Home Kadal Pura Read Kadal Pura Part 2 Ch11 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch11 |Sandilyan | TamilNovel.in

111
0
Read Kadal Pura Part 2 Ch11 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 2 Ch11 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch11 |Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

இரண்டாம் பாகம், அத்தியாயம் 11 : இன்பத்தில் துன்பம்.

Read Kadal Pura Part 2 Ch11 |Sandilyan | TamilNovel.in

அன்றைய இரவு நிகழ்ச்சியைப் பற்றிய மர்மத்தைத் தான் உடைக்க முயன்ற சில விநாடிகளுக்குள் யாரோ நால்வரைப் பற்றிய புது மர்மமொன்று முளைத்து விட்டதையும், அதையும் நினைத்துத் தன்னையும் நினைத்து அக்ஷயமுனைக் கோட்டைத் தலைவனும் அவன் புதல்வியும் பெரும் சஞ்சலமடைந்து தவித்ததையும் கண்ட பல்லவன் அந்தக் கோட்டையின் நிலவரம் பலவிதச் சிக்கல்களை உடையதென்பதையும், அத்தனை சிக்கல்களையும் உள் வயணங்களையும் புரிந்துகொள்ள புது மனிதன் எவனுக்கும் நாளாகுமென்பதையும் அறிந்து கொண்டான்.

அந்தச் சிக்கல்களில் மூழ்கி எழுந்து அந்த நகரத்தில் தனக்கொரு தனி ஸ்தானத்தையும் செல்வாக்கையும் ஸ்தாபித்துக் கொண்ட பின்பு, கலிங்கத்தின் கடல் பலத்தை உடைக்கும் லட்சியத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதென்றால் அது சில வருஷங்களுக்கு நடவாத காரியமென்பதையும் திண்ணமாகத் தெரிந்து கொண்டானாகையால் அந்த நகரத்தில் தன்னைப் பாதிக்கக்கூடிய நிகழ்ச்சிகளையும் மனிதர்களையும் மட்டும் கவனித்துக் களைந்துவிட்டுத் தன் லட்சியப் பாதையில் நடக்க வேண்டுமேயொழிய எல்லா விவகாரங்களிலும் தான் தலையிடுவது வீண் தொல்லை என்ற முடிவுக்கும் வந்தான்.

தவிர தன்னை நேரடியாகப் பாதிக்கக்கூடிய எதிரிகளையோ நிகழ்ச்சிகளையோ சமாளிப்பதில் தாமதம் காட்டுவதும் தவறாகும் என்ற எண்ணமும் அவன் இதயத்தே எழுந்தது. ஆகவே அந்தச் சமயத்துக்கு அக்ஷய முனை வரலாறு முற்றிலும் கவனம் செலுத்தாமல் எந்த நால்வர் வருகையால் தனக்கு ஆபத்து என்று மஞ்சளழகியும் அவள் தந்தையும் நினைத்தார்களோ அந்த நால்வரைப் பற்றி மட்டும் அந்தச் சமயத்தில் தெரிந்து கொண்டால் போதுமென்றும், அந்த நால்வரைச் சமாளித்துக் கொண்டு தன் பணியில் அடுத்த இரண்டு நாள்களுக்குள் இறங்குவதே தான் செய்யக்கூடிய காரியமென்பதையும் தீர்மானித்துக்கொண்ட இளையபல்லவன், அந்த நால்வரைப் பற்றிய விவரங்களை மஞ்சளழகி கூற முற்பட்டதும் மிகுந்த கவனத்துடன் அவள் சொல்வதைக் கேட்கலானான்.

ஆனால் மஞ்சளழகி அந்த நால்வரைப் பற்றி மட்டும் பேச்சைத் துவங்கவில்லை. அந்த நால்வர் வருகையால் அவனுக்கு என்ன ஆபத்து என்பதையும் உடனடியாக எடுத்துச் சொல்லவில்லை. பெரியதொரு சரித்திரத்தையே சொல்ல ஆரம்பித்தாள்.

