Home Manipallavam Read Manipallavam Part 1 Ch17 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

Read Manipallavam Part 1 Ch17 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

63
0
Read Manipallavam Part 1 Ch17 Manipallavam Na. Parthasarathy, Read Manipallavam Online Free, Manipallavam PDF, Download Manipallavam novel, Manipallavam book, read Manipallavam free, Manipallavam,Manipallavam story in tamil,Manipallavam story,Manipallavam novel in tamil,Manipallavam novel,Manipallavam book,Manipallavam book review,மணிபல்லவம்,மணிபல்லவம் கதை,Manipallavam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,na parthasarathy,nithiliavalli part 1,nithiliavalli part 2,nithiliavalli part 3,nithiliavalli full story,nithiliavalli novel full story,nithiliavalli audiobook,nithiliavalli audio book,nithiliavalli full audiobook,nithiliavalli full audio book,
Read Manipallavam Part 1 Ch17|Na.Parthasarathy|TamilNovel.in

Read Manipallavam Part 1 Ch17 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

மணிபல்லவம் – நா. பார்த்தசாரதி

முதல் பாகம் – தோரண வாயில்

அத்தியாயம் 17 : வேலியில் முளைத்த வேல்கள்

Read Manipallavam Part 1 Ch17 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

கையில் வேலையும் மனத்தில் துணிவையும் உறுதியாகப் பற்றிக் கொண்டு மெல்லப் பின்புறம் திரும்ப முயன்றார் வீர சோழிய வளநாடுடையார். புறநகரில் காவற்படைத் தலைவராகத் திரிந்த காலத்தில் இதைப் போலவும் இதைக் காட்டிலும் பயங்கர அனுபவங்கள் பலவற்றைச் சந்தித்திருக்கிறார் அவர். ‘பயம்’ என்ற உணர்வுக்காக அவர் பயந்த காலம் இருந்ததில்லை; ஒரு வேளை பயம் என்ற உணர்வு அவருக்காக பயந்திருந்தால்தான் உண்டு. அத்தகைய தீரர் முதுமைக் காலத்தில் ஓய்வு பெற்று ஒடுங்கிய பின் நீண்டகாலம் கழித்து வெளியேறிச் சந்திக்கிற முதல் பயங்கர அனுபவமாயிருந்தது இது.

கண்பார்வை சென்றவரை கிழக்கிலும் மேற்கிலும் தெற்கிலும் வடக்கிலும் நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் காடாகப் பரவிக் கிடக்கும் மரக்கூட்டம். ஓவென்று மரங்கள் காற்றில் ஓடும் ஓசையும் மெல்ல மெல்ல இருண்டு கொண்டு வரும் தனிமைச் சூழலும் தவச்சாலையில் இருப்பது தெரியாமல் யாரோ இருக்கும் மர்மமான நிலையும் சேர்ந்து வளநாடுடையாரைச் சற்றே திகைக்கச் செய்திருந்தன. எதிர்பாராத நிகழ்ச்சிகள் நிகழுவதற்கு முன் நிலவுகிறாற் போன்றதொரு மர்மமான சூழ்நிலையாகத் தோன்றியது அது.

