Home Kadal Pura Read Kadal Pura Part 2 Ch44 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch44 |Sandilyan | TamilNovel.in

143
0
Read Kadal Pura Part 2 Ch44 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 2 Ch44 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch44 |Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

இரண்டாம் பாகம், அத்தியாயம் 44 : அக்ரமந்திரம் மூடுமந்திரம்.

Read Kadal Pura Part 2 Ch44 |Sandilyan | TamilNovel.in

உறங்கிக் கிடந்த தன்னைத் தொட்டு உலுக்கி எழுப்பிய மஞ்சளழகியின் நிலை கண்டு பலவர்மன் பேரதிர்ச்சியடைந்தானென்றால் அதற்குக் காரணம் இருக்கத்தான் செய்தது. முகத்தில் குறுவேர்வை துளிர்த்துக் கிடக்க, அடர்ந்த கருங்கூந்தல் சற்றே பிரிந்து அலைந்து கிடக்க, ஆடையும் சீர்கெட்டுக் கிடக்கப் பெருமூச்சு வாங்க நின்ற தன் வளர்ப்பு மகளைக் கண்ட பலவர்மன், “என்னம்மா? என்ன நேர்ந்துவிட்டது உனக்கு? ஏனிந்த அலங்கோலம்?” என்று வினவினான்.

“படைத்தலைவரைக் கேளுங்கள்; முதலில் அவரை ஓர் அறையில் அடைத்து வையுங்கள்,” என்று பெருமூச்சு வாங்க, பேச்சில் சீற்றம் மிதமிஞ்சித் தொனிக்கச் சொன்னாள் மஞ்சளழகி.

“யார், இளையபல்லவனையா?” என்று கேட்டுக் கொண்டே உறக்கத்தின் மிச்சத்தை உதறிவிட்டு எழுந்து மகளை அணுகிக் கேட்டான் பலவர்மன்.

“ஆம். ” என்றாள் மஞ்சளழகி பெருமூச்சுக்கிடையே.

“ஏன்? என்ன செய்தான் அவன்?” என்று கவலையுடன் கேட்டான் பலவர்மன்.

“சற்று முன்பு என் அறைக்கு வந்தார்…. ” என்று தயங்கினாள் மஞ்சளழகி.

“சொல்லம்மா… ” பலவர்மன் குரலில் ஆதரவும் அன்பும் ஒலித்தன.

“வந்தவர் குடித்திருந்தார்… ”

“அதுதான் தெரிந்த விஷயமாயிற்றே. “

“இன்றைய குடி மிகவும் அதிகமாயிருந்தது. “

“எப்பொழுதும் அத்துமீறித்தான் குடிக்கிறான். “

“அத்துமீறிய குடியிலும் ஓரளவு நிதானமிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். இன்று அடியோடு மோசம். “

“சரி, குடித்துவிட்டு வந்தான். அப்புறம்… ”

“ஏதேதோ உளறினார். “

“என்ன உளறினான்?”

“உங்களை என் விரோதி என்று சொன்னார். “

பலவர்மன் மார்பு திக்கு திக்கென்று அடித்துக் கொண்டது. “சொல் மேலே என்ன சொன்னான்?” என்று வினவினான் கலவரத்துடன்.

“தான் தான் என்னைக் காப்பாற்ற முடியும் என்று சொன்னார். “

“அதற்கு என்ன செய்வதாக உத்தேசமாம்?”

“இன்று முதல் நானிருக்கும் அறை அபாயமாம்… ”

மஞ்சளழகி பெரும் சங்கடத்துக்குள்ளானாள். மேலே சொல்ல முடியாமல் தலை குனிந்தாள்.

பலவர்மன் முகத்தில் ஈயாடவில்லை . “அப்புறம் என்ன சொன்னான்?” என்று கேட்டான் அச்சத்துடன்.

“நாளைக்கு எனது அறை அதிக அபாயமென்றும், ஆகவே ஆகவே” என்று ஏதோ சொல்ல முயன்று முடியாமல் தவித்தாள் மஞ்சளழகி.

“பாதகமில்லை, சொல்! எதுவாயிருந்தாலும் சொல்!” பயம் உச்சஸ்தாயிக்குச் செல்லக் கேட்டான் பதற்றத்துடன் பலவர்மன்.

