Home Kadal Pura Read Kadal Pura Part 2 Ch26 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch26 |Sandilyan | TamilNovel.in

142
0
Read Kadal Pura Part 2 Ch26 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 2 Ch26 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch26 |Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

இரண்டாம் பாகம், அத்தியாயம் 26 : சதுரங்கக் காய்கள்.

Read Kadal Pura Part 2 Ch26 |Sandilyan | TamilNovel.in

கண்களில் கனவு படர்ந்துலாவ, கால்களை அலைகள் தடவிச் செல்ல, உணர்ச்சிகள் உள்ளத்தைக் குலுக்கி எடுக்க, தன் மதி சொன்ன கதையைக் கூறத் துவங்கிய மஞ்சளழகி, கதையை உடனே துவங்காமல் நீண்ட நேரம் கண் கொண்ட மட்டும் கடலின் நீர்ப் பரப்பையே கவனித்துக் கொண்டிருந்தாள். சற்று நேரம் கழித்து எதையோ நினைத்துக் கொண்டு மெல்லச் சிரிக்கவும் செய்தாள்.

அவள் அழகிய இடையை இழுத்து அணைத்த இடது கையை எடுக்காமலும், இன்பச் சுழலில் சிக்கியும் கிடந்த இளையபல்லவனும் அக்கம் பக்கத்தை மறந்து கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தானானாலும், அவள் சிரிப்பின் விளைவாகக் கனவிலிருந்து சற்றே விடுபட்டு, “ஏன் சிரிக்கிறாய் மஞ்சளழகி?” என்று வினவினான்.

மஞ்சளழகி நீட்டிய தன் கால்களைப் பாதி தூரம் மடித்துத் தன் கைகளைச் சேர்த்து முழந்தாள்களைக் கட்டிக் கொண்டு, “என் நிலையை நினைத்துச் சிரித்தேன். ” என்று கூறினாள். அவள் சொற்கள் உள்ளத்தே எழுந்து கொண்டிருந்த உணர்ச்சிகளையும், கனவையும் நன்றாகப் பிரதிபலிக்கவே அவள் மனம் பெரிதும் குழம்பியிருக்கிறது என்பதை மட்டும் இளையபல்லவன் புரிந்து கொண்டானானாலும் அந்தக் குழப்பத்துக்குக் காரணம் எதுவாயிருக்கும் என்பதை மட்டும் அவனால் புரிந்துகொள்ள முடிய வில்லையாகையால், “ஏன்?, உன் நிலைக்கு, என்ன குறைச்சல்?” என்று வினவினான்.

தன் வாழ்வைப் பற்றிய எண்ணங்களில் இதயத்தைப் பறிகொடுத்திருந்த மஞ்சளழகி தன் கையால் அவன் முகத்தைத் திருப்பி, “இதோ என் முகத்தைப் பாருங்கள்,” என்று கூறினாள். அவள் எழில் முகத்தை அவன் கண்கள் விழுங்கி விடுவனபோல் பார்த்தன. “நன்றாகப் பாருங்கள்” என்று மீண்டும் அவள் கூறினாள்.

எதற்காக அப்படி உற்றுப் பார்க்கச் சொல்கிறாள் என்பதை அறியாத இளையபல்லவன், “நன்றாகத்தான் பார்க்கிறேன் மஞ்சளழகி! எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாத அமுதம் உன் முகம்,” என்றான்.

அவள் இதழ்களில் மோகனப் புன்முறுவல் படர்ந்தது. “அழகை வர்ணிக்க உங்களைப் பார்க்கச் சொல்லவில்லை,” என்றாள் மஞ்சளழகி, அன்பும் உறுதியும் கலந்த குரலில்.

இதற்கு என்ன பதில் சொல்வது என்று புரியாத இளையபல்லவன் சொன்னான்: “வேண்டுமென்று வர்ணிக்கவில்லை. உள்ளத்தில் எழுந்ததை உதடுகள் உதிர்த்தன, அவ்வளவுதான். “

“ஆண் பிள்ளைகளின் பசப்பு வார்த்தை,” என்றாள் மஞ்சளழகி.

“ஆனால் கசப்பு வார்த்தையல்ல,” என்று சுட்டிக் காட்டினான் இளையபல்லவன்.

மஞ்சளழகி பெருமூச்சு விட்டாள். “இனிப்பு வார்த் தைக்கும் காலம் இருக்கிறது. “
“இது காலம் அல்லவா?” “அல்ல. ” “ஏன். “

“பேச்சில்லாமலே இன்பத்தின் பிடியில் இருக்கிறோம். “

“அப்படியானால்… ”

“முகத்தைப் பார்க்கச் சொன்ன காரணம் வேறு. “

“என்ன காரணம்?”

