Home Kadal Pura Read Kadal Pura Part 2 Ch31 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch31 |Sandilyan | TamilNovel.in

95
0
Read Kadal Pura Part 2 Ch31 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 2 Ch31 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch31 |Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

இரண்டாம் பாகம், அத்தியாயம் 31 : நிதிப் பெட்டியா? சதிப் பெட்டியா?

Read Kadal Pura Part 2 Ch31 |Sandilyan | TamilNovel.in

அக்ஷயமுனைக் கடற்கரையில் அன்றைய காலை நீராட்டத்தை அடுத்து ஏற்பட்ட நிகழ்ச்சிகளையும் அந்த நிகழ்ச்சிகளின் விளைவாக உருவெடுத்துள்ள புது நிலையை யும், அந்தப் புது நிலையைச் சமாளிக்கத் தான் வகுத்துள்ள திட்டத்தையும் தன் உபதலைவர்களுக்கு விளக்கிச் சொன்ன இளையபல்லவன், தன் சம்பந்தப்பட்ட வரையில் ஆபத்து தலைக்குமேல் போய்விட்டதை எண்ணி, ‘தலைக்கு மேல் ஓடிய வெள்ளம் சாண் போனாலென்ன? முழம் போனாலென்ன?’ என்று உள்ளூர நகைத்துக் கொண்டானானாலும் தனது உபதலைவர்களின் மனப்போக்கைப் பூரணமாக அறிந்துகொள்ள அவர்கள் மீது மீண்டு மொருமுறை தன் கண்களை ஓடவிட்டான்.

மரக் கலத்தின் அந்த அறையில் கூடியிருந்த உபதலைவர்களின் முகங்களில் அச்சம் லவலேசமும் இல்லையென்றாலும் கவலை மட்டும் அதிகமாகப் பரவிக் கிடந்ததைக் கவனித்த இளையபல்லவன், அவர்களை நோக்கி, “திட்டத்தில் உங்களில் யாருக்காவது ஆட்சேபணையிருந்தால் சொல்லலாம். வேறு சிறந்த திட்டம் இருந்தாலும் சொல்லலாம். அதையும் அலசிப் பார்த்து ஒரு முடிவுக்கு வருவோம்” என்று கூறினான்.

உபதலைவர்களின் முகங்களில் கவலை மேலும் அதிகமாக விரிந்ததேயொழிய உதடுகளிலிருந்து சொற்க ளேதும் உதிராததால் சில விநாடிகளுக்கு அந்த அறையில் மௌனமே நிலவியது. தனது பெரும் கைகளால் தலை மயிரை அடிக்கடி துழாவிவிட்டுக் கொண்டு தீவிர யோசனையிலிருந்த அமீர் மட்டும் இறுதியில் படைத் தலைவனுக்குப் பதில் சொல்லத் துவங்கி, “இல்லை, வேறு வழியே இல்லை. நீங்கள் சொன்ன திட்டம் ஒன்றுதான் பயனளிக்கக் கூடியது. ஆனால் அதில் ஓர் இடந்தான் பலவீனமுள்ளது,” என்றான்.

“எந்த இடம் அமீர்?” என்று வினவினான் படைத் தலைவன்.

“நீங்கள் பலவர்மன் மாளிகையிலேயே தங்க உத்தேசித்திருப்பது,” என்று சுட்டிக் காட்டினான் அமீர்.

“அதில் என்ன பலவீனமிருக்கிறது!” என்று மீண்டும் கேட்டான் படைத்தலைவன்.

“நீங்கள் எப்பொழுதும் பலவர்மனின் நேர் கண் பார்வையிலிருப்பீர்கள்,” என்று அமீர் சொன்னான். குரலில் கவலை பாய.

“ஆமாம், இருப்பேன்,” என்றான் படைத்தலைவன் அமீரின் முகத்தை உற்று நோக்கி.

