Home Kadal Pura Read Kadal Pura Part 2 Ch45 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch45 |Sandilyan | TamilNovel.in

118
0
Read Kadal Pura Part 2 Ch45 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 2 Ch45 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch45 |Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

இரண்டாம் பாகம், அத்தியாயம் 45 : பேய்த் திட்டம்.

Read Kadal Pura Part 2 Ch45 |Sandilyan | TamilNovel.in

அக்ஷயமுனைக் கோட்டைக்குள்ளும் கோட்டைக்குப் புறம்பேயிருந்த கடற்கரைப் பகுதியிலும் சுதந்திரப் பறவையாக உலவிச் சிரித்து விளையாடி வந்த மஞ்சளழகி திடீரென இரண்டு மூன்று நாள்கள் எந்த இடத்திலும் தென்படாதிருக்கவே நகர மக்கள் முதலில் அவளுக்கு ஏதேனும் உடல்நலக் குறைவோ என்று அச்ச முற்றார்கள்.

ஆனால் பலவர்மன் மாளிகைக் காவலரில் சிலர் அப்படியேதுமில்லையென்றும் மாளிகையிலேயே மஞ்சளழகி காணப்படவில்லையென்றும் அரசல் புரசலாக விஷயத்தை வெளியிட்டுவிடவே, அவள் ஏன் மறைந்தாள்? எப்படி மறைந்தாள்? எங்கு போனாள்? என்ன ஆனாள் என்பதைப் பற்றி இல்லாத பொல்லாத வதந்திகள் பலவும் நகரத்துக்குள்ளும் புறம்பேயும் உலாவலாயின. இரண்டு நாள்களுக்கு முன்பு கடல் புறாவை நோக்கிச் சென்று அதன் தளத்திலேறியதைப் பார்த்த கொள்ளையர் துணைவிகள் அவளை இளயைபல்லவன் தான் எங்கோ மறைத்து விட்டானென்று பேசிக்கொண்டார்கள்.

இளையபல்ல வனையும் மஞ்சளழகியையும் நெருங்கிய நிலையில் கடற்கரையில் ஏற்கெனவே பார்த்துள்ள கொள்ளையர் துணை மாதர், அவன் அறையில் கள்ளக் காதலின் முடிவையே எண்ணினாலும் அவளை இளையபல்லவன் எங்குதான் மறைத்திருக்க முடியும் என்று பரஸ்பரம் கேட்டுக் கொண்டனர்.

இந்த வதந்தி ஊருக்குள் பரவியும் அதை நகர மக்கள் மட்டும் நம்பவில்லை. மஞ்சளழகியைத் திருமணம் செய்து கொடுக்கவே பலவர்மன் சர்வசித்தமாயிருக்க, மஞ்சளழகியைச் சோழர் படைத்தலைவன் கள்ளத்தனமாக மறைக்க வேண்டிய அவசியமில்லையென்று நகரமக்கள் வாதாடினர்.

தவிர, கடல் புறாவைச் சேர்ந்த மாலுமிகள் ஓரிருவரை விசாரித்ததில், மஞ்சளழகி மாலையில் கடல் புறாவின் தளத்துக்கு வந்ததும் மரக்கலத் தலைவனுக்கான முகப்பு அறையில் (அக்ரமந்திரத்தில்) நுழைந்ததும் உண்மையே என்றாலும் இரவு சற்று ஏறியதுமே அவளை இளையபல்லவன் கோட்டைக்கு அழைத்துச் சென்று விட்டதாகவும் செய்தி கிடைக்கவே, “மஞ்சளழகி மறைந்திருந்தால் மாளிகைக்கு வந்த பின்புதான் மறைந்திருக்க வேண்டும்,” என்று நகர காவலர் முடிவுக்கு வந்தனர்.

இப்படியாக வதந்திகள் பல கிளம்பினாலும் அந்த வதந்திகள் சுட்டிக் காட்டியது இருவரைத்தான். ஒருவன் இளையபல்லவன், மற்றவன் பலவர்மன். ஒருவன் உயிர்க் காதலன், இன்னொருவன் உயிரைவிட அவளை அதிகமாக நேசித்த தந்தை. அந்த இருவரும் அவளுக்கு எந்தவிதத் தீங்கையும் விளைவிக்க மாட்டார்களென்றும், அப்படி யானால் என்ன செய்திருக்கிறார்களென்றும் பலப்பல விதமாகப் பேச்சுகளும் கேள்விகளும் அக்ஷயமுனையில் எழுந்தன. இத்தனை பேச்சுகளிலும் மற்றது எது தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் ஒன்று நிச்சயமாகத் தெரிந்தது. மக்கள் அவளைப் பற்றிப் பெருங் கவலை கொண்டிருந்தார்கள் என்பதுதான் அது.

