Raja Perigai Part 3 Ch32 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
ராஜ பேரிகை – சாண்டில்யன்
மூன்றாம் பாகம் அத்தியாயம் – 32 கொள்ளிடத்தில் நள்ளிரவில்….
Raja Perigai Part 3 Ch32 | Raja Perigai | TamilNovel.in
சமயபுரத்தில் கிளைவ் தனது படை வீட்டை அமைத்தா னென்றால், அது சம்பந்தமாக முதலில் பல சங்கடங்கள் இருக்கவே செய்தன. கிளைவைவிடப் பிரிட்டிஷ் படையில் அதிக சர்வீஸ் உள்ள காப்டன் ஜின்ஜின்ஸையும் காப்டன் டால்டனையும் புறக்கணித்தே கிளைவை முழுத் தலைமைக்கு ஏற்ற வேண்டியிருந்ததால், மேஜர் லாரன்ஸ் முதலில் சிறிது திகைக்கவே செய்தார். ஆனால் அந்த ராணவச் சிக்கலை முராரிராவின் புரவிப் படையினர் தீர்த்து வைத்தனர். கொள்ளிடத்துக்கு வடக்கே ஆற்காட்டு, புதுவை ரஸ்தாக்களைத் துண்டிக்கும் படைக்கு உதவத் தனது குதிரைப் படையில் ஆயிரம் பேரை முராரிராவ் அனுப்ப ஒப்புக் கொண்டதும் படையிலிருந்தவர்கள் முதலில் முணு முணுத்தனர். படைகளில் ஒரு பகுதியைப் பிரித்து வடக்கே அனுப்புவது உசிதமல்லவென்று இரண்டு உபதலைவர்கள் முராரி ராவுடன் வாதித்தனர். தவிர, ஏற்கனவே எந்த முன்னேற்றப் போரிலும் ஈடுபடாதது மட்டுமின்றி, ஈடுபடுவதைத் தடையும் செய்து வந்திருக்கும் காப்டன் ஜின்ஜின்ஸோடு சென்றால் தங்கள் பகுதி நிர்மூலமாகிவிடும் என்றும் உபதலைவர் சுட்டிக் காட்டினார்கள்.
திருச்சி முற்றுகை நாளிலிருந்து படைகளைக் கோட்டைக் குள்ளேயே அடைத்து வைத்து, முன்னே நகர்ந்து எதிரி முகாமுக்குப் போரைக் கொண்டு செல்லாமல், எதிரியைக் காப்டன் ஜின்ஜின்ஸ் வலுக்க விட்டிருக்கிறான் என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். உபதலைவன் மட்டும் சொன்னான். ”ஒரே ஒரு இங்கிலீஷ் காப்டன் துணிவுள்ளவன், ஆபத்தை லட்சியம் செய்யவல்லவன், வேண்டுமானால் அவன் தலைமையில் செல்லுவோம். ஆனால் அவன் பிரிட்டிஷ் படையில் மிகவும் ஜூனியர்” என்று சொன்னான்.
”யாரவன்?” என்ற வினவினார் முராரிராவ், யாரென்பதை உணர்ந்திருந்தும்.
”ஆற்காட்டை முந்நூறு பேரைக் கொண்டு பிடித்தவன். காப்டன் கிளைவ்” என்று பதில் வந்தது உபதலைவரிடமிருந்து.
அவனை அண்டி நின்றிருந்த இரண்டு மூன்று மகாராஷ்டிரப் புரவிப் படை வீரர்கள், ”நல்லது நல்லது” என்று கூறிச் சிரக் கம்பம் செய்தார்கள்.
”இல்லையேல் இன்னொருவனை நம்பலாம்” என்றான் மற்றொரு உபதலைவன்.
முராரிராவ் முறுவல் கொண்டார். ‘’அது யாரோ?” என்று வினவினார்.
”விஜயகுமாரன்” என்றான் உபதலைவன்.
இம்முறை முராரிராவ் கலகலவென நகைத்துவிட்டுச் சொன்னார். ”போகிற போக்கைப் பார்த்தால் என்னைக் கூடத் தள்ளிவிட்டு இந்த இருவரில் ஒருவரைத் தலைவனாகக் கொள்வீர்கள் போல் இருக்கிறது” என்று கூறி, கடைசியில் வீரர்கள் முடிவைப் பிரிட்டிஷ் மேஜரிடம் தெரிவிப்பதாகவும் ஒப்புக் கொண்டார்.
