Home Kadal Pura Read Kadal Pura Part 2 Ch28 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch28 |Sandilyan | TamilNovel.in

126
0
Read Kadal Pura Part 2 Ch28 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 2 Ch28 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch28 |Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

இரண்டாம் பாகம், அத்தியாயம் 28 : விளங்கிய சம்பத்து.

Read Kadal Pura Part 2 Ch28 |Sandilyan | TamilNovel.in

பெண்ணைவிட்டு விலகிச் செல்’ என்று சாத்திரங்கள் எச்சரிக்கின்றன. கருங்கல்லின் கடினத்தன்மையையும், விஷத்தின் கொல்லும் தன்மையையும் எடுத்து இணைத்துத் தான் பெண்ணை பிரம்மன் சிருஷ்டித்தான் என வட மொழியிலுள்ள சாடு சுலோகம் ஒன்றும் கூறுகிறது. விஷத்தின் கொல்லும் தன்மை பெண் சிருஷ்டியில் வந்து விட்டதால்தான் அதை உண்டும் பரமசிவன் பிழைத்தார்.

கருங்கல்லின் கடினத் தன்மை போய்விட்டதால்தான் சேது கட்டிய காலத்தில் பாறைகள் சமுத்திர ஜலத்தின்மீது மிதந்தன என்று வேடிக்கைக் கதைகளும் அந்தக் கூற்றுக்கு உவமையாகக் காட்டப்படுகின்றன. விஷய சுகம் ஜன்ம விடுதலைக்கு விரோதி என்ற தத்துவமும் உறுதியாக ஏடுகளில் விளக்கப்படுகிறது. இத்தனையையும் இளைய பல்லவன் படித்துத்தான் இருந்தான். ஆனால் அந்தப் போதனைகளில் எதையும் நம்பத் தகுந்த நிலையில் அவன் அன்று இல்லை.

பக்கத்தில் அமர்ந்திருந்த பைங்கிளி எடுத்துக் காட்டிய ஆபத்தையும், அந்த ஆபத்தை விளைவிக்கவல்ல அக்ஷயமுனைப் பிராந்தியப் பழக்கத்தையும், அப்படியொரு பழக்கமிருந்தும் தன்னைத் தப்புவிப்பதிலேயே எண்ணங்களை ஓடவிட்ட அந்தப் பைங்கிளியின் தியாக புத்தியையும் நினைக்க நினைக்க, பெண்ணைப் பற்றி எச்சரித்த சாத்திரங்களும் தத்துவங்களும் அவனுக்கு வேப்பங்காயாக மாறின. பெண்களின் மகத்தான தியாகத்தை வேடிக்கைக்கு இகழ்வது கூடப் பெரும் பாவம் என்று அந்த நேரத்தில் இளையபல்லவன் திடமாக நினைத்தான். அவள் விவரணத்தில், விவரணம் தந்த வார்த்தைகளில், வார்த்தைகளை உதிர்த்த குரலில், அத்தனை கருணையும் தியாகமும் மண்டிக்கிடந்தன.

“இந்த நாட்டின் பழக்கம் பயங்கரம்” என்று அவள் குறிப்பிட்ட போது, ‘அப்படியென்ன பெரும் பயங்கரம் அதில் இருக்க முடியும்?’ என்று நினைத்த இளையபல்லவனுக்கு அவள் அதை விளக்க விளக்கத்தான் விஷயத்தின் எல்லை, தன்னை விழுங்கப் பலவர்மன் விதைத்த விபரீதத்தின் ஆழம், என்ன என்பது புரியலாயிற்று. தந்தை தன்னை மறைந்திருந்து கவனித்து, கொள்ளையரிடமும் சுட்டிக் காட்டிப் போய்விட்டதை அல்பமாக எண்ணிய இளையபல்லவனுக்குத் தந்தையின் இயற்கைக்கு மாறான நடத்தையை எடுத்துக் காட்டிய மஞ்சளழகி, “இந்த நாட்டில் அப்படியொரு பழக்கம் இல்லாவிட்டால் என் தந்தை ஒன்று உங்களைச் சிறை செய்வார். அல்லது என்னிடம் அவர் அனுமதியின்றித் திருமணமின்றி உறவு கொண்டாடியதற்காகக் கொன்றாவது விடுவார். இது தானே இயற்கை இளையபல்லவரே?” என்று கேட்டாள்.

இளையபல்லவன் சற்று யோசித்துவிட்டு, “ஆம் மஞ்சளழகி! அதுதான் இயற்கை!” என்று பதில் சொன்னான்.