மலர் மடியில் விரல்கள் பின்னிக் கிடக்க, முடியிழைகள் சில முகத்தில் தவழ்ந்து விளையாட, கரி இமைகள் சற்றே விரிந்து மேலெழ, சமவெளி படர்ந்த தனது அழகிய விழிகளை இளையபல்லவன் மீது உயர்த்திய மஞ்சளழகி, “நீங்கள் கேட்டது சிறு கேள்விதான் வீரரே! இருப்பினும் அதற்குத் தரக்கூடிய பதில் சிறிதல்ல. வெளி உலகம் அறியாத பல விஷயங்களை எடுத்து விவரித்தால் தான் அந்த அக்ஷயமுனையின் உண்மைச் சொரூபத்தை, இங்குள்ள மக்கள் கூட்டங்களின் விசித்திர அமைப்பை, இங்கு ஏற்படும் விபரீத நிகழ்ச்சிகளை, நீங்கள் அறிந்து கொள்ள முடியும்,” என்றாள்.

இதைச் சொன்னபோது அவள் கண்களிலிருந்த சங்கடத்தையும் குரலில் இருந்த சஞ்சலத்தையும் கவனித்த இளையபல்லவன், ஒருவேளை அக்ஷயமுனையின் அபகீர்த்திகளை அவள் அளவுக்கு மீறி மதிப்பிடுகிறாளோ, அபாயங்களை வரம்புக்கு மீறி வர்ணிக்க எத்தனிக்கிறாளோ என்று எண்ணினானாகையால், “பலதரப்பட்ட மக்கள் கூட்டமும் போட்டியும் கொலையும் பொறாமையும் அக்ஷயமுனைக்கு மட்டும் பிரத்தியேகமானதல்ல தேவி! இத்தகைய அபாய பிரதேசங்கள் உலகத்தின் பல இடங்களில் இருக்கின்றன,” என்று கூறினான் அவளை நோக்கி.

அவன் எண்ணங்களை அவள் நொடிப்பொழுதில் புரிந்துகொண்டாள். உள்ள அபாயத்தைத் தான் மிகைப்படுத்திக் கூறுவதாக அவன் நினைப்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி அறிந்துகொண்ட அவள் கேட்டாள், “இத்தகைய அபாயப் பிரதேசங்கள் பல இடங்களில் இருக்கலாம்; ஆனால் அங்குள்ள அரசாங்கங்கள் அந்தப் பிரதேசங்களை என்ன செய்யப் பார்க்கின்றன?” என்று.

அவள் எதற்காக அந்தக் கேள்வியைக் கேட்கிறாள் என்பது இளையபல்லவனுக்குப் புரியவில்லைதான். அவள் அனாவசியமாகப் பேச்சை வளர்த்துவதும் அவனுக்கு இஷ்டமில்லைதான். இருப்பினும் அவள் மனத்தைப் புண்படுத்த விரும்பாமல் பதில் சொன்னான்: “சீர்படுத்தப் பார்க்கின்றன. ஒழுக்கத்தையும் நீதியையும் நிலை நிறுத்தப் பார்க்கின்றன,” என்று.

அவள் கண்களில் வருத்தம் பெரிதும் விரிந்தது. பெரு மூச்சொன்றும் அவள் நாசியிலிருந்து கிளம்பியது. “விளக்கிச் சொல்லுங்கள்” என்று அவள் மீண்டும் கேட்டாள் அந்தத் துன்பப் பெருமூச்சுக்கிடையே.

“கொள்ளைக்காரர்கள் குழுமியுள்ள இடங்கள் எந்த நாட்டிலும் உண்டு. அந்த இடங்களை அரசாங்கங்கள் சீர் படுத்துகின்றன. கொள்ளையரை அடக்கவும் மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை அளிக்கவும் பிரயத்தனப் படுகின்றன,” என்றான் இளையபல்லவன்.

மஞ்சளழகியின் அடுத்த வார்த்தைகள் மிக நிதானமாக வெளிவந்தன. “இங்கு அதுதான் இல்லை,” என்றாள் அவள்.

“என்ன சொல்லுகிறீர்கள்!” என்று ஆச்சரியத்துடன் வினவினான் இளையபல்லவன்.

அவள் நேரடியாகப் பதில் சொல்லவில்லை . “ஸ்ரி விஜ யத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று ஒரு கேள்வியைத் தொடுத்தாள்.

“உலகத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள பேரரசுகளில் ஒன்று,” என்றான் இளையபல்லவன்.

“அதைத் தவிர?” என்று மறுபடியும் வினவினாள் அவள்.

“பல தீவுகளைக் கொண்டதால் பெரும் நிலப்பரப்பும் உடையது. “

“அதையும் தவிர?”

