Raja Perigai Part 3 Ch30 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
ராஜ பேரிகை – சாண்டில்யன்
மூன்றாம் பாகம் அத்தியாயம் – 30 .ஹாம்லெட்டின் வழியில்
Raja Perigai Part 3 Ch30 | Raja Perigai | TamilNovel.in
நாயக்கர் வம்சத்து ராணி மீனாட்சி தேவியின் ஆவியளித்த கட்டளையுடன் காப்டன் கிளைவின் இருப்பிடத்தை நடுநிசி தாண்டிய இரண்டு நாழிகைக்குப் பின் அடைந்த விஜயகுமாரன் அந்தச் சமயத்தில் கிளைவை எழுப்ப முயன்று அங்கிருந்த சோல்ஜர் ஒருவனை எழுப்பித் தன் வரவைக் காப்டனுக்குத் தெரிவிக்குமாறு உத்தரவிட்டான். அந்தச் சோல்ஜரும் கிளைவுக்கும் விஜயகுமாரனுக்குமிருந்த நெருங்கிய நட்பை உணர்ந்திருந்ததால் கதவைத் தட்டிக் காப்டனை எழுப்பினான். அரைத் தூக்கத்தில் கண்ணைக் கசக்கிக்கொண்டு எழுந்து வந்து, “யாரது?” என்று அதட்டிய கிளைவ் எதிரே நின்ற விஜயகுமாரனைக் கண்டதும் ”வா! எங்கே உன்னைப் போர் ஆலோசனையின்போது காணவில்லை?” என்று வினவினான்.
அதற்குப் பதிலேதும் சொல்லாமல் கிளைவை இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்த விஜயகுமாரன் அங்கிருந்த நாற்காலி யொன்றில் உட்கார்ந்து கொண்டு கிளைவை கட்டிலில் அமரும்படி சைகை காட்டினான். கதவை மூடும்படியும் சாடை காட்டினான். நண்பனின் இந்தப் புதுப் போக்குக்குக் காரணத்தை அறியாத கிளைவும் அவன் சொன்னபடி கதவை மூடிக் கட்டிலில் அமர்ந்து கால்களை ஆட்டிய வண்ணம் மீண்டும் சொன்னான், “‘மை டியர் ப்ரண்ட்! ஐ மிஸ்ட் யூ திஸ் ஈவினிங் வெரி மச் (நண்பவே! உன்னை இன்று மாலையிலிருந்து நான் காணவில்லையே)” என்று.
விஜயகுமாரன் அதற்கும் பதில் சொல்லவில்லை. தனது தலையை இரு கைகளாலும் பிடித்த வண்ணம் நீண்ட நேரம் நாற்காலியில் குனிந்து உட்கார்ந்திந்தான். தளவாய் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிகள், தாயின் ஆவியின் பேச்சு ஆகிய அனைத்தும் திரும்பித் திரும்ப அவன் புத்தியில் வலம் வந்து கொண்டிருந்ததால் ஏக்கம் கலந்த பெருமூச்சொன்று அவன் நாசியிலிருந்து வெளிப்பட்டது. இப்படிச் சிறிது நேரம் இருந்த ‘பிறகு தலையைத் தூக்கிய விஜயகுமாரன் கிளைவை நோக்கி, ”கிளைவ்! இறந்து போனவர்களைத் திரும்பப் பார்த்திருக் கிறாயா?” என்று வினவினான்.
கிளைவ் விஜயகுமானை வியப்பு நிரம்பிய விழிகளால் நோக்கினான். ”ஹொய் ஷூட் ஐ ஸீத டெட் அகைன்? (இறந்து போனவர்களை நான் எதற்காகத் திரும்பப் பார்க்க வேண்டும்?)” என்று வினவினான் வியப்பு குரலிலும் ஊடுருவி நிற்க.
”அவர்கள் நமக்கு வழிகாட்டக் கூடும்” என்று பதில் சொன்ன விஜயகுமாரன் குரலில் ஏதோ ஒரு தீர்மானம் இருந்தது. கிளைவின் வியப்பு முன்னைவிடச் சிறிது அதிகமாயிற்று. ”செத்தவர் நமக்கு வழி காட்ட முடியும் என்கிறாயா?” என்று வினவினான் அவன் வியப்புடன்.
”ஆம்.”
“இறப்பவர்கள் வழி காட்டமுடியாது!”
