Home Manipallavam Read Manipallavam Part 2 Ch7 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

Read Manipallavam Part 2 Ch7 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

124
0
Read Manipallavam Part 2 Ch7 Manipallavam Na. Parthasarathy, Read Manipallavam Online Free, Manipallavam PDF, Download Manipallavam novel, Manipallavam book, read Manipallavam free, Manipallavam,Manipallavam story in tamil,Manipallavam story,Manipallavam novel in tamil,Manipallavam novel,Manipallavam book,Manipallavam book review,மணிபல்லவம்,மணிபல்லவம் கதை,Manipallavam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,na parthasarathy,nithiliavalli Part 2,nithiliavalli part 2,nithiliavalli part 3,nithiliavalli full story,nithiliavalli novel full story,nithiliavalli audiobook,nithiliavalli audio book,nithiliavalli full audiobook,nithiliavalli full audio book,
Read Manipallavam Part 2 Ch7 |Na.Parthasarathy|TamilNovel.in

Read Manipallavam Part 2 Ch7 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

மணிபல்லவம் – நா. பார்த்தசாரதி

இரண்டாம் பாகம் – ஞானப் பசி

அத்தியாயம் 7 : பூதம் புறப்பட்டது

Read Manipallavam Part 2 Ch7 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

வானளாவி நின்ற அந்தப் பெருமாளிகையிலிருந்து வெளியேறிப் பட்டினப்பாக்கத்தின் அகன்ற வீதியில் விரைந்து நடந்த போது ஓவியன் மணிமார்பனின் உள்ளத்தில் துன்பங்களின் கோட்டையிலிருந்து விடுதலையடைந்து வந்துவிட்டாற் போன்ற மகிழ்ச்சி நிறைந்திருந்தது. வீதியின் இருபுறமும் இரவின் அழகுகள் விவரிக்க இயலாத சோபையுடன் திகழ்ந்தன. இரவு கண் விழித்துப் பார்ப்பது போல் எங்கு நோக்கினும் விளக்கொளிகள் தோன்றின. மாளிகையின் முன்புறங்களில் படர்ந்திருந்த ‘இல்வளர்முல்லை’ என்னும் வகையைச் சேர்ந்த முல்லைக் கொடியில் பூக்கள் பூத்துக் குலுங்கி வீதியில் வீசிய காற்றையே மணக்கச் செய்து கொண்டிருந்தன.

மணிமார்பனுக்கு மணங்களிலிருந்து எண்ணங்கள் பிறந்தன. எண்ணங்களிலிருந்து புதிய எண்ணங்கள் கிளைந்தன. மணங்களைத் தூண்டுதலாகக் கொண்டு பிறந்த எண்ணங்களும் எண்ணங்களைத் தூண்டுதலாகக் கொண்டு பிறந்த வாசனைகளும் மணந்தன, நெஞ்சிலும் உடம்பிலும். வாழ்க்கையைப் பற்றிய துணிவுகளும், நம்பிக்கையும் அப்போதுதான் புதியனவாகப் பிறப்பதுபோல் தோன்றின. மணங்கள், இனிய இசைகள், குளிர்காற்று இவற்றின் அருகில் இவற்றை உணரும் போது ‘வாழ்க்கையில் மகிழ்வதற்கு ஏதோ இருக்கிறது, எங்கோ இருக்கிறது. அதைத் தேடு!” என்பது போல் ஒரு நம்பிக்கையுணர்ச்சியை மணிமார்பன் பலமுறை அடைந்திருக்கிறான். மடியில் முடிந்து வைத்துக் கொண்டிருந்த மணிமாலையைப் பற்றி நினைத்து மகிழ்ந்தான் அவன். சிறிது நேரத்துக்கு முன்பு அந்த மாளிகையிலிருந்து அவன் வெளியேறிய போது சுரமஞ்சரி அவனுக்கு மனம் விரும்பிக் கொடுத்த பரிசு அல்லவா அது? அவ்வளவு பெரிய பரிசை அவளிடமிருந்து எதிர்பார்க்கவே இல்லை அவன். தான் அந்த மணிமாலையை வாங்கிக் கொள்வதற்குத் தயங்கிய போது அவள் கூறிய வார்த்தைகளை மறுபடியும் நினைத்துக் கொண்டான் அவன். தகுதி என்பது கொடுக்கிறவர்களுக்கு இருந்தால் போதும், வாங்கிக் கொள்கிறவர்களுக்கு மறுக்காமல் வாங்கிக் கொள்வதுதான் பெரிய தகுதி என்று கூறினாளே அவள்! செல்வர்கள் வார்த்தைகளைக் கூட பெருந்தன்மையாகச் செலவழிக்கிறார்களே என்று அவளுடைய வார்த்தைகளை எண்ணியபோது அவனுக்கு ஒரு வியப்பு உண்டாயிற்று. சுரமஞ்சரி மணிமாலையளித்ததில் எவ்வளவு பெருந்தன்மை இருந்ததோ, அவ்வளவுக்குச் சிறிதும் குறையாத பெருந்தன்மை அவள் அதை அளிக்கும்போது கூறிய வார்த்தைகளிலும் இருந்ததை அவன் உணர்ந்தான்.