தான் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து பின்புறம் நன்றாகத் திரும்பித் தவச்சாலைக்குள் சுவடிக்கும் தீபத்துக்கும் அருகில் வந்திருப்பது யார் என்று பார்க்குமுன் ‘அப்படிப் பார்க்க வேண்டாம்’ என்பது போல் தன் உள்ளுணர்வே தன்னை எச்சரிக்கை செய்து தயங்க வைப்பது அவருக்கு மேலும் திகைப்பளித்தது. செயலுணர்வுக்கு முன்னதாக உள்ளுணர்வு தயங்கும் காரியங்கள் நல்ல விளைவைத் தருவதில்லை என்பது அவர் அனுபவத்தில் கண்டிருந்த உண்மை. அப்போது அந்தத் தவச்சாலையில் அவருக்குத் தெரிய வேண்டியது தம் வீட்டிலிருந்து காணாமற் போன அருட்செல்வ முனிவர் அங்கே வந்திருக்கிறாரா, இல்லையா என்பதுதான். முனிவர் தவச்சாலைக்கு வரவில்லை என்றால் நிம்மதியாக அங்கிருந்து வெளியேறுவதைத் தவிர வேறொன்றும் அவர் செய்ய வேண்டியதில்லை. முனிவர் அங்கே வந்திருக்கிறார் என்றால் தன் இல்லத்திலிருந்து அவர் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறியது ஏன் என்றும், தவச்சாலையில் தன்னைச் சந்திக்கத் தயங்கித் தனக்கு முன் வராமல் மறைந்தது என்ன காரணத்தினால் என்றும அவரையே கேட்டுத் தெரிந்து கொண்டு விட வேண்டும் என்றும் வளநாடுடையார் விரும்பினார். தவச்சாலையில் சுவடியையும் தீபத்தையும் வைத்து வாசித்துக் கொண்டிருந்த முனிவர் தாம் தம் வரவைக் கண்ணுற்றதும் அப்போது தம்மைக் காண விரும்பாமல் ஒளிந்து மறைந்து கொண்டிருக்க வேண்டும் என்று வளநாடுடையார் மனத்தில் சந்தேகப்பட்டார். தமது சந்தேகம் மெய்யாயிருந்து முனிவரும் அப்படி நடந்து கொண்டிருந்தால் தான் ‘என்னைக் கண்டு ஏன் ஒளிந்து கொண்டீர்?’ என்று முனிவரை அவர் கேட்க விரும்பினார். ஆனால் அவர் விரும்பியவாறு எதுவும் அங்கு நடைபெறவில்லை.

‘செயலுணர்வுக்கு முன்னதாக உள்ளுணர்வு தயங்கும் காரியங்கள் நல்ல விளைவைத் தருவதில்லை’ என்று அவர் பயந்ததற்கு ஏற்ப நிகழ்ச்சிகள் அங்கு வேறுவிதமாக நிகழலாயின. அவர் நின்று திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து தவச்சாலையின் உட்பக்கம் ஒன்றரைப் பனைதூரம் இருந்தது. எனவே தீபத்துக்கும் சுவடிக்கும் அருகில் குனிந்து அமர்வது போல் தெரிந்த ஆளை அவர் நன்றாகக் காண முடியவில்லை. ‘அந்த ஆள் அங்கே அமர்ந்து சுவடியைப் படிப்பதற்குத் தொடங்கக்கூடும்’ என்று அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக நடந்தது.

உள்ளே தீபத்துக்கும் சுவடிக்கும் அருகே கீழ் நோக்கித் தாழ்ந்த கைகள் சுடர் அணைந்து விடாமல் தீபத்தை நிதானமாக மேலே தூக்கித் தவச்சாலையின் தென்னோலைக் கூரை இறப்பின் விளிம்பில் நெருப்புப் பற்றும்படி பிடித்தன. காய்ந்த ஓலைக் கீற்றுக்களின் நுனிப்பகுதியில் தீ நாக்குகள் எழுந்தன. வளநாடுடையார் திடுக்கிட்டார். உள்ளே இருப்பவர் முனிவராயிருக்கலாம் என்று தாம் நினைத்தது பிழையாகப் போனதுமின்றி உள்ளே மறைந்திருந்தவர் என்ன தீச்செயலைச் செய்வதற்காக மறைந்திருந்தார் என்பது இப்போது அவருக்கு விளங்கிவிட்டது. மறைந்திருந்தவர் வேற்றாள் என்பது புரிந்து விட்டது.

“அடே, பாவீ! இதென்ன காரியம் செய்கிறாய்? ஒரு பாவமுமறியாத முனிவர் தவச்சாலையில் நெருப்பு மூட்ட முன் வந்திருக்கிறாயே, உன் கையிலே கொள்ளிவைக்க…” என்று உரத்த குரலில் இரைந்து கொண்டே தீ மூட்டும் கையைக் குறிவைத்துத் தம்மிடமிருந்த வேலை வீசினார் அவர். குறியும் தப்பாமல் குறிவைக்கப்பட்ட இலக்கும் தப்பாமல் சாமர்த்தியமாக அவர் எறிந்திருந்தும், அந்த வேல் அவர் நினைத்த பயனை விளைவிக்கவில்லை.