மக்களும் கொள்ளை மாதரும் மாலுமிகளும் நகரக் காவலரும் கவலை கொண்டு தவித்தாலும் அவளைப் பற்றிப் பலவர்மனோ இளையபல்லவனோ, கவலை ஏதும் காட்டவில்லை. இளையபல்லவன் கவலை காட்டாததன் காரணம் மக்களுக்குப் புரிந்திருந்தது. அடுத்த இரண்டு மூன்று நாள்களில் இளையபல்லவன் மிதமிஞ்சிக்குடித்தான். நகரத்துக்கு மிக அபாயம் விளைவிக்கவல்ல உத்தரவுகளைப் பிறப்பித்தான். ஆகவே, அவன் நிலை குலைந்தவன்; கவலைப்படக் காரணமில்லையென்பதை மக்கள் புரிந்து கொண்டனர்!

பலவர்மன் அப்படியில்லை. அடுத்த நாள்களில் மிகுந்த நிதானத்தையும் ஆழ்ந்த சிந்தனையையும் காட்டினான். அப்பேர்ப்பட்டவன் ஏன் கவலைப்படவில்லை? இந்தக் கேள்வியைத் தான் பலரும் கேட்டார்கள். சிலர் ஊர் நிலையைப் பற்றி விசாரிப்பது போல் மஞ்சளழகியைப் பற்றியும் விசாரித்தார்கள். அந்த விசாரணையைச் சேந்தனே துவங்கினான் பலவர்மனிடம். பொக்கிஷத்தைப் பார்வையிட வந்த சமயத்தில் பெட்டிகளைத் திறக்கப் பலவர்மன் உத்தரவிட்டும் அதை நிறைவேற்றாமலே கேட்டான் சேந்தன், “கோட்டைத் தலைவரே! ஊரில் நடக்கும் விஷயம் உமக்குத் தெரியுமா?” என்று.

“என்ன விஷயம் வணிகரே?” என்று வினவினான் பலவர்மன் முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல்.

“காட்டுப் பகுதியில் படைத்தலைவர் காவலைக் குறைத்துவிட்டார்… ” என்று மென்று விழுங்கினான் சேந்தன்.

“அது அவர் இஷ்டம்,” என்றான் பலவர்மன்.

“உங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லையா?” என்று வியப்புடன் வினவினான் வணிகன்.

“இல்லை,” சாதாரணமாக வந்தது பலவர்மன் பதில்.

“நீங்கள் கோட்டையின் தலைவரல்லவா?”

“ஆமாம். “

“பாதுகாப்பு உமது பொறுப்பல்லவா?”

“அந்தப் பொறுப்பைப் படைத்தலைவரிடம் ஒப்படைத்து விட்டேன். அவர். “

“உமது தளபதியாக்கும். “

“ஆம். “

“ஆகையால் அவர் எந்த உத்தரவை இட்டாலும் தலையிடமாட்டீர்?”

“ஏன் தலையிட வேண்டும்?”

“உங்கள் தலை இப்பொழுதிருக்குமிடத்தில் இருக்க. ” சேந்தன் எரிச்சலைக் காட்டினான்.

“வேறு எங்கு போய்விடும்?” என்று வினவினான் பலவர்மன்.

“போகுமிடம் தெரியாது; போய்விடும் என்பது மட்டும் தெரியும்,” என்றான் சேந்தன்.
“ஏனோ?”

“காட்டுப் பகுதியில் காவல், சாஸ்திரத்துக்குத்தான் இருக்கிறது. அமீர் ஏழெட்டுப் பேர்களுடன் நிற்கிறான். பூர்வகுடிகள் ‘பூ’ என்று ஊதினால் அந்த ஏழெட்டுப் பேரும் பறந்துவிடுவார்கள். பூர்வகுடிகள் உள்ளே நுழைந்தால் இங்கு பல தலைகள் நிலத்தில் உருளும். உமது தலை மட்டுமென்ன, இரும்பா? கத்தியால் வெட்டினால் உருளாதா?”