“அவசியமானால் எந்த விநாடியிலும் உங்களைப் பலவர்மன் தீர்த்துக் கட்டிவிட முடியும். உறக்கத்தில் கழுத்தை யறுத்தாலும் கேட்பதற்கு ஆளிருக்காது” என்றான் அமீர்.

“மருமகனை அழிப்பதால் பலவர்மனுக்கு என்ன லாபம்?”

“மருமகனாவதற்கு முன்பே அழிப்பதால் லாப மிருக்குமல்லவா?”
“ஆம், ஆம். இருக்கும். “

“தலைவரான உங்களைத் தீர்த்துக் கட்டிவிட்டால் நகருக்குள் காவல் புரியும் என்னையும் இந்த மரக்கலத்தின் மாலுமிகள் ஐம்பது பேரையும் ஒழித்துவிடுவது பலவர்மனுக்கு மிகவும் எளிதல்லவா?”

“ஆம். எளிதுதான்” என்று ஒப்புக்கொண்ட இளைய பல்லவன் சில விநாடிகள் ஆழ்ந்த யோசனையில் இறங்கி னான். பிறகு சொன்னான், “அமீர், ஒரு முக்கிய விஷயத்தை மறந்துவிட்டுப் பேசுகிறாய். நம் அனைவரையும் காரணமின்றி அழித்தால் அகூதாவின் சீற்றத்துக்கு இலக்காக வேண்டியிருக்கும் என்ற அச்சம் பலவர்மனுக்கு இருக்கிறது. ” என்று.

இதற்கும் அசையாமலே அமீர் கூறினான், “இருந்தது என்று சொல்லுங்கள்?” என்று.

இளையபல்லவன் தன் கூரிய விழிகளை அமீர்மீது திருப்பினான். அவன் கண்களில் பலமான கேள்வி தொக்கி நின்றதைக் கவனித்த அமீர் தன் கருத்தை விளக்கினான். “அந்தப் பயம் பலவர்மனுக்கும் கொள்ளையருக்கும் இன்று காலை வரையில் இருந்தது. இப்பொழுது இருக்கக் காரணமில்லை என்று நீங்கள் தானே சொன்னீர்கள்?” என்று கேட்டான் தன் பெருவிழிகளைப் படைத்தலைவன் மீது நாட்டி.

“உண்மைதான் அமீர். அகூதாவிடமுள்ள அச்சமென் னும் கவசம் உடைந்துவிட்டதற்கு, மஞ்சளழகிக்கும் எனக்கு முள்ள உறவைப்பற்றி வீண் புரளி கிளப்பிக் கொள்ளையரையும் சாட்சிக்கு அழைத்திருப்பது காரணம். ஆனால் நான் மஞ்சளழகியை மணம் செய்துகொள்ள முடிவு செய்துவிட்டதால் நிலைமை மீண்டும் பழைய ஸ்திதிக்கு வரவில்லையா? மஞ்சளழகியை முறைப்படி திருமணம் செய்துகொள்ளச் சம்மதித்ததன்றி அக்ஷயமுனையையும் பூர்வகுடிகளிடமிருந்து காப்பாற்ற ஒப்புக்கொண்ட தனது உபதலைவனைக் கொன்றால் அகூதாவின் கரம் கண்டிப்பாய்ப் பழிவாங்கும் என்பது பலவர்மனுக்கு விளங்காதா?” என்று வினவினான் படைத்தலைவன்.

“விளங்கும் படைத்தலைவரே. ஆனால் பழைய நிலை மீண்டும் ஏற்பட முதலில் மஞ்சளழகியை நீங்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும். “

“ஆம். “

“அப்படித் திருமணமாகு முன்பே நீங்கள் கொல்லப் பட்டால்?”

“அகூதா பழி வாங்குவார். “

“மாட்டார். “

“ஏன்?”

“நீங்கள் மஞ்சளழகியைக் கெடுத்துவிட்டதாகப் பலவர்மன் பறைசாற்றுவான். அகூதாவிடமுள்ள பயத்தால் கொள்ளையர் அவன் சொல்வதற்குத் தலையாட்டுவார்கள். மஞ்சளழகியை நீங்கள் மணமுடிக்க ஒப்புக் கொண்டது வெளியில் வராமலே போனாலும் போகும்?”

