Home Kadal Pura Read Kadal Pura Part 2 Ch48 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch48 |Sandilyan | TamilNovel.in

125
0
Read Kadal Pura Part 2 Ch48 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 2 Ch48 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch48 |Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

இரண்டாம் பாகம், அத்தியாயம் 48 :தர்மம் நிரந்தரம்.

Read Kadal Pura Part 2 Ch48 |Sandilyan | TamilNovel.in

மாளிகையின் மாடித்தளத்திலிருந்து சோழர் படைத் தலைவன் காட்டிய காட்சியைக் கண்டதால் பேரதிர்ச்சியுற்று, தலைசுழன்று மயக்கமுற்ற பலவர்மன் மீண்டும் கண்விழித்தபோது தனது அந்தரங்க அறையின் மஞ்சத்தி லேயே தான் சாய்ந்து கிடப்பதை உணர்ந்து நாற்புறமும் பார்த்துப் பார்த்துச் சில விநாடிகள் மிரள மிரள விழித்தான்.

அந்தச் சமயத்திலும் இளையபல்லவன் வாளை உருவிப் பிடித்த வண்ணம் தாழிட்ட கதவுக்கருகில் நின்றிருப்பதைக் கண்டதும் தான் கண்டது ஒருவேளை கனவோ அல்லது சித்தப் பிரமைதான் அத்தகைய காட்சிகளைத் தன் கண்களின் முன்பாக உலாவ விட்டதோ என்று எண்ணி ஏதும் விளங்காததால் விளக்கத்துக்கு இளையபல்லவனையே எதிர்நோக்கினான்.

கதவுக்கருகில் நின்று கொண்டிருந்த இளையபல்லவனின் அங்கியின் மேல் பாகம் சொட்டச் சொட்ட நனைந்து குருதிபோல் சிவந்து கிடப்பதைக் கண்டதும் ஓரளவு சுரணை வரப்பெற்று இளையபல்லவன் கையாண்ட தந்திரத்தையும் புரிந்து கொண்ட பலவர்மன் தான் எத்தனையோ எச்சரிக்கையுடன் நடந்துகொண்ட போதிலும் தன்னை அந்தச் சோழநாட்டவன் ஏமாற்றிவிட்டதை எண்ணிப் பார்த்துப் பெரும் கோபத்தையும் அடைந்தான்.

பலவர்மன் கண்கள் பதிந்த இடத்தையும் அவன் முகத்தில் உண்டான குழப்பம், கோபம் முதலான குறிகளையும் கண்ட படைத்தலைவன் தனது முகத்தில் உணர்ச்சி எதையும் காட்டாமலே சொன்னான்: “பலவர்மா! உனக்கு விவேகம் அதிகமில்லையென்று சொன்னேனே. அது உண்மையென்பதை இப்பொழு தேனும் புரிந்துகொண்டாயா?”

உணர்ச்சியற்ற வறண்ட குரலில் உதிர்த்த அந்தச் சொற்களைக் கேட்ட பலவர்மன் கோபத்தின் வசப்பட்டு, “புரிந்துகொள்வதற்கு என்ன இருக்கிறது!” என்று சீறி விழுந்தான். மூளை பெரிதும் குழம்பி நின்ற அந்த நிலையிலும்.

“விவேகமிருந்தால் விவேகத்தின் கண்கள் உனக்குப் பல விஷயங்களைப் புரிய வைத்திருக்கும் பலவர்மா! உதாரணமாக நான் உன்னுடன் உணவருந்தும்போது உணவருந்த மட்டும் நான் வரவில்லையென்பதைப் புரிந்து கொண்டிருப்பாய்” என்றான் இளையபல்லவன்.

“எப்படி?” சீற்றத்துடன் எழுந்தது இந்த ஒற்றைச் சொல்லும் பலவர்மன் வாயிலிருந்து.