“உருளும். “

“அதைத் தடுக்க முயலக்கூடாதா?”

“என்ன செய்ய வேண்டும் அதற்கு?”

“மஞ்சளழகியைச் சிறிது வெளியே காட்டுங்கள். “

“எதற்கு?”

“இளையபல்லவர் சுயநிலை அடைய. மஞ்சளழகி மறைந்து விட்டதால்தான் படைத்தலைவர் மதி குலைந்து விட்டதாக மக்கள் நினைக்கிறார்கள். மஞ்சளழகியைக் கண்டால் இளையபல்லவரின் குடி சற்றுத் தேக்கப்படும். மதியும் சரிப்படும். மதி சரிப்பட்டால் இப்படிக் கண்டபடி உத்தரவுகளைப் பிறப்பித்துக் காவலைக் கலைக்க மாட்டார். “

“பலவர்மன் சற்று யோசித்தான். பிறகு சொன்னான்: “வணிகரே! உமது யோசனையில் அர்த்தமிருக்கிறது” என்று.
“மகிழ்ச்சி,” என்றான் சேந்தன்.

“உமக்கு மூளையும் இருக்கிறது,” என்றான் பலவர்மன்.

“அது இப்பொழுதுதான் புரிந்ததாக்கும்!” என்று கேட்டான் சேந்தன் விஷமமாக.

பலவர்மன் அந்த விஷமத்துக்குப் பதிலாக விஷத்தைக் கக்கினான். “வணிகரே, மூளையை அதிகமாக உபயோகப்படுத்த வேண்டாம். உபயோகப்படுத்தி உமக்குச் சம்பந்தமில்லாத விஷயத்தில் தலையிடாதிரும். அப்பொழுதுதான் உமது மூளையும் அதை உள்ளடக்கியிருக்கும் தலையும் மிஞ்சும். இல்லையேல்… ” என்று வாசகத்தை முடிக்காமலே சென்றுவிட்டான் அக்ஷய முனைக் கோட்டையின் தலைவன்.

அவன் பேச்சை எண்ணி எண்ணிக் குமுறினான் சேந்தன். ‘எத்தனை திமிர் இந்தக் கோட்டைத் தலைவனுக்கு?’ என்று உள்ளுக்குள்ளேயே கருவிக் கொண்டு, அவனைப் பழி வாங்கும் நோக்கத்துடன் இளையபல்லவன் கூறுவதை விடத் துரிதமாகவே பலவர்மன் பொக்கிஷத்தை மக்களுக்கு அள்ளி வாரிவிடத் தொடங்கினான். ஆனால் அந்தப் பணத்தையும் லட்சியம் செய்யும் நிலையில் மக்கள் இல்லை.

மூன்று நாள் கழித்து மஞ்சளழகியின் மறைவைக் கூட மறந்துவிடும் நிலை அந்த நகரத்தில் ஏற்பட்டது. மூன்றாம் நாள் இரவிலிருந்தே பகிட்பாரிஸான் காட்டுப் பகுதியில் தொலைதூரத்திலிருந்து பூர்வகுடிகளின் பெரும்டமார ஓசைகள் கேட்கத் துவங்கின. காட்டுப் புறத்தில் எங்கோ தூரத்தில் தீப வெளிச்சமும், அடிக்கடி தெரியத் தொடங்கியது. சிலசமயம் நள்ளிரவையொட்டி ஓரிரு தீபங்கள் கோட்டை மதிலிலிருந்து சற்றுத் தள்ளி இருந்த காட்டு ஓரங்களிலும் தெரியத் தொடங்கின.

இதையெல்லாம் கவனித்த நகர மக்கள் பெரும் கிலியடைந்தனர். காட்டுப் பகுதியில் தூரத்தே கேட்டடமார ஒலிகளும், அடிக்கடி சுடர்விட்ட தீப ஒளிகளும் பதக்குகளின் தாக்குதலுக்குப் பூர்வாங்கமென்பதை நகர மக்கள் அறிந்தேயிருந்தனர். அடுத்த இரண்டு நாள்களில் அமாவாசையும் நெருங்க இருந்ததால், பூர்வகுடிகள் கண்டிப்பாய் நகரத்தைத் தாக்கப் போகிறார்கள் என்ற உணர்வு ஏற்படவே, நகர மக்கள் பீதியும் கொதிப்பும் அடைந்தனர்.