”முடியும். ஆனால் இறந்தவர் காட்டும் வழியில் வெற்றி நிச்சயம் இருக்கும்.
”அப்படியா?”
“ஆமாம்.”
”அப்படி நீ செத்தவர்களைத் திரும்பவும் பார்த் திருக்கிறாயா?”
”ஆமாம்… ஆனால் உருவமாக அல்ல.’’
“ஸோ?”
”அருவமாக, ஒலிமயமாக.’’
”யூ மீன் யூ ஸீ பாண்ட்ட ம்ஸ்? (அதாவது நீ ஆவிகளைப் பார்த்திருக்கிறாய்)”
விஜயகுமாரன் தலையை இப்புறமும் அப்புறமும் அசக்கினான். “ஆவிகள் அல்ல, ஆவி ஒரே ஒரு ஆவி” என்று திருத்தினான் கிளைவை.
கிளைவின் கண்கள் விஜயகுமாரனை அனுதாபத்துடன் ஏறெடுத்து நோக்கின. ”விஜயகுமார்! நீ சிறிது படுத்துக்கொள். காலையில் உன் கனவு மறந்துவிடும். பிறகு நாம் பேசுவோம்” என்று சொன்னான்.
விஜயகுமாரன் கிளைவின்மீது தனது கண்களை உறுதியுடன் நாட்டிவிட்டுச் சொன்னான். “நான் கனவு கண்டிருப்பதாக நினைக்கிறாய், அல்ல. இது கனவல்ல. இரண்டாம் முறையாக நான் இந்த ஆவியைப் பார்க்கிறேன். என் தாயின் ஆவி. இரு முறையும் என்னுடன் பேசியிருக்கிறது. ‘இம்முறை அது ஆணை மட்டும் இடவில்லை, வெற்றிக்குரிய வழியையும் காட்டியிருக்கிறது” என்று.
கிளைவ் கட்டிலிலிருந்து எழுந்து தனது நண்பனிருந்த நாற்காலியிடம் சென்று அவன் தோள் மீது தனது வலக் கையை வைத்து, ”உன் தாயின் ஆவியைப் பார்த்தாய்?” என்று விசாரித் தான் அனுதாபத்துடன்.
”எஸ்.”திட்டமாக வந்தது விஜயகுமாரன் பதில்.
”ஷி ஸ்போக் டு யூ? (உன்னிடம் பேசினாள்)” என்று எழுந்தது கிளைவின் கேள்வி.
“ஷ்யூர், எஸ்.”
‘ஷி கேவ் யூ ஆர்டர்ஸ்?”
”எஸ்.”
இதைக் கேட்ட கிளைவ், ”மை டியர் பிரண்ட் யூ ஹாவ் பீன் ரீடிங் ஷேக்ஸ்பியர்” என்ற சொல்லிவிட்டு விஜயகுமாரன் தோளை ஆறுதலாக அழுத்தினான்.
விஜயகுமாரன் தனது கையொன்றை எடுத்துக் கிளைவின் மீது வைத்தான் அன்புடன். ‘ஷேக்ஸ்பியர்?” என்றும் வின வினான் ஏதும் புரியாமல்.
”ஆமாம். எங்கள் நாட்டின் சிறந்த நாடக ஆசிரியர் ஒருவருக்கு அந்தப் பெயர் உண்டு. பல நாடகங்கள் எழுதியிருக்கிறார்”
“நீ படித்திருக்கிறாயா!”
”எனக்கும் படிப்புக்கும் வெகு தூரம்.”
“பின்னே அவரைப் பற்றி என்ன தெரியும்?”
“பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.”
”அவருக்கு என்ன இப்பொழுது?”
”ஹிஹாஸ் ரிட்டன் எப்ளேகால்ட் ஹாம்லெட்….”
”வாட்டஸ் இட் ஸே?”
”ஸம்திங் லைக் வாட் யூ ஸே” என்ற கிளைவ் தமிழுக்குத் திரும்பி, ”கிட்டதட்ட அந்த ஹாம்லெட்டும் நீயும் ஒன்றுதான். இருவரும் ஆவியைக் காண்கிறீர்கள். அங்கே தகப்பன், இங்கே தாய். இதுதான் வித்தியாசம்” என்றும் சொன்னான். திடீரென்று எதையோ நினைத்துக்கொண்டு, ”உன் பழி வாங்கு படலம் ஹாம்லெட்டைப் போல் திவிரமாக இல்லையே?” என்றும் விசாரித்தான்.
