Home Kadal Pura Read Kadal Pura Part 2 Ch49 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch49 |Sandilyan | TamilNovel.in

123
0
Read Kadal Pura Part 2 Ch49 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 2 Ch49 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch49 |Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

இரண்டாம் பாகம், அத்தியாயம் 49 : மர்மத்தின் சிகரம்.

Read Kadal Pura Part 2 Ch49 |Sandilyan | TamilNovel.in

மஞ்சளழகியைப் பற்றிய மர்மமொன்று இருப்பதாகக் கூறி அதை விளக்க முற்பட்டு இளையபல்லவனிருந்த இடத்தை உற்று நோக்கியதும் உதடுகள் அடைக்க, விழிகள் மலைக்கச் சில விநாடிகள் பிரமித்துவிட்ட பலவர்மன் திடீரென, “இல்லை, இல்லை. அது இல்லை. அதுவாக இருக்க முடியாது,” என்று கூவிக்கொண்டே வெறி பிடித்து இளையபல்லவன் மீது புலிபோல் பாய்ந்து விட்டானென்றால் அதற்குக் காரணம் இருக்கத்தான் செய்தது.

மஞ்சளழகியின் மர்மத்தை விளக்க அவன் முற்பட்ட மாத்திரத்திலேயே இடைக்கச்சையிலிருந்து இளைய பல்லவன் எடுத்த சாவியைக் கண்டதும் அது தன் கழுத்துச் சங்கிலியில் தொங்கிய தனது ரகசியப் பெட்டியின் சாவியே என்பதையும், ரகசியப் பெட்டியின் சாவி இளையபல்லவன் கைக்கு மாறிவிட்டதாகையால் இனி ரகசியமும் அவன்கைக்கு மாறிவிடுமென்பதையும் அறிந்ததாலும், அப்படி அந்தப் பெரும் ரகசியம் கை மாறிவிடும் பட்சத்தில், தான் சிறகொடிந்த பட்சிக்குச் சமானமென்பதையும் உணர்ந்ததால் பிரமைக்கும் வெறிக்கும் உள்ளானான் பலவர்மன்.

அந்தச் சாவியை எப்படியும் பிடுங்கித் தன்னையும் தன் பலத்தையும் காத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆத்திரம் அவனை அடுத்த செயலுக்கு உள்ளாக்கி இளையபல்லவன் மீது பாய வைத்தது.

மிகுந்த வேகத்துடனும் வெறியுடனும் திடீரெனத் தன்மீது பாய்ந்துவிட்ட பலவர்மனைக் கேவலம் ஒரு குழந்தையைச் சமாளிப்பதுபோல் சமாளித்த இளையபல்லவன், வாள் பிடித்த வலக்கரத்துக்கு வேலையளிக் காமலே சாவியேந்திய இடக் கையாலேயே பலவர்மனைத் தரையில் தள்ளிவிட்டான்.

அப்படித் தள்ளிய பின்பும் எந்தவித ஆத்திரத்தையோ கோபத்தையோ காட்டாமல், “வெறியை அடக்கிக்கொள் பலவர்மா! வெறியால் உலகத்தில் எந்தக் காரியமும் நிறைவேறுவது இல்லை. விஷயம் தலையை மீறிப் போகும் சமயங்களில் தர்ன் நிதானம் மனிதனுக்கு அவசியம். எழுந்து பழையபடி ஆசனத்தில் அமர்ந்து கொள்” என்று போதிக்கவும் செய்தான் படைத்தலைவன்.

போதனையை ஏற்றுக்கொள்ளும் நிலையிலோ விஷயங்களை அலசி ஆராய்ந்து பார்க்கக்கூடிய நிலையிலோ இல்லாத பலவர்மன் கீழே விழுந்தது விழுந்தபடியே ஒரு கையைத் தரையில் ஊன்றிக்கொண்டே தலையை நிமிர்ந்து மீண்டும் மீண்டும் படைத்தலைவன் கையிலிருந்த நீண்ட சாவியைக் கேட்டான், “அது என் சாவி! கொடுத்து விடு,” என்று அர்த்தமில்லாமல் கூவவும் செய்தான்.

