Home Manipallavam Read Manipallavam Part 3 Ch9 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

Read Manipallavam Part 3 Ch9 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

50
0
Read Manipallavam Part 3 Ch9 Manipallavam Na. Parthasarathy, Read Manipallavam Online Free, Manipallavam PDF, Download Manipallavam novel, Manipallavam book, read Manipallavam free, Manipallavam,Manipallavam story in tamil,Manipallavam story,Manipallavam novel in tamil,Manipallavam novel,Manipallavam book,Manipallavam book review,மணிபல்லவம்,மணிபல்லவம் கதை,Manipallavam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,na parthasarathy,nithiliavalli Part 3,nithiliavalli Part 3,nithiliavalli part 3,nithiliavalli full story,nithiliavalli novel full story,nithiliavalli audiobook,nithiliavalli audio book,nithiliavalli full audiobook,nithiliavalli full audio book,
Read Manipallavam Part 3 Ch9 |Na.Parthasarathy|TamilNovel.in

Read Manipallavam Part 3 Ch9 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

மணிபல்லவம் – நா. பார்த்தசாரதி

மூன்றாம் பாகம் – வெற்றிக்கொடி

அத்தியாயம் 9 : தொழுத கையுள்ளும்…

Read Manipallavam Part 3 Ch9 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகையில் பூக்கள் குவிந்து பொழுது விரிந்து கொண்டிந்த இதே வேளையில்தான் இளங்குமரன் ஆலமுற்றத்துக் கடல் ஓரமாக நீலநாக மறவருடன் நடந்து கொண்டிருந்தான். அங்கே நெய்தல் நிலத்துக் கழி முகங்களில் மலர்ந்திருந்த தாழம்பூக்களின் மணத்தை நுகர்ந்தபோது, இந்தத் தாழம்பூக்களின் மணத்தையே நான் அடிக்கடி உணர நேர்கிறதே என்று நினைத்துத் தனக்குத்தானே மெல்லச் சிரித்துக் கொண்டான் அவன். உலகத்துப் பூக்களிலும் அவற்றின் மணத்திலும் நாங்கூர் அடிகள் தெய்வத்தையே பார்க்கிறார். நானோ ‘இவ்வளவு நாள் கற்ற பின்னும் பழைய மனிதர்களையும் பழைய உறவுகளையும் பழைய நினைவுகளையும் தவிர வேறெதையும் இவற்றின் மணத்தில் காண முடிய வில்லையே’ என்று எண்ணியபோது இளங்குமரனுக்கு ஏக்கமாகத்தான் இருந்தது. வாசனையின் வழியே மனம் போகக் கூடாதென்பதைத்தான் அவன் கற்றிருந்த தத்துவங்கள் அவனுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தன. அவனோ கால்கள் நடந்த வழி மனமும், மனம் நடந்த வழியே கால்களும் செல்லாமல் இரண்டும் வேறு வேறு வழிகளுக்கு முரண்டிக் கொண்டு போகிற வேதனையை இன்று அதிகாலையில் உணர்ந்தான். நீராடித் தூய்மை பெற்றுத் திரும்பிய போது மனமும் கால்களும் ஒரே வழியில் நடக்கும் ஒருமை நிலையோடு அவன் நீலநாகமறவருடன் படைக்கலச் சாலைக்குள் நுழைந்தான். புனலாடிக் குளிர்ந்த உடம்பினாலும் தியானத்தினாலும் மனம் தூய நினைவுகளிலும் மூழ்கியிருந்தது. பழைய கலக்கம் இல்லை.

அவர்களை எதிர்பார்த்து அப்போது ஓவியன் மணிமார்பனும், அவன் மனைவியும் படைக்கலச் சாலையில் வந்து காத்துக் கொண்டிருந்தார்கள். நீலநாகமறவர் மணிமார்பனைக் கண்டதுமே அடையாளம் புரிந்து கொண்டார்.