“இதனால் பலவர்மனுக்கு என்ன லாபம்?”

“முதலில் அகூதாவிடமிருந்து பாதுகாப்பு. பெண்ணைக் கெடுத்தவனுக்காக, அகூதா பழிவாங்க முற்படமாட்டார். இரண்டாவதாக, பூர்வகுடிகளிடமிருந்து பாதுகாப்பு. அவர்கள் தலைவனொருவனைக் கொன்றதற்குப் பலவர்மன் பழி வாங்கிவிட்டதால் அவர்களையும் திருப்தி செய்தவனாகிறான். மூன்றாவதாக ஸ்ரி விஜய மன்னரிடமிருந்து பாராட்டு கிடைக்கும். நிலத்திலும் கடலிலும் அரசாங்கத்தின் பெரும் துணையாயிருக்கும் பூர்வகுடிகளைத் தன்னிடமிருந்து மாறுபடச் செய்த தமிழனைத் தொலைத்து, நாட்டின் கடற்காவலரைத் திருப்தி செய்ததற்காக மன்னரின் நம்பிக்கை பலவர்ம னிடம் அதிகப்படும்,” என்று அமீர் தன் கருத்தைத் தெளிவாக விளக்கிச் சொன்னான்.

அமீர் கூறியதில் மிகுந்த பொருளிருந்ததைப் புரிந்து கொண்ட இளையபல்லவன் தன் ஆசனத்தில் நன்றாகச் சாய்ந்துகொண்டு தீவிர யோசனையில் இறங்கினான். பலவர்மனுக்கு மஞ்சளழகியிடம் பூர்ணமான அன்பிருந்ததை இளையபல்லவன் சந்தேகமறப் புரிந்துகொண்டிருந்தான். அந்த அன்பின் காரணமாக அவள் மனத் துக்குத் துயரத்தைத் தரும் நடவடிக்கையில் பலவர்மன் இறங்கமாட்டான் என்ற அஸ்திவாரத்திலேயே தன் திட்டத்தை வகுத்திருந்தான் படைத்தலைவன்.

‘அந்த அன்பு ஒருவேளை உண்மையாகி விட்டால்? அந்த அன்பைவிடச் சுயநலம் பெரிதாயிருந்தால்? அமீர் சொன்ன வழியைக் கையாளலாம் பலவர்மன். திருமண மாகுமுன்பே என்னைக் கொலை செய்துவிட்டுத் திருமணம் செய்துகொள்வதாக நான் கூறியது வெறும் ஏமாற்று வித்தை என்று பறைசாற்றலாம். அதற்குக் கொள்ளையரும் ஒப்புக்கொள்வார்கள். நான் அழிந்து விட்டால் அகூதாவிடமுள்ள பயத்தால் பலவர்மன் சொல்லும் எதையும் கொள்ளையர் ஒப்புக்கொள்வார்களா?’ என்று எண்ணிப் பார்த்த படைத்தலைவன், ‘அமீர் சொல்வதிலும் அர்த்தமிருக்கிறது’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

இருப்பினும் தாங்களிருந்த நிலையில் வேறெந்தத் திட்டமும் பலனளிக்காது என்பதையும் புரிந்துகொண்டதால் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்து மீண்டும் தன் உபதலைவர்களை நோக்கி, “அமீர் சொல்வதில் உண்மை இருக்கிறது. ஆனால் நான் சொன்ன திட்டத்தைத் தவிர வேறு திட்டம் எனக்குத் தோன்றவில்லை. அக்ஷயமுனை நமது வசமாக வேண்டுமானால் துணிவுடன் அதைக் கையில் எடுத்துக் கொள்வதுதான் விவேகம். என் திட்டத்தின் முதல் படியை இந்தப் பகலிலேயே துவங்கிவிடுகிறேன். இன்றே நான் அக்ஷய முனையைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கிறேன். ஏற்றதும் இங்குள்ள கொள்ளையருக்குக் கண்டியத்தேவரையும் கோட்டைக்குள்ளிருக்கும் படைக்கு அமீரையும்,

