Home Kadal Pura Read Kadal Pura Part 2 Ch30 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch30 |Sandilyan | TamilNovel.in

117
0
Read Kadal Pura Part 2 Ch30 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 2 Ch30 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch30 |Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

இரண்டாம் பாகம், அத்தியாயம் 30 : வினை விதைத்தலும் வினையறுத்தலும்.

Read Kadal Pura Part 2 Ch30 |Sandilyan | TamilNovel.in

மஞ்சளழகியின் மயக்கும் எழிலில் மனத்தைப் பறிகொடுத்துக் காலை நேரத்தில் கடலோரத்தில் தான் கழித்த சில நாழிகைகளை அக்ஷயமுனைக் கோட்டையின் தலைவனான பலவர்மன் பெரிதும் பயன்படுத்திக் கொண்டு விட்டதையும், அகூதாவிடம் அவன் கொண்டிருந்த பயமெனும் கவசமும் இனித் தன்னைக் காப்பாற்றா தென்பதையும் மஞ்சளழகியின் சொற்களிலிருந்து புரிந்து கொண்ட இளையபல்லவன், திடீரென ஒரு முடிவுக்கு வந்து மஞ்சளழகியைக் கையைப் பிடித்துத் தூக்கி, “வா மஞ்சளழகி,” என்றழைத்துக் கொண்டு கொள்ளையர் கூடி நின்ற இடத்தை நோக்கி நடக்கத் துவங்கினான்.

அப்படி நடக்கத் துவங்கிய படைத்தலைவன் முகத்தில் உறுதி பெரிதும் மண்டிக் கிடந்ததைக் கண்ட மஞ்சளழகி, தான் உணர்த்திய பேராபத்தைப் பற்றிக் கேட்டும் அவன் சிறிதும் மலைக்காமல் திடீரென ஏதோ முடிவுக்கு வந்துவிட்டதையும் அந்த முடிவைத் தொடர்ந்து கொள்ளையர் பார்க்கும் படியாகத் தன்னைக் கையைப் பிடித்துத் தூக்கியதன்றி, தன் கையுடன் அவன் கையைச் சேர்த்துக் கோத்துக் கொண்டே நடக்க முற்பட்டு விட்டதையும் பார்த்ததும் எதற்காக இவர் இந்தச் சாகசத்தில் இறங்குகிறார்?’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டு விடை காணாமல் தவித்தாள்.

தந்தை எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்குத் தானும், இளையபல்லவனும் நெருங்கி இழைந்த நிலையே போது மானதாயிருக்க, தன்னைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு கொள்ளையர் முன்பு சென்று மேலும் தங்களிருவர் உறவுக்கும் அத்தாட்சி கூட்ட படைத்தவைன் ஏன் முயலுகிறான் என்பதை எண்ணிப் பார்த்த மஞ்சளழகிக்கு அதற்குக் காரணம் விளங்கவில்லையானாலும் அவன் இணையற்ற நெஞ்சுரம் படைத்தவன் என்பது மட்டும் சந்தேகமற விளங்கியது.

வெய்யில் அப்பொழுது சிறிது ஏறிவிட்டதால் அஷயமுனைக் கடற்கரைப் பழுப்பு மணல் சிறிதே சுடத் தொடங்கினாலும், அதைவிட இளையபல்லவன் ஆபத்தை எண்ணிய மனம் அவளைச் சுட முற்பட்ட வெப்பத்தின் விளைவாகக் காலின் கடுமையை அவள் லட்சியம் செய்யா மலே அவன் பக்கத்தில் நடந்தாள். அத்தனை ஆபத்து முன்னிருந்த போதும் அவன் நடையிலிருந்த திடத்தையும் அலட்சியத்தையும் அவள் பெரிதும் வியந்தாள். இப்பேர்ப்பட்ட ஒரு திட புருஷனை எப்படியும் காப்பாற்றிவிட வேண்டும். அதனால் என் வாழ்வு நாசமாகிவிட்டாலும் பாதகமில்லை,’ என்று தனக்குள் எண்ணமிட்ட அவள், இருவரும் பத்தடி தூரம் நடந்ததும் மீண்டும் பேச்சைத் துவங்கி, “என் யோசனையையும் கொஞ்சம் கேளுங்கள்,” என்று கெஞ்சும் குரலில் சொன்னாள்.

