Raja Perigai Part 3 Ch29 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
ராஜ பேரிகை – சாண்டில்யன்
மூன்றாம் பாகம் அத்தியாயம் – 29 .அருவத்தின் குரல்
Raja Perigai Part 3 Ch29 | Raja Perigai | TamilNovel.in
மேடையில் ஒளிமயமாக எழுந்து நின்ற அந்தப் பெண் உருவத்தை வெள்ளை வெளேரென்ற மஸ்லின் துணி மூடியிருந்ததால் அந்த மெல்லிய சல்லாவை விஜயகுமாரன் கண்கள் ஊடுருவிப் பார்க்க முடிந்தது. மஸ்லினுக்குள்ளே இருந்த அந்த உருவத்தின் முகம் மிக அழகாக இருந்தது. தன் தலையில் கவிழ்க்கப்பட்டுத் தலையின் முன் மயிர்களை மட்டும் இரண்டு அங்குலத்துக்கு மறைத்து வட்டமாக ஓடியிருந்த கிரீடத்தில் பற்பல வைர வைடூரியங்கள் ஜாஜ்வல்யமாகப் பிரகாசித்தன. அதன் மூக்கிலிருந்த பெரிய நத்திலிருந்து ஒரு மாணிக்கம் ஏதோ தனி நெருப்புப் போல் பளபளத்தது. கழுத்திலாடிய ஒற்றைச் சங்கிலியின் வேலைப்பாடும் அதன் முகப்பும் அரச குடும்பத்தார் மட்டுமே அதை வாங்கி அணியமுடியும் என்பதை நிரூபித்தது. இவற்றைத் தாங்கி நின்ற அந்த உருவத்தின் நீண்ட கைகளும், வலக் கை மோதிர விரலில் பளிச்சிட்ட பச்சைக் கல் முத்திரை மோதிரமும் அந்தக் காரிருளில் தனியாக ஜொலிப்பதுபோல் தெரிந்தன, விஜயகுமாரன் கண்களுக்கு. அந்த உருவத்தின் கம்பீரத்தையும் அழகையும் பல விநாடிகள் பருகினான் விஜயகுமாரன்.
அவன் கண்களில் விரிந்த பிரமையைக் கண்ட அந்தப் பெண்ணுருவமும் இதழ்களில் புன்சிரிப்பைக் காட்டியது. அதைத் தொடர்ந்து மெல்லிய சொற்கள் எங்கிருந்தோ வருவதுபோல் ஒலித்தன. மீண்டும், “விஜயகுமாரா, இந்த அபாக்கியவதியை அறுபது நாட்களுக்கு மேல் இந்த உலகில் இருக்கவிடாதே” என்றது அந்த உருவம்.
விஜயகுமாரன் கண்களில் தொடர்ச்சியாகப் பிரமையே இருந்தது. “இல்லை தாயே” என்றான் மெதுவான குரலில். ‘தாயே! ராணி மீனாட்சி எதற்காக இன்னும் இவ்வுலகில் உறைய வேண்டும்?” என்றும் மெள்ளக் கேட்டான்.
‘என் வாழ்க்கைக் காலம் முடியவில்லை மகனே. போன முறை நீ இங்கு வந்தது நினைப்பிருக்கிறதா உனக்கு?’ என்று வினவியது அந்த உருவம்.
”இருக்கிறது தாயே! சிவகங்கை அரண்மனையில் படுத் திருந்த எனக்குச் சொப்பனத்தில் காட்சியளித்தீர்கள். இந்த மண்டபம் வர உத்தரவிட்டீர்கள்” என்றான் விஜயகுமாரன் தழுதழுத்த குரலில்.
”அது உண்மை. நான் அப்படிச் செய்ய வேண்டிய தாயிற்று. ஏனென்றால் இறந்தும் நான் மேல் உலகம் போக முடியவில்லை ” என்றது உருவம் சோகக் குரலில்.
‘ஏன் தாயே?” விஜயகுமாரன் குரலில் துக்கம் ஒலித்தது.
”இச்சை இந்த உலகில் ஆத்மாவை நிறுத்தி வைக்கிறது. நான் இச்சையுடன் இறந்தேன். அதுவும் துர்மரணம். ஆகவே அருவமாக உலவுகிறேன். கடைசி இச்சையின் பந்தம் இங்கேயே என்னை நிறுத்தி வைத்திருக்கிறது. உன் ஒருத்தனுக்குதான் என் பழைய உருவத்தைக் காட்டுகிறேன். மற்றவர்களுக்கு நான் அருவம். புரிகிறதா மகனே?” என்று வினவியது உருவம்.