இளையபல்லவன் விழிகள் அந்த வஞ்சகனை நன்றாக ஆராய்ந்தன. “இது உன் சாவியல்ல பலவர்மா! இல்லாததை நினைத்து மனத்தை அலைக்கழித்துக் கொள்ளாதே,” என்று ஏளனமாகச் சொற்களும் உதிர்ந்தன படைத்தலைவன் உதடுகளிலிருந்து.

அந்த வார்த்தைகள் பலவர்மன் பலவீன இதயத்துக்கு அமுத தாரையாக இருந்தன. “என்ன! என் சாவியல்லவா!” என்று கேட்டுக்கொண்டே தள்ளாடித் தள்ளாடி எழுந்து நின்றான் அக்ஷயமுனைக் கோட்டையின் தலைவன்.

“அல்ல, உன் சாவியல்ல இது. வேண்டுமானால் கழுத்துச் சங்கிலியைப் பார்,” என்றான் இளையபல்லவன் பதிலுக்கு.

பலவர்மன் மட்டும் சாதாரண நிலையிலிருந்தால் கழுத்துச் சங்கிலியில் சாவி இருப்பது இளையபல்லவனுக்கு எப்படித் தெரியும் என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டிருப்பான். அல்லது, இடும்பனுடன் தான் பேசியதைப் படைத்தலைவன் கேட்டிருந்தால் அவனுக்கு அதைப் பற்றித் தெரிந்திருப்பதில் ஆச்சரியமில்லையென்றாவது அறிந்திருக்கலாம்.

ஆனால் இரண்டையும் சிந்தித்துப் பார்க்கத் திறனற்ற பலவர்மன் இளையபல்லவன் பதிலைக் கேட்டதும் தனது கழுத்துச் சங்கிலியை அங்கியிலிருந்து இழுத்து அதில் தொங்கிய சாவியைக் கண்டதும் ஓரளவு சமாதானமே அடைந்தான். அந்த சமாதானத்தின் விளைவாக மெள்ள நடந்து பின்னடைந்து ஆசனத்தில் பொத்தென்று விழவும் செய்தான்.

ஆனால் அடுத்த விநாடி அவன் சமாதானத்தையும் குலைக்கும் சொற்கள் இளையபல்லவன் இதழ்களிலிருந்து உதிர்ந்தன. “இது உன் சாவியல்ல பலவர்மா! ஆனால் அதைப்பற்றி நீ சமாதானமடைய எந்தக் காரணமும் இல்லை. நன்றாக உற்றுப் பார்,” என்று கூறித் தனது இடது கையிலிருந்த திறவுகோலை இருமுறை உருட்டிக்காட்டினான் இளையபல்லவன்.

“என்ன! என்ன!” என்று மீண்டும் பிரமை பிடித்துக் கேட்டான் பலவர்மன்.

“இது உன் சாவியல்ல. ஆனால் அதன் இரட்டை” என்றான் இளையபல்லவன்.
“இரட்டையா!” பலவர்மன் கேள்வியில் பிரமிப்பும் கலவரமும் தொனித்தன.

“ஆம். அதன் இரட்டைப் பிறவி. “

“எப்பொழுது பிறந்தது?”

“நீ என்னுடன் குடித்து மயங்கி விழுந்தாயே நினைப் பிருக்கிறதா?”

“இருக்கிறது. “

“அன்று பிறந்தது. “

“என்ன?”

“ஆம் பலவர்மா! அன்று இந்த அறையில் உனக்கு மது ஊற்றிக் கொடுக்கவில்லை நான்?”

“ஆம், கொடுத்தாய். நன்றாக நினைவிருக்கிறது எனக்கு. மதுக்குப்பியொன்றைக் கையில் பிடித்துக் கொண்டு நீ தள்ளாடித் தள்ளாடி வந்தாய். என்னையும் குடிக்கும்படி மன்றாடினாய். குடித்தால் பெரும் ரகசிய மொன்றை வெளிப்படுத்துவதாய் உளறினாய்… ” என்று மேலும் ஏதோ சொல்லப்போன பலவர்மனை இடைமறித்த இளையபல்லவன், “அது உளறலல்ல பலவர்மா!” என்று உறுதி நிரம்பிய சொற்களைக் கொட்டினான்.

