Raja Perigai Part 3 Ch33 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
ராஜ பேரிகை – சாண்டில்யன்
மூன்றாம் பாகம் அத்தியாயம் – 33 மேஜரும் நம்புகிறார்.
Raja Perigai Part 3 Ch33 | Raja Perigai | TamilNovel.in
நடுக் கொள்ளிடத்தில் நடு நிசியளித்த கும்மிருட்டில் தனது பரிசலை நோக்கி வந்துகொண்டிருந்த பரிசலைப் பார்த்த விஜயகுமாரன் அதிலிருந்த நான்கு வீரர்களில் இருவர் பிரெஞ்சு சோல்ஜர்கள் என்பதை அவர்கள் உடையிலிருந்து தெரிந்து கொண்டான். ஆகையால் சமயபுரத்திலிருக்கும் தனது படையின் மீது எதிரிகள் கண்காணிப்புப் பலமாக இருக்கிற தென்றும் புரிந்துகொண்டான்.
அந்தச் சமயத்தில் வான் கூரையில் பளிச்சிட்ட நட்சத்திரக் கூட்டத்தைக் கவனித்துக் சற்றே நடுநிசி தாண்டியிருப்பதை உணர்ந்துகொண்ட விஜயகுமாரன் வரவரக் கொள்ளிட வெள்ளத்தின் வேகம் அதிகமாவதையும் அது கீழ்த் திசைக்குத் தன் பரிசலை இழுத்துச் செல்வதையும் கவனித்தான். அப்படியானால் எதிரிகள் பரிசல் தன்னிடம் அணுகுவது கஷ்டம் என்றும் தீர்மானித்தான். அவன் தீர்மானித்த விநாடியில் சுழல் காற்று ஒன்று திடீரென வீசி எதிரியின் பரிசலை அவனுக்கு வெகு அருகில் இழுத்து வர முற்பட்டது. அப்போது ஒலித்தது ஆவியின் குரல்.
‘மகனே உன் துப்பாக்கியை எடுத்துக் கொள். இப்போது சுடும் தூரத்தில் இருக்கிறான் எதிரி. முதலில் இரண்டு பிரெஞ்சு வீரர்களை ஒவ்வொருவராகச் சுட்டுவிடு. பிறகு சந்தாசாகிபின் இரு வீரர்களையும் முடித்து விடு.”
”இதே வேகத்தில் எப்படி நான் குறி வைப்பேன்?” என்று கேட்டான் விஜயகுமாரன் வருத்தம் கலந்த குரலில்.
”மகனே! குறி நான் வைக்கிறேன். துப்பாக்கியை நீ எடுத்துக் கொள்.” என்றது தாயின் ஆவி.
ஆவியின் சொற்கள் காதில் விழாமல் விஜயகுமாரன் சொற்கள் மட்டும் காதில் விழவே பரிசிலோட்டி கேட்டான். “எஜமான், யாருடன் பேசுகிறீர்கள்?” என்று.
”யாருடனும் இல்லை” என்றான் விஜயகுமான் நீண்ட துப்பாக்கியை எடுத்துத் தோள்மீது உதைக்க வைத்து எதிரிப் பரிசிலை நோக்கிக் குறி வைத்து.
”அது தெரிகிறது எஜமான். உங்களுக்கு நீங்கள் பேசிக் கொள்கிறீர்களே என்று கேட்டேன்” என்றான் பரிசிலோட்டி.
”சில சமயங்களில் யோசனை செய்வதை அப்படி நான் சொல்வதுண்டு.
“இரைந்து பேசி…?”
“ஆம்.”
”உங்களக்கு நீங்களே?”
”ஆம். அப்படிப் பேசுவதில் பலன் இருக்கிறது.”
பரிசிலோட்டிக்கு மெள்ள மெள்ளத் திகில் பிடித்தது. கொள்ளிடப் பிசாசு என்று ஒன்றிருப்பதை அவன் கேட்டிருக்கிறான். நடு நிசியில் கொள்ளிடத்தில் அது உலாவுகிற தென்ற செய்தியோ, அது பல பேரைப் பிடித்து அடித்திருக்கிற தென்ற செய்தியோ அவனுக்குப் புதிதல்ல. ஆகையால் அவன் உடல் நடுங்கியது. நடுக்கத்துடன் கேட்டான், ‘எஜமான் உங்களுக்கு உடம்புக்கு ஒன்றுமில்லையே?” என்று.