”புரிகிறது தாயே!” விஜயகுமாரனுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.
உருவம் தொடர்ந்தது. ”மகனே! நான் இச்சையுடன் இறந்தேன். அதுவும் இதே மேடையில் என் துகிலில் தீயிட்டு எரிந்து போனேன் – நவாபிடமிருந்து தப்ப… என்னைக் கபடத்தால் வெற்றிகொண்ட, அழித்த அந்த நவாபை அழிக்கச் சபதம் செய்துகொண்டே இறந்தேன். அந்தச் சபதம் நிறைவேறினா லொழிய, இச்சையின் அந்தப் பந்தம் அறுபட்டாலொழிய நான் பிதுர்லோகம் போகமாட்டேன். இதே மேடையில் அந்த நவாபின் தலை உருள வேண்டும். இந்த மேடை அவன் ரத்தத்தால் நனைய வேண்டும். பிறகு நான் விடுதலையடைவேன். மேலே சென்று விடுவேன்’ என்ற அந்த உருவம் ஒருமுறை பெருமூச்சு விட்டதாகத் தோன்றியது விஜயகுமாரனுக்கு.
“தாயே சபதத்தை அறுபது நாட்களுக்குள் நிறைவேற்றி விடுகிறேன்” என்று தொண்டையிலிருந்து சிரமப்பட்டு வார்த் தையை வரவழைத்தான்.
”மகனே! க்ஷத்திரிய குலமக்கள் எள்ளும் தண்ணீரும் இறைத்தால்தான் அவர்கள் முன்னோர்களுக்கு விடுதலை கிடைக்கிறது, இந்த உலகத்திலிருந்து. ஆனால் நீ எனக்கு எள்ளும் நீரும் இறைக்க வேண்டாம். நவாபின் ரத்தத்தை இந்த மேடையில் வழிந்தோடச் செய். நான் மேல் உலகம் சென்றுவிடுவேன். இப்பொழுது நான் துர்க்கதியடைந்து பதினாறு ஆண்டுகள் ஆகின்றன. இந்தப் பதினாறு ஆண்டுகளாக இந்தக் கல்லில் உறைந்து கிடக்கிறேன். இந்த மண்படத்தை அணுகவும் மக்கள் அஞ்சுகிறார்கள். இதன் பெயர் உனக்குத் தெரியுமல்லவா?” என்ற உருவத்தின் குரல் மெல்ல உயர்ந்தது.
‘தெரியும். தளவாய் மண்டபம் ” என்றான் விஜயகுமாரன்.
”இந்த இடம் நாயக்கர் வம்சத்துப் படைத் தலைவர்கள் சபதம் செய்து போருக்குச் செல்லுமிடம். இதிலிருந்து செல்ப வருக்கு வெற்றி அல்லது வீர சொர்க்கம், தோல்வி கிடையாது. அதனால்தான் இங்கே சத்தியம் செய்யச் சொன்னேன், அந்த நவாபை, சத்தியம் செய்தான். அதுவும் குர்ஆனின் மேல் சத்தியம் செய்தான். எனக்குச் சகோதரனாக இருப்பதாக வாக்குத் தந்தான். அந்தக் கதையை உனக்கு முன்பே சொல்லியிருக்கிறேன்” என்ற உருவத்தின் குரல் உச்சஸ்தாயியை அடைந்து கொண்டிருந்தது.
”சொல்லியிருக்கிறீர்கள் தாயே! விவரமாகச் சொல்லி யிருக்கிறீர்கள்” என்ற விஜயகுமாரனின் குரல் தழுதழுத்தது.
மண்டபத்தில் கிறீச்சென்று கிளம்பிவிட்ட உருவத்தின் குரல் விஜயகுமாரனுக்குக்கூட அச்சத்தை அளித்தது.
”விஜயகுமாரா! நீ சபதத்தை நிறைவேற்ற அறுபது நாள் கேட்டாய். தருகிறேன். அதற்கும் மேற்கொண்டு என்னைக் காக்க வைக்காதே!” என்றது உருவம் முன்னைவிட உரத்த குரலில். அதன் ஒலி மண்டபச்சுவர்களில் எதிரொலி செய்தது.
”நான் போரில் இறந்துவிட்டால்?” என்று கேட்டான் விஜயகுமாரன்.