உறுதி நிரம்பி நின்ற படைத்தலைவனின் கண்கள் அவளை நோக்கித் திரும்பின. “கொஞ்சமென்ன, உன் யோசனை எதுவாயிருந்தாலும் முழுதும் கேட்கிறேன்” என்ற சொற்கள் அவன் உதடுகளில் இருந்து ஏளனத்துடன் உதிர்ந்தன.

மஞ்சளழகியின் காதலும் பரிதாபமும் கலந்த கண்கள் அவன் கண்களைச் சந்தித்தன. “கேலிக்கு இது சமயமல்ல படைத்தலைவரே,” என்று சற்றே கடிந்துகொண்ட மஞ்சளழகியின் சொற்களை இடையே மறித்த இளையபல்லவன் தன் வீர முகத்தில் உறுதியுடன் சிறிது அலட் சியமும் மகிழ்ச்சியும் கலந்துலாவ அவை குரலிலும் தாண்டவமாடச் சொன்னான். “படைத்தலைவரே என்ற கூட்டுச்சொல் தேவையில்லை மஞ்சளழகி. தலைவரே என்றழைத்தாலே போதும்,” என்று கூறி, தன் கையுடன் கலந்து நின்ற அவள் கை விரல்களைச் சற்று நெறித்துச் சிரிக்கவும் செய்தான்.

பெரும் ஆபத்து சூழ்ந்த சமயத்திலும் சிரிக்கவல்ல அந்த ஆண் மகனை ஆச்சரியத்துடன் பார்த்தாள் மஞ்சளழகி. “ஏன்? படைத்தலைவர் என்ற பெயர் பிடிக்கவில்லையா உங்களுக்கு?” என்று சற்று கோபத்துடன் வினவவும் செய்தாள்.

“பிடிக்கிறது. ஆனால் இந்தச் சமயத்துக்குப் பொருத்த மில்லை. ” என்றான் இளையபல்லவன்.

“ஏன் பொருத்தமில்லை?” காரணமில்லாத சீற்றத்துடன் எழுந்தது அவள் கேள்வி.

“இப்பொழுது தலைமை தாங்கி நடத்தப் படை எதுவுமில்லை,” என்று குறிப்பிட்டான் இளையபல்லவன்.

“தலைவர் என்ற சொல் மட்டும் பொருந்தும் போலிருக்கிறது. “

“உம். பொருந்தும். “

“எதற்குத் தலைவர் நீங்கள்?”

“நாடகத்துக்கு. “

“நாடகமா?” சரேலென நின்று திரும்பி நோக்கினாள் மஞ்சளழகி.

“ஆம். நாடகம்தான், நில்லாதே, வா,” என்று அவளை இழுத்துக் கொண்டு நடந்தான் இளையபல்லவன்.

“என்ன நாடகம்?” என்று கேட்டாள் மஞ்சளழகி கால்கள் பின்ன, தட்டுத் தடுமாறி நடந்துகொண்டே.

“கடற்கரை நாடகம். அதில் நான் தலைவன். நீ தலைவி. அத்தகைய நாடகப் பாத்திரங்கள் நாம். நடத்திக் கொடுத்தவர் உன் தந்தை, ரசிகர்கள் அதோ,” என்று கையால் தூரத்தே நின்ற கொள்ளையரைச் சுட்டிக் காட்டிய அவன் சற்றுப் பெரிதாகவே நகைத்து அவள் கையை விட்டுத் தன் கையால் அவள் இடையை வளைத்துக் கொண்டான்.

அவன் போக்கு அவளுக்கு மெள்ள மெள்ளப் புரிந்ததால் அவள் மீண்டும் வியப்புக்கும் கவலைக்கும் உள்ளானாள். கடற்கரை நாடகத்தைத் தன் தந்தை மட்டும் நடத்தவில்லையென்றும் இளையபல்லவனும் ஏதோ ஒரு பதில் நாடகத்தைத் துவங்கியிருக்கிறானென்பதையும் அவள் உணர்ந்துகொண்டாள். அந்த நாடகத்தை முன்னிட்டே கையைப் பிடித்திருந்த கை இடையில் தவழ்ந்து விட்டதென்பதையும் புரிந்துகொண்டாள் மஞ்சளழகி.