மகாராஷ்டிரப் புரவிப் படை வீரர்களின் இந்த முடிவை முராரிராவ் தெரிவித்ததும் மேஜர் தனது பெரிய தொப்பையை உற்சாகத்துடன் தடவிக் கொண்டார். ”திஸ் ஸால்வ்ஸ் தி சீனியாரிட்டி ப்ராப்ளம் (இது சீனியாரிடி பிரச்னையைத் தீர்க் கிறது’) என்று கூறிவிட்டு, அதைச் சாக்காக வைத்துக் கிளைவை வடதிசைப் படைக்குத் தலைவனாக நியமித்து, “இந்தப் பிசாசும் உன்னுடன் வரட்டும்” என்ற விஜயகுமாரனையும் தஞ்சைத் தளபதியின் அனுமதியுடன் அனுப்பிவைத்தார்.
இத்தனை விவகாரத்துக்குப் பின்பு ஏதோ பெரும் பரிசைப் பெற்ற விட்டவர்கள் போல் வடபுலத்தைக் காக்கும் பெரிய ஆபத்தைப் பெற்றுவிட்ட அந்த இரு வாலிபர்களும் சமயபுரத்து இரு கோயில்களில் பாசறை அமைத்து, சோல்ஜர்களும் சிப்பாய்களும் தங்க வெளியே வசதிகளைச் செய்து, அடுத்த தாக்குதலைப் பற்றித் திட்டமிட்டனர்.
”இந்த மே மாதத்தில் காவிரியையும் கொள்ளிடத்தையும் நம்ப முடியாது. திடீரென இரண்டிலும் வெள்ளம் வரும். வந்தால் நமது படை தெற்கிலுள்ள பெரும் படையிலிருந்து துண்டிக் கப்படும்” என்று சுட்டிக் காட்டினான் விஜயகுமாரன்.
”அதற்கு என்ன செய்யலாம்?” என்று வினவினான் கிளைவ்.
“இந்தக் கரையிலுள்ள பரிசிலோட்டிகளை அழைத்து நம்மிடம் வைத்துக்கொள்ள வேண்டும். தவிர, வேறு கட்டுமரங் களையும் ஏற்பாடு செய்யவேண்டும். இரவில் ஒரே சமயத்தில் குறைந்தபட்சம் இருபது வீரர்களாவது கொள்ளிடத்தைக் கடக்க வசதி இருக்க வேண்டும்” என்று கூறினான் விஜயகுமாரன்.
“இருபது பேர் ஆற்றைக் கடந்தால் போதுமா?” என்று கிளைவ் வினவினான்.
”அதற்கு மேல் போனால் எதிரிகளின் கண்களில் படுவோம். தவிர, இந்த இருபது பேர் போக்குவரத்தும் மேஜரிடம் நாம் அடிக்கடி சென்று யோசனை கேட்கவும், அவர் இங்கு வரவும் தான் உபயோகப்படும்” என்று விளக்கினான் விஜயகுமாரன்.
நண்பன் கூரிய புத்தியை வியந்தான் கிளைவ். ஒரு பெரிய போரில் படைகள் பிரிந்து கிடக்கும் போது பரஸ்பர ஆலோசனைக்கும் தொடர்புக்கும் இத்தகைய ஏற்பாடு இன்றியமையாதது எதன்பதைப் புரிந்து கொண்டதால் பரிசில்களுக்கும் கட்டுமரங்களுக்கும் ஏற்பாடு செய்தான். இந்த ஏற்பாடு நடந்த மூன்றாம் நாள் விஜயகுமாரன் மற்றொரு குண்டைத் தூக்கிப் போட்டான். “நாம் ஏன் மேஜரை இங்கு அழைத்து வரக்கூடாது?” என்று கேட்டான்.
”மேஜர் இங்கு எதற்கு?” என்று வினவினான் கிளைவ்.
”கலந்து பேச.”
”எதற்குக் கலந்து பேச வேண்டும்?”
