜயகுமாரன் காதில் ஏதோ ஒரு புரவி வரும் சத்தம் கேட்கவே அவன் எழுந்து கதவின் மறைவில் நின்றான். புரவியும் மெள்ளவே அவ்விடத்தை அணுகியது. அதில் வந்த மனிதனும் நிதானமாகவே வாயிலில் இறங்கினான். பிறகு அவன் காலரவம் அடியோடு கேட்கவில்லை. அதனால் எச்சரிக்கை அடைந்த விஜயகுமாரன் தனது கச்சையிலிருந்த இன்னைாரு கைத்துப்பாக்கியையும் எடுத்துக்கொண்டு இரு கைகளிலும் துப்பாக்கியை இறுகப் பிடித்த வண்ணம் பக்கத்திலிருந்த சாளரக் கதவை நோக்கிச் சென்றான். அந்தச் சமயத்தில் அந்தக் குரல் மிக மெதுவாகவும் உறுதியாகவும் ஒலித்தது, ”ட்ராப் த பிஸ்டல்ஸ் (கைத்துப்பாக்கிகளைக் கீழே எறிந்துவிடு, அண்ட் ஸ்லோலி டர்ன் (பிறகு மெதுவாகத் திறும்பு)” என்று.
விஜயகுமாரன் முகத்தில் அச்சத்திற்குப் பதில் வியப்பு அதிகமாயிற்று. சரேலென்று கைத்துப்பாக்கிகளுடன் திரும்பிப் பெரிதாக அந்தச் சத்திரம் அதிரும்படியாக நகைத்தான். ‘கிளைவ்! யூ ஃபூள்! ஐ குட் ஹாவ் ஷாட் யூ டூ பீஸஸ் (கிளைவ்! முட்டாள்! நீ தூள் தூளாகப் போகும்படி உன்னை நான் சுட்டிருக்க முடியுமே)” என்றான்.
கிளைவின் கையிலும் பெரிய பிஸ்டல் இருந்தது. ”ஆம்! நாம் இருவரும் ஒருவரையொருவர் கொன்றிருக்க முடியும். அப்படி நடந்திருந்தால் அது நம் எதிரிக்கும் நல்லது” என்ற கிளைவ் புன்முறுவல் கொண்டான்.
விஜயகுமாரன் இதழ்களிலும் புன்முறுவல் அரும்பியது. “இங்கு எதற்கு வந்தாய்?” என்று கிளைவை வினவினான் விஜயகுமாரனும்.
நீ எதற்கு வந்தாய்?” என்று கேட்டான் கிளைவ்.
”இந்தச் சத்திரம் நினைவுக்கு வந்தது. நாம் முதலில் சந்தித்த இடம் இது.”
“அதை நினைவுபடுத்திக்கொள்ள வந்தாயா?”
“ஆம். நீ ஏன் வந்தாய்?”
”நான் மேஜர் லாரன்ஸ் படையில் முன்னோடியாக எதிரிப் படை நிலைமையைக் காண வந்தேன். திடீரென்று எனக்கும் உன்னைப் போல் பழைய நினைவு வந்தது. ஆகையால் இங்கு வந்தேன். ஆனால் இச்சமயம் வந்தது உன் காதலியைக் காப்பாற்ற அல்ல” என்று கிளைவ் நகைத்தார்.
”பின் எதற்காக?” என்று வினவினான் விஜயகுமாரன்.
கிளைவ் சத்திரத்தின் சாளரத் தண்டை சென்று எட்டிப் பார்த்தான். ”அதோ பார், பிரெஞ்சுப் படை சமவெளியில் நிற்கிறது. இதில் என் படை வந்தால் அதற்கு மறைவிருக்கும். மறைவிலிருந்து நாங்கள் குண்டு வீசுவோம். எதிரிகளுக்கு அந்தப் பாதுகாப்பில்லை. அவர்கள் சமவெளியிலிருந்து போராட வேண்டும்” என்று சுட்டிக் காட்டினான் கிளைவ். அதே சமயத்தில் படை அணிவகுத்து வரும் அரவம் கேட்டது. அடுத்த சில நிமிடங்களில் பிரிட்டிஷ் சோல்ஜர்கள் திமுதிமுவெனச் சத்திரத்துக்குள் நுழைந்து சாளரங்களை நோக்கி நகர்ந்தார்கள். சில சாளரங்களை உடைத்து வெளியிலிருந்து கொண்டுவந்த பீரங்கிகளை அவற்றில் பொருத்தினார்கள். வெளியிலும் பீரங்கிகளும், கையால் வீசும் குண்டுகளை ஏந்திய சோல்ஜர்களும் அணிவகுத்து நின்றார்கள்.
இந்த ஏற்பாடுகள் முடிந்ததும் கிளைவ் விஜயகுமாரனை நோக்கி வினவினான். “நீ இங்கேயே இருக்கப் போகிறாயா? போகப் போகிறாயா?” என்று.
”இருக்கப் போகிறேன்” என்ற விஜயகுமாரனும் ஹாலின் வாயிலில் வெளிப்புற வாயைத் திறந்து கொண்டு பயங்கரமாக நின்ற பீரங்கியை அணுகினான்.
ஒரே விநாடி. ”ஃபையர்!” என்ற கட்டளை எழுந்தது கிளைவிடமிருந்து. பீரங்கிகள் முழங்கின, மான்ஷியர் லாவின் தளத்தை நோக்கி. இந்திய சரித்திரத்தின் மிக்க கடுமையான பீரங்கிப் போர் துவங்கியது.