மஞ்சளழகி நிலத்தை நோக்கிக்கொண்டு, “ஆகவே தனது அறைக்கு அழைத்தார்… ” என்றாள். இதைச் சொன்னதும் கண்களைத் தூக்கிப் பலவர்மனைப் பார்க்கவும் செய்தாள்.

நியாயமாக இதைக் கேட்டதும் கொதித்தெழ வேண்டிய பலவர்மன் முகத்தில் ஏதோ பெரும் ஆயாசம் தீர்ந்ததற்கு அறிகுறியாக சாந்தி படர்ந்தது. ஆனால் குரலில் மட்டும் அவன் கொதிப்பைக் காட்டி, “அப்படியா சொன்னான் அயோக்கியன்! அவனை ஒழித்துக் கட்டி விடுகிறேன். கொஞ்சம் பொறு” என்றான்.

மஞ்சளழகி விழிகளில் சீற்றம் நிரம்பி நின்றது. “பொறுக்கிற விஷயமா இது?” என்று வினவினாள்.

“இல்லையம்மா, கொஞ்சம் அவகாசம் கொடு” என்றான் பலவர்மன்.

“நல்ல லட்சணம், இன்னோர் ஆடவன் தனது அறைக்கு என்னை அழைக்கிறான். குடிவெறியில் என் தலைமயிரையும் ஆடையையும் அலங்கோலப்படுத்துகிறான். தந்தை பொறுக்கச் சொல்கிறார்! நல்ல விந்தை இது! நீர் ஒரு தந்தையா?” என்று சுடும் சொற்களைக் கொட்டினாள் அந்தக் கட்டழகி.

அவள் பதற்றம்கூட அவனை அசையச் செய்யவில்லை . “அம்மா! இளையபல்லவன் மிகவும் வஞ்சகன், அவனைத் திடீர் என்று எதிர்த்துக்கொள்வது அபாயம். மெள்ளத்தான் அவனைச் சமாளிக்க வேண்டும்” என்றான் பலவர்மன் சற்று நிதானப்பட்டு.

“அவரிடம் பயப்படுகிறீர்களா?” என்று கேட்டாள் மஞ்சளழகி குரலில் வெறுப்புடன்.

ஆமென்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத் தான், பலவர்மன். “ஆம், பயப்படுகிறேன் அந்தப் படைத்தலைவனிடம், விவரமறிந்தால் நீயும் பயப்படுவாய்! பெரும் தந்திரக்காரனிடம் நாம் சிக்கிக்கொண்டிருக்கிறோம்! நாமென்ன, இந்த அக்ஷயமுனையும் சிக்கிக் கொண்டிருக்கிறது! மிகுந்த எச்சரிக்கையுடன் நாம் நடந்து கொள்ளாவிட்டால்… இந்த அக்ஷயமுனையைப் பிடித்த நல்ல காலம் இவனுக்குக் குடிப்பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இவனை உறவாடித்தான் கெடுக்க வேண்டும். நீயும் அவனுடன் உறவாடு. அதாவது உறவாடுவது போல் பாசாங்கு செய். அவன் குடிவெறியில் வாயைக் கிளறு. சில உண்மைகளும் கிடைக்கும்,” என்றான்.

மஞ்சளழகி தன் கறுத்த புருவங்களைச் சற்றே உயர்த்தினாள். கோபத்தாலும், வியப்பாலும், “என்ன சொல்லுகிறீர்கள்?” என்று கேட்கவும் செய்தாள்.

“அவனுடன் நட்பாயிருப்பது போல் பாசாங்கு செய்,” என்றான் பலவர்மன்.

“பாசாங்கு செய்வது அவசியமல்ல தந்தையே. அவரிடம் என் மனத்தைப் பறி கொடுத்திருக்கிறேன். ” என்றாள் மஞ்சளழகி.

“அதுதான் தெரியுமே எனக்கு. “

“ஆம் ஆம். நீங்கள்தானே அவரை எனக்கு மணாள னாக்கவும் இந்த அக்ஷயமுனைக்கு உபதளபதியாக்கவும் தீர்மானித்தீர்கள். “

“அதையெல்லாம் நீ நம்புகிறாயா?”

மஞ்சளழகி மேலும் வியப்பைக் காட்டினாள். “அப்படியானால் நீங்கள் திட்டமிட்டது… ” என்று இழுத்தாள் வியப்புடன்.