பொக்கிஷத்துக்குச் சேந்தனையும் பொறுப்பாளிகளாக நியமித்துவிடுகிறேன். இப்படிக் கடற்கரையும் கோட்டையும், பொக்கிஷமும் நம் வசமானால் பலவர்மனும் நமது வசமானது போலத்தான். அப்பொழுது முதல் திட்டப்படி நமது மாலுமிகள் கொள்ளையர் உதவி கொண்டு நமது மரக்கலத்தைச் செப்பனிடட்டும். அமீர் கோட்டையின் வாயில்களைக் காக்கட்டும். அந்தக் காவலுக்கு வேண்டிய பணத்தைச் சேந்தன் அள்ளிவிடட்டும்,” என்றான்.

“இதெல்லாம் நடக்கப் பலவர்மன் அனுமதிக்க வேண்டுமே?” என்று வினவினான் கண்டியத்தேவன்.

“அனுமதிக்கும் அவசியத்தை நான் ஏற்படுத்துகிறேன்” என்று உறுதியுடன் கூறிய இளையபல்லவன் ஒரு முடிவுக்கு வந்து திடீரென ஆசனத்திலிருந்து எழுந்தான். எழுந்து மரக்கலத்தின் சாளரத்துக்குச் சென்று தூரத்தே தெரிந்த அக்ஷயமுனைக் கோட்டையைச் சிறிது நேரம் உற்று நோக்கினான். பிறகு, அமீரைத் தன் அருகில் வரும்படி சைகை செய்து, “அமீர்! கோட்டையை நன்றாகக் கவனி,” என்று கோட்டையைச் சுட்டிக் காட்டினான். அமீர் தன் பெரு விழிகளால் கோட்டையை நன்றாக ஆராய்ந்து விட்டு, “மொத்தம் வாயில்கள் மூன்று இருக்கின்றன. ” என்று கூறி விட்டுப் படைத்தலைவனை உற்றுநோக்கினான்.

இளையபல்லவன் அவனைத் திரும்பிப் பார்க்காமலே, “இதோ பார் அமீர்! நான் சொன்ன திட்டம் நினைப்பிலிருக்கிறதல்லவா?” என்று கேட்டான்.

“அதற்குள்ளா மறந்துவிடுவேன்?” என்றான் அமீர்.

“மறதிக்காகச் சொல்லவில்லை. கோட்டையை நன்றாக உற்றுப் பார். நம் நாட்டுக் கோட்டைகளுக்கு வாயில்கள் எத்தனை உண்டு?”

“நான்கு. “

“ஆமாம். ஆனால் இங்கே நான்காவது வாயில்இல்லை. நான்காவது வாயில் இருக்க வேண்டிய இடத்தில் மதில் பெரிதாக இருக்கிறது. “

“ஆம். “

“அதை அடுத்து பகிட்பாரிஸான் மலைக்காடு இருக்கிறது.

“ஆம். “

“பூர்வகுடிகள் வரும் வழி அது என்று நினைக்கிறேன். “

“ஏன்?”

“பூர்வகுடிகள் காட்டுவாசிகள். தவிர இந்த நகரத்தின் மீது கண்ணோட்டம் வைக்க ஒன்றுதான் இடம். அங்கு எப்பொழுதும் பூர்வகுடிகளின் நடமாட்டம் இருக்கும் என்று நினைக்கிறேன். “

“இருக்கலாம். “

“ஆகவே அந்தப் பகுதியில் காவலைப் பலப்படுத்திக் கொள். கோட்டையின் கடற்கரை வாயிலையும் மற்ற வாயில்களையும் நான் கவனித்துக் கொள்கிறேன். “

“அதற்கு நாமிருவரும்… ” என்று இழுத்தான் அமீர்.

