Raja Perigai Part 3 Ch43 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
ராஜ பேரிகை – சாண்டில்யன்
மூன்றாம் பாகம் அத்தியாயம் – 43 காலத்தால் மாறாத கதை
Raja Perigai Part 3 Ch43 | Raja Perigai | TamilNovel.in
அப்பொழுது உஷத்காலம் நெருங்கிவிட்டடியால் அரங்க மாநகர் விழித்துக்கொண்டு விட்டது. ஆங்காங்கு தெருக்களில், இராமபிரானைக் காலை சந்தியாவந்தனத்துக்கு விசுவாமித்திர் எழுப்பிய, ‘கௌஸல்யா ஸுப்ராஜா ராமா பூர்வாஸந்த்யாப் ப்ரவர்த்ததே உத்திஷ்டநரசார்துல கர்த்தவ்யம் தைய்வ மாந்ஹிதம்’ என்ற சுலோகமும், ”கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்” என்ற தொண்டிரடிப் பொடி ஆழ்வாரின் பாசுரமும் பூபாள ராகத்தில் மிக ரம்மியமாகப் பாடப்பட்ட சப்தம் கர்ப்பக்கிருக முன் மண்டபத்திலும் வந்து நுழைந்தது.
இவை தவிர எம்பெருமான் திருப்தியுடன் உறையும் ஸாமவேதப் பகுதிகளும், திருப்பாவை பாசுரங்களும், குலசேகரர் அருளிய முகுந்த மாலையின் இன்ப சுலோகங்களும் பல இடங்களில் இரைந்து கானம் செய்யப்பட்டதால், அவை பிராகாரச் சுவர்களில் தாக்கி எதிரொலி செய்து அந்த மாநகரை வேத வெள்ளத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தால், அவற்றின் சில துளிகள் வேகத்துடன் விஜயகுமாரன் காதிலும் விழவே, அவன் தண்டனிட்ட நிலையிலிருந்து மெள்ள எழுந்த பின்பும் ஜெய்சிங்கையோ அவன் வாளேயோ லட்சியம் செய்யாமல் கர்ப்பக்கிருகத்தைக் கைகுவித்துக் கண்மூடிப் பல விநாடிகள் தியானத்தில் இருந்தான். தியானம் முடிந்த பின்பு நிதானமாக ஜெய்சிங்கை நோக்கித் திரும்பிய விஜயகுமாரன், “என்ன வேண்டும் உளக்கு?” என்று வினவினான் சர்வ சாதாரணமாக.
ஜெய்சிங்கின் புருவங்கள் கோபத்தினால் சற்றே உயர்ந்தன, ”நான் யார் தெரியுமா உனக்கு?” என்ற பதிலுக்கு அவனும், கேள்வியொன்றே வீசினான். அந்தக் கேள்வியிலும் சினம் நன்றாக தொனித்தது.
”தெரியும். உன் பெயர் ஜெய்சிங். ராஜபுத்திரன்” என்றான் விஜயகுமாரன்.
இதனால் வியப்படைந்த ஜெய்சிங், “எப்படித் தெரியும் என்னை?” என்ற வினவினான்.
விஜயகுமாரன் உடனடியாகப் பதில் சொல்லவில்லை . கையிலிருந்த ரத்தக் கறை படிந்த வாளால் தாம்பாளத்திலிருந்த சந்தாசாகிபின் தலையைச் சுட்டிக் காட்டி, ”இவருக்காக நீ தூது வந்தபோது நானும் தஞ்சைத் தளபதியின் கூடாரத்தில் இருந்தேன்.”
“நான் உன்னைப் பார்க்கவில்லையே?”
“இல்லை.”
“ஏன்?”
”நான் மானாஜிக்குப் பின்பிருந்த திரை மறைவிலிருந் தேன்.”
”ஒட்டுக் கேட்கவா?”
”தஞ்சை உபதளபதிக்கு ஒட்டுக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.”