தந்தை வகுத்த படுகுழியில் விழுவதற்கோ அல்லது அதிலிருந்து தப்புவதற்கோ அவன் பதில் திட்ட மொன்றை உள்ளூர சிருஷ்டித்து விட்டானென்பதும் அவனுடைய உறுதியான நடையிலிருந்தும் கேலிப் பேச்சிலிருந்தும் அவளுக்குத் தெள்ளெனத் தெரிந்தது. ஆகவே அடுத்தபடி என்ன செய்யப் போகிறானென்பதை அறியாமலே சில விநாடிகள் மௌனமாக நடந்த அவள் மறுபடியும், “என் பேச்சைக் கேளுங்கள். இந்த அக்ஷய முனையிலிருந்து சென்றுவிடுங்கள்,” என்று சொன்னாள் குரலில் கவலை பாய.

“ஏன்? என்னைப் பிடிக்கவில்லையா உனக்கு?” என்று சொன்னான் இளையபல்லவன்.

“என்னைக் கேட்க வேண்டாம் அதற்கு,” என்றாள் மஞ்சளழகி மனம் கரைய, உணர்ச்சிகள் பொங்கி வழிய.

“பின் யாரைக் கேட்பது?”

“உங்கள் மனத்தைக் கேளுங்கள். “

இதைக் கேட்டதும் இளையபல்லவன் முகத்தில் பரவிக் கிடந்த கேலி நகை மறைந்து, கவலை அதிலிருந்த இடத்தை ஆட்கொண்டது. அவன் மனமென்ன, உணர்ச்சிகள் அனைத்துமே அவள் சொற்களுக்குப் பதில் கூறின. ஒரே நாளில் வாழ்வு முழுவதையுமே தன் பாதங்களில் அர்ப்பணித்துவிட்ட மஞ்சளழகியின் இதய தாபத்தையும், தியாக வேகத்தையும் பற்றிய உண்மைகளை உணர்ச்சிகள் அவன் சிந்தையில் வாரித் தெளித்தன. அவற்றின் வேகத்துக்கும் வேகத்தின் விளைவாக மின்னல் போல் சித்தத்தில் வீசிய கேள்விகளுக்கும் செவி சாய்த்த இளையபல்லவன் சிறிது ஆயாசப் பெருமூச்சு விட்டான்.

‘இந்த அழகி செய்த இத்தனை தியாகத்துக்குப் பிறகும் அவளை என்ன கேள்வி கேட்கிறாய்?’ என்று அவன் மனம்கூட அவனைச் சுரீரெனச் சுட்டது. அதன் விளைவாக அவன் குரலின் தொனியை மாற்றிக்கொண்டு சொன்னான்: “மஞ்சளழகி! அக்ஷயமுனையையும் என்னையும் விட்டுப் போகச் சொல்லும் ஒரு யோசனையை மட்டும் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். வேறு எதை வேண்டுமானாலும் சொல், கேட்கிறேன். நம்பிய பெண்ணைக் கைவிட்டுச் சென்றான் அந்தப் பாதகன் என்று அதோ உள்ள அந்தக் கொள்ளையர் கூற நான் விடமாட்டேன். நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். “

“என்ன முடிவு?” அச்சத்துடன் வினவினாள் மஞ்சளழகி.

“மங்களமான முடிவு. வா சீக்கிரம்,” என்று இடையை அணைத்த கை இறுகத் தழுவிய வண்ணமே அவளை இழுத்துக்கொண்டு கொள்ளையர் குழுமி நின்ற இடத்துக்கு வந்து சேர்ந்த இளையபல்லவன், கொள்ளையர் கூட்டத்தை ஒருமுறை தன் கண்களால் சற்று வளைத்து அளவெடுத் தான்.

கொள்ளையர் முகங்களில் மகிழ்ச்சியின் அறிகுறி சிறிதும் தெரியவில்லை . எல்லா முகங்களிலும் கடுமையும் கவலையும் தாண்டவமாடின. அவர்கள் துணைவிகளின் முகங்களில் பயத்தின் சாயை பெரிதும் படர்ந்து நின்றது. முதல் நடனத்தின் முடிவில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளாலும் வில்வலன் கூறிச் சென்ற சொற்களாலும் அச்சத்தின் வசப்பட்டிருந்த அந்தக் கொள்ளையர் கூட்டம், அந்த அச்சத்திலிருந்து அப்பொழுதும் விடுபடவில்லையென்பதைப் புரிந்து கொண்ட இளையபல்லவன் அவர்கள் முன்பு மிகவும் கம்பீரத்துடன் நிமிர்ந்து நின்றான். மஞ்சளழகியின் இடையிலிருந்த கையை இறுக்கி, அவள் உடலைத் தன் பக்கத்தில் சேர்த்து நன்றாக அணைத்தும் கொண்டான். ‘இப்பொழுது என்ன செய்வதாக உத்தேசம்?’ என்று கொள்ளையரை நோக்கி வினவுவது போலிருந்தது அவன் செய்கை.