“உயிருடனிருந்தால்தான் முடியும். நீ அங்கு காவல் புரியும்போது உன்னையும் உன்னுடன் இருப்பவரையும் வில்வலன் வீரர்கள் கொன்றாலும் கொல்லலாம். மாளிகையில் இருக்கும்போது நான் இறந்தாலும் இறக்கலாம். இந்த இரண்டையும் இரண்டு நாள்களுக்கு நாம் தவிர்த்துக் கொண்டால் நமது கால் அக்ஷயமுனையில் பலமாக ஊன்றிவிடும். பிறகு பலவர்மனோ பூர்வகுடிகளோ யாரும் நம்மை அசைக்க முடியாது. ஆகவே இரண்டு நாள் எச்சரிக்கை தேவை. தவிர இந்த இரண்டு நாளும் அக்ஷயமுனைக் கோட்டை மக்களை நமது பக்கத்தில் இழுக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கும் வழி இருக்கிறது. ” என்றான் படைத் தலைவன்.

“என்ன வழி?” என்று கேட்டான் அமீர்.

“பொறுத்துப் பார் அமீர்,” என்று கூறிய இளைய பல்லவன் மற்ற உபதலைவர்களை நோக்கி, “உபதலைவர்களே, நானும் சேந்தனும் இன்னும் சில நாழிகைகளில் கோட்டைக்குள் செல்லப்போகிறோம். என்னிடமிருந்து செய்தி வரும்வரை நீங்கள் யாரும் மரக்கலத்தை விட்டு நகர வேண்டாம்,” என்று கூறிவிட்டு, “சேந்தா! நீயும் நம்மிடமுள்ள ஆறு பெட்டிகளும் என்னைத் தொடர வேண்டும். அதற்கு வேண்டிய மாலுமிகளைப் பொறுக்கிக்கொள்,” என்று சேந்தனை நோக்கி உத்தரவிட்டான்.

“ஆறு பெட்டிகளுமா?” என்று வாயைப் பிளந்தான் சேந்தன்.

“ஆம். ஆறு பெட்டிகளும்தான். ஒன்றுகூட மரக் கலத்தில் இருக்க வேண்டாம்,” என்று திடமாக உத்தர விட்டான் இளையபல்லவன்.

சேந்தன் முகத்தில் பெரும் சோகம் மண்டிக் கிடந்தது. பரிதாபம் மிக்க விழிகளை அவன் அமீர் மீது திருப்பினான். அமீரின் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லாதிருக்கவே மீண்டும் இளையபல்லவன் மீது கண்களைத் திருப்பிய கூலவாணிகன் சேந்தன், “சென்ற ஒரு வருட காலத்தில் நாம் சேமித்த அத்தனை செல்வமும் அந்த ஆறு பெட்டிகளில் இருக்கின்றன” என்று சுட்டிக் காட்டினான்.

“தெரியும் எனக்கு,” என்றான் இளையபல்லவன்.

“அத்தனையும் கோட்டைக்குள் சென்றால் திரும்பி வருமா?”

“வந்தாலும் வரலாம். வராவிட்டாலும் இல்லை. “

“அப்படிச் சொத்து முழுவதையும் பறிகொடுப்பது விவேகமா?”

“இதைவிடப் பெரிய சொத்து ஆபத்திலிருக்கிறது. “

“இதைவிடப் பெரிய சொத்தா?”

“ஆமாம். “

“அப்படி என்ன சொத்தோ அது?”

“உயிர் எனும் சொத்து,” என்று கூறிய இளைய பல்லவன், “உயிர் இருந்தால் இதைவிட அதிகம் சம்பாதிக்கலாம். உயிர் போய்விட்டால் இவை இங்கிருந்துதான் என்ன பயன்?” என்று கேட்டான்.