“நேற்றைக்கும் இன்றைக்குமுள்ள வேறுபாட்டைக் காணப் பார்க்கச் சொன்னேன். “

“என்ன வேறுபாடு?”

“உற்றுப் பாருங்கள் தெரியும். “

இளையபல்லவன் அவள் முகத்தை நன்றாக உற்று நோக்கினான். மெள்ள மெள்ள அவனுக்கு உண்மை புரியலாயிற்று. இருப்பினும் உள்ளம் அறிந்ததை உதடுகளின் மூலம் உதிர்க்கவில்லை அவன். அவளே சொல்லட்டும் என்ற நினைப்பில், “எனக்கு வேறுபாடு எதுவும் தெரியவில்லையே மஞ்சளழகி!” என்று கூறினான்.

“நேற்றுப் பார்த்த முகத்தையா இன்று பார்க்கிறீர்கள்” என்று அவள் கேட்டாள் மீண்டும்.

“ஆம். ” என்றான் அவன்.
“இல்லை, இல்லை, பொய் சொல்கிறீர்கள். முகம் மனத்தின் கண்ணாடி. என் மனம் பெரிதும் மாறியிருக்கிறது. முகம் மட்டும் எப்படி மாறாதிருக்க முடியும்? நேற்றுவரை நான் ஒரு சுதந்திரப் பறவை. யாருக்கும் அஞ்சாமல், உள்ளத்தில் களங்கமில்லாமல் இஷ்டப்படி இந்தக் கடற்கரையில் பறந்துகொண்டிருந்தேன். இன்று அந்த நிலை இல்லை. என் வாழ்வின் போக்கு மாறிவிட்டது. மனம் மாறி விட்டது. புத்திகூட சரியாயில்லை. ஒன்று தெரியுமா உங்களுக்கு?”

“என்ன மஞ்சளழகி?” “இன்றுவரை நான் தனிமையை நாடியதில்லை. “

“பின்?”

“கடலில் மற்றக் கொள்ளைக்காரருடன் நானும் நீந்துவேன். இந்த மறைவிடத்துக்கே நான் வந்ததில்லை. இன்று மறைவை நாடுகிறேன். தனிமையை நாடுகிறேன். உலகத்திலிருந்து, ஏன் உங்களிடம்கூட விலகச் சொல்லி ஏதோ ஒன்று என்னை எச்சரிக்கிறது. “

இளையபல்லவன் அவள் கைகளிலொன்றைத் தன் கைக்குள் சிறைப்படுத்திக் கொண்டு, “வீண் பிரமை மஞ்சளழகி! இல்லாததையெல்லாம் கற்பனை செய்யாதே,” என்றான்.

மஞ்சளழகி சொன்னாள்: “கற்பனை எது? உண்மை எது? நேற்று உண்மையாயிருக்கிறது இன்று கற்பனை யானது. இன்று உண்மையாகத் தோன்றுகிறது நாளை கற்பனையாகலாம். “
“என்ன புதிர் போடுகிறாய்?”

“புதிரல்ல, உண்மைதான். “

“எது உண்மை ?”

“நேற்று உண்மையென நினைத்தது இன்று கற்பனை யாவது,” என்ற மஞ்சளழகி, “விளங்கச் சொன்னாலொழிய உங்களுக்குப் புரியாது. நேற்றுவரை நான் இந்தக் கோட்டைத் தலைவர்தான் என் தந்தை என்று நினைத்திருந்தேன். அது இன்று கற்பனையாகிவிட்டது. நேற்று வரை என் சுதந்திரம் நிரந்தரம் என்று எண்ணியிருந்தேன். அதுவும் இன்று கற்பனையாகி விட்டது,” என்று சொன்னாள்.

இளையபல்லவன் அவள் கையைத் திடீரென வலிக்கும்படி இறுகப் பிடித்தான். அவள் திடீரென வெளியிட்ட அந்தச் செய்தியால் ஓரளவு திகைப்பும் எய்தினான். “என்ன என்ன! நீ பலவர்மன் புதல்வியில்லையா!”

கையை அவன் அப்படித் திடீரென நெறித்துப் பிடித்தது அவளுக்கு வலிக்கத்தான் செய்தது. ஆனால் மனவலியைவிட அந்த வலி ஒரு பிரமாதமல்லவென்று எண்ணிய மஞ்சளழகி, “இல்லை , நான் அவர் மகளல்ல. அது கனவாகி விட்டது. ” என்றாள்.

“பின் யார் மகள் நீ?” இளையபல்லவன் கேள்வி மீண்டும் எழுந்தது சந்றே பெருத்த குரலில்.

“எனக்குத் தெரியாது. “

“பலவர்மனுக்கு. “

“தெரியும்; சொல்ல மறுக்கிறார். “

“காரணம் இந்த நாட்டைப் பற்றியதாம். “

“இருக்காது, இருக்காது. “

“கண்டிப்பாய் இருக்கும். “

“எப்படித் தெரியும் உனக்கு?”

