Home Kadal Pura Read Kadal Pura Part 2 Ch46 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch46 |Sandilyan | TamilNovel.in

85
0
Read Kadal Pura Part 2 Ch46 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 2 Ch46 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch46 |Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

இரண்டாம் பாகம், அத்தியாயம் 46 : புது வாழ்வு.

Read Kadal Pura Part 2 Ch46 |Sandilyan | TamilNovel.in

மாளிகைத் தோட்டத்தின் மரத்து நிழலில் வில் வலனைச் சந்தித்து, மறுநாளிரவு நகரத்தின் மீது தாக்கு தலைத் துவங்கிவிடும்படி உத்தரவிட்டு, இளையபல்லவன் உயிரையும், அதே அமாவாசை இரவில் ஒழித்துக் கட்டத் திட்டமிட்டு, மீண்டும் தன் அறையை நாடிய பின்பும் பலவர்மன் சிந்தையில் ஏதோ விவரிக்க இயலாத சந்தேகமும் பயமும் ஊடுருவி நின்றன.

காட்டுப்பகுதியில் கோட்டைக் காவலைப் பலவீனப்படுத்தியும் கடற்பகுதியில் காவலே இல்லாமலே அடித்தும் இளையபல்லவன் தன் திட்டங்களுக்கு அனுகூலமாகவே சகலவிதத்திலும் காரியங்களைச் செய்திருந்தும், அந்தக் காரியங்களைக் கண்டு தன் மனம் மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாக ஏன் பயத்தின் வசப்படுகிறது என்று தன்னைத்தானே பலமுறை கேட்டுக்கொண்டான் பலவர்மன்.

தன் மஞ்சத்தில் உட்கார்ந்த வண்ணமே நகரக் காவலையும் பாதுகாப்பையும் குலைத்து இளையபல்லவன் இட்ட விபரீதமான உத்தரவுகள் குடி வெறியில் இடப்பட்ட உத்தரவுகளாகையால் அவை விபரீதமாயிருந்ததில் வியப்பு ஏதுமில்லையென்றாலும், அந்த உத்தரவுகளையும் போரில் வல்ல அமீரும், கண்டியத்தேவனும் எதற்காகச் சிரமேல் ஏற்று நிறைவேற்றுகிறார்கள் என்பது மட்டும் பலவர்மனுக்குச் சிறிதும் புரியவேயில்லை.

போர்களின் சரித்திரத்தைப் பார்க்கும்போது படைத்தலைவர்கள் தவறான உத்தரவுகளைப் பிறப்பித்த சமயங்களில் எல்லாம் உபதலைவர்களும், வீரர்களும் புரட்சி செய்திருப்பதே வழக்கமாயிருந்திருக்க, இளையபல்லவன் விஷயத்தில் மட்டும் அந்தச் சரித்திரம் மாறுபடக் காரணமென்ன வென்று பலமுறை யோசித்த பலவர்மன், விடையேதும் காணாமல் தவித்தான்.

இளையபல்லவன் எந்த முட்டாள் தனமான உத்தரவைப் பிறப்பித்தாலும் அதை மற்றவர்கள் நிறைவேற்றுவது அவனிடத்திலுள்ள பயத்தினாலா, பக்தி யினாலா என்பதை அலசிப் பார்த்தும் ஏதும் புலப்படாமற் போகவே மீண்டும் மீண்டும் சஞ்சலத்துக்கு உள்ளாகி அன்றிரவைத் தூங்காமலே கழித்தான் பலவர்மன். அப்படிப் பல கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும், சஞ்சலத்துக்கும் இலக்கானதால் மறுநாள் விடிந்த அமாவாசைப் பொழுது பலவர்மனுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதற்குப் பதில் பெரும் மலைப்பையே கொடுத்தது.