‘’அப்படியானால் ஏன் மறைவில் இருந்தாய்? வெளியே வருவதுதானே?” என்ற வினவினான் ஜெய்சிங் சற்றுக் கோபம் துவங்கிய குரலில்.
விஜயகுமாரன் சற்று நிதானித்தான் பதில் சொல்ல. ஜெய்சிங்கை உற்று நோக்கினான் சில விநாடிகள், பிறகு. ”வந்திருப்பேன் வெளியே, ஆனால் ராஜபுத்ரனான நீ சந்தாசாகிபின் படையில் சேவை செய்வது எனக்குத் தெரியாது. அது தவிர சந்தாசாகிபின் தூதுவனாக அவருக்காக லஞ்சம் கொடுக்கவும் பணமுடிப்பு கொணர்ந்ததையும் நான் முதலில் அறியவில்லை. ஒரு ராஜபுத்திரன் தனிமையில் தஞ்சைத் தளபதிக்கு லஞ்சம் கொடுக்க வந்திருக்கிறான். அதுவும் பெரும் பாதகம் புரிந்திருக்கும் சந்தா சாகிப்புக்காக. தஞ்சைத் தளபதியின் மனச்சாட்சியை விலை பேசவந்திருக்கிறான் என்று கேட்டதாலும் அசைவற்று மறைவிலேயே நின்றுவிட்டேன். வெளியே வந்து உன்னை அவமானப்படுத்த எனக்கு இஷ்டமில்லை” என்ற விஜயகுமாரன் துன்பம் தொனித்த குரலில் சொன்னான்.
ஜெய்சிங், விஜயகுமாரன் குரலிலிருந்த துன்பத் தொனியையும் அநுதாபத்தையும் கவனித்தாலும் அதை லட்சியம் செய்யவில்லை . ”நான் சந்தாசாகிபின் படைவீரன். அவர் எந்த உத்தரவிட்டாலும் நிறைவேற்ற வேண்டியவன். ஆகையால் கடமையைச் செய்தேன். இதில் வெட்கப்பட ஏதுமில்லை. தவிர இந்தக் கோவிலைச் சந்தாசாகிபின் வீரர்கள் புகுந்து அசுத்தப்படுத்தாதபடி பாதுகாக்கவும் அந்தப் படையில் என் வீரர்களுடன் நீடித்திருந்தேன். மானாஜிக்கும் வெள்ளைக்கார மேஜர் லாரன்ஸக்குங்கூட எச்சரிக்கை செய்திருந்தேன். ”இந்தக் கோவிலுக்குள் யாராவது புகுந்து அட்டகாசம் செய்தார்களானால் நானும் என் ஆயிரம் வீரரும் போர் செய்து மடிவோம்’ என்றதும் சந்தா சாகிப் எனக்குக் கட்டுப்பட்டார். மானாஜி கட்டுப்படவில்லை, இதோ இந்தத் தலையுடன் கர்ப்பக் கிருகத்துக்கு அருகிலேயே நீ வந்துவிட்டாய். கோவிலின் புனிதத் தன்மையை நாசம் செய்து விட்டாய். எப்படி அதைப் பரிசுத்தப்படுத்தப் போகிறாய்?” என்று கோபம் உச்சஸ்தாயிக்குச் செல்லச் சொற்களை மடமடவென உச்சரித்தான் ஜெய்சிங்.