தீபத்தைக் கீழே நழுவ விட்டுவிட்டு அதே கையினால் அவர் எறிந்த வேலைப் பாய்ந்து பிடித்து விட்டான் அவன். தன் கண்களைத் தீச்சுடர் கூசச் செய்யும் நிலையில் எதிர்ப்புறத்து இருளிலிருந்து துள்ளிவரும் வேலை எட்டிப் பிடிக்கத் தெரிந்தவன் சாதாரணமானவனாக இருக்க முடியுமென்று தோன்றவில்லை வளநாடுடையாருக்கு. ஆனால் அவர் அப்போது உடனடியாக நினைக்க வேண்டியது நெருப்பை அணைக்க ஏதாவது செய்ய முடியுமா என்று முயலும் முயற்சியாயிருந்ததனால் எதிராளி வேலை மறித்துப் பிடித்துவிட்ட திறமையை வியப்பதற்கு அவருக்கு அப்போது நேரமில்லை.

தவச்சாலையின் கூரை மேல் நெருப்பு நன்றாகப் பற்றிக் கொண்டு எரியத் தொடங்கியிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் நெருப்பு மூட்டியவன் அங்கிருந்து எப்படியோ நழுவியிருந்தான். போகிற போக்கில் அவர் வீசிய வேலையும் பறித்துக் கொண்டு போயிருந்தான் அந்தப் பாவி. எனவே கைத்துணையாக இருந்த வேலையும் இழந்து வெறுங்கையோடு தீப்பற்றிய பகுதியில் புகுந்து தீயை அணைக்கத் தம்மால் ஏதேனும் செய்ய இயலுமா என முயல வேண்டிய நிலையிலிருந்தார் அவர்.

உறுதியும் மனத்திடமும் கொண்டு தீப்பற்றிய பகுதியில் நுழைந்தே தீருவதென்று முன்புறம் நோக்கி நடக்கப் பாதம் பெயர்த்து வைத்த வளநாடுடையார் மேலே நடக்காமல் திகைத்து நின்று கொண்டே தமக்கு இருபுறத்திலும் மாறி மாறிப் பார்த்தார். இருபுறமும் நெஞ்சை நடுக்குறச் செய்யும் அதிசயங்கள் தென்பட்டு அதிர்ச்சி தந்தன. உற்றுப் பார்த்தால், அதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த இடத்தில் அவருக்கு பக்கங்களிலும் முன்னும் பின்னும் சிறிது தொலைவு வேலி போலப் படரவிடப்பட்டிருந்த மாதவிக் கொடிகளின் அடர்த்தியிலிருந்து கூரிய மூங்கில் இலைகள் சிலிர்த்துக் கொண்டெழுந்தாற் போல் பளபளவென்று மின்னும் வேல் நுனிகள் தெரிந்தன. அவசரப் பார்வைக்குச் சற்றுச் செழிப்பான மூங்கில் இலைகளைப் போலத் தோன்றிய அவை உற்றுப் பார்த்தால் தம்மை வேல்முனைகளென நன்கு காட்டின.

வளநாடுடையார், ஒருவேளை மாலையிருள் மயக்கத்தில் காணும் ஆற்றல் மங்கிய கண்கள் தம்மை ஏமாற்றுகின்றனவோ என்ற சந்தேகத்துடன் வலதுபுறம் மெல்லக் கை நீட்டி மாதவிக் கொடியின் இலைகளோடு இலைகளாகத் தெரிந்த அந்த வேல்களில் ஒன்றின் முனையைத் தொட்டுப் பார்த்தார். சந்தேகத்துக்கிடமின்றி இலைகளிடையே தெரிந்தவை வேல் முனைகள் தாம் என்பதை அவர் விளங்கிக் கொள்ள முடிந்தது. அந்த விளக்கமும் போதாமல் இன்னும் ஒரு படி அதிகமாகத் தெரிந்து கொள்ள விரும்பிய அவர் தாம் தொட்டுப் பார்த்த அதே வேல்முனையைப் பிடித்துச் சற்றே அசைத்துப் பார்த்தார். அவ்வளவுதான்! புற்று வளையிலிருந்து சீறிக் கொண்டு மேலெழுந்து பாயும் நாகப்பாம்பு போல் அந்த வேல்முனை முன்னால் விரைந்து நீண்டது! அப்படி அந்த வேல் முனை பாய்ந்து நீளும் என்பதை எதிர்பார்த்தவராக முன்னெச்சரிக்கையுடன் விலகிக் கொண்டிருந்தார் வளநாடுடையார். இல்லாவிட்டால் கூர்மையான அந்த வேல் அவருடைய பரந்த மார்பின் ஒரு பகுதிக்குள் புகுந்து புறப்பட்டிருக்கும். தாம் எத்தகைய சூழ்நிலையில் மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்பது அவருக்குப் புரிந்தது.