”நமது நிலை மிகவும் ஆபத்தானது. இப்போது புதுவையிலிருந்து டூப்ளே உதவிப் படை அனுப்பி, பிரெஞ்சுத் தளபதி லாவும் தெற்கிலிருநுது நம்மைத் தாக்கினால், வடக்கு தெற்கு இரு பகுதிகளிலிருந்து வரும் படைகளால் நாம் பாக்கு வெட்டியில் அகப்பட்ட பாக்கைப் போல் நசுக்கப்படுவோம்.”
”இது முன்பே நமக்குத் தெரிந்தது தானே?”
“இப்போது மீண்டும் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.”
”ஏன்?”
“நாம் உடனடியாக லால்குடிக் கோட்டையைத் தாக்கப் போகிறோம்.”
”அப்படியா?”
”ஆம். அங்கேதான் பிரெஞ்சுப் படைகளுக்கு வேண்டிய உணவு அனைத்தும் சேகரித்து வைக்கப்பட்டிருக்கிறது.”
”உம்.”
”பிறகு பிட்சாண்டார் கோயிலைத் தாக்குவோம்.”
இதைக் கேட்ட கிளைவ் மெல்ல நகைத்தான்.
“ஏன் நகைக்கிறாய்?”
“இங்கே நீதான் படைத்தலைவன் போல் இருக்கிறது… எனக்கு வேலையில்லை என்று நினைக்கிறேன்” என்றான் கிளைவ் மேலும் நகைத்து.
விஜயகுமாரன் முகத்தில் குழப்பம் தெரிந்தது. ‘கிளைவ்! இதில் என் யோசனை எதுவுமில்லை.”
“வேறு யார் யோசனை?” என்று வினவினான் கிளைவ், பிறகு திடீரென நினைத்துக்கொண்டு, ”உன் தாயார் யோசனை அல்ல வென்று நினைக்கிறேன்” என்றும் சொன்னான்.
விஜயகுமாரன் நீண்ட நேரம் பதில் சொல்லவில்லை. அவன் கண்களில் கனவின் சாயை படர்ந்தது. அந்த நிலையில் சொன்னான்: ‘கிளைவ்! நான் போர்த் திட்டங்களை நினைக்கும் போதெல்லாம் அன்னையின் உருவம் மெள்ள என் இதயத்தில் தலை காட்டுகிறது. செய்ய வேண்டியதையும் இதயத்திலிருந்து முணுமுணுக்கிறது. என் தாய் இந்தப் போரில் நமது வெற்றியை விரும்புகிறாள்.உறுதுணையாக இருப்பதாகவும் வழி காட்டுவதாகவும் முன்னமே சொல்லியிருக்கிறாள். அதை நிறை வேற்றுகிறாள்….”
இதைச் சொன்ன விஜயகுமாரனின் நோக்குத் தொலை நோக்காக இருப்பதைக் கவனித்தான் கிளைவ். திட்டம் யாருடையதானாலும் அதில் பலன் இருக்கிறது என்பது மட்டும் கிளைவுக்கு நன்றாகப் புரிந்தது. ஆகவே அத்திட்டத்தை அமல் படுத்துவதை விட வேறு வழியில்லை என்பதைப் புரிந்து கொண்ட கிளைவ், “இப்போது யார் போவது மேஜரை அழைத்து வர?” என்று கேட்டான்.
”நான் போகிறேன் இன்றிரவு” என்றான் விஜயகுமாரன்.
“இரவிலா “
“ஆம். இன்றிரவு காவிரியிலும் கொள்ளிடத்திலும் வெள்ளம் வரும்’ என்றான் விஜயகுமாரன்.
”எப்படித் தெரியும்” என்று கேட்ட கிளைவ், ”கொள்ளிடத்தில் சின்னஞ்சிறு கால்தானே ஓடுகிறது இப்பொழுது?” என்ற சுட்டியும் காட்டினான்.
“இரவின் கதை வேறு” என்ற விஜயகுமாரன் முகத்தில் தீவிர சிந்தனை படர்ந்தது. அந்தச் சிந்தனையுடன் அந்த நாளைக் கழித்தான் விஜயகுமாரன். அவன் நடமாட்டத்தில் ஏதோ பெரும் மாறுதல் இருப்பதைக் கவனித்த கிளைவுக்கு, நண்பனுக்குப் புத்தி மாறாட்டம் ஏதாவது ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டதால் அவன் மனத்தில் கவலை உண்டாயிற்று.