பெரும் விளைவுகளை ஏற்படுத்தவல்ல இரவுக்குப் பூர்வாங்கமாக முளைத்த அந்த அமாவாசை தினத்தின் காலைப் பொழுதில் மாளிகையின் மாடிக்குச் சென்று அக்ஷயமுனைக் கோட்டையையும் காட்டுப் பகுதியையும் கடற்பகுதியையும் கண்களால் அளவெடுத்த பலவர்மன் நகரத்துக்குள்ளே இருந்த அமைதியைக் கண்டு அசந்து போனான். அந்தக் காலை நேரத்தில் காட்டுப் பகுதிக்குள் ஆகாயத்தை நோக்கி எழுந்து சென்ற புகைமண்டலம் வில்வலனின் வீரர்கள் நகரத்துக்கு அதிக தூரத்தில் இல்லை என்பதைப் புலப்படுத்தியது.

கடற்பகுதியில் தரையில் பாதி இழுபட்டுக் கிடந்த கடற்புறாவைத் தவிர மருந்துக்குக் கூட மரக்கலமொன்று இல்லாததும், எந்த விநாடியிலும் சூளூக்கள் துறைமுகத்துக்குள் நுழைந்து விடலாமென்பதை நிரூபித்தது. இந்த நிலையில் நகர மக்கள் ஏதும் நடக்காதது போல் தங்கள் தினசரி அலுவல்களைக் கவனித்து நடமாடிக் கொண்டிருந்தனர்.

நகரத்துக்குள்ளிருந்த நிலை, யாரும் எந்த நிகழ்ச்சியையும் சமீபத்தில் எதிர்பார்க்க வில்லையென்பதைக் கண்டு ஓரளவு மகிழ்ச்சி அடைந்தாலும், அந்த மகிழ்ச்சி மீண்டும் மீண்டும் மனத்திலிருந்து அறுபட்டுப் போவதற்குக் காரணம் அறியாமல் தவித்தான். அத்தனைத் தவிப்பிலும் இருந்தது அவனுக்கு-தன்னை விட இளையபல்லவனைப் பெரிதாக மதித்து அவனிடம் தங்களை ஒப்படைத்துக்கொண்ட அக்ஷயமுனைக் கோட்டை மக்களுக்கு அன்றிரவு தான் சரியான பாடம் கற்பிக்கப் போவதையும், மறுநாள் முதல் தன்னிடம் அக்ஷய முனை மீண்டும் அடிமைப்பட்டுக் கிடக்கப் போவதையும் நினைத்த பலவர்மன் உள்ளே எழுந்த திருப்திக்கு அறிகுறியாகச் சிறிது புன்முறுவலையும் தனது இதழ்களில் தவழவிட்டுக் கொண்டான்.

அப்படிப் புன்முறுவல் கொண்ட சமயத்தில், “கோட்டைத் தலைவர் காலையில் மகிழ்ச்சியுடனிருப்பது எனக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தனக்குப் பின்னாலிருந்து எழுந்த சொற்களைக் கேட்டுத் திகைத்துத் திரும்பிய பலவர்மன் தன்னை மிகவும் நெருங்கிய வண்ணம் இளையபல்லவன் நிற்பதைக் கண்டதும் திகைப்பை மின்னல் வேகத்தில் மறைத்துக் கொண்டு ஆச்சரியச் சாயையை முகத்தில் படரவிட்டுக் கொண்டான். “நீங்களும் காலையில் எழுந்துவிட்டீர்களா?” என்று ஏதோ கேட்க வேண்டும் என்பதற்காகக் கேட்கவும் செய்தான் பலவர்மன்.

“ஆம், எழுந்துவிட்டேன். நேற்று பூராவும் சரியான உறக்கமில்லை ,” என்று கூறிய இளையபல்லவன் பலவர்மன் முகத்தைக் கூர்ந்து நோக்கினான்.