“உளறலல்லவா?” பலவர்மன் கேள்வியில் ஆச்சரியம் மிதமிஞ்சி ஒலித்தது.

“அல்ல, உளறலல்ல. அன்றுதான் அந்தப் பெரும்! ரகசியம், நீ நீண்ட நாளாக இந்த அறைப் பெட்டியில் வைத்துப் பூட்டியிருந்த ரகசியம் வெளியாயிற்று” என்று சொல்லி வார்த்தைகளைச் சிறிது தேக்கினான் இளையபல்லவன்.

“இல்லை, பொய். நான் குடித்து மயக்கம் போட்டு இந்த மஞ்சத்தின் மீது குப்புற விழுந்து கிடந்தது உண்மைதான். ஆனால் ரகசியம் வெளியாகவில்லை. நான் விழித்ததும் பெட்டியைத் திறந்து பார்த்தேன்… ” என்று மேலும் பேசப்போன பலவர்மன் சொற்களை மீண்டும் இடைபுகுந்து வெட்டிய இளையபல்லவன், “ஓலைச் சுருள் அப்படியே இருந்தது. ” என்று முடித்தான்.

பலவர்மன் விழிகள் பிரமிப்பைக் கக்கின. இளைய பல்லவன் அந்தப் பிரமிப்பைக் கண்டு சொன்னான். “பிரமிக்காதே பலவர்மா! நீ அன்று பார்த்த ஓலைச் சுருள் வேறு. இடும்பனிடம் நீ பேசியதைக் கேட்டதும் பெட்டியிலுள்ள ரகசிய ஓலையைப் பார்க்க நான் தீர்மானித்தேன். அதற்காகவே நீ படுக்கச் செல்லும் நேரத்தில் மதுக்குப்பியுடன் உன் அறைக்கு வந்து மதுவைக் குடிக்க உன்னைத் தூண்டினேன்.

ரகசியத்தைப் பற்றி நான் சொன்னதும் ஏதோ என்னைப்பற்றி அறிந்து கொள்ளலா மென்ற ஆசையில் நீ நான் ஊற்றிய மதுவை அருந்தினாய். அந்த மதுவில் மயக்க மருந்து கலந்து இருந்தது,” என்று.

“மயக்க மருந்தா?” இதைக் கேட்ட பலவர்மன் மூளை சிதறிவிடும் போலிருந்தது.

இளையபல்லவன் சர்வசாதாரணமாகச் சொன்னான்: “மயக்க மருந்துதான் பலவர்மா! அரபு நாட்டு மயக்க மருந்து. யாரையும் விநாடி நேரத்தில் உறங்கச் செய்ய வல்லது. அதன் வன்மையை நீ உணர வேண்டுமானால் அமீரைக் கேட்கவேண்டும்,” என்று.

“நான் அமீரைக் கேட்கத் தேவை இல்லை,” என்று இரைந்து கூவினான் பலவர்மன்.

“கேட்கத் தேவையில்லை. நானே சொல்கிறேன். அந்த மருந்து காலை வரையில் மனிதர்களை உறங்க வைக்க வல்லது. ஆனால் கொல்லாதது. இஷ்டமிருந்தால் கொல்லும் மருந்தை உபயோகித்து அன்றே உன்னை நான் ஒழித்திருக்கலாம். ஆனால் உன்னைப்போல் நான் கொலைகாரனல்ல.

ஆகவே தூங்க வைத்தேன். நீ மயங்கி விழுந்ததும் அமீர் இந்த அறைக்கு வந்தான். நான் உன் முதுகின் மீது வேறு மதுவைக் கொட்டினேன்,” என்ற இளையபல்லவனை நோக்கிக் கேட்டான் பலவர்மன், “முதுகின் மீதா, எதற்கு?” என்று.

“சேந்தனை ஏமாற்ற,” என்றான் இளையபல்லவன் இதழ்களில் இளநகை கூட்டி.