“இல்லை. புத்திக்குத்தான் வியாதி” என்றான் விஜயகுமாரன் துப்பாக்கியை நன்றாக எதிரிப் படகுக்காகக் குறி வைத்து.
”புரிகிறது எஜமான்.”
“என்னடாபுரிகிறது?”
”உங்களைப் பிடிச்சுகிச்சு எஜமான்.”
காதில் தாயின் கட்டளை ஒலித்தது.
”அதோ படகு வந்து விட்டது. சுடு” என்று.
“பட் பட் பட் பட்!” என்று நான்கு முறை துப்பாக்கிக் குதிரையை இழுத்துவிட்டுச் சுட்டான் விஜயகுமாரன். எதிரிப் படகிலிருந்து நான்கு பேரும் ஒவ்வொருவராய் மாண்டு விழுந்தனர். எதிரியின் படகோட்டி அச்சத்தினால் கோலை நழுவ விட்டான். அந்தப் பரிசல் கொள்ளிடச் சுழலில் சுழன்று தறி கெட்டு வேகமாக விஜயகுமாரன் பரிசலையும் தாண்டிச் சென்று விட்டது.
விஜயகுமாரன் பரிசலோட்டி பயத்தில் நடுங்கினான். ”அம்மா தாயே, சமயபுரத்து அம்மா! நீ தான் எஜமானையும் என்னையும் காப்பாத்தணும்’ என்று கோலைப் பிடித்தவண்ணம் இரைந்து பிரார்த்தித்தான்.
அவன் பிரார்த்தனைக்குக் காரணம் விஜயகுமாரனுக்குத் தெரிந்தாலும் அதைப்பற்றி ஏதும் கேட்டுக் கொள்ளாமல் மௌனமாகவே இருந்தான். பரிசல் எதிர்க்கரையை அடைந்ததும் இறங்கிப் பரிசலோட்டியை நோக்கி, “டேய்! நாளை இரவு இங்கே நடுநிசிக்குச் சற்று முன்பு பரிசலுடன் இரு” என்று உத்தர விட்டான். பரிசலோட்டிக்கு அங்கிருப்பதாக உத்தேசம் இல்லா விட்டாலும் இருப்பதாகத் தலையசைத்தான்.
அதற்குப் பிறகு ஸ்ரீரங்கம் தீவின் தோப்புகளில் மறைந்து காவிரியையும் மற்றோரு பரிசலில் கடந்த விஜயகுமாரன் திருச்சிக்கோட்டைக்கு விடியுமுன்பே வந்துவிட்டான். அவன் பெயரைச் சொன்னதும் கோட்டைச் சுவர்மீது காவலிலிருந்த முகம்மது அலியின் வீரர்கள் அவனை உள்ளே அனுமதிக்கவே, கிளைவ் முன்பு தங்கியிருந்த விடுதிக்குச் சென்ற விஜயகுமாரன் அங்கிருந்த அறையில் படுத்தான் சுமார் இரண்டு மணி நேரம். பிறகு எழுந்து நீராட்டத்தையும் காலை ஆகாரத்தையும் முடித்துக்கொண்டு மேஜரைச் சந்தித்தான்.
மேஜர் லாரன்ஸ் அன்று மிகத் திருப்தியுடன் ஒரு நாற்காலியில் சாய்ந்துகொண்டு மைசூர்ப் பிரதிநிதி நஞ்ச ராஜாவுடனும் தஞ்சை போர் மந்திரி மானாஜி அப்பாவுடனும் பேசிக் கொண்டிருந்தார். ”போர் நமக்கு அனுகூலமாகத் திரும்பியிருக்கிறது. எதிரியின் உதவிக்கு வரும் வழிகளை அடைத்து விட்டோம். இன்னும் ஒரு மாதத்திற்குள் சந்தாசாகேபும் ஜெனரல் லாவும் மிக இக்கட்டான நிலைமைக்கு வருவார்கள்” என்று உற்சாகத்துடன் சொன்னார் மேஜர்.
அந்த வேளையில் உள்ளே நுழைந்த விஜயகுமாரன், ”அதைத் துரிதப்படுத்த வழியிருக்கிறது” என்று கூறினான். மேஜர் தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு எழுந்திருக்க முயன்றவர் மீண்டும் சாய்ந்து கொண்டார் நாற்காலியில். இங்கு என்ன செய்கிறாய் நீ எப்பொழுது வந்தாய்?” என்று குழப்பத்துடன் வினவவும் செய்தார்.