அதற்கு விஜயகுமாரனே பதில் சொல்லியிருப்பான் என்றால் அவனை விடவில்லை இன்னொருவர். அந்தச் சமயத்தில் அவ்விடம் வந்த தஞ்சையின் வருமான மந்திரி பீர் பண்டிதர், ”ராஜபுத்திர வீரனே! நீ அவனை நோவதில் பயனில்லை. தெற்கில் இந்து அரசுகளை ஒழித்துவிட முயன்ற சந்தசாகிப்பை அழித்தான் விஜயகுமாரன். தவிர சந்தாசாகிபின் தலையைக் கொண்டுவந்து சமர்ப்பிப்பதாகச் சபதம் செய்தபடி பிரார்த்தனைச் செலுத்தியிருக்கிறான். ஆகவே உபதளபதியை எதுவும் சொல்லிப் பயனில்லை. இந்தக் கோவிலுக்குள் அந்தத் தலையைக் கொண்டு வந்ததற்குப் பிராயச்சித்தம் உண்டு. அதற்கான பணத்தை மானாஜி அனுப்பியிருக்கிறார்” என்று கூறித் தமது கையிலிருந்த பணமுடிப்பை உயர்த்திக் காட்டினார் ஜெய்சிங்குக்கு. பிறகு, ”ரங்கதாஸரே” என்று அழைத்ததும் அவருக்குப் பின்னாலிருந்து வந்த பட்டாடையாரிடம் அதைக் கொடுத்து, ”அரங்சன் சம்ப்ரோட்சணத்திற்கு இது போதுமா பாரும்!” என்று உத்தரவிட்டார்.
பணமுடிப்பைக் கையில் வாங்கிய பட்டாடையார் முடிப்பைப் பிரித்து உள்ளிருந்த மோகராக்களைப் பார்த்து வாயைப் பிளந்தார். பிறகு. ”யதேஷ்டம் யதேஷ்டம்” என்று கூவினார் மகிழ்ச்சி மிகுதியால்.
அடத்தபடி ஜெய்சிங்கை நோக்கி டபீர் பண்டிதர், ”ஜெய்சிங் விஜயகுமாரன் அபசாரத்துக்குப் பிராயச்சித்தப் பணம் கொடுத்தாகி விட்டது. எந்தப் பணமுடிப்பை லஞ்சமாக சந்தாசாகிப் அனுப்பினாரோ அந்தப் பணம் முழுவதும் நல்ல காரியத்துக்குப் பயன்படுகிறது. அப்படிப் பயன்படுவதை அவரே பார்க்கிறார்” என்று நிலைத்து நின்று விட்ட சந்தாசாகிபின் விழிகளைச் சுட்டிக் காட்டினார்.
ஜெய்சிங் ஒரு விநாடி பணமுடிப்பையும் நவாபின் தலையையும் பார்த்தான். பிறகு ஏதும் பேசாமல் வெளியே நடந்தான். அவன் சென்றதும் அரசுகுமாரி நந்தினி அந்த மண்டபத்துக்குள் நுழைந்தாள். அவள் வதனத்தில் மகிழ்ச்சி மண்டியிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அங்கு வந்தபோது எந்த ஆடையை அணிந்திருந்தாளோ அதே ஆடையை அன்றும் அணிந்திருந்தாள். அவள் வந்ததும் அமைச்சர்பிரான் மண்டபத்தைவிட்டு ரங்கதாஸருடன் நீங்கினார்.
யாருமின்றித் தனித்து விடப்பட்ட நந்தினியும் விஜய குமாரனும் நீண்ட நேரம் ஒருவரையொருவர் உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள். பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ என்ற நிலை பல விநாடிகள் நீடித்தன.
பிறகு நந்தினியே விஜயகுமாரனை அணுகினாள். ரத்தக் கறை படிந்த அவன் வாள் அப்போதும் அவன் கையில் இருந்ததால் அதிலிருந்த கறை அவள் ஆடையில் பட்டது. “ரத்தம் நந்தினி” என்றான் விஜயகுமாரன் மெதுவாக.
நந்தினி தன் இதழ்களில் முறுவல் கூட்டினாள். ”வீரபத்தினிகள் ரத்தத்தைக் கண்டு அஞ்சுவதில்லை, ஆனந்தமே கொள்கிறார்கள். கரதூஷணர் வதத்துக்குப் பின்பு உடலெல்லாம் ரத்தக் கறையுடன் வந்த ராமனைச் சீதாபிராட்டி அப்படியே இறுக அணைத்துக் கொண்டாள் என்று இராமாயண காவியம் கூறுகிறது” என்று இன்பமான குரலில் சொன்னாள்.