அவன் செய்கையையும் துணிவையும் கண்டு கொள் ளையருக்கு என்ன செய்வதென்று புரியாததால் அவர் களனைவரும் பிரமித்துப் பேசவும் சக்தியற்று நிற்கவே செய்தார்கள். வெட்கத்தை அதிகமாக அறியாத கொள்ளை மாதர்கூட இளையபல்லவன் வெட்கம் கெட்ட முறையில் பகிரங்கமாக மஞ்சளழகியின் இடையைத் தழுவி நின்றதைக் காண இஷ்டப்படாதவர்கள் போல ஏளனக் குறியை முகத்தில் காட்டினார்கள். சிலர் இதழ்களை மடித்துத் தங்கள் வெறுப்பைப் பகிரங்கமாகக் காட்டவும் செய்தார்கள். இருந்தும் அந்தக் கூட்டத்தில் ஒருவர் கூடப் பேச முற்படாது போகவே இளையபல்லவனே பேசத் தொடங்கி, “இந்த வரவேற்புக்கு என்ன காரணம்?” என்று வினவினான்.

முன் வரிசையில் நின்ற கொள்ளையர், ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டனர். பின்னாலிருந்தவர்கள் ஏதோ முணுமுணுத்தார்கள். “ஏன் நான் கேட்பது உங்கள் காதில் விழவில்லையா?” என்று சற்றுக் கடுமையுடன் கேட்டான் இளையபல்லவன் இரண்டாம் முறை.

கொள்ளையர் முன் வரிசையிலிருந்த யவனன் ஒருவன் மட்டும் சற்றுத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “இது முறையல்ல,” என்று மஞ்சளழகியிருந்த நிலையைத் தன் கையால் சுட்டிக்காட்டினான்.

“ஆம், ஆம்,” என்று பல குரல்கள் பின்னணியிலிருந்து ஆமோதித்தன.

“எது முறையல்ல?” என்று மீண்டும் கேட்டான் இளையபல்லவன்.

“இவள் மணமாகாதவள்,” என்று மற்றொரு கொள் ளைக்காரன் ஆரம்பித்தான்.

“அதைப்பற்றி உங்களுக்கென்ன கவலை?” இளைய பல்லவன் குரலில் சீற்றம் மிகுந்திருந்தது.

“கவலையிருக்கிறது. அக்ஷயமுனையில் பழக்கம் ஒன்று உண்டு” என்றான் இன்னொரு கொள்ளைக்காரன்.

இளையபல்லவன் இதழ்களில் இகழ்ச்சி நகை மண்டியது. “மணம் செய்துகொள்ளப் போகும் பெண்ணுடன் தனித்துச் சில விநாடிகள் பேசக்கூடாது என்பது தான் அந்தப் பழக்கமா?” என்று பெரும் வெடியொன்றை எடுத்து அவர்களிடையே வீசினான் இளையபல்லவன்.

அந்தப் பதில் கொள்ளையர்களைச் சில விநாடிகள் ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது. பிரமை தீர்ந்ததும் கூட்டத்தி லொருவன், “அப்படியானால் நீங்கள் இவளை…இவளை… ” என்று குழறினான்.
“திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். ஏன் என்னையும் உங்களைப் போல் நெறியற்ற கொள்ளைக்காரன் என்று நினைத்தீர்களா? உங்கள் துணைவிகளில் எவ்வளவு பேர் மனைவிகள்? எத்தனை பேர் ஆசை நாயகிகள்?” என்று சீறிய இளையபல்லவன், “நெறியற்ற உங்கள் சாட்சியம்தான் பலவர்மனுக்குத் தேவை போலிருக்கிறது? பூர்வகுடிகளிடம் கிலிபிடித்த பேடிகளென்று உங்களை நேற்றே புரிந்துகொண்டேன். காதலரை வெறிக்க வெறிக்க வெட்கங்கெட்டுப் பார்த்துப் பலவர்மனுக்குச் சாட்சி சொல்லக் கூட்டம் கூடும் கயவர்கள் என்பதையும் இன்று அறிந்துகொண்டேன்.