“திட்டமிட்டதெல்லாம் இளையபல்லவனை ஒழிக்க! ஆனால் ஒவ்வொரு திட்டத்தையும் அவன் உடைத்து விட்டான். உன்னை மணம் செய்ய ஒப்பமாட்டான் என்று நினைத்தேன்; ஒப்பினான். ஸ்ரி விஜயத்தின் உபதளபதியாக மாட்டானென்று நம்பினேன்; அந்த நம்பிக்கையில் மண்ணைப் போட்டு அக்ஷயமுனையைத் தன் வசப்படுத்திக் கொண்டான். அக்ஷயமுனை மக்கள், கொள்ளைக்காரர் அனைவருக்கும் எனது பொக்கிஷத்தைத் திறந்து விட்டு மயக்கியிருக்கிறான். அவன் என்ன குடித்தாலும், என்ன அக்ரமங்களைச் செய்தாலும் பூர்வகுடிகளிடமிருந்து அவன்தான் தங்களைக் காப்பாற்ற முடியுமென்று மக்கள் நினைக்கிறார்கள். அந்த நம்பிக்கையை உடைக்க வேண்டும்… ” என்று சொல்லிய பலவர்மன், பேச்சை நிறுத்தி மகளைப் பார்த்தான்.

“எப்படி உடைப்பது?” என்று கேட்டாள் மஞ்சளழகி.

“உன் உதவி வேண்டும் அதற்கு?”

“நான் என்ன செய்ய முடியும்?”

“மெள்ள அவன் மனத்தை மாற்றி பகிட்பாரிஸான் காட்டுப் பகுதியிலிருக்கும் அமீரின் காவலை அகற்றிவிடு. “

“நான் சொன்னால் அவர் செய்வாரா?”

“செய்வதும் செய்யாததும் உன் கையிலிருக்கிறது!”
“என் கையிலா?”

“ஆம்?”

“என்னிடம் என்ன சாதனங்கள் இருக்கின்றன?”

“பல இருக்கின்றன. உன் விழிகள், புருவங்கள் ” என்று மேலும் அடுக்கப் போனவனை, “நில்லுங்கள், வெட்கமில்லை உங்களுக்கு?” என்று சீறித் தடுத்த மஞ்சளழகி அவனைச் சுட்டுவிடுவது போல் பார்த்தாள்.

பலவர்மனின் வஞ்சக விழிகள் அவளை அன்புடனும் அனுதாபத்துடனும் பார்த்தன. “மகளே! உன் அழகு இணையற்றது. அதற்குப் படியாத ஆண் மகன் இருக்க முடியாது. அவனுடன் சகஜமாகப் பேசிக் காட்டுப் பகுதியில் உள்ள காவலைச் சிறிது தளர்த்திவிடு. அப்புறம் நடப்பதைப் பார்! இளையபல்லவனுக்குப் பலவர்மன் இளைத்தவனல்லவென்பது தெரியவரும். உனக்கு அவனால் எந்தத் தீங்கும் நேரிடாது மகளே! என் ஒற்றர்கள் சதா அவனைக் கண்காணித்து வருகிறார்கள்.

அவன் அறை வாயிலில் காவல் புரியும் அவனைச் சேர்ந்த கள்வரில் ஒருவனை நம் வசம் இழுத்திருக்கிறேன். சிறிதும் அஞ்சாதே! பலவர்மன் கரம் நீளமானது. எங்கும் எட்டக் கூடியது. உன்மேல் அத்துமீறிக் கையை வைத்தால் இளைய பல்லவன் அதே விநாடி பிணமாகிவிடுவான். பயப்படாதே! சொன்னபடி செய். இன்னும் ஐந்தே நாள்களில் இந்த அக்ஷயமுனை பழைய நிலையை அடையும். நீயும் பழையபடி இதன் மகாராணி போல் சஞ்சரிப்பாய்” என்று சொன்னான் பலவர்மன்.

அவன் சொற்களைக் கேட்ட மஞ்சளழகியின் முகத்தில் புதிய ஒளி ஒன்று பிறந்தது. “சரி தந்தையே” என்று கூறிவிட்டுத் தலையைக் கோதிக்கொண்டு ஆடையைச் சீர்ப்படுத்திக் கொண்டு தன் அறையை நாடினாள் மஞ்சளழகி.