“உன்னுடன் உணவருந்த வந்தபோது இடைக் கச்சையில் வாளைக் கட்டியிருந்தேன். குறுவாளையும் செருகியிருந்தேன். உணவருந்த வருபவன் ஆயுதபாணியாக ஏன் வரவேண்டும் என்பதை நீ யோசித்திருக்க வேண்டும். அப்படித்தான் வந்தாலும் உணவருந்தும் சமயத்தில் வாளைக் கழற்றி அப்புறம் வைப்பது வீரர்கள் வழக்க மில்லையா? அப்படிக் கழற்றாததையாவது நீ கவனித்திருக்கலாம்! அதைத்தான் கவனிக்கவில்லை; நான் இருமுறை மது அருந்தியபின் பூர்ணமாக நிதானமிழந்து விட்டேனா என்பதை நிதானித்துச் சோதித்தும் பார்த்திருக்கலாம். அதைப் பார்க்காவிட்டாலும், விஷத்தை நீ கிண்ணத்தில் கலந்த போதாவது என் முகத்தை விட்டு ஏன் கண்களை எடுத்திருக்கக் கூடாது.

கொஞ்சம் இதையெல்லாம் புரிந்து கொண்டு ஒரு விநாடிக்கு முன் மது மயக்கத்திலிருப்பவன் விஷக்கிண்ணத்தைத் தூக்கிக்கொண்டு நடப்பதைப் பார்த்த பின்பு ஏதோ எதிர்பாராத விபரீதம் நடந்துவிட்டது என்பதையாவது உணர்ந்து கொண்டிருக்கலாம். எதையும் நீ உணரவில்லை . இந்த இரவு அக்ஷயமுனை, எப்படியும் உன் கைவசமாகிவிடும்; உன் திட்டங்கள் தடையின்றி நிறை வேறிவிடும் என்ற மனக்கோட்டையில், மனக்கோட்டை விளைவித்த மனப்பிராந்தியில் மனிதர்கள் நடவடிக்கையில் கவனிக்க வேண்டிய பல சிறு விஷயங்களை நீ கவனிக்க வில்லை. அதன் விளைவுதான் உன்னுடைய இந்த நிலை” என்றான் இளையபல்லவன்.

“மாடியில் நான் கண்டது… கண்டது… ” என்று குழறினான் பலவர்மன் நடுங்கும் குரலில்.

“நீ கண்டது, உன் திட்டங்களின் குலைவு. நீ கண்டது சூழ்ச்சின் வீழ்ச்சி. அறத்தின் எழுச்சி. இடும்பனையும், வில்வலனையும் கொண்டு மக்களையும், என்னையும் பழிவாங்கி விடலாமென மிகுந்த ரகசியத்துடன் திட்டமிட்டாய் பலவர்மா! அந்த இரகசியத்தை உடைக்க நானொருவன் இருக்கிறேன் என்பதை மட்டும் நீ எண்ணிப் பார்க்கவில்லை. இடும்பனையும் சூளூக்களையும் கடற் புறத்திலும், வில்வலனையும் பதக்குகளையும் காட்டுப் புறத்திலும் இன்றைய இரவில் இந்த அமாவாசை இரவில் தாக்க ஏற்பாடு செய்தாய். அந்தத் திட்டம் எனக்குத் தெரியாதென்று நினைத்தாய். அந்த அறிவீனத்திலேயே உன்னை இருத்த நான் தீர்மானித்தேன்.

ஆகவே கடற்புறாவின் அமைப்பை மாற்ற நான் ஏற்கெனவே செய்த திட்டத்தை எல்லோர் எதிரிலும் பறைசாற்றினேன். மாற்றியமைக்க ஒரு மாதம் ஆகட்டும் என்று கண்டியத் தேவனிடமும் சொன்னேன். அத்தனை விஷயங்களும் உன் காதுக்கு எட்டும் என்பது எனக்குத் தெரியும். அது மட்டுமா? நகரத்திலும் காவலைக் குறைத்தேன். அஜாக்கிரதையை மேலுக்குக் காட்டும்படி அமீருக்குக் கட்டளையிட்டேன். நாங்கள் எச்சரிக்கை இழந்துவிட்டதாக நீ நினைத்தாய். ஏற்பாடுகளை மந்தப்படுத்திவிட்டதாக நீ மகிழ்ந்தாய். நினைக்கட்டும், மகிழட்டும் என்று அனுமதித்தேன். ஆனால் அமீருக்குப் பயங்கரமான உத்தரவுகளைத் தவிர ரகசியமான உத்தரவுகளும் இருந்தன. மக்களையும் வீரர்களையும் இரு கூறுகளாகப் பிரித்தோம். இருவிதமாக அவர்களைச் சண்டைக்குத் தயார் செய்தோம்.