”ஏன் இல்லை? உன்னிடம் அதிகமாகக் கூறவில்லை இதைப் பற்றி. என் அன்னையை உயிர் விடச் செய்தவனைப் பழி வாங்கும் சமயம் வந்துவிட்டது. அதற்குத்தான் அன்னை வழி காட்டினாள்” என்றான் விஜயகுமாரன் உணர்ச்சி தெரிந்த குரலில்.
கிளைவ் நண்பன் தோளிலிருந்த தனது கையை எடுத்துவிட்டு அறையில் உலாவத் தொடங்கினான். சிறிது நேரம் உலாவிய பிறகு, ”விஜயகுமார் வாட் டூ யூ வாண்ட் மீ டு டூ (நான் என்ன செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறாய்)” என்று வின வனான் நம்பிக்கை சிறிதும் தொனிக்காத குரலில்.
விஜயகுமாரன் தனது ஆசனத்தைவிட்டு எழுந்து கிளைவைத் துணிவுடன் நோக்கினான். ”ஐ வாண்ட் யூ டு ஹெல்ப் மீ கைட் திஸ் வார் (இந்தப் போரை நடத்துவதற்கு வழிகாட்ட நீ எனக்கு உதவ வேண்டும்)” என்று திட்டமாகவும் உறுதியாகவும் சொல்லவும் செய்தான்.
விஜயகுமாரனுக்குப் பைத்தியம் ஏதும் பிடிக்க வில்லையென்பதை உறுதி செய்து கொள்ள அவனை உற்று நோக்கினான் கிளைவ்.
“நன்றாகப் புரிகிறது.”
”இந்தப் போரை நடத்த நீ திட்டமிடுவதாகச் சொல்கிறாய்?”
”நானல்ல.”
”வேறு யார்?”
“என் தாயார்?”
”யார்? ஆவியா ?”
“ஆம்.”
”எங்கள் கண் முன்னால் வருமா அது?”
”வராது”
“பின்?”
”என் மூலம் வழி காட்டும்.”
”எப்படியோ?”
“என் கையில் பென்சிலைக் கொடுத்தால் என் கை தானாக எழுதும்…”
“உம்.”
”எழுந்து படை நிறுத்த வேண்டிய இடத்தில் குறிகளை இடும்.”
கிளைவின் முகத்தில் பிரமை தட்டியது, நண்பனுக்கு மூளைக் கோளாறுதான் என்று நிச்சயமாக நினைத்தான். “இப்போது உன் கையில் பென்சிலைக் கொடுத்தால் தானாக எழுந்து போர்க் கேந்திரங்களைக் குறிக்கும்?” என்று வினவினான் பரிதாபத்துடன்.
“ஆம். ஆனால் இப்போதல்ல” என்றான் விஜயகுமாரன்.
”வேறு எப்பொழுது?” என்று கேட்டான் கிளைவ்.
“நாளை போர் ஆலோசனையின்போது” என்று கூறினான் விஜயகுமாரன்.
கிளைவ் நண்பன் முதுகைத் தட்டிக் கொடுத்தான். ”உறக்கம் இல்லாததால் சிறிது சித்தப் பிரமை உனக்கு. போர் ஆலோசனையில் உட்கார்ந்திருப்பவர்கள் யார் தெரியுமா? பல போர்களைக் கண்டவர்கள். யுத்த சாஸ்திரத்தின் நுணுக்கங்களைக் கண்டவர்கள். ஒரு மானாஜியும், மேஜர் லாரன்ஸும், மைசூர் பிரதிநிதி நஞ்ச ராஜாவும், முராரி ராவும் உட்கார்ந்திருக்கும் இடத்தில் நீயும் நானும் யோசனை சொன்னாலே பைத்தியம் என்பார்கள். போதாதற்கு நீ கண்ணை மூடிக் கொண்டிருக்க, உன் கையில் நான் பென்சிலைக் கொடுத்து, ‘தாயே வழிகாட்டு’ என்று கேட்டால் என்னையும் பைத்தியம் என்று நிச்சயமாக நினைப்பார்கள்” என்ற கிளைவ், “இந்தப் பைத்தியக்கார யோசனையை விட்டுவிடு. இந்தப் போரில் எப்படியும் நாம் வெற்றியடைவோம். பிறகு உன் சபதம் நிறைவேறுவதில் கஷ்டமிருக்காது. ஆகையால் மனத்தைக் குழப்பிக் கொள்ளாதே. நாம் பிசாசுக் கதைகளால் பெரும் போரை வெற்றி கொள்ள முடியுமென்று நினைக்காதே. உனக்கே யோசனை ஏதாவதிருந்தால், அதுவும் சரியென்று தோன்றினால் ஆலோசனை சபையில் நீ சொல்லலாம். அப்படியின்றி ஆவேசம் வருவதையும், நீ பேப்பரில் கிறுக்குவதையும் படைத் தலைவர்கள் சகிக்க மாட்டார்கள். இந்த யோசனையைக் கைவிட்டுவிடு” என்று தனது கருத்தைத் தெரிவித்தான்.