சென்று சொல்லுங்கள் பலவர்மனிடம், இந்த மஞ்சளழகியை நான் மணக்கத்தயார் என்று. இன்று பகலில் கோட்டை மாளிகையில் சந்திப்பதாகச் சொல்லுங்கள் அந்த சூழ்ச்சிக்காரனிடம்,” என்று மிக வேகமாகக் கூறிவிட்டு, “மஞ்சளழகி! நீ மாளிகைக்குச் செல், சீக்கிரம் வருகிறேன்,” என்று அவளை நோக்கியும் சொல்லி விடை பெற்றுக்கொண்டு விடுவிடு என்று தன் படகிருந்த இடத்தை நோக்கி நடந்தான். அதற்குப் பிறகு கரையைத் திரும்பிப் பார்க்காமலே படகின் துடுப்புகளைத் துழாவித் தன் மரக்கலத்தை நோக்கிச் சென்றான். மரக்கலத்தை அடைந்து தன் அறைக்குச் சென்று மாற்று உடை அணிந்ததும் தன் உபதலைவர்களைத் தன் அறைக்கு அழைத்து வரும்படி மாலுமியொருவனுக்குக் கட்டளையிட்டான்.

உபதலைவர்கள் அனைவரும் அறையில் கூடியதும் இளையபல்லவன் கடற்கரையில் நடந்த அனைத்தையும் ஒளிவு மறைவின்றி அவர்களிடம் விவரித்துவிட்டு, “தலைவர்களே! மிகுந்த ஆபத்தான நிலையில் நாமிருக்கிறோம். இங்கேயே நாம் தங்கினால் அக்ஷயமுனையைக் காக்கும் பொறுப்பு, அதாவது பயங்கரமான பூர்வகுடிகளை எதிர்த்து நிற்கும் கடமை நம்மீது சுமரும். நாம் சென்று விட்டால் எப்படியும் பூர்வகுடிகள் அக்ஷயமுனை வாசிகளைப் பழி வாங்குவார்கள். கொலையும் கொள்ளையும் நடக்கும், அதற்குப் பொறுப்பும் நாமாவோம். அது மட்டுமல்ல… ” என்று சற்றுப் பேச்சை நிறுத்தினான்.

“சொல்லுங்கள்,” என்றான் அமீர்.

“கடலில் நம்மை அகூதா பழி வாங்கினாலும் வாங்கலாம்,’ என்றான் இளையபல்லவன்.

“நம்மையா!”

“ஆம். “

“ஏன்?”

“பெண்ணின் கற்பு பாதிக்கப்படுவதை மட்டும் அகூதா விரும்புவதில்லையாம். “

இதைக் கேட்டதும் வியப்பிலாழ்ந்த உபதலைவர்களில் கண்டியத்தேவன் சொன்னான். “விசித்திரமாயிருக்கிறது இது” என்று.

“ஆம் எனக்கும் விசித்திரமாகத்தானிருந்தது முதலில். இப்பொழுது நினைத்துப் பார்க்கும்பொழுது முற்றும் உண்மையென்று தெரிகிறது. சென்ற ஒரு வருட அனு பவத்தில் பெண்களை மானபங்கப்படுத்துவதை மட்டும் அகூதா அனுமதிக்கவில்லை . “

“ஆம், ஆம்,” என்று பதிலுக்கு எழுந்தன உபதலைவர் களின் குரல்கள்.

இதை அடுத்து அறையில் மௌனமே சில விநாடிகள் நிலவியது. மௌனத்தை முதலில் அமீரே உடைத்தான். “இப்பொழுது நாம் செய்ய வேண்டியது என்ன?” என்று வினவினான்.

“நான் இங்கு தங்கப் போகிறேன்,” என்று உறுதியுடன் கூறினான் இளையபல்லவன்.

“நாங்கள்?” அமீர் கேட்டான் வறண்ட குரலில்.

“நீங்கள் ஒன்று இந்த ஆபத்தில் பங்கு கொள்ளலாம். அல்லது மரக்கலத்தை உங்களுக்கு அளிக்கிறேன், நீங்கள் தமிழகம் செல்லலாம்,” என்றான் இளையபல்லவன்.

“மரக்கலம் செல்லும் நிலையில் இல்லை,” என்று கண்டியத்தேவன் சுட்டிக் காட்டினான்.