“பாண்டிய நாட்டுப் பிள்ளையாண்டானா? எப்பொழுது வந்தாய்?” என்று அன்போடு அவனை விசாரித்தார் நீலநாகமறவர். மனைவியோடு இந்திர விழாக் காண வந்திருப்பதை இவரிடம் கூறினான் மணிமார்பன். “எங்கே தங்கியிருக்கிறாய் தம்பீ?” என்று மேலும் கேட்டார் அவர். இலவந்திகைச் சோலையின் மதிற்புறத்தில் உள்ள ஓர் அறக்கோட்டத்தில் தங்கியிருப்பதாகக் கூறினான் அவன். அதைக் கேட்டதும் அவர் முகம் கலக்கத்தைக் காட்டியது.

“இந்த ஊரில் உனக்குப் பழைய பகைவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டிருந்தும் நீ இப்படியெல்லாம் பொது இடங்களில் தங்கலாமா? முன்பாவது நீ தனிக்கட்டை, இப்போது உன்னைப் பற்றி கவலைப்படவும் நீ கவலைப்படவும், இந்தப் பெண்ணும் இருக்கிறாளே, முதலிலேயே இங்கு வந்து தங்கியிருக்கக் கூடாதோ? இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. இலவந்திகைச் சோலைக்குப் போய் உங்கள் பொருள் களையெல்லாம் எடுத்துக் கொண்டு இன்று மாலைக்குள் இருவரும் இங்கே வந்துவிடுங்கள். இந்திர விழா முடிந்து ஊர் திரும்புகிற வரை இங்கேயே தங்கலாம்” என்றார் நீலநாகமறவர். அப்படியே செய்வதாக இணங்கினான் மணிமார்பன். சிறிது நேரம் அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்து விட்டு இளங்குமரனும், நீலநாகரும் அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினர்.

செய்யவேண்டிய வழிபாடுகளையும் நியமங்களையும் முடித்துக் கொண்டு அன்று காலையிலேயே சமய வாதத்துக்குப் புறப்பட்டு விட்டான் இளங்குமரன்! புறப்படும்போது நீலநாகர் எச்சரித்தார்: “நேற்றைய அனுபவத்தை மறந்துவிடாதே, கவனமாக நடந்து கொள். ஒவ்வொரு விநாடியும் நான் உனக்குத் துணையாயிருப்பதென்பது இயலாத காரியம். நான் ஒரு விநாடி சோர்ந்திருந்தால் அந்த ஒரு விநாடியைப் பயன்படுத்திக்கொண்டு உன் பகைவர்கள் உனக்கு எவ்வளவோ செய்துவிடலாம்.”

இதைக்கேட்டு இளங்குமரன் மெல்லச் சிரித்தான். “அறிவுடையவனுக்கு அந்த அறிவே பெரிய அரண் என்று நீங்கள்தானே நேற்றுக் கூறினிர்கள்! அதை நம்பித்தான் தனியே போகிறேன்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான். இன்று நடந்தே புறப்பட்டுச் செல்வதென்று தனக்குள் நினைத்திருந்தபடியே செய்தான் அவன்.