திடீரெனப் போர் ஏற்பாடுகளை நிறுத்தியது அவர்களுக்கும் முதலில் பிரமையளித்தது. ஆனால் ரகசிய உத்தரவுகள் அனுப்பப்பட்டன. அது அனுப்பப்பட்ட முறை வாய் வாயிலாக உபதலைவர்களுக்கு மட்டும் அனுப்பினேன். ஒவ்வோர் உபதலைவனும் மேலுக்கு அலட்சியமாகவும் உள்ளுக்குள் எச்சரிக்கையுடனும் நடந்து கொண்டான். காட்டுப் பகுதியைப் பார்த்தாயா பலவர்மா? மறைக்கப்பட்ட விற்கள் திடீரெனக் கோட்டைத் தளத்திலிருந்து மந்திரத்தால் எழுப்பப்பட்டவை போல் எழுந்து அம்பு மழை பொழிந்ததைக் கவனித்தாயா?” என்று வினவினான் இளையபல்லவன்.

பலவர்மன் மனமுடைந்து இளையபல்லவனை ஏறிட்டு நோக்கினான். “அந்த விற்கள்? யந்திர விற்கள்…. ” என்று ஏதோ கேட்டான்.

“ஆம் பலவர்மா. அவை யந்திர விற்கள் தான். அவற்றை எழுப்பவும் படுக்க வைக்கவும் கீழே மர உருளை வண்டிகள் இருந்தன. அவை சிதறிக் கிடப்பதைப் பார்த்த உன் ஒற்றர்கள் அவை பயனற்றவை என்று எண்ணினார்கள். அவைகளை இயக்கும் வீரர்கள் அங்கில்லாததையும் கண்டதும் காவல் அடியோடு அற்றுவிட்டது என்று எண்ணினார்கள்.

ஆனால் கொம்பு ஒன்று பலமாக ஊதப்பட்டதும் காவலர் கோட்டை மதிலுக்கு விரைய அவர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. சண்டை துவங்க அமீர் கொம்பு ஊதியதும், நான் பதிலுக்கு இங்கிருந்து கொம்பு ஊதுவதாக எங்களுக்குள் ஏற்பாடு இருந்தது. முதல் கொம்பு வீரர்களை மதில்மேல் ஏற்றும்; மக்களை ஊர்ப் பாதுகாப்புக்குத் துரிதப்படுத்தும். இரண்டாவது கொம்பு ஊதப்பட்டது போர் துவங்கத் தயாராகும் உத்தரவைக் குறித்தது. மூன்றாவது கொம்பு போர் துவங்கிவிட்டதைக் குறிப்பது. இதையெல்லாம் நீ பார்த்தாய், கேட்டாய் பலவர்மா! மதிலிலிருந்து எரியம்புகள் சீறிச் சென்றதைப் பார்த்தாயல்லவா? காடு எரிந்ததைக் கவனித்தாயல்லவா?”

“பார்த்தேன், கவனித்தேன். “

“சாதாரண அம்பு மழை காட்டுப் பகுதியின் மறைவி லிருந்து வெளிவந்த பூர்வகுடிகளைக் கொல்ல. தீயம்பு மழை அவர்களுக்கு மீண்டும் காடு புகலிடமளிக்காதிருக்கக் காட்டை முடிந்த வரையில் கொளுத்திவிட. “

இந்தப் பயங்கர ஏற்பாடுகளைக் கேட்ட பலவர்மன் திகைத்தான். காட்டுக்கும் மதில் சுவருக்கும் இடையிலிருந்த மரங்களை அமீர் வெட்டி அதை வெறும் பொட்டல் வெளியாக அடித்த காரணத்தைச் சந்தேகமறப் புரிந்து கொண்டான் பலவர்மன். அந்த இடைவெளி உண்மையில் பதக்குகளின் மயானவெளி என்பதைப் புரிந்துகொண்டு நடுங்கினான்.