“அடடா! மனத்துக்குப் பற்றுதல் இல்லாத சூழ்நிலையிலிருந்தும், ஒட்டுதல் இல்லாத உறவுகளிலிருந்தும் விடுபட்டு வெளியேறிச் செல்வது எத்துணை மகிழ்ச்சியாயிருக்கிறது. இங்கே அமரலாமோ, அங்கே நிற்கலாமோ, கூடாதோ என்றெல்லாம் பெருஞ்செல்வர் இல்லத்தில் கூசிக்கொண்டே பழகும் வறுமையாளனாக நான் இனி வாடித் தவிக்க வேண்டியதில்லை. நாளையிலிருந்து என்னுடைய நல்ல காலம் தொடங்குகிறது. மீண்டும் இனிமேல் இந்தப் பட்டினப்பாக்கத்து மாளிகைக்குத் திரும்பி வர வேண்டிய தீவினை எனக்கு இல்லை. இதோ என் மடியிலிருக்கும் இந்த மணிமாலையை விற்றால் கவலையில்லாமல் வாழ்க்கை நடத்துவதற்குப் போதுமான பொற்கழஞ்சுகள் கிடைத்துவிடும். நானும் என்னுடைய ஓவியக்கலையும் வளர்ந்து பெருகி வாழலாம். ஆனால், அதற்கு முன் இன்னும் ஒரே ஒரு துன்பம் எனக்கு இருக்கிறது. சுரமஞ்சரி தேவியின் மெல்லிய உள்ளத்தைக் கவர்ந்த அந்த முரட்டு மனிதரைச் சந்தித்து அவள் கூறியவற்றைச் சொல்லி, எச்சரிக்கை செய்துவிட்டுப் போக வேண்டும். அந்த மனிதரைச் சந்தித்து இரண்டாம் முறையாக அவமானப்பட நேர்ந்தாலும் பட்டுக் கொள்ள வேண்டியதுதான். அந்த மனிதரிடமிருந்து அடைகிற கடைசி அவமானமாக இருக்கட்டும் அது” என்று இவ்வாறெல்லாம் எண்ணிக் கொண்டே வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தான் மணிமார்பன்.