விஜயகுமாரன் செவிகளில் அச்சொற்கள் தேன் எனப் பாய்ந்தன. “அப்படியானால் நீ என்னை ….” என்று இழுத்தான்.
அவள் சிரித்தாள். “இல்லை, இப்போது இல்லை. தஞ்சையில் நமக்காகத் தந்தை காத்திருக்கிறார்” என்றாள் நந்தினி.
விஜயகுமாரன் பெருமூச்செறிந்தான், கடமை முற்றுப் பெற்ற காரணத்தால். பிறகு அவள் கையைப் பிடித்துக் கொண்டு படிகளில் இறங்கி வெளியே சென்றான். சுற்றிலும் காவலிருந்த ஜெய்சிங்கின் வீரர்கள் அவர்களைத் தடை ஏதும் செய்யவில்லை. ஜெய்சிங்கூட மரியாதைக்கு அறிகுறியாகத் தலையை வணங்கினான். அத்துடன் கேட்டான். ”சந்தாசாகிபின் தலையை என்ன செய்வதாக உத்தேசம்?” என்று.
”முகம்மது அலி அதைப் பார்க்க விரும்புகிறார். தட்டுடன் அவரிடம் அனுப்பி விடுங்கள்” என்று கூறிவிட்டு நடந்தான் விஜயகுமாரன் நந்தினியுடன்.
அன்று மாலை திருச்சியிலிருந்த தமது அரண்மனையில் முகம்மது அலி தனது ஜன்ம வைரியின் தலையை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் என்றுமில்லாத திருப்தி நிலவியது.
இரண்டு நாட்கள் கழித்துத் தஞ்சையில் ராஜபேரிகை அபரிமிதமாகச் சப்தித்தது. திருச்சியில் சந்தாசாகிப்பின் தலை சீவப்பட்டபோது அமங்கல ஒலி கிளப்பிய அதே ராஜபேரிகை அன்று மங்கல ஒலியைக் கிளப்பியது. தஞ்சையில் பிரதாப்சிங் தமது மகளை விஜயகுமாரனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தார். அந்த வைபவத்துக்கு ராபர்ட் கிளைவ் நேரடியாகவே வந்திருந்தான். திருமணம் முடிந்ததும் கிளைவை அணுகிய விஜயகுமாரன், ”கிளைவ் உன் திருமணத்தை எப்போது எதிர்பார்க்கலாம்?” என்று வினவினான்.
”திருச்சிப் போர் இன்னும் பூரணமாக முடியவில்லை. முடிந்ததும் தெரிவிக்கிறேன்’’ என்ற கிளைவ் விஜயகுமாரனை இறுகத் தழுவிக் கொண்டான்.
”கிளைவ்! உன் திருமணத்துக்கு நான் வரமாட்டேன். இனி உன் பக்கத்தில் போராடவும் முடியாது. போரை விட்டே நான் விலகுகிறேன்” என்றான் விஜயகுமாரன்.
“ஏன் விஜயகுமார்?”
‘கிளைவ் இனி தேசம் பிரிட்டிஷ் கைகளுக்கு மாறும் வித்துக்களை நான் காண்கிறேன். இந்துக்களும் முஸ்லிம்களும் கொண்டுள்ள பகையால், வெளிநாட்டினரான நீங்கள் தலையிடத் தொடங்கி விட்டீர்கள். இந்துக்களும் முஸ்லீம்களும் பரஸ்பர விரோதத்திலும் தங்கள் பலத்தைவிட விதேச பலத்தில் நம்பிக்கை கொண்டு விட்டார்கள். சுய நம்பிக்கை இல்லாதவர்களுக்குச் சுதந்திரம் கிடையாது. அது நிச்சயம் அழிந்து விடும் கிளைவ். அதுவும் உன்னால். வெளி சாம்ராஜ்யத்தின் அஸ்திவாரக் கல் இங்கு நாட்டப்பட்டு விட்டது. அது இன்னும் உறுதியாகும்; கட்டிடமும் எழும்பும், அதைக் கட்ட நான் உதவ முடியாது. ஆகவே நான் போரிலிருந்து, அரசியலிலிருந்து விலகுகிறேன்.”