எதிர்ப்பக்கம் பார்க்கிறாற் போல் நின்று கொண்டு விழிகள் காது வரையில் நீள, தமக்கு இருபுறங்களிலும் அடர்ந்து இருண்டு படர்ந்திருந்த மாதவிப் புதரை ஊடுருவி நோக்க முயன்றார் வளநாடுடையார். தரையிலிருந்து அவர் நிற்கும் உயரத்துக்கும் மேலாக ஒரு பாக உயரம் வரை கொடிகள் ஓங்கி வீசிப் படர்ந்திருந்ததனால் மாதவிப் புதருக்கு மறுபுறம் இருப்பவர்களை அவ்வளவு எளிதாகக் காண முடியவில்லை. எனினும் கண்கள், மூக்கு, கைகள் என்று தனித்தனியே இலைகளின் அடர்த்திக்கு அப்பால் சிறு சிறு இடைவெளிகள் மூலம் ஆட்கள் நிற்பதற்கான அடையாளங்கள் தெரிந்தன. இருந்தாற் போலிருந்து மாதவிப் புதருக்கு இரும்புக் கரங்கள் முளைப்பது போல் வேல்கள் சிறிது சிறிதாக நீண்டன. இரண்டு பக்கத்திலும் முன்னும் பின்னும் சிறிது தொலைவு வரையில் அணிவகுத்து நீட்டினாற் போல் நீளும் வேல்களைக் கண்டு தீயை அணைக்கும் முயற்சிக்காகத் தாம் முன் செல்லலாமா வேண்டாமா என்று தயங்கி நின்றார் அவர். தீயை அணைப்பதற்காக அவர் முன்சென்றால் அப்படிச் செல்லவிடாமல் அவரைத் தடுப்பது அந்த வேல்களுக்கும், அவற்றுக்குரியவர்களுக்கும் நோக்கமாக இருக்கும் போல் தோன்றியது.

தீயும் இப்போது அவர் ஒருவரே தனியாக அணைத்து விட முடியும் என்ற நிலையில் இல்லை. அங்கு வீசிக் கொண்டிருந்த பெருங்காற்றின் துணையும் சேர்ந்து விட்டதனால் தீ கொண்டாட்டத்தோடு பரவியிருந்தது. அனல் பரவியதனால் அருகிலிருந்த மரங்களிலிருந்து பல்வேறு பறவைகள் விதம் விதமாகக் குரலெழுப்பிக் கொண்டு சிறகடித்துப் பறந்தன. ஓலைக் கீற்றுக்கள் எரியும் ஒலியும், இடையிடையே இணைக்கப் பெற்றிருந்த மூங்கில்கள் தீயில் வெடித்து முறியும் சடசடவென்ற ஓசையும் அவர் செவிகளில் உற்றன. அந்தக் கோரக் காட்சியைக் கண்டு கொண்டே ஒன்றும் செய்ய இயலாமல் நின்றிருப்பது அவருக்கு வேதனையாகத்தான் இருந்தது. ஆயினும் ஒன்றும் செய்வதற்கு விடாமல் அந்த வேல்கள் வியூகம் வகுத்து அவரைத் தடுத்துக் கொண்டிருந்தன.

தீ மிகப் பெரிதாக எழுந்து தவச்சாலைக்கு மேலே வானம் செம்மையொளியும் புகையும் பரவிக் காட்டியதால் அந்த வனத்தின் பல பகுதிகளில் இருந்த வேறு மடங்களையும், மன்றங்களையும், தவச்சாலைகளையும் சேர்ந்தவர்கள் பதறி ஓடி வந்து கொண்டிருந்தனர். தீ வனம் முழுவதும் பரவிவிடக் கூடாதே என்ற கவலை அவர்களுக்கு. அன்றியும் தீப்பற்றியிருக்கும் இடத்தில் யாராவது சிக்கிக் கொண்டிருந்தால் முடிந்த வரையில் முயன்று காப்பாற்ற முனையலாம் என்று கருணை நினைவோடு ஓடி வந்து கொண்டிருந்தவர்களும் இருந்தனர்.