உணர்ச்சிகளை லேசில் வெளிக்குக் காட்டாத பலவர்மன் முகத்தில் திகைப்பின் குறி வெளிப்படையாகத் தெரிந்தது. “என்ன நேற்றிரவு உறக்கமில்லையா?” என்ற கேள்வி கவலையைக் காட்டும் முறையில் கேட்கப்பட்டாலும் உண்மையில் முகத்தில் தெரிந்த கிலி குரலிலும் பிரதிபலித்தது.

“ஆம். அடியோடு உறக்கமில்லை,” என்றான் இளைய பல்லவன்.

“காரணம்?” கவலையுடனேயே எழுந்தது இந்தக் கேள்வியும்.

“வர வர ஊரில் அமைதி குறைந்து வருகிறது” என்று சுட்டிக் காட்டினான் இளையபல்லவன்.

“அமைதி குறைந்து வருகிறதா?”

“ஆம். “

“எப்படி?”

“மக்கள் சதா இரவிலும் போர்ப்பயிற்சி செய்கிறார்கள். “

“இந்தப் பெரும் பொய்யைக் கேட்டு மலைத்த பலவர்மன், “அப்படியேதுமில்லையே. போர்ப்பயிற்சி, அணிவகுப்பு இவற்றைத்தான் நீங்களே நிறுத்திவிட்டீர் களே?” என்று கூறினான்.

“நான் நிறுத்தினால் யார் கேட்கிறார்கள்?”

“எல்லோரும்தான் கேட்கிறார்கள். “

“அப்படியானால் நேற்றிரவு பூராவும் டமார சத்தம் அடிக்கடி கேட்டதே?”
“காட்டுப் பகுதியிலிருந்து கேட்டிருக்கும். “

“காட்டுப் பகுதியில் டமாரமடிக்க யாரிருக்கிறார்கள்?”

இந்தக் கேள்வியைக் கேட்டதும் மேலும் அசந்து போனான் பலவர்மன். தினம் மிதமீறிக் குடிப்பதால் உண்மையாகவே இளையபல்லவன் ஏதுமறியாமல் இருக் கிறானா, அல்லது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்க்கிறானா என்பதை அறியாத பலவர்மன், “காட்டுப்பகுதியில் பூர்வகுடிகள் நடமாட்டம் அதிகமிருப்பது தெரியாதா உங்களுக்கு?” என்று வினவினான்.

“எனக்கெப்படித் தெரியும்?” சர்வ சாதாரணமாகக் கேட்டான் இளையபல்லவன்.

“நகரப் பாதுகாப்பின் பொறுப்பை ஏற்றுள்ள படைத் தலைவர் நீர். உமக்குத் தெரியாமல் வேறு யாருக்குத் தெரியும்?”

“காட்டுப் பகுதியானால் அமீருக்குத்தான் தெரியும். கடற்பகுதியானால் கண்டியத்தேவரைக் கேட்க வேண்டும். “

“இரண்டிலும் உமக்குச் சம்பந்தமில்லையா?”

“இல்லை. “

“ஏன்?”

“என் உபதலைவர்களை நான் நம்புகிறேன். “
“மேற்பார்வை உமது பொறுப்பல்லவா?”

“என் உபதலைவர்களுக்கு மேற்பார்வை அவசிய மில்லை. “

“அப்படியானால் அடிக்கடி கண்ட உத்தரவுகளை ஏன் பிறப்பிக்கிறீர்கள்?”

“அவசியமென்று தோன்றினால் பிறப்பிப்பேன். “

“காவலைக் காட்டுப் பகுதியில் குறைப்பது அவசியம்!”

“குறைத்தது யார்?”

“நீங்கள்தான். “

“வேண்டுமானால் மீண்டும் பலப்படுத்திவிடுகிறேன். ” என்ற இளையபல்லவன் திடீரெனப் பலவர்மன் போக்கில் ஏற்பட்ட மாறுதலைக் கண்டு உள்ளூர மகிழ்ச்சியடைந்தான்.