“ஆனால் இயற்கைக்கு மாறாக ஏன் நடக்கிறார் என் தந்தை தெரியுமா?” என்று வினவினாள் மஞ்சளழகி.

“தெரியவில்லை மஞ்சளழகி,” என்றான் இளைய பல்லவன்.

“அப்படி நடப்பதில் அவருக்கு லாபமிருக்கிறது,” என்று மஞ்சளழகி சுட்டிக் காட்டினாள்.
“என்ன லாபம்?”

“உங்களை இங்கேயே இருத்திக்கொள்வது பெரும் லாபம் அவருக்கு. நீங்கள் போய்விட்டால் பெரும் நஷ்டம். இந்த நிலையும் உங்களால் விளைந்ததுதான். “

“என்னாலா! நான் என்ன செய்தேன்!” மஞ்சளழகி அத்தனை சோகத்திலும் இந்தப் பதிலைக் கேட்டதும் கலகலவென நகைத்தாள்.

இடையை முன்னைவிடப் பலமாக இழுத்தணைத்து அவள் முகவாய்க் கட்டையை வலது கையால் பிடித்துத் திருப்பிய இளையபல்லவன், “எதற்குச் சிரிக்கிறாய் மஞ்சளழகி!” என்று கேட்டான் சற்றுக் கடுமையுடன். அந்த கடுமை, குரலில் தெரிந்த அதட்டல் இரண்டையும் மஞ்சளழகி பெரிதும் விரும்பினாள். “ஆண்கள் கடிந்து கொண்டால்தான் அழகாயிருக்கிறது. எதற்கெடுத்தாலும் குழைந்து கொடுப்பவன் ஆண்பிள்ளையேயல்ல. அதட்டல், கெடுபிடி, இத்துடன் அன்பு இத்தனையும் கலந்து பரிமாறும் ஆண்மகனைத்தான் பெண்கள் விரும்புகிறார்கள். இதுவும் ஒரு வேடிக்கைதான். வேடிக்கை யென்ன? சிருஷ்டியின் ரகசியமும்தான். இது இல்லா விட்டால்…?” என்று சொல்லி மீண்டும் சிரித்தாள் அவள்.

“இப்பொழுது எதற்குச் சிரிக்கிறாய்?” என்று மறு படியும் கடுமையுடன் கேட்டான் இளையபல்லவன்.

“முதலில் உங்கள் நிலை குறித்துச் சிரித்தேன். இப்பொழுது என் நிலை குறித்துச் சிரித்தேன்” என்றாள் மஞ்சளழகி புன்சிரிப்பு உதடுகளில் தவழ.

அவள் கண்களை உற்றுத் தன் கண்களால் நோக்கி னான் இளையபல்லவன். அதன் அழகில் அவள் மனக்கடுமை பறந்தது. சித்தத்தில் மீண்டும் அனுதாபம் பிறந்தது. தனக்காக எதையும் தியாகம் செய்யத் தயாராயிருக்கும் அந்த ஏந்திழையின் ஏரார்ந்த கண்களை நோக்கிக் கொண்டே கேட்டான் இளையபல்லவன், “ஏன்? உன் நிலைக்கு என்ன மஞ்சளழகி?” என்று.

“சற்று முன் உங்கள் கேள்வியில் கடுமையிருந்தது. அதட்டிக் கேட்டீர்கள்,” என்று மெள்ளச் சொன்னாள் மஞ்சளழகி, அவன் கண்களுடன் தன் கண்களை உறவாட விட்டு ,

“ஆம்! சற்றுக் கடுமையாகத்தான் கேட்டுவிட்டேன்” என்றான் இளையபல்லவன் வருத்தத்துடன்.

இருவர் முகங்களும் வெகு அருகில் நேர் எதிரில் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டிருந்தன. சற்று நெருங்கி னாலும் முகங்கள் இணையும் நிலை. அந்த நிலையில் உணர்ச்சிகள் பொங்க குரல் குழைய மஞ்சளழகி சொன்னாள். மிக மெதுவாக, “வருத்தப்படுவதற்கு ஏதுமில்லை ?” என்று .

“ஏன்?” ரகசியத்துடன் எழுந்தது இளையபல்லவனின் கேள்வி. அவன் விட்ட பெருமூச்சு அவள் முகத்தில் அடித்தது. அவள் இதயம் படக் படக்கென்று அடித்துக் கொண்டது.

“அந்தக் கடுமை எனக்கு வேண்டியிருந்தது” என்றாள்.

“கடுமை வேண்டியிருந்ததா!”

“ஆம், வேண்டியிருந்தது!”

“ஏன் வேண்டியிருந்தது?”