“சேந்தனை எதற்காக ஏமாற்ற வேண்டும்?”

“அவன் உறுதியற்றவன். எங்காவது உண்மையை உளறிவிட்டால் நீ எச்சரிக்கை அடைந்துவிடுவாயல்லவா?

“எதைப்பற்றி?”

“உன் சாவியை மெழுகு ஒற்றி நாங்கள் அச்சு தயாரித்தது பற்றி. “

“அச்சா! எதற்கு?” என்று கூறிச் சீறிக்கொண்டு எழுந்திருக்க முயன்றான் பலவர்மன்.

“அசையாதே பலவர்மா! முழுக் கதையையும் கேள். ” என்று அதட்டிய இளையபல்லவன் மேலும் விளக்கினான். “உன் ரகசிய ஓலையைத் திருடத் தீர்மானித்ததும் உன் கழுத்துச் சாவிக்கு மெழுகு ஒற்றி, சாவி தயாரிக்க முடிவு செய்தேன். உன் கழுத்துச் சாவியைத் திருடினால் நீ விழித்துக் கொள்ளலாம், விஷயத்தைப் புரிந்து கொள்ளலாம். அதற்கு நான் இடம் கொடுக்க இஷ்டப்படவில்லை.

ஆகவே குப்புற விழுந்த உன்மீது குருதி போன்ற சிவப்பு மதுவைக் கொட்டினேன். சேந்தனை இங்கு வரச் சொல்லி அமீர் உதவியால் அவனை உன் கழுத்துச் சாவியில் மெழுகு ஒற்றி அச்சும் எடுத்துக்கொண்டோம். பிறகு அவனை அறைக்கு அனுப்பிவிட்டு அவன் மதுவிலும் சிறிது மருந்தைக் கலந்து கொடுத்தோம். சேந்தனுக்கு ஏதும் புரியாதிருக்க அவன் அறையில் வெறும் மெழுகு உருண்டையையும் வைத்தோம். அமீரின் உதவியால் இதெல்லாம் முடிந்தது. மறுநாள் புதுச் சாவி தயாராகி விட்டது. உன் ஓலையை எடுத்து நகலும் எடுத்தோம்.

உன் ஓலையிருந்த இடத்தில் வேறு ஓலைச் சுருளை வைத்தோம். உன் ஓலையிலிருந்த விஷயத்தை மொழி பெயர்க்கவும் செய்தோம். அத்தனையும் அமீர் செய்து முடித்தான். அமீரைப் போன்ற திறமைசாலி உலகில் கிடையாது பலவர்மா ..”

இந்த இடத்தில் இளையபல்லவன் சிறிது நிதானித்துப் பலவர்மனைக் கூர்ந்து நோக்கினான். பலவர்மன் சப்தநாடி களும் ஒடுங்கி மஞ்சத்தில் உட்கார்ந்திருந்தான். அவன் முகத்தில் கிலி படர்ந்து கிடந்தது. அந்தக் கிலியை அதிகப்படுத்த மேலும் கதையைத் தொடர்ந்த இளையபல்லவன், “இத்தனையையும் அமீர் சாதித்தான். சேந்தன் செய்வதைக் கனவென்று நினைக்க அமீர்தான் ஏற்பாடுகளைத் திட்டமாகச் செய்தான்.

ஆகவே நாங்கள் சேந்தன் உளற முடியாதபடி செய்தோம். மறுநாள் ஓலையின் நகல் ஒன்றை உன் பெட்டியில் வைத்துவிட்டு முதல்நாள் வைத்த வெறும் ஓலையை அகற்றினோம். தந்திரங்களை அடுத்தடுத்துக் கையாண்டோம். பெரும் துரோகிகளைச் சமாளிப்பதில் தந்திரம் அவசியமாகிறது. அப்படிப்பட்ட துரோகிகளில், வஞ்சகர்களில், நீ முதன்மையானவன். மஞ்சளழகியின் மர்மத்தை ஓலையிலிருந்து புரிந்து கொண்டேன். அவளுக்குரிய ஸ்தானத்தை அவளுக்குக் கொடுக்கவும் முடிவு செய்தேன்,” என்றான்.