“வேண்டாம், வேண்டாம். காவலைப் பலப்படுத்த வேண்டாம். “

“உங்கள் கருத்தை அறிந்துதான் காவலைக் குறைத் தேன். அக்ஷயமுனைக் கோட்டைத் தலைவரின் இதயமறிந்து நடக்கும் அத்தனை புத்திகூட அவருடைய உபதளபதிக்கு இருக்காதென்று நினைத்தீர்களா?” என்று கேட்ட இளையபல்லவன், அந்த உபதளபதி தான்தான் என்பதைச் சுட்டிக்காட்டத் தன் மார்பில் கையால் தட்டிக் கொள்ளவும் செய்தான்.

பலவர்மனின் பிரமிப்பு உச்சிக்குப் போய்க் கொண் டிருந்தது. தன் இதயமறிந்து உத்தரவுகளைப் பிறப்பிப்பதாகச் சொன்ன இளையபல்லவன் மதியிழந்து உளறுகிறானா அல்லது தன்னைப்பார்த்து நகைக்கிறானா என்பது விளங்கவில்லை அக்ஷயமுனைக் கோட்டைத் தலைவனுக்கு. அந்தச் சமயத்தில் இளையபல்லவன் புத்தி பெரும் நிதானத்திலிருந்ததைப் புரிந்துகொண்ட பல வர்மன், அன்று பகல் பூராவும் இளையபல்லவனை அதே தெளிந்த புத்தியுடன் உலாவவிடுவது அபாயமென்ற முடிவுக்கு வந்து “நேற்றிரவு பூராவும் உறக்கமில்லையென்றீர்களே, ஏன்?” என்று பேச்சை மாற்றினான்.

“நேற்றிரவு சரியான மது கிடைக்கவில்லை”, என்று காரணம் கூறினான் இளையபல்லவன்.

“அப்படியா?”

“ஆம். “

“எனக்குச் சொல்லியனுப்பியிருந்தால் நான் அனுப்பி யிருப்பேனே?”

“இப்பொழுதுதான் அனுப்புங்களேன். பகலிலாவது சிறிது உறங்குகிறேன். கண்ணெரிச்சலும் தலைவலியும் அதிகமாயிருக்கிறது” என்றான் இளையபல்லவன்.
அவசியம் அனுப்புவதாகச் சொல்லிப்போன பல வர்மன் சிறந்த மது வகையறாக்களை அடுத்த சில நிமிஷங்களுக்குள் அனுப்பி வைத்தான். அந்த மதுவில் பெரும்பாகத்தை அருந்திவிட்டுப் பஞ்சணையில் படுத்த இளையபல்லவன் உச்சிவேளை கிட்டிய பொழுதுகூட எழுந்திருக்கவேயில்லை.

இளையபல்லவனையும் இளையபல்லவன் அறைக்கு வந்து போவோர்களையும் கண்காணிக்கப் பலவர்மன் நியமித்திருந்த ஒற்றர்கள் மிகவும் மகிழ்ச்சி தரும் செய்திகளையே அவனுக்குக் கொண்டு சென்றனர். உச்சிவேளை வரையில் உறங்கிய இளையபல்லவனை எழுப்ப முயன்ற அமீரும் கண்டியத்தேவனும் எப்படி நடத்தப்பட்டார்களென்பதைக் கேள்விப்பட்ட பலவர்மன் பெரும் பூரிப்படைந்தான். அந்தச் செய்தியைக் கொண்டு வந்த ஒற்றனை ஒரு முறைக்கு இருமுறையாக அதைப் பற்றி விசாரிக்கவும் செய்தான்.

“உண்மையாக அப்படியா நடத்தினான் இளையபல்லவன் அமீரையும் கண்டியத்தேவனையும்?” என்று விசாரித்தான் பலவர்மன்.

வணங்கி நின்ற ஒற்றன் சொன்னான், “ஆம் பிரபு! அப்படித்தான் நடத்தினார் படைத்தலைவர்” என்று.