“பெண்ணின் நிலை அது?”

“கடுமையை வேண்டும் நிலையா!”

“ஆம். காதலித்தவன் கடிந்து கொள்வதில்தான் பெண்களுக்கு இன்பம். ஆடவனிடம் அடங்கத்தான் பெண் விரும்புகிறாள். ஆளத் தெரியாதவனிடம் பூமி எப்படி நிலைப்பதில்லையோ அப்படியே அடக்கத் தெரியாதவனிடம் பெண்ணும் நிலைப்பதில்லை. “

“பெண்களுக்குச் சுதந்திரம்” என்று எதையோ முணு முணுத்தான் இளையபல்லவன்.

“வெறும் பேச்சு,” என்றாள் மஞ்சளழகி.

“ஏனப்படிச் சொல்லுகிறாய் மஞ்சளழகி?” என்று மெதுவாகக் கேட்டான் இளையபல்லவன்.

“சுதந்திரம் அவள் அழகைக் கெடுக்கிறது. அடக்கம் அவள் அழகைக் கூட்டுகிறது?” என்றாள் மஞ்சளழகி.
“விசித்திரமாயிருக்கிறது உன் வாதம்” என்றான் இளையபல்லவன்.

“சிருஷ்டியைப் புரிந்து கொள்ளாதவர்களுக்குத்தான் விசித்திரம். “

“நீ புரிந்து கொண்டுவிட்டாயா?”

“புரிந்து கொண்டுதான் சொல்லுகிறேன்,” என்ற மஞ்சளழகி அவன் கண்களைத் தன் கண்களால் தொட்டு விடுவதுபோல் பார்த்துக் கொண்டே ஏதோ புது ரகசியம் சொல்வது போல் பேசினாள். “இதோ பாருங்கள் இளைய பல்லவரே! என் வாதமல்ல இது. உண்மையைச் சொன்னேன். இயற்கையை நன்றாக உற்றுப் பாருங்கள். அடக்க முள்ள பெண்களுக்கு இருக்கும் அழகு அடக்கமில்லாத பெண்களுக்கு இருப்பதில்லை. தலைகுனிந்த பெண்ணிட மிருக்கும் அழகு .

தலைகுனியாமல் நிமிர்ந்து நடக்கும் தருணிகளிடம் கிடையாது. அச்சப்பட்டும், வெட்கப்பட்டும் கூனிக்குறுகும் குமரிகளிடமுள்ள அழகு, உணர்ச்சிகளைக் கைவிட்டு உலாவும் காரிகைகளிடம் கிடையாது. சுதந்திரத்தை ஆடவனிடம் பறிகொடுத்து அடங்கி அவனிடம் வாழும் பெண்ணின் அழகு தெய்வீகமானது. அந்த அடக்கத்தில் சுதந்திரத்தை இழப்பதில் மகத்தான சக்தி பெண்களுக்கு ஏற்படுகிறது… ” என்று ஏதோ பெரும் தத்துவத்தைச் சொல்வதுபோல் மிக ரகசியமாகச் சொற்களை உதிர்த்த மஞ்சளழகி சிறிது தன் விளக்கத்தை நிறுத்தினாள்.

நிறுத்திய அதே நேரத்தில் பெரும் இன்ப வலை அந்த இருவரையும் சூழ்ந்து கொண்டது. “சுதந்திரத்தை இழப்பதில் சக்தி ஏற்படுகிறதா?” என்று மெள்ள வினவினான் அவன்.

“ஆம்!”

“சுதந்திரமே சக்தியல்லவா?”

“நாட்டுக்கு அது சக்தி; ஆடவர்களுக்கும் அதுதான் சக்தி. “

“பெண்களுக்கு?”

“சுதந்திரத்தில் சக்தியில்லை. சுதந்திரத்துடன் உலாவும் பெண்களை ஆடவர் வேடிக்கை பார்ப்பார்கள். அழகை ரசிப்பார்கள். அடையப் பிரியப்படவும் செய்வார்கள். ஆனால் மதிக்கமாட்டார்கள். “

“சுதந்திரமிழந்தால்?”

“சக்தி அதிகம். “

“எப்படி?”

“அகூதாவுடன் உங்களுக்கு நெருங்கிய பழக்கந் தானே?”

“ஆமாம். “

“சீனத்துக்குப் போயிருக்கிறீர்களா?”