அறைக் கதவைத் திறந்து மிக வேகமாக அதை மூடித் தாழிட்டாள். அவள் தாழிட்டுத் திரும்பியதும் அந்த அறையின் மூலையிருந்த திரைச்சீலையை விலக்கிக் கொண்டு இளையபல்லவன் வெளிவந்தான். அடுத்த கணம் அவன் அணைப்பிலிருந்தாள் மஞ்சளழகி. சலனப்படாத அறை விளக்கு பிணைந்து நின்ற அந்த இருவர் மீதும் தனது பொன்னொளியை வீசியது. அந்தப் பொன்னொளியில் மஞ்சளழகியின் பொன்னிறக் கன்னங்கள் பத்தரை மாற்றுத் தங்கத்தையும் பழிக்கும்படியாகப் பிரகாசித்தன.

அந்தக் கன்னங்களைத் தடவிக் கொடுத்த இளையபல்லவன் அவள் தலைமயிரையும் கோதிவிட்டான். அவள் தனது தலையை நிமிர்த்தி, கண்களை உயர்த்தி இளையபல்லவனை நோக்கினாள். அந்தக் கண்களில் காதலும் இருந்தது. அச்சமும் இருந்தது. காதலைவிட அச்சமும் வியப்பும் அதிகமாயிருந்தன என்று சொன்னாலும் மிகை யாகாது. அத்தகைய உணர்ச்சிகளுடன் சொன்னாள் அவள், “நீங்கள் சொன்னது சரிதான்,” என்று.

“என்ன சொன்னார் தந்தை!” என்று புன்முறுவலுடன் வினவினான் இளையபல்லவன்.

“உங்களை மயக்கச் சொன்னார்?” என்று அவளும் இன்பப் புன்முறுவலை இதழ்களில் தவழவிட்டாள்.

“பைத்தியக்காரர்” என்றான் இளையபல்லவன்.

“ஏனப்படிச் சொல்கிறீர்கள்?”

“என்னை மயக்கும்படி சொன்னாரே போயும் போயும். “

“சொன்னாலென்ன?”

“ஏற்கெனவே மயங்கிக் கிடப்பவனை மயக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது?”

“உம்! மயங்கிக் கிடக்கிறீர்களாக்கும் நீங்கள்?”

“ஆம். “

“இந்தப் பொய் என்னிடம் வேண்டாம். “

“பொய்யென்று உனக்கெப்படித் தெரியும்?”

“உங்கள் கடல் புறாவைப் பார்த்தேன். “

“அதில் எழுதியிருக்கிறதா உன்னிடம் நான் மயங்க வில்லையென்று?”

“திட்டமாக எழுதவில்லை. “

“மறைமுகமாக எழுதியிருக்கிறதாக்கும்?”

“ஆம். “

“என்ன எழுதியிருக்கிறது?”

“அதன் பக்கப் பலகையில் கடல் புறா என்ற பெயர் தெரியப் பெரும் கிளிஞ்சல்களும் சிப்பிகளும் புதைக்கப் பட்டிருக்கின்றன. “

“அதனாலென்ன!”

“கடல் புறாவா அது? காஞ்சனைப் புறாவா?” இதைக் கேட்ட மஞ்சளழகி பெருமூச்செறிந்தாள். பொறாமைப் புயல் மெள்ள அவள் இதயத்தில் வீசுவதை அவன் உணர்ந்தான். உணர்ந்ததால் அவளை வலியத் தழுவினான். “மஞ்சளழகி! உன்னை ஏமாற்ற நான் விரும்பவில்லை. என் மனம் பாலூர்ப் பெருந்துறையிலிருக்கையில் காஞ்சனா தேவியிடம் லயித்தது உண்மை . இங்கு வந்தபின் உன்னிடமும் சிக்கிக்கொண்டது.

மனம் ஒன்றுதான். எனக்கு அது சிக்கி இருக்கும் சிறைகள் இரண்டு. அது எப்பக்கம் இழுபடுமோ தெரியாது. எந்தப் பக்கம் இழு பட்டாலும், எந்தப் பக்கத்தில் அதன் ஆசை நிறைவேறி னாலும், அதில் பூர்த்தியிருக்காதென்பது மட்டும் உண்மை . ஆனால் மஞ்சளழகி, இப்போது என் மனம் காதலில் சிக்கவில்லை . இந்த அக்ஷயமுனையின் நலத்தில், உன் க்ஷேமத்தில் சிக்கியிருக்கிறது. ஆகவே சொல், உன் தந்தை என்ன சொன்னார் என்று?” என அந்தத் தழுவலிலேயே வினவவும் செய்தான்.