“அமீரைக்கூடவா?” என்று வியப்புக் குரலிலும் மண்ட விசாரித்தான் பலவர்மன்.

“அமீர்தான் முதலில் வந்தார். அவர்தான் மிகவும் கேவலப்படுத்தப்பட்டார்”, என்றான் ஒற்றன்.

“எப்பொழுது வந்தான் அமீர்?”
“உச்சி வேளைக்குச் சற்று முன்பு. “

“வந்து என்ன கேட்டான்?”

“அது தெரியாது. உள்ளே சென்றார். ஒரு விநாடிக் கெல்லாம் போ வெளியே’ என்ற இளையபல்லவன் வெறிக் கூச்சல் கேட்டது. அமீரைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளிக் கொண்டு அறைக்கு வெளியே வந்தார் இளையபல்லவர். “

“பிறகு?”

“காட்டுப் பகுதியில் பூர்வகுடிகள் நெருங்குகிறார்கள் என்று ஆத்திரத்துடன் கூவினார் அமீர். “

“உம். “

“நெருங்கினால் நெருங்கட்டும், போய்விடு. நெருங்கி னால் இந்த ஊர் போகும். இந்த ஊர் உன் பாட்டன் வீட்டுச் சொத்தா என்று இளையபல்லவர் கூவிவிட்டு உள்ளே சென்று பஞ்சணையில் விழுந்தார்.

“பிறகு?”

“அமீர் இளையபல்லவரைச் சபித்துக்கொண்டே சென்றார். “

“என்ன சபித்தார்?”
“எப்படியாவது ஒழியட்டும். நான் போகிறேன் – நாளையே இந்த நகரத்தைவிட்டு என்று இரைந்துவிட்டுச் சென்றார். “

பலவர்மன் ஆனந்தத்தின் வசப்பட்டான். “கண்டியத் தேவன் அடுத்தபடி வந்தானா?” என்று விசாரித்தான் அந்த ஆனந்தம் குரலிலும் பரிமளிக்க.

“ஆம் வந்தார். அவருக்கும் கிட்டத்தட்ட அதே கதிதான்” என்றான் ஒற்றன்.

“கிட்டத்தட்ட என்றால்?”

“இவரைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளவில்லை. அவராகவே ஓடிவிட்டார்.

ஒற்றனின் இந்தப் பதிலால் ஏற்பட்ட ஆனந்தத்தின் ஊடே ஆழ்ந்த சிந்தனையிலும் இறங்கினான் பலவர்மன். தனக்கு அனுகூலமாகவே சகல காரியங்களும் நடந்து வருவது அவனுக்குப் பெரும் ஆனந்தத்தை அளித்தாலும் எதற்கும் தான் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வந்தான். அன்று பகல் பூராவும் இளையபல்லவனை மட்டுமின்றி அமீரையும் கண்டியத்தேவனையும்கூடக் கண்காணிக்க வேண்டிய அவசியத்தையும் உணர்ந்தான் பலவர்மன். அவர்கள் மீதும் தனது ஒற்றர்களை ஏவினான்.

அன்று பகல் பூராவும் ஒற்றர்கள் கொண்டு வந்த செய்தி அவன் ஆறுதலை அதிகரிக்கவே செய்தது. காட்டுப் பகுதியில் அன்று மாலை வரையில் அமீர் காவலை அதிகப்படுத்தவில்லையென்பதை அறிந்தான் பலவர்மன். அத்துடன் கடற்புறாவின் நிலையிலும் எந்த மாறுதலும் இல்லையென்பதையும் ஒற்றர் மூலமும் தானே நேரில் சென்றும் கண்டறிந்ததால் ஓரளவு நிம்மதியையும் அடைந்தான்.