“போயிருக்கிறேன். “

“அங்கு வாணம் விட மருந்து தயார் செய்கிறார்கள். “

“தெரியும் எனக்கு. “

“அந்த மருந்து சுதந்திரமாக உதிர்க்கப்படும் போது தீப்பட்டால் பரவலாகத்தான் எரியும். “

“ஆமாம். “

“அதைச் சீனத்துக் களிமண் செப்பில் அடைத்து வைக்கிறார்கள். அந்தச் செப்பில் தீயை வைத்துப்பாருங்கள். சீறி வெளிவந்து பெரும் தீப்பொறிகளைப் பயங்கரமாகக்கக்கும். வீட்டிலடைக்கப்படும் பெண்ணும் அப்படித்தான். அடைத்தவுடன் அவள் சக்தி அபரிமிதமாகிறது. சுதந்திரமிழந்த மருந்து போல்தான் அவள் சக்தி. அந்தச் சக்திக்கு ஆடவன் அஞ்சுகிறான். “

அடக்கத்தின் சக்தியை விவரித்த மஞ்சளழகி முகத்தில் அந்தத் தருணத்தில் பெரும் பொலிவு ஏற்பட்டதை இளையபல்லவன் கவனித்தான். இத்தகைய அழகும், ஆசையும் பெண்களுக்கு இருக்கும்வரை உலகத்துக்குக் குறைவில்லையென்று நினைத்த இளையபல்லவனை நோக்கி மேலும் சொன்னாள் மஞ்சளழகி: “அதனால்தான் உங்கள் கடுமையை நான் ரசித்தேன். உங்கள் அதட்டலை நான் விரும்பினேன். ஓர் ஆடவன் ஒரு பெண்ணை அதட்டுவதில் அர்த்தமிருக்கிறது. “
“என்ன அர்த்தம்?” ஏதும் புரியாமல் வினவினான் இளையபல்லவன்.

“யார் அதட்ட முடியும்?” என்று பதிலுக்குக் கேட்டாள் மஞ்சளழகி.

“நீதான் சொல். “

“சொந்தக்காரன் தான் அதட்ட முடியும். “

“ஓகோ !”

“ஆம். சொந்தமிருப்பவன் அதட்டுகிறான். தான் அவனுக்குச் சொந்தம் என்பதை உணர்த்தும் சொற்களின் கடுமை பெண்களுக்குத் தரும் இன்பம் சொல்லி முடியாதது இளையபல்லவரே!” என்ற மஞ்சளழகி புன்னகை பூத்தாள். அத்துடன் வேறொரு கேள்வியும் கேட்டாள், “சுதந்திரத்தை இழப்பதில் எத்தனை இன்பமிருக்கிறது இளையபல்லவரே! இப்பொழுது புரிகிறதா என் நிலை உங்களுக்கு?” என்று.

அவள் நிலை படைத்தலைவனுக்குச் சந்தேகமறப் புரிந்துவிட்டது. தன் அதட்டலையும், கடுமையையும் தான் ஆள்வதையும் அவள் பெரிதும் விரும்புகிறாளென்பதை இளையபல்லவன் மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டான். அப்படி ஏற்பட்ட பராதீனமான நிலையை நினைத்தே அவள் ஆரம்பத்தில் நகைத்தாள் என்பதும் புரிந்தது அந்த வாலிபனுக்கு. அவள் நிலையை அறிந்த அவன், அவள் உணர்ச்சிகளின் பெருக்கைப் புரிந்துகொண்ட அவன், அவள் செய்ய உத்தேசிக்கும் தியாகத்தின் எல்லையைப் புரிந்துகொண்ட அவன், என்ன செய்வதென்று தெரியாமல் திணறினான்.

முகத்துக்கருகில் முகமும், கண்களுக்கருகில் கண் களும் உதடுகளை எதிர்நோக்கி உதடுகளும் இருந்த அந்த நிலையில் எதிரேயிருந்த புஷ்பங்களைப் பறித்துக் கொள்ள உணர்ச்சி தூண்டியது. அப்படிப் பறிக்க இஷ்டப்பட்டால் தடையில்லாதது மட்டுமல்ல, அந்தப் புஷ்பம் அதை எதிர்பார்க்கவும் செய்கிறது என்பதையும் புத்தி குறிப்பிட்டது. “கிடைக்கிறது என்பதற்காக எதையும் பறித்துக் கொள்வது கயவன் செயல். அதில் நீ ஈடுபடாதே! இவளுடன் நீ இங்கேயே வாழ முடியுமானால் இஷ்டத்துக்கு இணங்கு. இல்லையேல் நாணயமாக விலகிவிடு. எதற்கும் அவள் இந்த நாட்டுப் பழக்கத்தைப் பற்றிக் குறிப்பிட்டாளே அது என்னவென்றும் கேட்டுப் பார்,’ என்று பண்பட்ட அவன் இதயம் மட்டும் வலியுறுத்தியது.