“ஐயோ! தீப்பற்றி எரிகிறதே!” என்று பதறி ஒலிக்கும் குரல்களும், “ஓடி வாருங்கள்! ஓடி வாருங்கள்! தீயை அணைத்து யாரையாவது காப்பாற்ற வேண்டியிருந்தாலும் காப்பாற்றலாம்” என்று விரைந்து கேட்கும் சொற்களும், திமுதிமுவென்று ஆட்கள் ஓடிவரும் காலடி ஓசையும் தவச் சாலையை நெருங்கிக் கொண்டிருந்த போது தமக்கு இருபுறமும் நீண்டிருந்த வேல்கள் மெல்லப் பின்னுக்கு நகர்ந்து மறைந்த விந்தையை வளநாடுடையார் கண்டார். அதையடுத்து மாதவிப் புதரின் அப்பால் இருபுறமும் மறைவாக இருந்த ஆட்கள் மெல்ல அங்கிருந்து நழுவுவதையும் அவர் உணர முடிந்தது. அந்தச் சமயத்தில் இன்னுமொரு நிகழ்ச்சியும் நடந்தது. மாதவிக் கொடிகளுக்கு மறுபக்கத்திலிருந்து ஒரு வேல் பாய்ந்து வந்து வளநாடுடையாருக்கு முன் ஈரமண்ணில் குத்திக் கொண்டு நின்றது. அந்த வேல் வந்து நின்ற அதே நேரத்தில், “பெரியவரே! உங்களுக்கு மிகவும் நன்றி. நீங்கள் வீசி எறிந்த வேலை இதோ திருப்பித் தந்தாகிவிட்டது. எடுத்துக் கொண்டு பேசாமல் வந்த வழியோடு போய்ச் சேருங்கள்” என்று சொற்களை இரைந்து கூறிவிட்டு ஏளனமாகச் சிரித்துக் கொண்டே கொடி வேலிக்குப் பின்புறமிருந்து யாரோ ஓடிச்சென்று மறைவதையும் வளநாடுடையார் கவனித்தார். அப்போது அவருடைய நிலை தவிப்புக்குரிய இரண்டுங்கெட்டான் நிலையாக இருந்தது. இருதலைக் கொள்ளி எறும்புபோல் செய்வதறியாமல் வருந்தி நின்றார் அவர். அங்கே தீயின் நிலையோ அணைக்கலாம் என்று நினைக்கவும் இயலாதபடி பரவிப் பெருகிவிட்டது. இங்கே மறைந்திருந்த ஆட்களோ தப்பிவிட்டார்கள். அந்நிலையில் தீப்பற்றி எரியும் தவச்சாலைக்கு முன் தாம் மட்டும் தனியாக நின்று கொண்டிருப்பது எப்படியெப்படியோ பிறர் தம்மேல் சந்தேகம் கொள்ள ஏதுவாகலாம் என்று தோன்றியது வளநாடுடையாருக்கு. ‘தவச்சாலைக்குத் தீ மூட்டியதே அவர்தான்’ என்று வருகிறவர்கள் நினைத்து விட்டாலும் வியப்படைவதற்கில்லை. அந்தப் பரபரப்பான சூழ்நிலையில், ‘நெருப்பு மூட்டியது தாமில்லை’ என்று மறுப்பதற்கும் அவரிடம் போதிய சான்றுகள் இல்லை. ஓடி வருகிற அக்கம் பக்கத்தார் காலடி ஓசை மிகவும் நெருங்கிக் கொண்டிருந்தது.