இளையபல்லவனும் அன்றையப் பொழுதை மன நிம்மதியுடன் கழித்தான். உச்சிவேளை தாண்டி நீண்ட நேரம் கழித்து எழுந்திருந்த இளையபல்லவன் கீழே நீராடுமிடம் சென்று ஊழியர்களைக் கொண்டு நன்றாக மங்களஸ்நானம் செய்து புத்தாடை உடுத்தான். தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டு, மீண்டும் தன் அறை சென்று நிதானமாய் அறுசுவை உண்டியருந்தினான்.

பிறகு மறுபடியும் லேசாக மதுவருந்திவிட்டுப் படுத்து உறங்கினான். இதையெல்லாம் ஒற்றர் மூலம் அறிந்த பலவர்மன், ‘நல்ல சுகவாசி இவன். இப்பேர்ப்பட்டவன் எப்படிப் படைத்தலைவனானான்? அதுவும் சோழ நாட்டுப் படைத்தலைவர்களில் சிறந்தவன் என்று எப்படிப் பெயர் வாங்கினான்? சுகசாலிக்கும் உழைப்புக்கும் சம்பந்தம் சிறிதும் இருக்க முடியாதே’ என்று தனக்குத்தானே

சொல்லிக்கொண்டு, ‘எப்படியிருந்தாலென்ன? இன்று பகல் மட்டும்தானே இவனுக்கு ஆயுள் இருக்கிறது’, என்று நினைத்துச் சந்துஷ்டியடைந்தான். அன்று மாலை வரையில் இளையபல்லவன் அறையைவிட்டு அகல வில்லை யென்பதையும் அவனை உச்சிவேளைக்குப் பிறகயாரும் சந்திக்கவில்லையென்பதையும் உணர்ந்த பல வர்மன் அன்றிரவு தான் தீட்டியிருந்த பயங்கரத் திட்டத்தை நிறைவேற்றும் வேலையில் முனைந்தான்.

தன்னிடம் புது மது வகையறாக்கள் வந்திருப்பதாகவும், தனது அறையிலேயே உணவருந்த வேண்டுமென்றும் இளையபல்லவனுக்கு அன்று மாலையில் அழைப்பு விடுத்தான் பல வர்மன். அந்த அழைப்பைத் தங்கு தடையில்லாமல் இளையபல்லவன் ஏற்றுவிட்டான் என்பதை வந்து சொன்ன ஒற்றனுக்கு வெகுமதியாக ஒரு பணமுடிப்பும் அளித்தான்.

அமாவாசை இரவு மெள்ள மெள்ள நுழையத் தொடங்கியது. மாலைப் பொழுதையும் இரவு நெருங்குவதையும் போஜ மன்னன் சபையில் வர்ணித்த காளிதாசன், ‘சநை சநை: அனங்க!’- (இரவு மெள்ள மெள்ள அணுகியது. பருவப்பெண்களை மன்மதனும் மெள்ள மெள்ள அணுகினான்) என்று வர்ணித்தான்.

அக்ஷயமுனைக் கோட்டையின் அந்த அமாவாசை இரவில் நகருக்குள் புகுந்தது சிங்கார ரசமல்ல, அணுகியவன் அனங்கனான மன்மதனு மல்ல. கொடிய போர்ப் பிசாசு புகுந்தது அந்த நகருக்குள்ளே. அது புகப்போவதற்குப் பூர்வாங்க முரசொலிகள் காட்டுக்குள் வெகு அருகில் சப்தித்தன. அந்தச் சத்தத்தைப் பற்றி அறவே கவலைப்படாமல் பலவர்மனின் அந்தரங்க அறையை நாடிச் சென்றான் இளையபல்லவன்.

பலவர்மன் அறையில் ஒரு பெரும் அரசனுக்கு வேண்டிய விருந்து இளையபல்லவன் கண்ணெதிரே காட்சியளித்தது. அந்த அறுசுவை உண்டிக்கு அருகே காணப்பட்ட விதவிதமான மதுக்குப்பிகளும் கலயங்களும் பொற்கிண்ணங்களும் அங்கிருந்த மங்கலான விளக் கொளியில் பலப்பல வர்ண ஜாலங்களைக் கிளப்பிக் கொண் டிருந்தன.