இதைக் கேட்ட விஜயகுமாரன் நாற்காலியைவிட்டு எழந்தான். ”சரி, நான் போகிறேன். ஆனால் ஒரு விஷயம் நினைவிருக்கட்டும் கிளைவ். எனது தாயார் உதவாமல் இந்தப் போர் உங்களுக்கு வெற்றியைத் தராது. அதுவும் அவள் வலிய உதவ வருகிறாள். அந்த உதவியைப் புறக்கணிப்பது உசிதமல்ல. எப்படியும் நாளை ஆலோசனை சபையில் கவனி. என்னையும் மீறி, உன்னையும் மீறி, படைத் தலைவர்களையும் மீறி அற்புதம் நிகழும். இப்போது என்னை நம்பாத நீ அப்போது என்னை நம்புவாய்’ என்ற கூறிவிட்டு அறையை விட்டுச் செல்ல முயன்றான்.
ஆனால் அவன் நிலையைக் கண்ட கிளைவ், அவனை அங்கேயே படுக்கும்படி வலுக்கட்டாயம் செய்ய, கீழே ஒரு பாயை விரித்துப் படுத்தான் விஜயகுமாரன்.
மறுநாள் பொழுது விடிந்தால் விஜயகுமாரன் நிலை மாறி விடுமென்று கிளைவ் நினைத்தான். ஆனால் விஜயகுமாரன் எண்ணத்திலோ பேச்சிலோ எந்தவித மாறுதலும் இல்லை. அன்று இரவு மீண்டும் போர் ஆலோசனை சபை கூடியபோது கிளைவும் வியக்கும் நிகழ்ச்சசிகள் ஏற்பட்டன. மேஜைமீது விரிக்கப் பட்டிருந்த தேசப் படம், சாளரத்தின் மூலம் வந்த காற்றில் பறந்து எட்ட நின்றிருந்த விஜயகுமாரன் மார்பில் விழுந்தது. அதைக் கையில் தாங்கிய விஜயகுமாரனின் கண்கள் மூடிக் கிடந்தன. மூடிய கண்களுடன் மெல்ல நடந்து வந்தான் விஜயகுமாரன், படைத் தலைவர்கள் உட்கார்ந்திருந்த மேஜையை நோக்கி. கிளைவ் தானிருந்த நாற்காலியை விட்டெழுந்து விஜயகுமாரனை உட்கார வைத்தான். விஜயகுமாரன் கண்கள் மூடியிருந்த நிலையில் அதன் ரப்பைகள் மட்டும் அசைந்தன. அவன் வலக் கை எழுந்து எதையோ கேட்டது, எதிரிலிருந்த மேஜர் லாரன்ஸிடம். கிளைவ் அந்தக் கையில் ஒரு பென்சிலைச் செருகினான்.
மேஜர் விழித்தார். ”வாட் ஈஸ் திஸ்? ஆர் வீப்ளேயிங்? விஜயகுமார் ஓபன் யுவர் ஐஸ் (நாம் என்ன விளையாடுகிறோமா இங்கே? விஜயகுமார் திற உன் கண்களை)” என்று சினத்துடன் சீறினார் மேஜர். அடுத்த விநாடி சட்டென்று அடங்கினார். விஜயகுமாரன் உடல் ஒரு விநாடி நடுங்கி அடங்கியது. உதடு எதையோ முணுமுணுத்தது. கை காற்றில் நகர ஆரம்பித்தது.