“என் மதி சொல்லுகிறது?”

“என்ன சொல்லுகிறது உன் மதி?”

“இரண்டு நாடுகளின் வரலாறுகளின் சரித்திரச் சதுரங்கத்தில் நகர்த்தப்படும் காய் நான் என்று சொல்கிறது. “

“சே! சே! எதையெதையோ கற்பனை செய்கிறாய்,” என்று அவளைச் சாந்தப்படுத்தப் பார்த்தான் இளையபல்லவன்.

“வீணாக என்னைச் சாந்தப்படுத்தப் பார்க்காதீர்கள். நான் நன்றாக யோசித்துவிட்டேன். விதி என்னை வைத்துச் சரித்திரச் சதுரங்கத்தில் விளையாடப் பார்க்கிறது. விதி மட்டுமல்ல. மனிதர்களும் விளையாடப் பார்க்கிறார்கள்,” என்று மஞ்சளழகி கூறிப் பெருமூச்சு விட்டாள்.

“மனிதர்களா!” என்று இளையபல்லவன் வினவினான் குழப்பத்துடன்.

“ஆம், மனிதர்களுந்தான். முதலில் என் வளர்ப்புத் தந்தை விளையாடப் பார்க்கிறார். “

“இருக்காது” என்றான் இளையபல்லவன்.

“இருக்கிறது. இல்லாவிட்டால் உங்களை மணக்கச் சொல்லி எனக்கு யோசனை சொல்வாரா?” என்றாள் அவள் வெறுப்புடன்.

எதிர்பாராத விதமாக அவள் வீசிவிட்ட அந்த வெடி அவன் இதயத்தில் பேரிடியென விழுந்தது. அடியோடு திகைத்துப் போய் ஏதும் பேசச் சக்தியற்று நீண்ட நேரம் மௌனம் சாதித்தான் இளையபல்லவன். மௌனத்தை மஞ்சளழகியே உடைத்தாள். “அதற்காக அஞ்ச வேண்டாம் இளையபல்லவரே! என்னை மணம் புரிந்து கொள்ளும்படி நான் உங்களை வற்புறுத்தவில்லை. என் வளர்ப்புத் தந்தை விஷயத்தில் நீங்கள் எச்சரிக்கையுடனிருக்க வேண்டும் என்பதற்காகவே உங்களுக்கு இதைச் சொல்கிறேன்.

உங்களுக்கு என்னை மணம் செய்வித்துக் கோட்டைப் பாதுகாப்பையும் உங்களிடம் ஒப்படைத்தால் ஸ்ரி விஜயத்துக்கு லாபம் என்று என் வளர்ப்புத் தந்தை நினைக்கிறார். அதுவும் நேற்றைய விழாவின் நிகழ்ச்சிக்குப் பின்பு சூளூ இனத்தின் பகை ஏற்படுமாகையால், அகூதாவின் உயதலைவர் உதவி ஸ்ரி விஜயத்தின் கடற்படைக்கு இன்றியமையாதது என்றும் தந்தை நினைக்கிறார். நீங்கள் ஒரு மரக்கலமானால் அந்த நங்கூரம் நானாகத்தான் இருக்க முடியும் என்பது தந்தையின் நினைப்பு. உங்களை இங்கேயே நிறுத்திக்கொள்ள அவர் என்னை உபயோகப்படுத்தப் பார்க்கிறார் இளையபல்லவரே! ஆனால் இங்கு நீங்கள் நிற்கமாட்டீர்கள்,” என்றாள் மஞ்சளழகி தீர்க்க சிந்தனையுடன்.

“ஏனப்படி நினைக்கிறாய் மஞ்சளழகி?” என்றான் இளையபல்லவன் உணர்ச்சி உள்ளத்தில் அலைமோத.

“என் மதி அப்படித்தான் சொல்கிறது. ‘திடீரென அவர் நேற்றுதான் வந்தார் மஞ்சளழகி! வந்த அன்றே உன்னைத் தொட்டார். இந்த அலையுந்தான் உன்னைத் தொடுகிறது, தொட்டுவிட்டுப் போய்விடுகிறது. அவரும் அலைபோலத்தான். மீண்டும் போய்விடுவார். நீ கடற்கரை; அவர் அலை. ஆனால் ஒரு வித்தியாசம் உண்டு. அலை மோதுவதில் கடற்கரையில் வடு ஏற்படுவதில்லை. உன் ‘மனத்தில் காயமும், காயத்தின் விளைவாக நிரந்தர வடுவும் ஏற்படும். வந்திருப்பவர் வீரர், மாதரைவிட நாட்டை அதிகமாக மதிப்பவர். உன்னைத் தொட அவர் இங்குவரவில்லை.