அறை மூலையிலும் உணவு மஞ்சத்துக்கு இரு புறங்களிலுமிருந்த தீபங்களின் சுடர்கள் வேண்டு மென்றே இழுத்து விடப்பட்டன போல மிகவும் எழிலுடன் எரிந்து அந்த அறைக்குப் பெரும் சோபையைக் கொடுத்தன. அறையில் நுழைந்த இளையபல்லவன் அந்த ஏற்பாடு களைக் கண்டு சிறிது வியப்பைக் காட்டினான். அவனை முக மலர்ச்சியுடன் வரவேற்ற பலவர்மன், “வரவேண்டும் வரவேண்டும். நாம் இருவரும் சேர்ந்து உணவருந்தி நாளாகிறது,” என்றான்.

“நான் வந்தது உணவருந்த அல்ல,” என்ற இளைய பல்லவன் பதில் சட்டென்று அதிர்ச்சியைத் தந்தது பல வர்மனுக்கு. அந்தக் குரலிலிருந்த விபரீத ஒலி அவனுக்குத் திகிலை அளித்தது.

“வேறெதற்கு வந்தீர்கள்?” என்று கேட்டான் அவன்.

“மது அருந்த!” வெறியுடன் கூறினான் இளைய பல்லவன்.

பலவர்மன் முகத்தில் சாந்தியின் சாயை படர்ந்தது. “மது இல்லாமல் உங்களை அழைப்பேனா? சிறிது உணவு அருந்திவிட்டுப் பிறகு மது அருந்தலாம்,” என்று உபசரித்த வண்ணம் இளையபல்லவனைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்று ஆசனத்தில் அமர்த்தித் தானும் அமர்ந்தான். அங்கு உணவு பரிமாற வந்த ஊழியனை வெளியே போகச் சொன்ன பலவர்மன் தன் கைகளாலேயே இளையபல்லவனுக்கு உணவும் மதுவையும் கொடுத்தான்.

உணவைச் சிறிதே உண்ட இளையபல்லவன் மதுவை மெள்ள மெள்ள உறிஞ்சத் தொடங்கியதன்றி உறிஞ்ச உறிஞ்ச அதிலேயே அதிக ஆவலையும் காட்டினான். “இத்தனை சிறந்த மது இருப்பதை ஏன் முன்னமே சொல்லி அனுப்பவில்லை? நான் என் அறையில் குடிக்காமல் வந்திருப்பேன். கொஞ்சம் அருந்தியதும் மயக்கம் வருகிறதே” என்று கூறி அடுத்து இரண்டு கிண்ணங்களைக் காலி செய்ததும் தலை துவண்டு மஞ்சத்தில் சாய்ந்தான்.

அடுத்த விநாடி பலவர்மன் சரசரவென்று எழுந்து இளையபல்லவனை இரண்டு மூன்று முறை அசைத்துப் பார்த்தான். இளையபல்லவன் அசையவுமில்லை, கண்களைத் திறக்கவுமில்லை. பலவர்மன் மெள்ள தன் அங்கியிலிருந்து சிறு சிமிழ் ஒன்றை எடுத்து அதிலிருந்த மஞ்சள் நிறப் பொடியை எதிரே இருந்த கிண்ணத்தின் மதுவில் கலக்கினான். பிறகு மெள்ள இளையபல்லவன் கண்களைச் சிறிது நீர் கொண்டு துடைத்தான்.