ஆனால் மாலை புதுச் செய்திகளை கொண்டு வந்தது. ஆற்றோரத்திலிருந்த காவற்படையினர் இருவர் ஆற்றில் ஜலம் அதிகரிப்பதாக வந்து சொன்னார்கள். இரவு சுமார் எட்டு மணிக்குள் கொள்ளிடம் கரை புரண்டு ஓடாவிட்டாலும் பெரும் வெள்ளத்தைத் தாங்கிக் கொண்டிருந்தது. இரவு ஏறியது. எங்கும் ‘ஹோ’ வென்று இயற்கையின் கூச்சல் ஊழிக் கூச்சலைப் போல் காதில் விழுந்தது.
அந்தச் சமயத்தில் பூரண ராணுவ உடையணிந்து விஜய குமாரன் கிளைவின் முன்பு வந்து நின்றான். ”காப்டன்! நான் கொள்ளிடத்தைத் தாண்டப் போகிறேன். நாளைக்கு மேஜரை அழைத்து வருகிறேன்” என்றான்.
கிளைவின் விழிகளில் அனுதாபம் இருந்தது. ”விஜயகுமார், ஆற்றில் ஜலம் பெருகிவிட்டது” என்றான்.
”ஐ நோ.”
“டூ யூ நோ தேர் ஈஸ் எ கேல் டூ? (காற்றும் அதிகமாக இருப்பது தெரியுமா உனக்கு?)”
”ஐ நோதட் டூ (அதுவும் தெரியும்)”
”அப்படியும் போகத் தீர்மானித்துவிட்டாய்?”
“ஆம்.”
”ஆல் ரைட், லெட் அஸ் ஸ்டார்ட்’’ என்ற கிளைவ், விஜயகுமானுடன் கொள்ளிடக் கரைக்கு வந்தான்.
அக்கரைக்கும் இக்கரைக்கும் ஒரே ஜலப்பிரளயமாகப் பயங்கரமாகத் தெரிந்தது கொள்ளிடம். காற்றில் கரை மரங்கள் பேயாட்டம் ஆடின. ‘ஊ’ என்ற காற்று பயங்கரத்துக்குப் பெரும் சுருதியைக் கூட்டிக் கொண்டிருந்தது. இவையனைத்தையும் கண்ட கிளைவ் திகில் கொண்டாலும் விஜயகுமாரன் எந்தவித அச்சத்தையும் காட்டாமல் பரிசலில் ஏறினான். “நாளை வருகிறேன் கிளைவ்” என்ற கூறிவிட்டுப் பரிசலில் பந்தம் ஏந்தி நின்றவனைப் பார்த்து, “பந்தத்தை அணைத்து விடு ” என்றான்.
”கும்மிருட்டு எஜமான்” என்றான் பரிசல்காரன்.
”பரவாயில்லை’’ என்று விஜயகுமான் கூறவே, பந்தம் அணைக்கப்பட்டு, பரிசல் நீர்ப் பிசாசு போல் கொள்ளிடத்து வெள்ளத்தில் விரைந்தது. கோல் போடுவோர் திறமையுடன் பரிசலை நடத்திச் சென்றார்.
நடுக்கொள்ளிடத்துக்குப் பரிசல் வந்ததும் விஜயகுமாரன் காதில், ‘நன்று செய்தாய் மகனே” என்ற குரல் ஒலித்தது.
”தாயே! தாங்களா?” என்றாள் விஜயகுமாரன் வியப்புடன்.
”ஆமாம் மகனே! நான் உன்னுடன் எப்போதும் இருப்பேன். உன்னைப் பாதுகாப்பேன். இப்பொழுது ஆபத்து நெருங்குகிறது உன்னை . அதனால் வந்தேன்’ என்றது ஆவியின் குரல்.
“ஆபத்தாதாயே?”
“ஆம் மகனே.”
“இந்த நடுக் கொள்ளிடத்திலா”
“ஆம், மேற்கே பார்.”
மேற்கே பார்த்தான் விஜயகுமாரன்.
சற்றுத் தூரத்தில் மற்றொரு பரிசல் விஜயகுமாரன் பரிசலை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. அதில் நான்கு வீரர்கள் துப்பாக்கியும் கையுமாக நின்றிருந்தார்கள்.