அந்த நடுக்கத்தை அதிகப்படுத்தக் காட்டுப் பகுதியிலிருந்து பலர் வீறிட்டு அலறும் சத்தம் அந்த அறைக்குள்ளும் பயங்கரமாகப் புகுந்தது. “இடும்பனின் கப்பல்கள்… ” என்று ஈனசுரத்தில் கேட்டான் பலவர்மன்.

“கொளுத்தப்பட்டதைக் கடற்பகுதியில் நீ காண வில்லையா?” என்று சர்வ சாதாரணமாக வினவினான் இளையபல்லவன்.

பலவர்மன் இடிந்து ஆசனத்தில் சாய்ந்தான். “கண்டேன். ஆனால்… ” என்று ஏதோ சொல்ல முற் பட்டான்.

“கடற்புறாதான் நீரில் மிதக்கவில்லையே; சூளூக்களின் கப்பல்களை யார் கொளுத்தியது என்றுதானே கேட்கிறாய் பலவர்மா?” என்று இடிந்து உட்கார்ந்து விட்ட பலவர்மனின் கேள்வியைத் தானே வெளியிட்ட கருணாகரபல்லவன், “கடற்புறாவின் சக்தியை உனக்குக் காட்டினேன் பலவர்மா! ஆனால் முழுதும் காட்டவில்லை. நின்ற நிலையிலேயே கப்பல்களுடன் போரிடும் சாதனங்கள் கடற்புறாவில் இருக்கின்றன.

அபாயம் வரும்போது சாதுவும் துஷ்டனாகிறான் பலவர்மா. அது போல்தான் கடற்புறாவும். புறா சாதுவான பட்சி; ஆனால் அவசியம் நேரிடும் போது கழுகைவிடக் கொடிய முறையில் தாக்கும் வன்மை கடற்புறாவில் இருக்கிறது. நாளைக் காலையில் உனக்குக் காட்டுகிறேன்” என்று கூறினான்.

படைத் தலைவன் சொல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வாளென பலவர்மன் இதயத்தைத் துளைத்தது. அவன் கோபம் எல்லை கடந்தது. “காலை வரை ஏன் காத்திருக்க வேண்டும்?” என்று கேட்டான் பிரமை தட்டிய குரலில்.

“இன்றிரவு கடற்கரையில் யாரும் உலாவ முடியாது. “

“ஏன்? ஏன்?”

“கடற்புறாவிūன் எரியம்புகள் கடற்கரைப் பகுதிகளில் யாரையும் அணுகவொட்டா. “

“கொள்ளை மாதர்கள். “

“இரவின் ஆரம்பத்திலேயே நகருக்குள் அழைத்து வரப்பட்டார்கள். “

“எனக்குத் தெரியாதே. “

“நீ முக்கிய அலுவலாக இருந்தாய் பலவர்மா. ஒற்றர் களைச் சந்திக்கக்கூட உனக்கு அவகாசமில்லை. அவகாச மிருந்தாலும் பயனில்லை . “

“என்ன சொல்லுகிறாய்?”

“என்னைக் கொல்லும் முக்கிய பணியில் ஈடு பட்டிருந்ததால் மற்ற விஷயங்களை மறந்தாய். உன்னை இங்கு ஒற்றர் யாராவது சந்திக்க வந்தால் சிறை செய்து விடும்படி என் வீரர்களுக்கு உத்தரவிட்டிருந்தேன். “

“உன் வீரர்களா?”