தீரச் சிந்தித்த பின் அப்போதுள்ள சூழ்நிலையில் தாம் செய்யக்கூடிய ஒரே நல்ல காரியம் அங்கிருந்து மெதுவாக நழுவிச் சென்று விடுவதுதான் என்ற முடிவுடன் கீழே குத்திக் கொண்டு நின்ற தம் வேலை எடுத்துக் கொண்டு மாஞ்செடி கொடிகளின் மறைவில் பதுங்கி நடந்தார் வளநாடுடையார். ஆனால் அங்கு நின்று கொண்டிருப்பது எப்படித் தவறான அனுமானத்துக்கு இடங்கொடுத்துத் தம்மேல் பழி சுமத்தப்படக் காரணமாகும் என்று அவர் பயந்தாரோ, அப்படி பயந்தது அவர் சென்று கொண்டிருக்கும் போதே நடந்து விட்டது. ஓடி வந்து கொண்டிருந்தவர்களில் யாரோ ஓரிருவர் மறைந்து பதுங்கிச் செல்லும் அவருடைய உருவத்தைப் பார்க்க நேர்ந்துவிட்டதனால், “தீ வைத்தவன் அதோ ஓடுகிறான்! விடாதீர்கள் பிடியுங்கள்” என்று பெருங்குரல் எழுந்தது. உடனே வந்த கூட்டத்தில் ஒரு பகுதி அவர் சென்று கொண்டிருந்த பக்கம் திரும்பிப் பாய்ந்து அவரைத் துரத்தத் தொடங்கிவிட்டது. எந்தப் பழிக்காக அவர் அங்கு நிற்க பயந்து சென்றாரோ, அந்தப் பழி தம்மைத் துரத்திக் கொண்டே வந்து விட்டதே என்று தெரிந்த போது துரத்துபவர்களிடம் அகப்படாமல் ஓடத் தொடங்குவதைத் தவிர வேறு வழி அவருக்கும் தோன்றவில்லை. கால்கள் சென்ற போக்கில் முதுமையின் ஏலாமையையும் பொருட்படுத்தாமல் ஓடலானார் அவர். பின்னால் துரத்திக் கொண்டு வந்தவர்கள் ஆத்திரத்தில் வீசி எறிந்த கற்களும் கட்டைகளும் அவர் மேல் விழுந்து சிராய்ந்து இரத்தம் கசியச் செய்தன. அவருக்கும் அவரைத் துரத்தியவர்களுக்கும் இடையே அந்த முன்னிரவு நேரத்தில் சக்கரவாளக் கோட்டத்தை ஒட்டிய காட்டுக்குள் ஒரு பெரிய ஓட்டப்பந்தயமே நடந்து கொண்டிருந்தது. எல்லாருமே துரத்தி வளைத்துக் கொண்டு விரட்டியிருந்தால் அவர் பாடு வேதனையாகப் போயிருக்கும். நல்ல வேளையாக வந்த கூட்டத்தில் ஒரு பகுதி தீயணைக்கும் முயற்சிக்காகத் தவச்சாலையருகிலேயே தங்கிவிட்டது.

ஓடி ஓடிக் களைத்துப் போன வளநாடுடையார் இனிமேல் ஓடினால் கீழே விழுந்துவிட நேரும் என்கிற அளவு தளர்ந்திருந்தார். துரத்துகிறவர்களும் விடாமல் துரத்திக் கொண்டு வந்தார்கள். அந்நிலையில் அவர் ஒரு காரியம் செய்தார். மேலே ஓடமுடியாமல் சுடுகாட்டுக் கோட்டத்தை ஒட்டியிருந்த பாழடைந்த காளிகோயில் ஒன்றின் இருண்ட பகுதியில் புகுந்து மூச்சு இரைக்க நின்றார்.

“வாருங்கள்!” என்று மெல்லிய அழைப்புக் குரலோடு பின்புறத்து இருளிலிருந்து இரண்டு கைகள் அவருடைய தோளைத் தீண்டின. வளநாடுடையார் இருண்டு பயங்கரமாயிருந்த அந்த இடத்தில் பின்புறத்திலிருந்து ஒலித்த குரல் தமக்குப் பழக்கமாகயிருந்ததை உணர்ந்தாலும் தற்காப்புக்காகத் தோள்மேல் விழுந்த கைகளை உதறிவிட்டு விரைந்து திரும்பி வேலை ஓங்கினார். ஓங்கிய வேலை அந்தக் கைகள் எதிரே மறுத்துப் பிடித்தன.

“வேலை ஓங்குவதற்கு அவசியமில்லை. நான் தான் அருட் செல்வர்! என்னை இவ்வளவு சுலபமாக வேலாலே குத்திக் கொன்று விட ஆசைப்படாதீர்கள். நான் இன்னும் சிறிது காலம் இந்த உலகத்தில் வாழ்ந்து தொலைக்க வேண்டிய அவசியமிருக்கிறது” என்று சிரித்துக் கொண்டே குரல் அடையாளம் தெரியும்படி தெளிவாகக் கூறிவிட்டு வளநாடுடையாருக்கு அருகில் வந்து நின்று கொண்டார் அருட்செல்வ முனிவர். வளநாடுடையாருக்கு வியப்பு அடங்கச் சில கணங்கள் ஆயின.

Previous articleRead Manipallavam Part 1 Ch16 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Manipallavam Part 1 Ch18 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here