“அத்தனை தீவுகளிலும் தங்கம் கிடைப்பதால் சொர் ண பூமியென்றும் அழைக்கப்படுகிறது. “

“உண்மை வீரரே! முற்றிலும் உண்மை . உலகத்தின் சகல நாடுகளும், ஏன் மனித வர்க்கம் முழுவதுமே தங்கத்துக்காகத்தான் பிராணனை விடுகின்றன. அல்லவா. “
“ஆம். “

“அதனால்தான் தூரத்தில், மேல் திசையிலுள்ள யவனரும் அரபு நாட்டவருங்கூட இந்த நாட்டை நாடி வருகிறார்கள். “

“அப்படித்தான் கேள்வி. “

“கேள்வி மட்டுமல்ல. உண்மையும் அதுதான். இங்கு தங்கம் நிரம்பக் கிடைக்கிறது. நிரம்ப என்றால் எத்தனை தெரியுமா?”

“சொல்லுங்கள். “

“இங்கு தங்கம் எடுக்கக் கனி எடுத்துப் பதனம் பண்ணிப் பிரிக்க வேண்டாம். இந்த நாட்டு மண்ணிலேயே தங்கம் கலந்திருக்கிறது. மண்ணை நீரில் போட்டால் மண் கரைந்து தங்கம் பிரிந்துவிடும். “

இதைக் கேட்ட இளையபல்லவன் அசந்து போனான். “அப்படியா?” என்று கேட்கவும் செய்தான், ஆச்சரியம் குரலில் தொனிக்க.

அந்த ஆச்சரியத்தை லட்சியம் செய்யாமலே அவள் சொன்னாள், “வேண்டுமானால் நாளைக்கு நீங்களே சோதித்துப் பாருங்கள். சொர்ணபூமி கூட்டத்தின் முக்கிய நிலமான இந்த சொர்ணத் தீவின் மண் முழுவதும் தங்கமயம். ஆகவே இங்குள்ள யாவருமே தங்கத்துக்காகப் போராட வேண்டிய அவசியமில்லை. தங்கத்துக்காகப் போராட வேண்டிய அவசியமில்லை யென்றால் எதற்கும் போராட வேண்டிய அவசியமில்லை.

தங்கத்தைக் கொடுத்தால் உலத்தில் கிடைக்காத பொருள் ஏதுமில்லை. இருந்தும் பொன் கொழிக்கும் இந்த நாட்டில்தான் கிழக்குத் திசையிலுள்ள பெரும் கொள்ளைக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் இந்த அக்ஷய முனையிலும் இதற்குப் பின்னாலுள்ள எரிமலைத் தொடரின் காடுகளிலும், இருக்கிறார்கள். பொன் தேவையே இல்லாத, பொன் கொழிக்கும் இந்தப் பேரரசில் கொள்ளைக்காரர் ஏன் வளருகிறார்கள்? யோசித்துப் பாருங்கள். “

அவள் சொற்கள் இளையபல்லவனுக்குத் தீவிர சிந்தனையை அளித்தது. “ஆம். ஏன்?” என்று யோசித்தான். “இஷ்டப்பட்டால் ஸ்ரி விஜய சாம்ராஜ்யாதிபதி இந்த அக்ஷய முனையைத் தன் படை பலத்தால் ஒரே நாளில் சீர்படுத்தி விடலாம். ஏன் அப்படிச் செய்யவில்லை?’ என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டான். விடையேதும் கிடைக்காததால் அவளையே கேட்டான், “ஏன்?” என்று.

“இங்குள்ள கொள்ளைக்காரர்கள் நாட்டுக்குத் தேவையாயிருக்கிறார்கள்,” என்று நிதானமாகவும், ஓரளவு வெறுப்புடனும் பதில் சொன்னாள் மஞ்சளழகி.

“கொள்ளைக்காரர்கள் நாட்டுக்குத் தேவையா?” ஆச்சரியத்துடன் எழுந்தது இளைய பல்லவன் கேள்வி.

“இல்லையேல் ஸ்ரி விஜயத்தின் மன்னர் இந்த அக்ஷய முனையை ஏன் அழிக்கவில்லை?” என்று அவள் பதில் கேள்வி கேட்டாள்.