இதைக் கேட்ட கிளைவ் பதிலேதும் சொல்லவில்லை. தனது வலக் கையை நீட்டினான். விஜயகுமாரன் கை அதைப் பற்றியது பலமாக. இரு நண்பர்களும் அத்துடன் பிரிந்தனர் உள்ளத்தில் நேசத்தடனும், ஒன்றுபட்டிருக்க முடியவில்லையே என்ற வருத்தத்துடனும்.
அன்றிரவு மணவறையில் நந்தினி கேட்டாள். ‘உங்கள் நண்பரிடமிருந்து ஏன் விலகினீர்கள்?” என்று.
”நன்பனானாலும் வெளி நாட்டவன். நமக்கு அடிமை சாஸனம் வழங்கப் போகிறவன்” என்றான் விஜயகுமாரன்.
“அதனால்?”
”விலகினேன். உலகத்தில் உற்ற நண்பர்களிடமிருந்து விலகும் சந்தர்ப்பங்கள் எல்லாருக்கும் ஏற்படுகின்றன நந்தினி. நேசத்துக்குப் பரஸ்பர கௌரவம் அவசியம். அது எப்போதும் ஒரு தலைப்பட்சமாக இருக்க முடியாது. அப்படி இருபாலும் கௌரவமும் நேசப் பான்மையும் இல்லாதபோது கௌரவமான எந்த மனிதனும் விலகிவிடுகிறான்.” இதைச் சொன்ன விஜயகுமாரன் பெருமூச்செறிந்தான்.
அந்தச் சமயத்தில் தலையில் சேடிகள் கட்டியிருந்த வரைமாலையை எடுத்து வைத்துவிட்டுப் பஞ்சணையை நோக்கி வந்தாள் நந்தினி. அவள் நடையை கண்ட விஜயகுமாரன் உலகை மறந்தான். நழுவிய மேலாடை வெளிப்படுத்திய பேரழகைப் பருகிய அவன் உள்ளம் அவள் மேலேயே லயித்தது. அருகில் வந்ததும் அவள் இடையை இரு கைளைாலும் சுற்றிய அவன் அவள் கண்களை நோக்கினான். அந்தக் கண்கள் சொர்க்க லோகத்துக்கு அவனை அழைத்தன.
அந்த நிலையில் அவள் கேட்டாள், ‘நமக்குள்ளும் பரஸ்பர கௌரவம், மானம் வேண்டுமல்லவா?” என்று.
அவன் அவளை இறுக அணைத்தான். ”வேண்டியதில்லை நந்தினி. நாம் கௌரவத்தையும் மானத்தையும் இழக்கவேண்டிய நிலை இது” என்று முணுமுணுத்தான்.
“ஐயையோ” என்றாள் நந்தினி நகைத்த வண்ணம்.
அடுத்த விநாடி நகைப்பு நின்று வேட்கைப் பெருமூச்சு பெரிதாக வந்தது.
வெட்கம், மானம் இவை எங்கே என்று மனத்துக்குள் கேட்டுக் கொண்டாள் அவள். அவை இருந்த இடம் தெரிய வில்லை அவளுக்கு. அவற்றின் இடத்தை இன்ப வெறி ஆட்கொண்டது. வெறியில் விளைந்த விளையாட்டு! புதிதாகச் சொல்ல அவசியமில்லை. காவியங்கள் சொன்ன கதை அது. மனிதன் எத்தனை மாறியும் மாறாத கதை அது ஒன்று தான்.
மூன்றாம் பாகம் முற்றும்