“இளையபல்லவரே! இதையும் அருந்துங்கள் இந்தாருங்கள்” என்று அந்தக் கோப்பையை இளையபல்லவன் கையில் கொடுத்தான். இளையபல்லவன் மெள்ளக் கண்ணைத் திறந்து மிரள மிரள விழித்தான். பிறகு மதுக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு தள்ளாடித் தள்ளாடி நடந்து அறைக்கதவை நோக்கி நடந்தான். அறைக் கதவை நோக்கி, பலவர்மனுக்கு முதுகைக் காட்டிய வண்ணம் விஷம் நிரம்பிய அந்த மதுக்கிண்ணத்தை வாயருகே கொண்டு சென்றான். அறையைத் தாழிட முயன்றான்.

அடுத்த விநாடி மதுவற்ற மதுக்கிண்ணம் மேலே பறந்தது. கூரையில் ‘கிளாங்’ என்று தட்டி ஒலியெழுப்பி அறை மூலையில் விழுந்தது. இளையபல்லவன் உடல் அந்தத் தாழிட்ட கதவின் மீது சாய்ந்தது, துவண்டது, தொப்பென்று கீழே சுருண்டு விழுந்தது. பலவர்மன் அறை மூலைக்கு ஓடிக் கிண்ணத்தை எடுத்துப் பார்த்தான். அதிலிருந்த மதுவில் ஒரு துளிகூட மீதியில்லை. அந்த மூலையிலிருந்த அறைக் கதவை நோக்கினான். அதன் கீழே கிடந்தது இளையபல்லவன் சடலம்-ஆடாமல் அசையாமல். முகத்தில் வெற்றிக்குறி உலாவக் கதவிடம் சென்று இளையபல்லவன் உடலை இருமுறை காலால் உதைத்துப் பார்த்தான் பலவர்மன்.

அங்கங்கள் உயிரின்றிச் செயலிழந்து கிடந்தன. அங்கிருந்து அறை நடுவே வந்த பலவர்மன் மதுக்கிண்ணமொன்றைக் கையிலெடுத்துக் கொண்டு, “ஒழிந்தான் என் விரோதி! இந்த இரவு முதல் அக்ஷயமுனைக்குப் புதுவாழ்வு துவங்குகிறது, என்று இரைந்து கூவி வாயில் கிண்ணத்தை வைத்து மதுவை உறிஞ்சினான். அதேசமயத்தில் வெளியே காட்டுப் பகுதியில் பூர்வகுடிகளின் பலத்த கூச்சல் எழுந்தது. சில விநாடிகள் மதுக்கிண்ணத்துடன் ஆசனத்தில் அமர்ந்த பலவர்மன் வெளியே கேட்ட கூச்சலைக் கேட்டு மிகுந்த திருப்தியுடன், “பூர்வகுடிகள் நெருங்கி விட்டார்கள். சண்டையை, இல்லை இல்லை, இந்த நகர மக்களின் அழிவை நான் மாடிக்குச் சென்று பார்க்கிறேன்” என்று இரைந்து கூறிக்கொண்டு ஆசனத்தை விட்டு எழுந்திருக்க முயன்ற பலவர்மன் அடுத்த விநாடி பேரதிர்ச்சியுற்றான்.

“ஆசனத்தை விட்டு அகலாதே” என்ற இளையபல்லவன் குரல் அந்த அறையைப் பயங்கரமாக ஊடுருவிச் சென்றது. கதவிருந்த இடத்தை நடுக்கத்துடன் நோக்கினான் பலவர்மன். நீண்ட கத்தியை உருவிப் பிடித்த வண்ணம் கதவில் சாய்ந்துகொண்டு அலட்சியப் புன்முறுவலுடன் நின்றான் இளையபல்லவன். “உண்மையையே கூறினாய் பலவர்மா! இன்றுமுதல் அக்ஷயமுனைக்குப் புதுவாழ்வு தான்” என்ற சொற்களும் இளையபல்லவன் வாயிலிருந்து இகழ்ச்சியுடன் உதிர்ந்தன.

Previous articleRead Kadal Pura Part 2 Ch45 |Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 2 Ch47 |Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here