வெளியே சென்றிருக்கும் நகைவேழம்பர் எதிரே திரும்பி வர நேர்ந்து தான் கண்களில் தென்பட்டுத் துன்புறும்படி ஆகிவிடக் கூடாதே என்று அஞ்சியே அவன் வேகமாகச் சென்று கொண்டிருந்தான். ‘நாளங்காடியின் அடர்த்திக்குள் புகுந்துவிட்டால் அப்புறம் கவலை இல்லை. பெரிய தெருக்கள் தவிர குறுகிய வழிகளும், சிறிய முடுக்குகளும் மருவூர்ப்பாக்கத்தில் அதிகமாக இருப்பதனால், நாளங்காடியைக் கடந்து மருவூர்ப்பாக்கத்துக்குள் செல்லும் போது பிறர் கவனத்துக்கு ஆளாகாமல் மறைந்து சென்று விடலாம். மருவூர்ப்பாக்கத்தில் ஆலமுற்றத்துப் படைக்கலச்சாலையில் அந்த மனிதரைச் சந்தித்துவிட்டு இரவோடு இரவாக இந்த நகரத்திலிருந்து வெளியேறி விட வேண்டும்’ – என்று திட்டமிட்டிருந்தது அந்த ஏழை ஓவியனின் மனம். தன் தாய்நாட்டையும் தாயையும் ஏக்கத்தோடு நினைத்தான் அவன்.

வைகை வளநாடாகிய பாண்டிய நாட்டில் தமிழ் மதுரைக் கோநகரில் ஆற்றின் வடகரைமேலே திருமருத முன்துறை என்னுமிடத்தில் மருத மரங்களின் நடுவே அமைந்திருந்த தனது சிறிய வீட்டையும் மூப்படைந்த தன் பெற்றோர்களின் நிலையையும் மனக் கண்களால் நினைத்துப் பார்த்துக் கொண்டான் ஓவியன் மணிமார்பன். இரண்டு திங்களுக்கு முன், இந்திர விழாவைக் காண்பதற்காக மதுரையிலிருந்து பூம்புகாருக்கு புறப்பட்ட யாத்திரைக் குழுவினருடன் தானும் சேர்ந்து புறப்பட்ட அந்த நாளில், வீட்டு வாயிலில் கிழப் பெற்றோர் தனக்கு விடை கொடுத்த துயரக் காட்சியும் மணிமார்பனுக்கு நினைவு வந்தன. ‘காவிரிப்பூம்பட்டினத்து இந்திர விழாவில் நிறைய ஓவியங்கள் எழுதி விற்றும், பரிசு பெற்றும் தான் பெரும் பொருளோடு திரும்பி வரப் போவதனைக் கற்பனை செய்தபடி நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கும் தன் பெற்றோரைப் பற்றி நினைத்த போது மணிமார்பனுக்கு மனம் நெகிழ்ந்தது. கண்கள் கலங்கின. அப்போதே அந்த விநாடியே பறந்து சென்று மதுரையில் வைகைக் கரையில் குதித்துத் தன் வீட்டுக்குப் போய், கிழப் பெற்றோரை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கச் செய்ய வேண்டும் போல் ஆசையாயிருந்தது மணிமார்பனுக்கு.

தனக்குச் சுரமஞ்சரி அளித்திருந்த மணிமாலையை நாளங்காடிச் சதுக்கத்திலுள்ள பொன் வணிகர் எவரிடமாவது விற்றுப் பொற்கழஞ்சுகளாக மாற்றிக் கொண்டு மதுரைக்குப் புறப்படலாமென எண்ணினான் அவன். நீலநாகர் படைக்கலச்சாலைக்குப் போய்ச் சுரமஞ்சரி கூறியனுப்பியிருந்த செய்தியை அதற்குரியவரிடம் கூறி விட்டுத் திரும்பி வந்து மணிமாலையை விற்கலாம் என்றால் நாளங்காடிக் கடைகளை அதற்குள் அடைத்து விடுவார்கள். இரவு நேரத்தில் அல்லங்காடிக் கடைகள் திறந்திருக்குமாயினும், இவ்வளவு மதிப்பீடு உள்ள அரிய மணிமாலையை விலை பேசி விற்கிற அளவுக்குப் பெரிய கடைகள் அங்கு இல்லை. நாளங்காடி நாற்சந்திக்கு வந்தவுடன் பூதசதுக்கத்துக்கு எதிரே தயங்கி நின்றான் மணிமார்பன். இந்திர விழாவின் இரண்டாம் நாள்தான் அந்த இடத்தில் சுரமஞ்சரி என்னும் செல்வக் குடும்பத்துப் பெண்ணைச் சந்திக்க நேர்ந்ததும், அவளுக்காக இளங்குமரனை நிற்கச் செய்து ஓவியம் வரைந்ததும், அதன் காரணமாகப் பின்பு தனக்கு ஏற்பட்ட நிகழ்ச்சிகளும் அவன் நினைவில் படர்ந்தன. அவன் நினைப்பிலும் நோக்கிலும் காவிரிப்பூம்பட்டின நகரம் இப்போது கூட அழகும் பெருமையும் நிறைந்ததாகத்தான் தோன்றியது. ஆனால் நகைவேழம்பர் என்னும் குரூரமான மனிதரையும், அவரை வைத்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் எட்டிப் பட்டம் பெற்ற பெருநிதிச் செல்வரையும் நினைத்த போதுதான் காவிரிப்பூம்பட்டினம் பயங்கரமும் சூழ்ச்சியும் மிகுந்த நகரமோ என்ற அச்சம் அவன் மனத்தில் எழுந்தது.