வேடிக்கை, விளையாடல், கலை, களிப்பு என்று இந்திர விழாக் கூட்டம் பலவிதமான நுகர்ச்சிகளில் சிதறியிருந்தாலும் அறிவில் இன்பம் காணுகிற கூட்டம் நாளங்காடியில் ஒரு மூலையிலிருந்த அந்த அறிவுப் போர்க்களத்தில் கூடியிருந்தது. இந்திர விழாவின் இரண்டாவது நாட் காலையாகிய அன்று பூத சதுக்கத்தில் படையலிடுவோர், பாடுகிடப்போர் கூட்டம் மிகுதியாயிருந்தது. அதனால் நேரம் காலையாயினும் சமயவாதிகளைச் சுற்றிலும் கூடக் கூட்டம் அதிகமாயிருந்தது. இளங்குமரன் அந்தக் கூட்டத்தில் நுழைந்து தன் கொடியை ஊன்றியபோது கூடியிருந்தவர்களிடம் பெரிதும் ஆர்வம் பிறந்தது. அவர்களிற் பலர் முதல்நாள் அவனுடைய வாதத்தில் திறமை கண்டதின் காரணமாக இன்றும் இதைக் காணலாம் என்னும் ஆவலால் வந்தவர்கள். கூட்டத்தில் ஒரு பகுதியினர் இளங்குமரன் உள்ளே நுழைந்து கொடி ஊன்றியதும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து அவனை வரவேற்றதிலிருந்தே அந்த ஆர்வம் புலப்பட்டது. அன்றைக்கு இளங்குமரனுக்கு வாய்த்த முதல் எதிரி ஒரு சாங்கியனாக அமைந்தான். தத்துவங்களில் மிகவும் வல்லவனாகிய அந்தச் சாங்கியன் மிடுக்காக நடந்து சிரித்துக் கொண்டே இளங்குமரனுக்கு எதிரில் வந்து தன் கொடியை நட்டான். அவனுடைய சிரிப்பு ‘நீ என் தத்துவங்களுக்கு முன்னால் வெறும் சிறுபிள்ளை. உன்னை வெல்வதற்கென்று எனக்குத் தனி முயற்சி எதுவும் வேண்டியதேயில்லை’ என்று இளங்குமரனை எள்ளி நகையாடுகிற விதத்தில் தெரிந்தது. சாங்கியன் கூர்மையான அம்பைக் குறிவைத்து எய்வது போல் தன் முதல் கேள்வியைத் தொடுத்தான்: “உலகம் உள்ள பொருளாகச் சொல்லப்பட்டது. தானே தோன்றி தானே அழியப்போகிற உலகத்துக்கு முதற் காரணமே போதுமே? நிமித்த காரணமாக ஒரு செய்பவன் எதற்கு?” இந்தக் கேள்வியிலும் அவன் தோற்றத்தில் இருந்தாற் போலவே மிடுக்கு இருந்தது. இளங்குமரன் தெளிவான முறையில் அவனுக்கு மறுமொழி தந்தான்: “செய்வோர் இல்லாமல் வினை செய்யப்படுவது முடியுமோ? செய்பவன் செய்து உண்டாக்கிய பின்பு தானே பொருள் உள்ளதாகும்? உத்தேசம் பண்ணிக் கொள்ளாமல் இலக்கணம் பண்ணுவது தருக்கத்தில் குற்றமல்லவா? நான் ‘மலடியீன்ற மகன்’ என்பதுபோல் உத்தேசமும் இல்லாமல் இலக்கணமும் இல்லாமல் வீணான வார்த்தைகளைச் சொல்கிறீர்களே? உள்ளதை உள்ளதென்று உணரும் அறிவுக்கு உபலத்தி என்று பெயர். இல்லதை இல்லதென்று உணரும் அறிவுக்கு அநுபலத்தி என்று பெயர். கண்முன் தெரிகிற உலகத்தை உபலத்தியாக உணரும் நாம் அதற்குச் செய்தவன் உண்டு என உணருவதே நியாயம். செய்யப்பட்ட பொருள் உபலத்தியாகும்போது செய்தவன் மட்டும் அநுபலத்தியாவது எப்படிப் பொருந்தும்? பொருந்துமானால் ‘வாக்கிய பேதம்’ என்னும் குற்றமுடைய பேச்சை நீங்கள் பேசுகிறீர்கள். கவிகள் அலங்காரத்துக்காக வாக்கிய பேதம் செய்யலாம். தருக்கத்தில் சிறு சொல்லுக்கும் மதிப்பு அதிகம். நெருப்புக் காய்வது போல் நெருங்காமலும் விலகாமலும் சொல்லை அளவாகத் தொடுத்து வாதிடவேண்டும். ஒளியைக் கண்டு உணர்வது உபலத்தி. இருளைக் கண்டு உணர்வது அநுபலத்தி. ஆலம்பழத்தின் அளவுள்ள சிறு நெருப்பைக் கொண்டு ஏழு எட்டு வேள்விக் குழிகளில் பெருநெருப்பை வார்க்க முடிவதுபோல் தருக்கத்தில் சிறு சொல்லுக்கும் பெரும்பயன் விளைய வேண்டும். சிறியதில் இருந்து பெரியவற்றைப் பயனாக விளைத்துக் காட்ட வேண்டும்.”

இதைக் கேட்டுச் சாங்கியன் சிறிதும் அயரவில்லை. தனது அடுத்த கேள்வியைத் தொடுத்தான். “நீர் தன் மேல் உருண்டு அலைந்து ஆடினாலும் நான் பற்றின்றித் தாங்கி இருக்கும் தாமரை இலைபோல் புத்தி ஐம்பொறிகள் வழியாக நுகர்ச்சியை ஏற்றுக் கொள்ளும், புத்திக்கும் அப்பால் வேறொருவன் எதற்கு?”