உயிரைவிடச் செல்வத்தை அதிகமாக ஆயுள் முழுவதும் மதித்து வந்த கூலவாணிகனுக்கு அத்தனை பொக்கிஷத்தையும் கோட்டைக்கு மாற்ற இஷ்டமில்லையென்றாலும் வேறு வழியின்றிப் படைத்தலைவன் சொற்படி நடக்கத் தீர்மானித்தான். அத்துடன மந்திராலோசனை முடிவுற்றது என்பதைக் குறிப்பிடத் தலையை அசைத்த இளையபல்லவன், அறையை விட்டுத் தளத்துக்குச் சென்று மீண்டும் நீண்ட நேரம் கோட்டையைக் கவனித்தான்.

கோட்டையின் காவல் வழகத்துக்கு அதிக மாகப் பலமாயிருந்தது. கோட்டைமதில்கள் மீது முதல் நாளை விட அதிக வீரர்கள் நடமாடியதைக் கவனித்த இளைய பல்லவன் மிகுந்த திருப்தியுடன் தலையை அசைத்துக் கொண்டான். ‘காவல் நேற்றைய காலையை விட இன்று காலை பலமாக இருக்கிறது. காரணம், என்னிடமுள்ள பயம்தான். பயம் இருக்கிற இடத்தில் பலவீனமும் இருக்கிறது. அந்தப் பலவீனத்தை நான் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்ட இளையபல்லவன் மீண்டும் தன் அறைக்குச் சென்று கோட்டைக்குச் செல்ல ஆயத்தமானான்.

அடுத்து நாலைந்து நாழிகைகளுக்குள் இளைய பல்லவன் கூலவாணிகனுடனும் ஆறு பெரும் மரப்பெட்டி களுடனும் அவற்றைத் தூக்கமுடியாமல் தூக்கிய பத்துப் பதினைந்து மாலுமிகளுடனும் படகொன்றில் இறங்கிக் கரையை நோக்கிச் சென்றான். படகு கரையை அடைந்ததும் தான் இறங்கிப் பெட்டிகளைக் கீழே இறக்கச் சொன்ன இளையபல்லவன், மாலுமிகளைப் பெட்டிகளைத் தூக்கிவரச் சொல்லிக் கூலவாணிகன் பின் தொடரக் கோட்டையை நோக்கி நடந்தான்.

நாழிகைகள் ஓடிவிட்டதால் கதிரவன் கொடுமை அதிகமாகிப் பெரும் உஷ்ணக் காற்று கடற்கரையில் வீசிக் கொண்டிருந்தது. அந்த உஷ்ணக் காற்றையும் தகிக்கும் மணலையும் லட்சியம் செய்யாத கொள்ளையர் ஆங்காங்கு கும்பல் கூடி இளையபல்லவனையும் அந்தப் பெரும் மரப்பெட்டிகளையும் வியப்புடன் கவனித்துக் கொண் டிருந்தார்கள். அந்தப் பெரும் பெட்டிகளையும் அதன் பலமான இரும்புத் தாழ்களையும் பார்த்ததும் பெட்டிகளில் இருப்பது என்னவென்பதைப் புரிந்துகொண்ட கொள்ளையர், இளையபல்லவனின் செய்கைக்குக் காரணம் தெரியாமல் விழித்தனர்.

கப்பலிலிருந்த அத்தனை செல்வத்தையும் இளையபல்லவன் கோட்டை மாளிகைக்குக் கொண்டு செல்கிறானென்பதை உணர்ந்துகொண்ட கொள்ளையர் பலவர்மனின் கையில் சிக்கும் அந்தப் பெட்டிகள் மீண்டும் இளையபல்லவனின் மரக்கலத்துக்குத் திரும்பாதென்பதை உணர்ந்து, ‘இத்தனை செல்வத்தையும் ஏன் பறிகொடுக்கிறான் இவன்?’ என்று எண்ணிப் பரிதாபத்துடன் படைத் தலைவனையும் பெட்டிகளையும் பார்த்தார்கள்.