பலவர்மன் முகத்தில் மீண்டும் சிறிது நம்பிக்கை உதயமாகியது. அடுத்து வெளிவந்த அவன் குரலிலும் அந்த நம்பிக்கை துளிர்விட்டது. “கருணாகரா!” என்று மெல்லப் பேச்சைத் துவங்கினான் பலவர்மன்.

அவன் நம்பிக்கைக்குக் காரணம் இளையபல்லவனுக்கு நன்றாகப் புரிந்ததால் அவன் உதடுகளில் இளநகை ஒன்று விரிந்தது. “ஏன் பலவர்மா?” என்று கேட்டான் இளையபல்லவன் போலி அன்பு தொனித்த குரலில்.

“மஞ்சளழகியின் மர்மம் பூராவும் ஓலையில் இல்லை… ’ என்று பேச்சை முடிக்காமல் விட்டான் பலவர்மன்.

“ஆம் ஆம். ஓலையில் விஷயம் அரை குறையாகத்தா னிருந்தது,” என்று இளையபல்லவனும் இணங்குவது போல் பேசினான்.

“மீதி விஷயம்… ” என்று பலவர்மன் ஏதோ சொல்லத் துவங்கினான்.

“மர்மம்தான் போலிருக்கிறது,” என்றான் இளைய பல்லவன்.

“மர்மத்தின் சிகரம். ” பலவர்மன் சொற்களில் லேசாக உற்சாகமும் தொனித்தது.

“அந்தச் சிகரத்தை … ”

“நீ எட்ட லாம். “

“அதற்குப் பொருள் உண்டு போல் இருக்கிறது. “

“உண்டு . “

“எத்தனை வேண்டும்?”
“எத்தனை என்பதைவிட எது என்று கேட்பது பொருந்தும். “

“எது?”

“இந்த அக்ஷயமுனை. “

“நான் வெற்றி கொண்டுவிட்ட இந்த அக்ஷயமுனையா!”

“ஆம். “

“இதை என்ன செய்ய வேண்டும்?”

“என்னிடம் பழையபடி ஒப்படைத்துவிட வேண்டும். “

“ஒப்படைத்தால்?”

“மர்மம் வெளியாகும். “

“இல்லையேல்?”

“என்னுடன் மறைந்துவிடும். “

பலவர்மனின் கடைசி வார்த்தைகள் மிகுந்த உறுதியுடன் வெளிவந்தன. உறுதியுடன் மேலும் சொன்னான் பலவர்மன். “கருணாகரா! எந்த நாணயத்துக்கும் இரு புறங்கள் உண்டு. ஒரு புறத்தை ஓலையிலிருந்து அறிந்தாய். இன்னொரு புறத்தை அறிய என் இதயத்தைத்தான் பார்க்க வேண்டும். என் இதயக் கதவுகள் அத்தனை எளிதில் திறக்காதவை. நன்றாகச் சிந்தித்துப் பார் கருணாகரா! நான் உனக்கு அளிக்கப்போகும் பரிசுக்கு அக்ஷயமுனை ஒரு துரும்பாகும். நான் கொடுக்கும் பரிசு எது தெரியுமா?” என்று .

“எது பலவர்மா?” என்று கேட்டான் இளையபல்லவன்.

“ஸ்ரி விஜயத்தின் ஆதிக்கம். நீ எந்தவிதக் கஷ்டமும் படாமலே ஸ்ரி விஜயத்தை ஆட்கொள்ளலாம். உன் விருப்பப்படி குணவர்மனுக்கு ஸ்ரி விஜயத்தை முடிசூட்டலாம். இப்பொழுதுள்ள ஜெயவர்மனை ஒழிக்கலாம்” என்றான் பலவர்மன்.

“அத்தனை சக்தியுள்ளதா அந்த ரகசியம்?”

“ஆம். அது உன் வெற்றிக்கு அத்தியாவசியமான சாவி. அதைக்கொண்டு உன் அபிலாஷைக் கதவுகளை நீ கண்டிப்பாய்த் திறக்க முடியும். “

“வேறு வழி ஏதுமில்லையா?”