ஆகவே உணர்ச்சிகள் உரிமை கொண்டாடத் தூண்டிய அந்த நிலையிலும் அவன் மெள்ளத் தன்னைத்திடப்படுத்திக் கொண்டு கேட்டான்:“ஆம் மஞ்சளழகி, உன் நிலை அப்படி, என் நிலையையும் நாட்டுப் பழக்கத்தையும் பற்றி ஏதோ குறிப்பிட்டாயே அது என்ன?”

காதல் விரிந்து கிடந்த அந்த கமலச் செவ்வரிக் கண்களில் அனுதாபத்தின் சாயை மெல்லப் படர்ந்து சென்றது ஒரு விநாடி. அந்த விநாடியில் அவள் உதடுகளிலிருந்தும் சோகம் ததும்பும் சொற்கள் உதிர்ந்தன. “அக்ஷய முனை சொர்ணபூமியின் ஒரு பகுதிதான் என்றாலும் இங்குள்ள பழக்கங்கள் சில, நாட்டின் இந்தப் பகுதிக்குத் தனிப் பட்டவை… ” என்று தயக்கத்துடன் சொன்னாள்.

அவள் தயக்கத்துக்குக் காரணம் புரியாத இளைய பல்லவன், “என்ன பழக்கங்கள்?” என்று வினவினான்.

“திருமணம் சம்பந்தமான சில பழக்கங்கள். ” “என்ன பழக்கங்கள் அவை?”

“சொர்ணபூமியின் மற்ற பகுதிகளில் இல்லாத ஒரு முக்கிய கண்டிப்பு இங்குள்ள பூர்வக் குடிகளிடம் உண்டு. “

“விளக்கமாகச் சொல் மஞ்சளழகி. “

“பல ஆடவர்கள் மத்தியில் பெண்கள் அலைந்து திரிவதைப் பதக் சாதியார் பொருட்படுத்துவதில்லை. ஆனால் ரகசியத்தில் ஆடவனும் பெண்ணும் சந்தித்து விட்டால்… ” மேற்கொண்டு சொல்ல அஞ்சினாள் மஞ்சளழகி.

“சந்தித்துவிட்டால்” என்று இளையபல்லவன் கேட்டான்.

மஞ்சளழகியின் கண்களில் சோகம் மீண்டும் படர்ந்தது. வார்த்தைகள் மிக மெதுவுடன் வெளிவந்தன. குரலிலும் நடுக்கம் தெரிந்தது. “ஒன்று மணம் அல்லது மரணம்,” என்று தயங்கித் தயங்கிச் சொன்னாள் அவள்.

இளையபல்லவன் கண்களில் ஆழ்ந்த யோசனை தெரிந்தது. ‘மஞ்சளழகியை மணம் செய்துகொள்ள வேண்டும். இவ்வளவுதானே! இல்லாவிட்டால் கொன்று விடுவார்கள். பூ இதுதானா!’ என்று எண்ணிய இளையபல்லவன் கண்கள் முகத்தை நன்றாக ஆராய்ந்தன. மஞ்சள் பாய்ந்த அந்தத் தங்க முகத்தில் கருநீலக் கண்கள் இரண்டு சுழன்றன. மாணிக்க அட்டிகைச் சரம் போலப் பட்டையிட்ட உதடுகளின் சேர்க்கை பெரிதும் சிவந்து அசைந்தது. வெட்கம் தாடைக்கு இட்ட மருதாணிச் சிவப்பை அலட்சியம் செய்த மாணிக்க அதரங்கள் மெல்லத் துடித்தன. அவள் உடலும் துடித்தது. உணர்ச்சிகள் துடித்தன.

‘இந்தச் செல்வத்தைப் பெற்றுக்கொள்வதில் ஆபத்து என்ன இருக்க முடியும்? இதுவே பெரும் சம்பத்து,’ என உள்ளம் உந்த, உணர்ச்சிகள் துடிதுடிக்க, அவனும் அவளை நோக்கினான். அவள் முகம் விகசித்துக் கிடந்தது. உதடுகள் மொட்டுப் போல் கூம்பி நின்றன. கூம்பிய மொட்டு நகரவும் செய்தது. ஒரே விநாடி! இதழ்கள் இணைந்திருக்கும். ஆனால் ஒரே விநாடியில் மனித எண்ணங்கள்; மனித வாழ்வின் மாற்றங்கள் எத்தனை, எத்தனை!

Previous articleRead Kadal Pura Part 2 Ch27 |Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 2 Ch29 |Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here