“ஆம். என்னை இந்த அறைக்குள் வரவழைத்ததும் இந்த மாளிகையை என் வீரர்கள் வசப்படுத்திக் கொண்டார்கள். இப்பொழுது மாளிகை என் வசமிருக்கிறது. “

பலவர்மனின் திகைப்பு எல்லைமீறிப் போய்க் கொண்டிருந்தது. மஞ்சத்தில் சாய்ந்து மிரள மிரள விழித்தான். “அப்படியானால் நான் கண்டது, கண்டது. ” என்று இழுத்த பலவர்மன் சொற்களை, “கனவல்ல”, என்று இடை புகுந்து வெட்டினான் இளையபல்லவன்.

அடுத்த சில நிமிடங்கள் அந்த அறையில் நிலவியது மௌனமா அல்லவா என்பதைக்கூட நிர்ணயிக்க முடிய வில்லை பலவர்மனால். அறையிலிருந்த இருவருக்கிடையே மௌனம் நிலவத்தான் செய்தது.

ஆனால் காட்டுப் பகுதி யிலிருந்தும், கடற்பகுதியிலிருந்தும் கிளம்பிக் கொண்டிருந்த பயங்கரச் கூச்சல்கள் அந்த அறையிலும் போர் நிலையையே புகுத்தியது. துறைமுகத்தில் எரிந்த சூளூக்களின் கப்பல்கள் படீல் படீலென வெடிக்கும் சத்தம் அறைக்குள் காதைப் பிளந்தது. கப்பலிலிருந்து தப்பிக் கரையில் ஓடி வந்த சூளூ வீரர்கள் கடற்புறாவின் அம்புகளால் தாக்குண்டு அலறிய சத்தமும் பயங்கரத்தை விளைவித்தது. காட்டுப்பகுதி கடற்பகுதியைவிட மாளிகைக்கு அருகாமையிலிருந்தபடியால் அங்கிருந்து வந்த பயங்கரக் கூச்சல்களும் அறையைத் திமிலோகப்படுத்தியது. நகரத்துக்குள் மக்கள் இரைச்சலும் அலறலும் போர்க் கோஷங்களும் பலமாக எழுந்தன. அந்தக் கோஷங்கள் அறையிலும் எதிரொலி செய்தன.

அந்த ஒலிகள் காதில் விழவிழ நடுங்கிய பலவர்மன் மஞ்சத்தில் சாய்ந்த வண்ணம் பிரேதம்போல் நீண்ட நேரம் கிடந்தான். நேரம் போவதை உணரும் சக்தியைக்கூட அவன் அந்தச் சமயத்தில் இழந்திருந்தான். “பயங்கரம்! பயங்கரம்!” என்ற சொற்கள் அடிக்கடி அவன் வாயிலிருந்து எழுந்தன. அந்தச் சொற்களைக் கேட்ட இளையபல்லவன் முகத்தில் கடுமையான சாயை பூர்ணமாகப் படர்ந்தது. “இந்தச் சொற்களை உன்னிடம் அகப்பட்டுக் கொண்டவர்கள் எத்தனை முறை சொல்லியிருப்பார்கள் பலவர்மா?” என்று முகத்தின் கடுமை சொற்களிலும் உறையக் கேட்டான் படைத்தலைவன்.

பதிலுக்கு ஏதோ முனகினான் பலவர்மன். “அதர்மத்துக்கு ஆரம்ப வெற்றிதான் பலவர்மா. தர்மம் நிதானமாகத் தான் அலுவலைத் தொடங்குகிறது. ஆனால் அந்த நிதான அலுவல் நிரந்தர சாதனைகளைத் தருகிறது. இதை உலகம் புரிந்துகொள்வதில்லை. புரிந்துகொண்டால் எத்தனை நல்ல உலகமாக இருக்கும் இது! எத்தனை செழிப்பும் வளர்ச்சியும் சாந்தியும் இதில் நிலவும்? ஆனால், உலவுவது வஞ்சகம், பேராசை, பணத்தாசை..” என்று மேலும் ஏதோ சொல்லப்போன இளையபல்லவனை, “யார் பணம் கேட்டது?” என்று இடைமறித்து வினவினான் பலவர்மன்.