பூம்புகாரின் மாபெரும் துறைமுகத்துக்கு, நெடுந்தொலைவிலுள்ள நாடுகளிலிருந்தெல்லாம் கப்பல்கள் வந்து போவதனால் பலநாட்டு வணிகரும் நிறைந்து வாணிகமும் செழிப்பும் சிறப்புமாக நடைபெற்று, வாழவும் பொருள் சேர்க்கவும் வழிகள் அதிகமாயிருந்தன. அதை நினைத்துக் கொண்டு தான் மணிமார்பன் அந்த நகரத்துக்கு வந்திருந்தான். ஆனால் அவன் அங்கு வந்ததிலிருந்து நடந்த நிகழ்ச்சிகள் என்னவோ வேறு விதமாக அமைந்து விட்டன. ‘உடும்பைப் பிடிக்க வேண்டாம். உடும்புப் பிடியிலிருந்து கைகளை விடுவித்துக் கொண்டு ஓடினால் போதும்’ என்ற மனநிலையை அடைந்து விட்டான் அவன்.

எதிரே நாளங்காடிப் பூதங்கள் இரண்டும் பாசக் கயிற்றையும், கதாயுதத்தையும் ஓங்கிக் கொண்டு இருளில் பயங்கரமாகக் காட்சியளித்தன. ‘பொய்த் தவவேடம் பூண்டோர், நிறையிலாப் பெண்மணிகள், கீழ்மைக் குணமுள்ள அமைச்சர்கள், ஒழுக்கமற்ற ஆடவர்கள், பொய்ச் சாட்சி சொல்வோர், புறம் பேசுவோர் இவர்களையெல்லாம் எங்கள் பாசக் கயிற்றால் பற்றிப் புடைத்து உண்போம்” என்று நள்ளிரவு நேரங்களில் நான்கு காத தூரம் கேட்கும்படி இடிகுரலில் அந்தப் பூதங்கள் முழக்கமிடுவதாகப் புனைந்து கூறிப் பொல்லாத குழந்தைகளைப் பெற்றோர் அடக்குவது வழக்கம். அந்த நகரில் குழந்தைகளைப் பயமுறுத்தும் வழக்கம் இதுதான்.