“உமது கேள்வி நன்றாயிருக்கிறது. அழகாகப் பதில் சொல்ல முடியாதவர்கள் கேள்விகளையாவது அழகாகக் கேட்க முடியும். சாங்கியராக இருந்த நீர் அறிந்தது அழகாகக் கேள்வி கேட்கும் அறிவு ஒன்றுதான் போலி ருக்கிறது. ஆன்மா ஒன்றித்து நின்று காட்டாவிடின் புத்தியும் ஐம்பொறிகளும் நுகரமாட்டா என்பதை நீர் தெரிந்து கொள்ளவில்லையா? உமக்குக் கண்கள் இருக்கின்றன. அவற்றுக்குப் பார்க்கும் ஆற்றலும் இருக்கிறது. ஆயினும் செறிந்து மண்டிய இருளில் உம்முடைய கண்களால் ஏன் எதையும் பார்க்க முடிவதில்லை? கண்களும், பார்க்க ஆற்றலும் தவிர உம்முடைய விழிகளையும் – கானும் ஆற்றலையும் நீர் காணவேண்டிய பொருளோடு ஒன்றிப்பதற்கு அவற்றின் வேறாகிய ஒளியும் வேண்டுமா, இல்லையா?”

மேலே என்ன கேட்பதென்று தயங்கிய சாங்கியன் விழித்தான். ஆனால் இன்னும் ஏதோ கேட்பதற்கு அவனுடைய உதடுகள் மட்டும் துடித்தன. அதற்குள் கூட்டத்தில் இளங்குமரனைப் புகழும் வெற்றிக் குரல்கள் முழங்கத் தொடங்கிவிட்டன. கொடியும், மிடுக்கான பார்வையோடு கூடிய முகமும் தாழத் திரும்பி நடந்தான் சாங்கியன்.

அப்போது கூட்டத்தில் ஏதோ பரபரப்பு ஏற்பட்டது. யாரோ வழி விலகிக்கொண்டு உள்ளே வருவதற்கு முயல்வது போலத் தோன்றியது. இளங்குமரன் பார்த்தான். இரண்டு மூன்று பெண்களும் அவர்களுக்குப் பின்னால் பெரிய கூடையைச் சுமந்து கொண்டு யவனப் பணியாளன் ஒருவனும் உள்ளே வந்து கொண்டிருந்தனர். அருகில் வந்ததும் அவர்கள் யாரென அவனுக்குத் தெரிந்தது. பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகைப் பெண்கள். ஒரேவிதமான கோலத்தில் விளங்கிய இருவரில் ஒருத்தி சுரமஞ்சரியாகவும், இன்னொருத்தி வானவல்லியாகவும் இருக்க வேண்டும் என்று அவன் அதுமானித்தான். மூன்றாவதாகக் கடைசியில் வந்தாள் வசந்தமாலை,

அவர்களுடைய அழகு அலங்கார ஒளியினாலும் அவர்கள் பரவவிட்ட மணத்தினாலும் கூட்டமே அவர்கள் பக்கம் கவரப்பட்டது. இளங்குமரன் மட்டும் சலனமின்றி நின்றான். மூன்று பெண்களும் அவனுக்கு மிக அருகில் வந்து தலை தாழ்த்தி அவனை வணங் கினார்கள். மூவரிலும் முதலில் நின்ற பெண் வணங்கிய படியே நிமிர்ந்து “என்னைத் தெரியவில்லையா? நான் தான் சுரமஞ்சரி” என்று மெல்லச் சொன்னாள். சலனமின்றி நின்ற இளங்குமரன், “நேற்று நீங்கள் வானவல்லியாக இருந்தது மெய்யா? இன்று நீங்கள் சுரமஞ்சரியாக இருப்பது மெய்யா? இரண்டில் எது மெய்?” என்று பதறாமல் கேட்டான்.

Previous articleRead Manipallavam Part 3 Ch8 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Manipallavam Part 3 Ch10 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here