கலிங்கத்தின் கடலாதிக்கத்தை உடைக்கத் தளம் தேட வந்ததாக அவரே சொல்லவில்லையா? அதற்காகத்தான் வந்தார். வந்த இடத்தில் நீ கண்ணில்பட்டாய். அவ்வளவுதான். உன்னைத் தொட்டுச் சென்று விடுவார் மஞ்சளழகி, திரும்பவும் வரமாட்டார்’ என்று மதி சொல்கிறது. அது மட்டுமல்ல… ” என்று மஞ்சளழகி தன் உணர்ச்சி வேகத்தைச் சிறிதே தடை செய்தாள்.

“வேறு எது?” இளையபல்லவன் குரல் வறண்டு கிடந்தது.
“உங்கள் மனம் வேறு ஒருத்தியையும் தொட்டிருப்ப தாகவும் என் புத்தியில் பட்டிருக்கிறது,” என்றாள் மஞ்சளழகி துயரம் தோய்ந்த குரலில்.

“உனக்குப் புத்தி மாறாட்டம் ஏற்பட்டிருக்கிறது” என்றான் இளையபல்லவன் கோபத்துடன்.

“புத்தி மாறாட்டமாயிருந்தால் மிகவும் மகிழ்ச்சி யடைவேன். “

“ஏன்?”

“வேறொருத்தியை நீங்கள் விரும்பவில்லையென் பதற்கு அத்தாட்சியாகும். “

இளையபல்லவன் பதிலேதும் சொல்லாமல் தலை குனிந்து கொண்டான். மஞ்சளழகி சொல்வதில் உண்மை பெரிதும் நிரம்பிக் கிடந்ததை அவன் உணர்ந்தான். காஞ்சனாதேவியும் அந்தச்சமயத்தில் அவன் மனக்கண் முன்னே எழுந்து இடிஇடியென நகைத்தாள்.

“உங்களிடம் மனத்தைப் பறிகொடுத்து விட்டேன். இருப்பினும் உங்களை இங்கு நிறுத்திக்கொள்ள நான் இஷ்டப்படவில்லை. சீக்கிரம் இந்த அக்ஷயமுனையை விட்டுப் போய்விடுங்கள்,” என்று அவள் ரகசியமாகச் சொன்னாள்.

“ஏன்?” வியப்புடன் கேட்டான் இளையபல்லவன்.
“இல்லையேல் என்னை மணந்து கொள்ளும்படியா யிருக்கும்,” என்றாள் அவள்.

“மணந்து கொள்ளாவிட்டால்?” சிரித்துக் கொண்டே கேட்டான் அவன்.

“சிரிக்காதீர்கள். விளைவு பெரும் விபரீதம்,” என்ற அவள் கண்ணில் பயம் தாண்டவமாடியது.

“என்ன விபரீதம்?” என்று கேட்டான் இளையபல்லவன்.

அவள் சற்றே நடுங்கினாள். “நினைப்பதற்கே என் உடல் நடுங்குகிறது. சொல்ல நா எப்படி எழும்?” என்று கேட்டாள் அவள்.

“சொல்” என்று இளையபல்லவன் அழுத்திக் கேட்டான். “என்னைப் பார்ப்பதுபோல் அந்தப் படகுகளின் மறைவைக் கவனியுங்கள்,” என்றாள் அவள், படகுகள் இருந்த பகுதியில் கண்களை ஓட்டி.

படகுகளிருந்த இடத்தைத் திரும்பிப் பார்த்தான் இளையபல்லவன். அதுவரை படகுகளின் மறைவிலிருந்த ஓர் உருவம் எழுந்து விடுவிடுவென்று மணலில் நடந்து சென்றது.

“அது!” ஒரே சொல்தான் இளையபல்லவன் வாயிலிருந்து கிளம்பியது.

“ஆமாம்!” என்ற ஒற்றைச் சொல்லையே பதிலாகச் சொன்னாள் மஞ்சளழகி. பதிலில் பெரும் திகில் மண்டிக் கிடந்தது. திகிலுக்குக் காரணம் அவனுக்குப் புரியவில்லை . அவனை எதிர்நோக்கியிருந்த பெருத்த அபாயத்தை அவள் விளக்கினாள். “அப்படியொரு பழக்கம் இங்கு உண்டா ?” என்று இளையபல்லவன் வினவினான்.

“உண்டு,” என்றாள் அவள்.

அவள் மட்டுமல்ல, வரலாற்றுச் சதுரங்கத்தில் தானும் ஒரு காய் என்பதைச் சந்தேகமறப் புரிந்துகொண்டான் இளையபல்லவன்.

Previous articleRead Kadal Pura Part 2 Ch25 |Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 2 Ch27 |Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here