காரணம் புரியாமல் விழித்தான் இளையபல்லவன். மஞ்சளழகி மேலும் விவரித்தாள். “ஸ்ரி விஜயத்தின் மன்னர் இந்த அக்ஷயமுனையிலும் அடுத்துள்ள பகுதிகளிலும் உள்ள கொள்ளைக் கூட்டங்களை அழிக்காதது மட்டுமல்ல, வளர்க்கவும் வளர்க்கிறார். அவர்கள் கொள்ளையடித்துக் கொண்டு வரும் பொன்னாசையாலல்ல, பொருளாசையாலும் அல்ல,” என்ற அவள் சொற்களை இடையே மறித்த இளையபல்லவன், “என்ன பொன்னாசையாலல்லவா!” என்றான் வியப்புடன்.

“அல்ல. “

“வேறெந்த ஆசையால்?”

“மண்ணாசையால். “

“மண்ணாசையாலா!”

“ஆம். சொந்த நாட்டின் மீதுள்ள ஆசையால். “

“அதற்குக் கொள்ளையரை வளர்க்க வேண்டுமா?”

“இந்த நாட்டுக்கு வேறு வழியில்லை. நீங்கள் சோழ நாடுதானே?”

“ஆம். “

“உங்கள் நாடு இங்கிருந்து எத்தனை தூரம்?”

“தொலைதூரம். “

“அங்கிருந்து இங்கு வந்து உங்கள் மாமன்னர் இராஜேந்திர சோழதேவர் எத்தனை நகரங்களை அழித்தார், எத்தனை அரிய பொருள்களைக் கவர்ந்து சென்றார்?”

“படையெடுப்பின் விளைவு அது. “

“எப்படியாவதிருக்கட்டும். நடந்தது அதுதானே?”

“ஆம். “

“காரணம் என்ன தெரியுமா?”

“சொல்லுங்கள். “

மஞ்சளழகி ஆசனத்தை விட்டு எழுந்து சாளரத்தை நோக்கிச் சென்று வெளியே எட்டிப் பார்த்துவிட்டுத் திரும்பினாள். பிறகு பெருமூச்சு விட்டுச் சொன்னாள்: “ஸ்ரி விஜயத்துக்கென்று தனியான கடற்படை பலமில்லை. சோழ நாட்டிலிருந்து பெரும் கடற்படை கடாரத்தை அணுகுமுன்பு அதைத் தடை செய்ய இந்தச் சாம்ராஜ்யத்துக்குத் தேவையான மரக்கலங்கள் இல்லை. மாலுமிகள் இல்லை. இங்கிருந்தவர்கள் கொள்ளைக்காரர்கள்தான்.

ஆகவே ஸ்ரி விஜய மன்னர்கள் அவர்களை ஆதரிக்க முற்பட்டார்கள். ஸ்ரி விஜயத்தின் ஆதிகுடிகள் தைரியசாலிகளான மாலுமிகள். அவர்களில் இரண்டு இனத்தார் உண்டு . ஒரு சாதியார் *’பதக்’குகள் எனப்படுவர். இன்னொரு வகுப்பு சூளூக்கள். முற்பட்டவர் நிலத்தில் கொள்ளையடிக்க வல்லவர். பிற்பட்டவர் கடற் கொள்ளைக்காரர்கள். இன்றும் இவர்கள் சொர் ண பூமியின் காடுகளிலும், காடுகளை அடுத்த கடலோரங்களிலும் வசித்து வருகிறார்கள்… ”

“இந்த இரு இனத்தாரையும் பற்றி நான் கேள்விப் பட்டிருக்கிறேன்” என்றான் இளையபல்லவன்.

“பதக் சாதியார் மனிதர்களைச் சாப்பிடுவார்கள்,” என்றாள் மஞ்சளழகி குரல் சற்றே நடுங்க.

“மனிதர்களைச் சாப்பிடுவார்களா?”

“ஆம். தங்களிடம் சிறைப்படுபவர்களையும், வயதான உறவினர்களையும் தின்பார்கள்!”

“இன்னும் உலகில் இப்படிப்பட்டவர்கள் இருக் கிறார்களா?”

“இருக்கிறார்கள். அவர்கள் தலைவர்களில் இருவர் இன்றிரவு நிகழ்ச்சிக்கு வருவார்கள். “

“அவர்களை நான் அவசியம் சந்திக்க வேண்டும். “

“அவர்கள் மட்டுமல்ல. சூளூ கொள்ளைத் தலைவர் இருவரும் வருவார்கள். அவர்கள் மனிதரைத் தின்பதில்லை. அவர்களிடம் சிறைப்படுபவர்களுக்கு ஏற்படும் அவதி மரணத்தினும் கொடியது. “