“விடியற்காலையில் வந்தேன்” என்றான் விஜயகுமாரன் பதிலுக்கு.
”சமயபுரத்திலிருந்தா?” என்று கேட்டார் மானாஜி அப்பா.
”ஆம்” என்றான் நாயக்கர் வம்ச வாலிபன்.
”எப்படி வந்தாய்? இரு காவிரிகளிலும் வெள்ளம் போகிறதே!” என்று விசாரித்தார் நஞ்ச ராஜா.
”பரிசலில் வந்தேன்” என்றான் விஜயகுமாரன்.
”வென் டிட் யூ ஸ்டார்ட்?” என்று வினவினார் மேஜர் சந்தேகம் ஒலித்த குரலில்.
விஜயகுமாரன் முறுவல் கொண்டான். ”லாஸ்ட் நைட் (சென்ற இரவில்)” என்று பதில் கூறினான்.
“நைட்? (இரவிலா?)” என்று மீண்டும் கேட்டார் மேஜர்.
”எஸ் ஜெனால்! ஐ ஸ்டார்ட் தட் அட் மிட் நெட் (ஆம் தளபதி! நேற்று நள்ளிரவில் கிளம்பினேன்)” என்ற விஜயகுமாரனை நோக்கித் தீவிழி விழித்தார் மேஜர். ”ஐ ஸப்போஸ் தி எனிமி வாஸ் ஸலீப்பிங்? (எதிரி தூங்கிக் கொண்டிருந்தான் போலிருக்கிறது?)” என்று சொன்னார் குரலில் லேசாக ஆத்திரத்தைக் காட்டி.
“இல்லை. எதிரி காவற் படையின் பரிசல் ஒன்று எங்களைத் தாக்க வந்தது…”
”வெல்!”
”அதில் நான்கு வீரர்கள் இருந்தார்கள். இருவர் பிரெஞ்சு சோல்ஜர்கள்.”
”வாட் டிட் யூ டூ வித் தெம்? (அவர்களை என்ன செய்தாய்?)”
“ஐ ஷாட் தெம் டெட் (அவர்களைச் சுட்டுக் கொன்று விட்டேன்)”
”இன்வர்லிங் ப்ளட் (வெள்ளச் சுழலில்?)”
“எஸ்.’’
மேஜருக்கு ஆத்திரம் வந்தது. ‘யூ டிட் ஸிங்கிள். நோ ஹொல்ப்? (நீ தனியாகச் செய்தாய் இந்தச் சாதனையை? உதவிக்கு யாருமில்லை?)” என்ற உஷ்ணம் கலந்த குரலில் வினவினார்.
”தேர் வாஸ் ஹெல்ப் (உதவி இருந்தது)” என்று மெதுவாகச் சொன்னான் விஜயகுமாரன்.
”ஹு ஹெல்ப்ட் யூ (யார் உதவியது உனக்கு?)” என்று வினவினார் மேலும்.
”மை மதர் (என் தாய்)” என்றான் விஜயகுமாரன்.
“தட் ஸ்பிரிட்? (அந்த அருவமா?)” என்று கேட்டுக் கொண்டே எழுந்தார் மேஜர் தமது ஆசனத்திலிருந்து.
”எஸ் மேஜர்” என்று நிமிர்ந்து நின்றான் விஜயகுமாரன் தைரியமாக.
மேஜர் அவனைப் பரிதாபத்துடன் பார்த்தார். ‘’மை ஸன்! யூ ஆர் எப்ரேவ் ஸோல்ஜர் பட் யூ டோண்ட் வாண்ட் டு அட்மிட் யுவர் ஃபீட்ஸ் (மகனே! நீ மகாவீரன்; ஆனால் உன் சாதனைகளை ஒப்புக்கொள்ள மறுக்கிறாய்)” என்று அவனை நெருங்கி அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார். பிறகு அவனுக்கும் ஓர் ஆசனத்தைக் காட்டி உட்காரச் சொல்லி ”ஆல் ரைட். ஹொய் டிட் யூ கம்? (சரி, ஏன் இங்கு வந்தாய்)” என்று வினவினார்.
“டு டேக் யூ வித் மி (உங்களை என்னுடன் அழைத்துப் போக)” என்று விஜயகுமாரன் விண்ணப்பக் குரலில் கூறினான்.
“மீ?” என்று அதிர்ச்சியுடன் கேட்டார் மேஜர்.