‘இந்த பாவி நகைவேழம்பர் எத்தனையோ முறை நள்ளிரவு நேரங்களில் தனியாக இதே வழியாக வருகிறாரே, பூத சதுக்கத்துப் பூதங்கள் இன்னும் இவரைப் புடைத்து உண்ணாமல் ஏன் விட்டு வைத்திருக்கின்றனவோ?’ என்று கொதிப்போடு எண்ணினான் அவன். பொற்கடைக்குப் போய் மணிமாலையை விற்பதற்கு முன்னால் யாரும் காணாத தனிமையில் தான் மட்டும் அதை ஒரு முறை நோக்கி மகிழ வேண்டுமென்று விரும்பினான் ஓவியன். ஆனால் மக்கள் புழக்கமும் நெருக்கடியும் நிறைந்த அந்த நாளங்காடிச் சதுக்கத்தில் அவன் எதிர்பார்த்த தனிமை கிடைக்குமென்று தோன்றவில்லை. சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தான் மணிமார்பன். பூதச் சிலையைச் சுற்றி ஓரளவு இருண்டிருந்தது. திருவிழா முடிந்திருந்ததால் பூதங்கள் இரண்டும் அடுத்த ஆண்டின் திருவிழாவை எதிர்பார்த்து இருளின் அமைதியில் தவம் செய்து கொண்டிருந்தன போலும். இருட்டைப் பிசைந்து இயற்றியவை போலத் தோன்றிக் கொண்டிருந்த அந்தக் கரும்பூதச் சிலைகளின் கீழே மின்மினிப் பூச்சி போல் ஒரு சிறு விளக்கும் எரிந்து கொண்டிருந்தது. விளக்கைச் சுற்றிலும் பல காரணங்களுக்காக வேண்டுதல் செய்து கொண்டவர்கள் காணிக்கையாக வைத்திருந்த மண் பிரதிமைகள் நின்றன. உடைத்த தேங்காய் மூடியின் உட்புறம் போன்ற குழிந்த கண்களும், கோரப் பற்களும், பயமூட்டும் தோற்றமுமாகச் சூழ்ந்திருந்த இம்மண் உருக்கள் பெரும் பூதத்தைச் சூழ்ந்து படை திரண்ட குட்டி அசுரகணம் போலக் காட்சியளித்தன.

முதலில் ஓவியன் அந்த இடத்துக்குப் போவதற்குப் பயந்தான் என்றாலும் ஆசை வளர்ந்து துணிவாயிற்று. நாளங்காடியைப் போலக் கூட்டம் அதிகமான பகுதியில் நல்ல மனிதர்கள் மட்டும் தான் சூழ்ந்திருப்பார்கள் என்று நினைக்க முடியாது. நல்லவர்களும் இருக்கலாம், கெட்டவர்களும் இருக்கலாம். அப்படிக் கெட்டவர்களும் நல்லவர்களும் கலந்திருக்கும் இடத்தில் பெறுமானமுள்ள பொருளாகிய மணிமாலையை எடுத்துப் பலர் காண நோக்குவது அறிவுக்கு அழகன்று என முடிவுக்கு வந்தவனாகப் பூதச்சிலைக்கு அருகே சென்றான் மணிமார்பன்.

வாடிக் காய்ந்த பூக்களின் வெதும்பிய மணமும் பூதச் சிலையிலிருந்து வழிந்திருந்த எண்ணெய் வாடையுமாக அந்த இடத்துக்குத் தனிச் சூழ்நிலையை நல்கின. தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று சுற்றிலும் பார்த்துவிட்டுப் பூதச் சிலையின் கீழே விளக்கின் அடியிலிருந்த மண் பிரதிமைகளுக்கு நடுவே முழந்தாளை மண்டியிட்டு அமர்ந்தான் ஓவியன். சுற்றியிருந்த எல்லாப் பிரதிமைகளின் கோரக்கண்களும் கொள்ளிவாய்களும் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது போல் அவனுக்கு ஒரு பொய் உணர்வு தோன்றிக் கணநேரம் மருட்டியது. வேகமாக அடித்துக் கொள்ளும் நெஞ்சுடன் நடுங்கும் கைகளால் மடியிலிருந்து அந்த மணிமாலையை எடுத்து விளக்கருகில் பிடித்தான் அவன். ஒளிக்குலம் முழுவதும் ஒன்றுபட்டு வளைந்து ஆரமாகித் தொங்கினாற் போல் சுடர் வெள்ளம் பாய்ச்சியது அந்த மாலை. மாலையிலுள்ள மணிகள் மின்னும் போதெல்லாம், ‘இந்த உலகில் எங்களுக்கு விலை ஏது? விலை கொடுப்பார் தாம் எவர் இருக்கின்றனர்? எங்கு இருக்கின்றனர்?’ என்று தன் ஒளி வீச்சுக்கள் முழுவதும் கேள்விகளை நிறைத்துக் கொண்டு மின்னுவது போல் ஓவியனுக்குத் தோன்றியது. ‘இவ்வளவு பெரிய பரிசுக்கு நான் தகுதியானவனா?’ என்று மறுபடியும் தனது மன எல்லையில் கேள்வி எழுந்த போது இந்த மாலையின் ஒளிவட்டத்துக்கு நடுவே சுரமஞ்சரியின் பேரழகு முகம் தோன்றித் ‘தகுதி என்பது கொடுக்கிறவர்களுக்கு இருந்தால் போதும்’ என்று கூறிச் சிரிப்பதுபோல் ஓவியன் உணர்ந்தான்.