முன்பெல்லாம் இல்லாத தைரியம் தங்களுக்கு இளையபல்லவனால் ஏற்பட்டும், இளையபல்லவன் முயற்சியால் ஆயுதப் பயிற்சி நன்றாகத் தங்களுக்கு அளிக்கப்பட்டும் ஏன் தங்களைப் பாதுகாப்புக்கு படைத்தலைவனோ, அமீரோ அணிவகுத்து நிறுத்தவில்லையென்பது அவர்களுக்குப் புரியாததால் பெரும் கொதிப்படைந்தனர். கொதிப்படைந்த மக்களின் தலைவர் இருவர் அதுபற்றி அமீரை விசாரித்தனர். அமீரிடமிருந்து சரியான பதில் ஏதும் வரவில்லை. “உங்களை உபயோகப்படுத்தும் சமயம் படைத்தலைவருக்குத் தெரியும்” என்று திட்டமாகச் சொல்லி மேலே ஏதும் பேச மறுத்துவிட்டான் அமீர்.

அவனிடம் எதையும் அறியமுடியாத நகர மக்கள் விளக்கம் பெற இளையபல்லவனை அணுகினார்கள். இரு தலைவர்களும் சென்றபோது கையில் மதுக்குப்பியுடன் காட்சியளித்தான் இளையபல்லவன். அவர்களைப் பார்த்ததும் பஞ்சணையில் எழுந்து உட்கார்ந்து, “தெரியும் நீங்கள் வந்திருக்கும் காரியம். இதைப் பிடுங்கிக்கொண்டு போகப் போகிறீர்கள்,” என்று மதுக் குப்பியைக் காட்டினான்.
அவனிருந்த நிலை அவர்களுக்கு வெறுப்பைத் தந்தது. இத்தகைய குடிகாரனை நம்பி, பூர்வகுடிகளையும் விரோ தித்துக்கொண்டு விட்டோமே என்று தங்களையே அவர்கள் நொந்துகொண்டார்கள். இருப்பினும் தலைவரில் ஒருவன் “படைத் தலைவரே!” என்று துவங்கினான்.

“படை, ஏது? தலைவர் ஏது?” வெறிச்சிரிப்பு அறையை ஊடுருவியது.

“அக்ஷயமுனை ஆபத்திலிருக்கிறது… ” என்று இன் னொருவன் ஆரம்பித்தான்.

“இருக்கட்டும்,” என்று இளையபல்லவன் குப்பியின் வாயுடன் தன் வாயைப் பொருத்தி எடுத்தான்.

“பூர்வகுடிகள். ” என்று இழுத்தான் முதலாமவன்.

“பூர்வகுடிகள், ஆம். அவர்கள் தான் பூர்வகுடிகள். நீங்கள் பின்னால் வந்தவர்கள். அவர்கள் ஊரை அவர் களிடம் விட்டுவிடுங்கள். ஓடிப் போய்விடுங்கள். ” என்று தட்டுத் தடுமாறி உளறினான் இளையபல்லவன்.

இரு தலைவரும் மிகுந்த வெறுப்புடன் அவனை நோக்கிவிட்டு அறையிலிருந்து அகன்றனர். மறுநாள் நிலை இன்னும் மோசமாயிற்று. கொள்ளைக்காரர் போர்க்கலங்கள் எல்லாம் இளையபல்லவன் உத்தரவுப்படி எங்கெங்கோ போய்விடவே துறைமுகத்திலும் காவல் இல்லை. காவல் செய்யக் கூடிய கடல் புறாவோ கரையில் இழுபட்டுக் கிடந்தது. எந்தத் திக்கிலும் சரியான காவல் இல்லாததால் சரியான ஆடையில்லாத பிச்சைக்காரியைப் போல் மிகப் பரிதாபமாகக் காணப்பட்டது அக்ஷயமுனை.