“எஸ்.”
”அலோன்? (தனியாகவா?)”
“எஸ்”
“வென்?”
”திஸ் நைட்.”
”மிட் நைட்.”
“எஸ் மேஜர்.”
இந்தக் கடைசிப் பதிலைக் கேட்ட மேஜர் திடீரென வெடித்தார் பயங்கரமாக. “யூ ஸ்கௌண்ட்ரல்! யூ திங்க் எனி கமாண்டர் வில் லீவ் ஷிஸ் போல்ட் அண்ட் கோ வித் ஏ மாட் பெல்லோ? (அட அயோக்கியா! எந்தப் படைத் தலைவனாவது தனது தலைமைத் தளத்தை விட்டு ஒரு பைத்தியத்துடன் செல்வானென்று எதிர்பார்க்கிறாயா?)” என்று கட்டிடமே அதிரும்படியாகக் கூவினான் மேஜர். அவர் கூச்சலைச் சிறிதும் லட்சியம் செய்யாதது மட்டுமல்லாமல் அதை உறுதிப்படத்தவும் மேற்கொண்டு சொன்னான்: ”மேஜர்! நீங்கள் நம்ப மாட்டீர்கள். உங்களைக் கிளைவிடம் கொண்டு சேர்ப்பது என் கடமை. நமக்கு மாதாவின் துணை இருக்கிறது எதிரி நம்மை ஒன்றும் செய்ய முடியாது” என்று. ”அது மட்டுமல்ல மேஜர்! நீங்கள் மகாவீரர், அச்சத்துக்கும் உங்களுக்கும் சம்பந்தமிருக்க முடியாது” என்றும் மேஜரைப் பாராட்டினான்.
கடைசியில் வேண்டா வெறுப்பாக ஒப்புக் கொண்டார் மேஜர். விஜயகுமாரன் முந்திய இரவைப் போலவே அந்த நாள் இரவிலும் முதல் நாள் பரிசல்காரன் தலை காட்டாததால் வேறு பரிசலை ஓட்டிச் சொல்லி, இரண்டு காவிரிகளையும் மேஜருடன் தாண்டி, கிளைவின் இருப்பிடத்துக்கு வந்தான். அங்கு மூவரும் போரின் அடுத்த கட்டத்தைத் தீர்மானித்தார்கள். மேஜர் லாரன்ஸ் கிளைவிடம் சொன்னார். “இப் யூ மூவ் டுவேர்ட்ஸ் பிச்சாண்டா, லாவில் மூவ் ப்ரம் பிஹெண்ட். டோன்ட் வொரி. ஐ வில் பி ஆன் தி பாக் ஆஃப் லா (நீ பிட்சாண்டார் கோவிலை நோக்கிப் போனால் உன்னைலா பின்னால் தாக்க முயலுவான். அஞ்சாதே. லாவின் முதுகுப்புறத்தில் நான் இருப்பேன்)” என்று. இன்னொன்றும் சொன்னார் மேஜர். ‘டூ யூ நோ காப்டன்! ஐ ஆல்ஸோ பிலீவ் இன் ஸ்பிரிட்ஸ் நௌ (தெரியுமா காப்டன்! நானும் இப்போது ஆவிகளை நம்ப ஆரம்பித்து விட்டேன்.)”
”என் அன்னையிடம் நம்பிக்கை பிறந்துவிட்டதா உங்களுக்கு?” என்று கேட்டான் பக்கத்திலிருந்த விஜயகுமாரன் உற்சாகத்துடன்.
”ஷ்யூர். ஹூ எல்ஸ் வில் கெட் அஸ் ஹியர் அக்ராஸ் தி கொல்ரூன் அண்ட் அக்ராஸ் தட் டெரிபிள் ஃப்ளட்? (நிச்சயமாகப் பிறந்து விட்டது. கொள்ளிடத்தின் வெள்ளத்தில் வேறு யார் நம்மை இங்கு நம்மை அழைத்து வர முடியும்?)”
அன்றிருந்து மூன்றாவது நாள் கிளைவ் பிட்சாண்டார் கோவிலைத் தாக்கத் தனது படைப் பிரிவுடன் சென்றான்.
ஆனால் தூரத்தே புதுச்சேரியில் டூப்ளேயும் வாளாவிருக்க வில்லை. பிரிட்டிஷ்காரரை ஒழிப்பதற்கான பயங்கரத் திட்டத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார்.