இளையபல்லவன் இதயம் ஒருமாத காலத்துக்கு முன்பு ஓடியதற்கு அறிகுறியாகக் கனவுச் சாயை கண்களில் படர்ந்தது. “பணம் நீ கேட்கவில்லை பலவர்மா! ஆனால் அந்த ஆசை உன் ரத்தத்தில் ஓடுகிறது. உன்னைக் கெடுத்ததே அந்த ஆசைதான். இதே அறையில் நான்கு பெரு முத்துகளை உன்னிடம் காட்டினேனே நினை விருக்கிறதா உனக்கு? அதைக் கண்டுதானே என்னை இங்கு தங்க நீ அனுமதித்தாய்? அது உன் ஆரம்பப் பிசகு பலவர்மா! அதுதான் உன் பலவீனத்தின் ஒரு சக்கரம். இன்னொரு சக்கரம் அதிகாரம். பணம், அதிகாரம் இந்த இரண்டு ஆசைகளின் மீது ஓடுவதுதான் அதர்மம். அவை இல்லையேல் உலகில் முக்கால்வாசி அதர்மம் இல்லை; முக்கால்வாசி ஏமாற்றமும் இல்லை.

பட்டுகளையும், முத்து வைர வைடூரிய மாலைகளையும் காட்டியிராவிட்டால் கொள்ளையரை நான் வசப்படுத்தியிருக்க முடியாது. என் பணப்பெட்டிகளை என் மரக்கலத்திலிருந்து உன் மாளிகைக்கு நான் கொண்டுவராவிட்டால் மக்களையும் வசீகரித்திருக்க முடியாது. இந்த அக்ஷயமுனை நகரத்தை நான் காத்திருக்க முடியாது. பணம் சில சமயங்களில் நல்லதும் செய்கிறது பார்த்தாயா பலவர்மா?” என்று கேட்டான் இளையபல்லவன்.

பலவர்மன் பதிலேதும் சொல்லாமலே நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தான். நேரம் குதிரை வேகத்தில் ஓடி, விடியும் நேரமும் வரத் துவங்கியது.

பலவர்மன் மனத்தில் ஏதோ ஒரு யோசனை உதய மாகியது. “கருணாகரா! நீ என்னை வென்றுவிட்டாய். ஆனால் இப்பொழுது சற்று விட்டுக்கொடு. உனக்கு இணையிலாப் பரிசு தருகிறேன்” என்று பேச்சைத் துவக்கினான்.

“என்ன பரிசு பலவர்மா?” என்று கேட்டான் இளைய பல்லவன்.

“மஞ்சளழகி! அவளை இப்பொழுதும் உன் மனைவி யாக்க முடியும் என்னால்?” என்று ஆசை காட்டிப் பேசினான் பலவர்மன்.

பதிலுக்கு இரைந்து நகைத்தான் இளையபல்லவன். ஏதும் புரியாத பலவர்மன் கேட்டான், “எதற்கு நகைக்கிறாய் கருணாகரா?” என்று.

“மஞ்சளழகி என்னிடம்தான் இருக்கிறாள்,” என்றான் இளையபல்லவன் நகைப்புக்கு இடையே.

“இல்லை, இல்லை. பொய்,” என்று கத்தினான் பலவர்மன்.

“உண்மை. “

“இருப்பினும்..”

“இருப்பினுமென்ன?”

பலவர்மன் கண்கள் விஷத்தைக் கக்கின. “அவளைப் பற்றிய மர்மம் ஒன்றிருக்கிறது. அதன்… ” அதன் என்ற பலவர்மன் வாசகத்தை முடிக்கவில்லை. இளையபல்லவ னிருந்த இடத்தை நோக்கிக் கொண்டேயிருந்தான். அவன் கண்களில் வெறி தாண்டவமாடியது. “இல்லை, இல்லை. அது இல்லை . அதுவாக இருக்க முடியாது” என்று கூவிக்கொண்டே ஆசனத்தைவிட்டு எழுந்து புலிபோல் இளையபல்லவன் மீது பாய்ந்துவிட்டான்.

Previous articleRead Kadal Pura Part 2 Ch47 |Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 2 Ch49 |Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here