காவலை இழந்த துறைமுகத்தில் இரவில் சூளூ இனத்தாரின் படகுகள் நடமாடத் தொடங்கின. அவற்றை ஏதும் செய்ய வேண்டாமென இளையபல்லவன் உத்தர விட்டிருந்ததால் அவற்றினருகே கடல்புறாவின் மாலுமிகளோ படகுகளோ செல்லவில்லை. இதைக் கண்டும் மக்கள் அஞ்சினர். அக்ஷயமுனைக் கோட்டையை எந்தவிதக் கஷ்டமுமின்றி ஆள் சேதமின்றி, கைப்பற்ற அதைவிடச் சிறந்த சமயம் ஏதும் கிடையாதென்பதை அறிந்த மக்கள் கலங்கினர். அதைக்கண்டு ஓரளவு பலவர்மனும் கலங்கினான். அவன் கலக்கத்துக்குக் காரணம் வேறு. அந்தக் காரணத்தைத் தன் மாளிகைத் தோட்டத்தில் அமாவாசைக்கு முதல் நாளிரவு வில் வலனைச் சந்தித்த அதே மரத்தடியில் கூறினான் பலவர்மன்.

அன்றும் ஆந்தையின் அலறல் கேட்டு, தோட்டத்துக்குச் சென்ற பலவர்மன் வில்வலனைக் கண்டதும் காட்ட வேண்டிய மகிழ்ச்சிக்குப் பதில் அச்சத்தையே காட்டினான். “பலவர்மா! நாம் அந்தப் படைத் தலைவனைப் பழிவாங்கும் சமயம் நெருங்கிவிட்டது. ” என்று குதூகலத்துடன் துவங்கிய வில்வலனைக் கவலையுடனும் அச்சத்துடனும் நோக்கிய பலவர்மன், “வில்வலா! இளையபல்லவன் போக்கு எனக்கு எதுவும் பிடிபடவில்லை ,” என்றான்.

“என்ன அவன் போக்கு?” என்று வினவினான் வில்வலன்.

“அவனே இந்த நகரத்தின் காவலைப் பலப்படுத்தினான். “

“ஆம். “

“அவனே இப்பொழுது அதைப் பலவீனப்படுத்தி யிருக்கிறான். “

“நமக்கு நல்லதுதானே?”

“நல்லதுதான்-உண்மையாயிருந்தால்… ”

“உண்மையாயிருக்காதென்று சந்தேகமா?”

“ஆம். “

“அவன் குடிப்பதாகச் சொல்கிறார்களே?”

“அதிகமாகக் குடிக்கிறான். “

“குடிகாரன் உத்தரவுகள் எப்படி இருக்கும்?”

“எப்படியிருக்க வேண்டுமோ அப்படித்தான் இருக் கின்றன. ஆனால் அத்தகைய குடிகாரன் உத்தரவை மற்ற வர்கள் ஏன் நிறைவேற்றுகிறார்கள்?”

வில்வலன் சற்று யோசித்தான். “ஆம், அதை நாம் யோசிக்கத்தான் வேண்டும். இதில் ஏதாவது சூதிருக்குமோ?” என்று வில்வலனும் கவலையுடன் கேட்டான்.

“இருக்கலாம். இருந்தால் நாம் அதற்கு இடம் கொடுக்கக்கூடாது,” என்று பலவர்மன் கூறினான் வில்வலனை உற்று நோக்கி.

“அதற்கு என்ன செய்ய வேண்டும்?”

“இளையபல்லவன் கோட்டையின் காவற் படையையோ மக்கள் படையையோ நடத்தாதிருக்கச் செய்ய வேண்டும். “

“எப்படிச் செய்வது?”

“அதை நான் பார்த்துக் கொள்கிறேன். நாளை இரவு நீ தாக்குதலைத் துவங்கிவிடு!”

“இளையபல்லவன்?”

“என் அறையிலிருப்பான் – பிணமாக,” என்று கூறிய பலவர்மன் அந்தக் காரிருளில் மெள்ள நகைத்தான்.

அந்தப் பயங்கரச் சிரிப்பு மெல்ல இருந்தாலும் பேய்ச் சிரிப்பாக இருந்தது. அந்த விநாடியில் பேயும் வகுக்க அஞ்சும் கொடிய திட்டத்தை வகுத்துவிட்டான் பலவர்மன்.

Previous articleRead Kadal Pura Part 2 Ch44 |Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 2 Ch46 |Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here