“அப்படியா!”
“ஆம். இரவு நிகழ்ச்சிக்கு வரப் பிடிவாதம் பிடித்தால் அவர்களையும் பார்க்கலாம். அவர்களது அடிமைகளின் நிலையையும் பார்க்கலாம். கூட வரும் அடிமைகளில் பாதிப்பேர் நாக்குகள் துண்டிக்கப்பட்டிருக்கும். சிலர் ஒரு கண்ணிழந்திருப்பார்கள். சிலருக்குக் கை, கால், காது இவற்றில் ஏதாவது ஒன்றோ இரண்டோ இருக்காது. “

அந்த இடத்தின் அபாயத்தை, சாதிகளின் பயங்கரத்தை, அங்கு வரக்கூடியவர்களுக்கு ஏற்படக்கூடிய விளைவுகளை நன்றாக உணர்ந்து கொண்டான் இளையபல்லவன். ஸ்ரி விஜய சாம்ராஜ்யத்தின் அரசன் தனது நாட்டைப் பாதுகாக்கப் படைபலத்தை விருத்தி செய்யாமல் கொள்ளையரையும், பயங்கரமான ஆதிகுடிகளையும் கொண்டு காரியத்தை நடத்தி வருவதை நினைத்து, ‘இந்த நாகரிக உலகத்தில் இப்படியும் ஓர் அரசாங்கமா!’ என்று எண்ணினான். அதுவும் புத்தர்பிரான் கொள்கையையும் மதத்தையும் பிரதானமாக உடைய ஸ்ரி விஜயம் இப்படி மாறியது ஆச்சரியமாயிருந்தது அவனுக்கு.

உலகத்தின் பூசல்களை ஒழிக்க வந்த அந்த உத்தமரைச் சில விநாடிகள் தியானித்த இளையபல்லவன், வேறெதற்காக அல்லா விட்டாலும் புத்தர்பிரான் கொள்கைகள் செழிக்கவும் ஸ்ரி விஜயம் நாகரிக சாம்ராஜ்யமாக மாறவும், குணசாலியான குணவர்மன் அதன் அரியணையில் அமர வேண்டியது அவசியம் என்று தீர்மானித்தான். ‘குணவர்மன் அரியணைப் போரில் மனித நாகரிகமும் பேரரசின் கடலாதிக்கமும் வாணிபமும் சகலமுமே கலந்திருக்கிறது’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். குணவர்மன் அரியணை ஏறுவதானால் கலிங்கத்தின் கடலாதிக்கம் மட்டுமின்றி அக்ஷயமுனையின் கொள்ளையர் ஆதிக்கமும் அழிய வேண்டுமென்பதையும் நிர்ணயித்துக் கொண்ட அவன், கொள்ளையர் ஆதிக்கத்தை ஒழிப்பதில் தன்னை எதிர் நோக்கக்கூடிய ஆபத்துகளை எண்ணிப் பார்த்தான்.

ஆபத்து அதிகம் என்பதை நினைக்க நினைக்க அவற்றை எதிர்நோக்க வேண்டும் என்ற ஆவலே இணைந்தது பயமறியாத அவன் உள்ளத்தில். ஆகவே மஞ்சளழகியை நோக்கி, “தேவி, எப்படியும் இன்றைய இரவு நிகழ்ச்சிக்கு வரத்தான் போகிறேன். நீங்கள் சொன்ன அந்த நால்வரையும் சந்திக்கத் தீர்மானித்துவிட்டேன். இரவு நிகழ்ச்சி என்றீர்களே, அது என்ன அத்தனை பயங்கரமானதா? அதையும்தான் சொல்லுங்களேன்” என்று கேட்டான்.

அவள் சொன்னாள். வியப்பின் வசப்பட்ட அவன், “எங்கே மறுபடியும் சொல்லுங்கள்”, என்று கேட்டான். இரண்டாம் முறையும் சொன்னாள் அவள். அந்த அறையே அதிரும்படியாக நகைத்தான் இளையபல்லவன். “இன்பத்தில் துன்பம், இன்பத்தில் துன்பம்” என்று இருமுறை சொல்லி மீண்டும் நகைத்தான், இளையபல்லவன். நிதானத்தைக் குலைத்து இரைந்து நகைக்கும் அளவுக்கு அவனைத் தூண்டி விடக்கூடிய அத்தனை விசித்திரமான பதிலைச் சொன்னாள் மஞ்சளழகி.

Previous articleRead Kadal Pura Part 2 Ch10 |Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 2 Ch12 |Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here