‘ஒருவிதத்தில் நான் கொடுத்து வைத்தவன் தான்! காவிரிப்பூம்பட்டினத்துக்கு வந்து சில நாட்கள் துன்பமும், கொடுமையும் அநுபவித்து விட்டாலும் திரும்பிச் செல்லும் போது மிகவும் மகிழ்ச்சியோடு பெரும் பரிசு பெற்றுச் செல்கிறேன்’ என்று நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டான் ஓவியன்.

அப்போது பின்னால் ஏதோ ஓசை கேட்டாற் போலிருந்தது. ஓவியன் மணிமாலையை மறைத்துக் கொண்டு பதற்றத்தோடு திரும்பிப் பார்த்தான். வரிசையாக நிறுத்தியிருந்த மண் பிரதிமைகள் தாம் கண்களை உருட்டி விழிப்பது போல் தோன்றின வேயன்றி வேறு ஒன்றும் தெரியவில்லை. ‘தன் மனத்தில் ஏற்பட்ட பிரமையினால் அப்படி ஓசை கேட்டது போல் தானாக எண்ணியிருக்க வேண்டும்’ என்று பயம் நீங்கிச் செல்வதற்காக எழுந்தான் மணிமார்பன். மறுபடியும் முன்பு கேட்ட அதே ஓசை கேட்பது போலிருந்தது. நெஞ்சத் துடிப்பு மேலிட நடுக்கத்துடன் ஓடிவிடுவதற்கும் சித்தமாகி அவன் தன் கால்களை வேகத்துக்குரிய நிலைக்குக் கொண்டு வர முற்பட்ட போது பூதச்சிலையில் அடிப் பக்கத்து இருளிலிருந்து யாரோ மெல்லக் கனைப்பது போல் கேட்டது. பயந்தவாறே பார்த்தான்.

அவனுக்குக் கண்கள் விரிந்து வெளிறின. எதிரேயிருந்த பூதப் பிரதிமை ஒன்று குரூரக் கண்களை விழித்துக் கொண்டு கோர வாய் பிளந்து அவனருகே நகர்ந்து வந்து கொண்டிருந்தது. மண் பிரதிமை நடக்குமா? இப்படி பயமுறுத்துமா?

அந்தப் பூதம் அருகில் வந்ததும் தான் அதற்கு ஒரே கண் என்பதும் அது நகைவேழம்பர் என்கிற மனிதப் பேய் என்பதும் ஓவியனுக்குப் புரிந்தது. தன் கால்களின் வலிமையை எல்லாம் ஒன்று திரட்டி ஓட்டமெடுத்தான் மணிமார்பன். அவன் ஓடிய வேகத்தில் தள்ளிய மண் பிரதிமைகள் சில கீழே விழுந்து உடைந்தன.

Previous articleRead Manipallavam Part 2 Ch6 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Manipallavam Part 2 Ch8 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here