“இல்லை. “

இளையபல்லவன் நீண்ட நேரம் ஏதோ யோசித்தான். “யோசிக்க நேரமில்லை கருணாகரா! பொழுது விடியும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதோ காட்டுப் பகுதியிலும் கடற்பகுதியிலும் சத்தமும் அடங்கிக் கொண்டிருக்கிறது. உன் திட்டம் வெற்றி பெற்றுவிட்டது. அதைப் பூரண வெற்றியாக்கிக் கொள்.

உனக்கு வேண்டியது கலிங்கத்தின் கடலாதிக்கத்தை உடைப்பதும் ஸ்ரி விஜயத்தைக் குணவர்மன் வசப்படுத்துவதும் தானே? அதை நான் சாதித்துத் தருகிறேன். அக்ஷயமுனையை மட்டும் எனக்கு அளித்துவிடு. உனக்கு மஞ்சளழகியைத் தருகிறேன். பூரண ரகசியத்தின் சாவியையும் தருகிறேன். மர்மத்தின் சிகரத்தைத் தருகிறேன்,” என்றான் பலவர்மன்.

இளையபல்லவன் சில விநாடிகள் மௌனம் சாதித்தான். விடியும் நேரம் நெருங்குவதற்கான பட்சி ஜாலங்களின் சப்தங்கள் வெளியில் தொனித்தன. அத்துடன் யாரோ சிலர் தடதடவென்று வெளியே நடந்து வரும் காலடிச் சத்தங்களும் கேட்டன. அந்தக் காலடிச் சத்தங்கள் கேட்டதும் இளையபல்லவன் பெரிதாக நகைத்தான். அந்த நகைப்பின் ஊடே, “முடியாது. அக்ஷய முனையை உனக்கு நான் அளிக்க முடியாது,” என்றான்.

“ஏன் முடியாது?” என்று சீறினான் பலவர்மன்.

“அதற்கு உடையவர்கள் வந்துவிட்டார்கள்,” என்று கூறிய இளையபல்லவன், தாழிட்டக் கதவைத் திடீரென்று திறந்து சற்று விலகி நின்றான்.

திறந்த வாயிலின் வழியாக முதலில் மஞ்சளழகி நுழைந்தாள். அதைக் கண்டு அடியோடு நிலைகுலைந்து போன பலவர்மன் அவளுக்குப் பின்னால் வந்து வாயிற்படியை அடைத்துக்கொண்டு நின்றவனைக் கண்டதும் பெரும் திகைப்பு, அச்சம் இரண்டும் சித்தத்தைக் கௌவ மிரள மிரள விழித்தான்.

மர்மத்தின் சிகரமும் இளைய பல்லவன் கைகளில் சிக்கிவிட்டதை அறிந்த பலவர்மன் “இது! இவர்கள்! அதோ! அவன், இல்லை இல்லை , அவர்!” என்று பிரமை பிடித்து அலங்கோலத்துடன் உளறவும் செய்தான். உளறிய வாயும் திடீரென அடைத்து நிலைத்தது. விழிகள் மிதமிஞ்சிய அச்சத்தைக் கக்கிக்கொண்டே வாயிற்படியில் நின்ற உருவத்தை நோக்கிக் கொண்டே இருந்தன.

“அக்ஷயமுனையின் சொந்தக்காரர்கள் வந்து விட் டார்கள்… ” என்று இளையபல்லவன் கூறியது எங்கோ தொலைவிலிருந்து கேட்பது போலிருந்தது பலவர்மன் காதுகளுக்கு. வாயிற்படியை அடைத்து நின்றவரைப் பார்த்த விழிகளில் பயத்தால் பஞ்சடையவும் முற்பட்டன. அந்த அறையே மேலும் கீழுமாய்ச் சுழல்வது போலிருந்தது அக்ஷயமுனைக் கோட்டைத் தலைவனுக்கு.

Previous articleRead Kadal Pura Part 2 Ch48 |Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 2 Ch50 |Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here