அவன் மார்பில் தலையைப் புதைத்த வண்ணம் மஞ்சளழகி தனக்கும் தன் தந்தைக்கும் நடந்த சம்பா ஷணையை விவரித்தாள். இளையபல்லவன், “மஞ்சளழகி! நீ என்னிடம் வைத்திருக்கும் நம்பிக்கை இணையற்றது. அந்த நம்பிக்கைக்கும் உன் காதலுக்கும் நானும் பாத்திரமாக வேண்டும். ஆகவே, உன்னை நம்பிச் சொல்கிறேன். உன் தந்தை யாரென்பது எனக்குத் தெரியும்” என்று மெதுவாகக் கூறினான்.

அதைக் கேட்டதும் துடித்து மஞ்சத்திலிருந்து எழுந்த மஞ்சளழகி, “யார்? யார் என் தந்தை?” என்று குரல் நடுங்க வினவினாள். அந்த எழில் உடலின் இடையைப் பிடித்துக் கைகளால் இழுத்து மீண்டும் அருகே அமர்த்திக்கொண்ட இளையபல்லவன், “அவசரப்படாதே மஞ்சளழகி, இன்னும் ஐந்து நாள் அவகாசம் கொடு, சொல்கிறேன்,” என்றான்.

“ஐந்து நாளா?”

“ஆம். அமாவாசை இரவுவரை அவகாசம் வேண்டும். “

“அன்று என்ன நடக்கும்?”

“அக்ஷயமுனையின் கதி நிர்ணயிக்கப்படும். “

“ஏன்? இன்றே சொன்னாலென்ன?”

“சில அசௌகரியங்கள் இருக்கின்றன. “

“என்ன அசௌகரியம்?”

“பிறகு தெரியும் உனக்கு. “

“இதுதான் நீங்கள் என்னிடம் வைத்திருக்கும் நம்பிக்கையா?”

“நம்பிக்கைக் குறைவாலல்ல நான் எச்சரிக்கையா யிருப்பது. உன் நலனை முன்னிட்டுத்தானிருக்கிறேன். “

“விளங்கச் சொல்லுங்களேன்?” மஞ்சளழகி கெஞ்சி னாள்.
இளையபல்லவன் சிறிது யோசித்தான். “நாளைக் காலையில் கடல் புறாவைப் பார்க்க வா மஞ்சளழகி. அங்கு பேசுவோம். நடக்கப்போவதை ஓரளவு சொல்கிறேன்” என்றான் படைத் தலைவன்.

“கடல்புறாவைப் பார்க்க நான் வரவில்லை. அதன் அழகை நீங்களே பார்த்துப் பார்த்து மகிழ்ச்சியடையுங்கள். “

“அழகைப் பார்க்க வரச்சொல்லவில்லை மஞ்சளழகி, அதன் தளத்தில்தான் நாம் ரகசியமாகப் பேச முடியும். அந்த விசித்திரக் கப்பலை நீயும் பார்க்கலாம்.

மஞ்சளழகி துக்கத்துடன் தலையை ஆட்டினாள். “நாளை மாலை மரக்கலத்துக்கு வா, மஞ்சளழகி. உன் தந்தையின் இஷ்டப்படி நாளைக் காலையில் பகிட்பாரிஸான் மலையிலுள்ள காவலைக் குறைத்துவிடுகிறேன்” என்று கூறிவிட்டு இளையபல்லவன் வெளியேறினான்.

மஞ்சளழகி அன்றிரவு உறங்கவில்லை . புரியாத எத்தனையோ விஷயங்கள் அவள் மனத்தையும் வாட்டி வதைத்தன. மறுநாள் மாலை இளையபல்லவன் சொற்படி மஞ்சளழகி கடல் புறா இருக்குமிடம் சென்று கண்டியத் தேவன் உதவியுடன் அதன் தளத்தில் ஏறி அக்ரமந்திரத்தில் நுழைந்தாள். அன்றைய மாலைக்குப் பிறகு மஞ்சளழகி காணப்படவேயில்லை. அவள் எங்கு மறைந்து போனாள் என்பது யாருக்கும் தெரியவில்லை. அக்ரமந்திரத்தில் நுழைந்த அவள் எப்படி மறைந்தாள் என்பது பெரும் மூடுமந்திரமாய் இருந்தது.

Previous articleRead Kadal Pura Part 2 Ch43 |Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 2 Ch45 |Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here