“அதற்கு வசதி செய்து தருகிறேன்,” என்றான் படைத்தலைவன்.

“நீங்களா?”

“ஆம். மஞ்சளழகியை மணந்துகொள்ள ஒப்புக் கொண்டு அக்ஷயமுனைக் கோட்டையின் காவல் பொறுப்பை ஏற்றால் பலவர்மனுக்கு அடுத்த அதிகாரி நான் தான். உங்களுக்குத் தேவையான சகலத்தையும் அளிக்க என்னால் முடியும். “

மீண்டும் மௌனம் நிலவியது அந்த அறையில். கடைசியாக அமீர்தான் தன் ஆசனத்தைவிட்டு எழுந்து இளையபல்லவனைத் தனது பெருவிழிகளால் நோக்கி னான். பிறகு அந்த ராட்சத விழிகள் மற்ற உபதலைவர்கள் மீதும் சுழன்றன. மீண்டும் இளையபல்லவனை நோக்கிய விழிகளில் திட்டமான முடிவு இருந்தது. “இளைய பல்லவரே! பல ஆபத்துகளை நாம் இதுவரை பகிர்ந்து கொண்டு இருக்கிறோம். இனியும் பகிர்ந்துகொள்வோம். நானும் உங்களுடன் இங்கேயே தங்கத் தீர்மானித்து விட்டேன். மிஞ்சினால் ஆபத்தின் முடிவு மரணம்தானே? அதற்கு நான் தயார்,” என்றான் அமீர்.

அமீரின் முடிவு மற்றவர்களின் முடிவையும் நிர்ண யித்துவிட்டது. இளையபல்லவனுக்கு ஏற்படும் கதி தங்களுக்கும் ஏற்படட்டும் என்று அவனுடன் தங்கவே தீர்மானித்தார்கள் மற்ற உபதலைவர்களும். அந்த முடிவுக்குப் பிறகு தன் ஆசனத்தைவிட்டு எழுந்த இளையபல்லவன், அவர்களை நோக்கிக் கூறினான்: “தலைவர்களே! உங்களுக்கு என்னிடமிருக்கும் அன்பை நான் அறியாதவன் அல்ல. ஆனால் என் செய்கைகளால் விளைந்துள்ள ஆபத்தை உங்கள் மீது சுமத்த நான் விரும்பாததாலேயே உங்கள் முடிவைத் தெரிந்துகொள்ள விரும்பினேன். நீங்கள் என்னுடன் தங்கத் தீர்மானித்துவிட்டதால் இனி என் திட்டத்தைக் கூறுகிறேன்.

கவனமாகக் கேளுங்கள்,” என்று கூறி அறையில் உலாவிய வண்ணம், பலவர்மனை வெற்றி கொள்ளவும் பூர்வகுடிகளை முறியடிக்கவும், எந்த ஒரு பணியை நாடி அக்ஷயமுனை வந்தானோ அந்தப் பணியை நிறைவேற்றவும் உதவக்கூடிய மிகவும் துணிகரமான திட்டமொன்றை விவரிக்கலானான் இளையபல்லவன். அந்தத் திட்டத்தின் ஆபத்து எல்லையற்றது என்பதையும், தங்கள் ஒவ்வொருவர் வாழ்வும் ஒவ்வொரு விநாடியிலும் சோதனையில் இருக்கும் என்பதையும் உபதலைவர்கள் புரிந்துகொண்டார்கள். அது மட்டுமல்ல, ஆரம்பத்திலேயே இரண்டொருவர் உயிர் போய்விடு மென்ற உண்மையும் புரிந்திருந்தது அவர்களுக்கு. தங்களுடைய நிலையைவிட இளையபல்லவன் நிலை பேராபத்து வாய்ந்தது என்பதை அவர்கள் புரிந்துகொண்டதால் அவனைப் பற்றிக் கவலைப்படவும் செய்தார்கள்.

இளையபல்லவன் இதயத்தில் மட்டும் அச்சமில்லை. அவன் சம்பந்தப்பட்ட மட்டில் அது தலைக்குமேல் போய் விட்ட ஆபத்து. ‘தலைக்கு மேல் ஓடிய வெள்ளம் சாண் போனாலென்ன, முழம் போனாலென்ன?’ என்று எண்ணி மனத்துக்குள்ளேயே நகைத்துக் கொண்டான் இளைய பல்லவன்.

Previous articleRead Kadal Pura Part 2 Ch29 |Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 2 Ch31 |Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here