பெட்டிகளுக்குள் அடைபட்டிருந்த செல்வம் அவர் களுடைய எண்ணத்தில் பெரும் புரட்சியை விளைவித்தது. முதல் நாள் நிகழ்ச்சிகளையும், கடற்கரைச் சாலைச் சம்பவங்களையும் அவர்கள் அடியோடு மறந்தார்கள். பதக்குகளை மறந்தார்கள்; பயத்தையும் மறந்தார்கள். பெட்டிகளில் அடங்கிய பெரும் பொருள், பேராசை பிடித்த கொள்ளையர் மனத்தில் வேறெந்த உணர்ச்சியும் நில்லாது விரட்டிவிடவே பெரும் கூச்சலுடன் அவர்கள் அந்தப் பெட்டிகளைத் தொடர்ந்து சென்றார்கள்.

தன்னையும் பெட்டிகளையும் கொள்ளையர் தொடர்ந்து வருவதைக் கவனித்தும் கவனிக்காதவன் போலவே வெகு வேகமாக நடந்து சென்ற படைத்தலைவன் கோட்டைக்குள் நுழைந்து பலவர்மன் மாளிகையின் முன்புறத்தை அடைந்தான். மாளிகையை அவன் அடையுமுன்பே அவனைத் தொடர்ந்து வந்த கூட்டம் அளவுக்கு மீறிப்பெருகிவிட்டது. கூட வந்த கொள்ளையருடன் அக்ஷய முனை நகரவாசிகளும் கூடிக்கொண்டதால் இளைய பல்லவனைத் தொடர்ந்து பெரும் புரட்சிக் கூட்டம் வருவதைப் போலிருந்ததை மாளிகைச் சாளரத்தின் மூலம் கவனித்த பலவர்மன் ஓரளவு சினத்துக்கும், பயத்துக்கும், குழப்பத்துக்கும் உள்ளானான்.

அந்தக் குழப்பம், பயம், சினம் இவற்றுடன் திடுதிடுவென்று மாளிகை வாயிலை அடைந்த பலவர்மன் அங்கிருந்த நிலைமையைக் கவனித்தான். நிலைமை தனக்கெதிராப் பெரிதும் உருவெடுத்து விட்டதாகப் புரிந்துகொண்டதால் மிகவும் கலங்கவும் செய்தான். கூரிய அறிவு படைத்த பலவர்மன், இளையபல்லவன் எந்த யோசனையுடன் பெட்டிகளைக் கொண்டு வந்திருக்கிறானென்பதைப் புரிந்துகொண்டதால் உள்ளூரத் திகிலும் அடைந்தான். அந்தத் திகிலை உச்ச நிலைக்குக் கொண்டு செல்லும் ஒரு நூதனப் பணியில் அடுத்த விநாடி இறங்கினான் இளையபல்லவன். அந்தப் பணி பலவர்மன் திட்டங்களை, விநாடி நேரத்தில் சுக்கல் சுக்கலாக உடைத்தெறிந்தது.

இளையபல்லவனின் பிடியில் தான் பலமாகச் சிக்கிக்கொண்டு விட்டதை உணர்ந்த பலவர்மன், இளையபல்லவனைச் சுடும் விழிகளால் நோக்கினான். இளையபல்லவன் முகத்தில் எந்தவிதக் கலவரமோ குழப்பமோ இல்லை . அவன் உதடுகளில் இகழ்ச்சிப் புன்முறுவல் தவழ்ந்து கிடந்தது. ‘தங்கள் அடிமையின் காணிக்கை இதோ,’ என்று மரப்பெட்டி களைச் சுட்டிக் காட்டிய அவன் சொற்களிலும் இந்த இகழ்ச்சி பூரமணாக மண்டிக் கிடந்தது. பலவர்மன் கண்ணெதிரே அந்த ஆறு பெட்டிகளில் ஒன்று பெரிதாகக் காட்சியளித்தது. அது நிதிப் பெட்டியா அல்லது தன்னைக் கவிழ்க்க வந்த சதிப்பெட்டியா என்று ஊகிக்க முடிய வில்லை பலவர்மனுக்கு.

Previous articleRead Kadal Pura Part 2 Ch30 |Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 2 Ch32 |Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here