“இறக்கமாட்டாய். எப்போதும் நான் உன்னுடன் இருப் பேன். உன் நண்பர்கள் இப்போரில் வெற்றியடைவார்கள். அது எனக்குத் தெரியும். நாய்க்கர் வம்சத்தை அழித்த அன்றே ஆற்காட்டு வம்சமும் அழிந்துவிட்டது. குர்ஆன் மீது ஆணை, இஸ்லாமியர்களுக்குப் புனிதமானது. அதை மீறிய அந்த இனத்தார் யாரும் தண்டனையடையாமல் இருந்ததில்லை. குர் ஆனுக்கு அபசாரத்தைச் செய்த இந்த நவாபுக்கு மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது, நெருங்கிக் கொண்டிருக்கிறது…’ என்றது அந்த உருவம்.
விஜயகுமாரன் ஏதும் சொல்லவில்லை. கண்களால் தாயின் உருவத்தைப் பிரமை பிடித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். ”நான் அருவமாகிவிட்டேன் மகனே! உன் கண்களுக்கு மட்டுமே பழைய உருவத்தைக் காட்டுகிறேன். அதற்கு மட்டும் எனக்கு அனுமதியிருக்கிறது…” என்றது ராணி மீனாட்சியின் அருவம்.
”அனுமதியா தாயே? யார் அனுமதி?” என்ற உதடுகள் மெல்ல வார்த்தைகளை உதிர்த்தன.
அருவத்தின் உருவ இதழ்கள் அசைந்தன. ”அதைச் சொல்ல முடியாது. அது சிருஷ்டி ரகசியம். சொல்ல எனக்கு உரிமையில்லை” என்ற உருவம் ஒரு கேள்வி கேட்டது. ”விஜயகுமாரா| உன் படைத்தலைவன் இருக்கிறானே அவனுக்கு இந்த நாட்டின் அமைப்பு விவரம் தெரியுமா?” என்று.
”யார், மானாஜிக்கா?”
”இல்லை.”
”அவர்தானே இப்போது என் படைத்தலைவர்?”
“ஆம். ஆனால் போரைத் திட்டமிட்டு நடத்துபவன் அந்த வெள்ளைக்காரன்.”
‘யார், கிளைவா?”
”இல்லை. அந்தக் கிழவன்.”
”ஸ்ட்ரின்ஜர் லாரன்ஸா?”
”ஆம்.’’
”அவருக்குக்கூட இந்த ஊர் அமைப்புத் தெரியும்.”
“நன்றாகத் தெரியாது. ஆகையால்…..”
”சொல்லுங்கள் தாயே.”
”நான்கு முளைகளை அடிக்கச் சொல். அதில் வலையை அமை. நவாப் விழுந்துவிடுவான்.”
”நான்கு முளைகளா!”
”ஆம் குழந்தாய். நாளைக்கு ராணுவ ஆலோசனையின் போது கையில் எழுதுகோல் எடுத்துக்கொள். கண்களை மூடிக்கொள். உன் கையை நான் நகர்த்துகிறேன். முளைகளை அடிக்க வேண்டிய இடத்தைக் காட்டுகிறேன். நான் சொல்கிறபடி செய். நவாப் ஒழிந்துவிடுவான். ஒழிந்துவிடுவான்…’’ என்று… பன்முறை கிறீச்சிட்டது ராணியின் அருவம்.
மண்டபத்தின் சுவர்கள் பயங்கரமாக அலறி அந்தக் கிறீச் சென்ற ஒலி குலை நடுக்கம் எடுக்கும்படியாக எதிரொலித்தது. பிறகு அருவத்தின் ஒலி அடங்கியது. ஒளியும் மெள்ள மெள்ளக் குவிந்து குறுகியது. பிறகு அருவமும் மேடையில் மறைந்தது. மண்டபம் எங்கும் பயங்கர நிசப்தம் நிலவியது.
மண்டியிட்ட நிலையிலிருந்து எழுந்திருந்தான் விஜய குமாரன். மெள்ள வாயிலை நோக்கி நடந்தான். அவன் மூளை சுழன்று கொண்டிருந்தது. “நான்கு முளைகள்! முளைகள்” என்ற சொற்கள் உள்ளே ஒலித்துக் கொண்டிருந்தன பெரிதாக. இதயம் திக் திக்கென்று அடித்துக்கொண்டது. காலை மிக மெதுவாக வைத்து நடந்த விஜயகுமாரன் தளவாய் மண்டபத்தின் பெரும் கதவுகளைச் சத்தப்படாமல் திறந்து சத்தப்படாமல் மூடினான். எதிரே விரிந்த நகர விளக்குகள் அவனைச் சுயநிலைக்குக் கொண்டு வந்தன. கனவில் நடப்பதுபோல் அவன் நடந்து சென்றான் கிளைவ் இருந்த விடுதி நோக்கி.