Home Kalki Read Ponniyin Selvan Part 5 Ch 30

Read Ponniyin Selvan Part 5 Ch 30

94
0
Read Ponniyin Selvan Part 5 Ch 30 Kalki -TamilNovel.in Ponniyin Selvan is one of the historical fiction novel in tamil history. Read Download Ponniyin Selvan Free Ponniyin Selvan Part 5, Ponniyin Selvan part 5 Ch 30, Ponniyin Selvan Kalki, Ponniyin Selvan,ps1,ps2, Read Ponniyin Selvan book, Download Ponniyin Selvan pdf
Ponniyin Selvan Part 5 Ch 30 பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்: தியாக சிகரம் அத்தியாயம் 30: தெய்வம் ஆயினாள்!

Read Ponniyin Selvan Part 5 Ch 30

பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்: தியாக சிகரம்

அத்தியாயம் 30: தெய்வம் ஆயினாள்!

Read Ponniyin Selvan Part 5 Ch 30

பூங்குழலி எவ்வளவு விரைவாக ஓடக் கூடியவளானாலும், மேலிருந்து எறியப்பட்ட வேலுடன் போட்டியிட முடியாதல்லவா? அவள் மந்தாகினி அத்தையின் அருகில் பாய்ந்து செல்வதற்குள் வேல் அத்தையின் விலாவில் பாய்ந்துவிட்டது. ‘வீல்’ என்று மற்றொரு முறை பயங்கரமாக ஓலமிட்டு விட்டு மந்தாகினி கீழே விழுந்தாள். அதே சமயத்தில் அந்த அறையிலிருந்த அத்தனை பேருடைய குரல்களிலிருந்தும் பரிதாப ஒலிகள் கிளம்பின.

பூங்குழலியைப் போலவே மற்றவர்களும் தரையில் விழுந்த மாதரசியை நோக்கி ஓடிவர ஆயத்தமானார்கள். அச்சமயம் மேல் மாடத்திலிருந்து தடதடவென்று சத்தம் கேட்டது. சில மண் பாண்டங்கள் கீழ் நோக்கிப் பல திசைகளிலும் எறியப்பட்டன.

அவற்றில் ஒன்று சக்கரவர்த்தியின் அருகில் சுடர்விட்டுப் பிரகாசமாக எரிந்துகொண்டிருந்த தீபத்தின் பேரில் விழுந்தது; தீபம் அணைந்தது. அறையில் உடனே இருள் சூழ்ந்தது. பிறகு சிறிது நேரம் அந்த அந்தப்புர அறையிலும் அதைச் சுற்றியுள்ள நீண்ட தாழ்வாரங்களிலும் ஒரே குழப்பமாயிருந்தது. திடுதிடுவென்று மனிதர்கள் அங்குமிங்கும் வேகமாக ஓடும் காலடிச் சத்தங்கள் கேட்டன.

“விளக்கு! விளக்கு!” என்று சின்னப் பழுவேட்டரையர் கர்ஜனைக் குரல் அலறியது.

“ஆகா! ஐயோ!” என்று ஒரு பெண் குரல் அலறும் சத்தம் கேட்டது. அது மகாராணியின் குரல் போலிருக்கவே எல்லாருடைய நெஞ்சங்களும் திடுக்கிட்டு, உடல்கள் பதறின. இத்தனை குழப்பத்துக்கிடையே பூங்குழலி அவளுடைய அத்தை மந்தாகினி விழுந்த இடத்தைக் குறி வைத்து ஓடி அடைந்தாள். அத்தையை அவளுக்கு முன் யாரோ தூக்கி மடியின் மேல் போட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்தாள்.

இதயத்தைப் பிளக்கும்படியான சோகத் தொனியில் விம்மும் குரலும், அழுகைக் குரலும் சேர்ந்து அவள் காதில் விழுந்தன.

வாசற்படிக்கருகில் “யாரடா அவன்? ஓடாதே! நில்!” என்று சின்னப் பழுவேட்டரையர் கூச்சலிட்டார்.

ஓடியவன் யாராயிருக்குமென்று பூங்குழலி ஊகித்துக் கொண்டாள். அச்சமயம் இரண்டு தாதிப் பெண்கள் தீபங்களுடன் வந்து அந்த அறையில் பிரவேசித்தார்கள்.

தீப வெளிச்சத்தில் தோன்றிய காட்சி யாருமே எதிர்பார்க்க முடியாத அதிசயக் காட்சியாயிருந்தது. மூன்று வருஷங்களாகக் காலை ஊன்றி நடந்தறியாமலிருந்த சக்கரவர்த்தி, – கால்களின் சக்தியை அடியோடு இழந்து விட்டிருந்த சுந்தரசோழ மன்னன், – தாம் படுத்திருந்த கட்டிலிலிருந்து இறங்கி நடந்து வந்து, மந்தாகினியின் அருகில் உட்கார்ந்திருந்தார். அவர் அருகில் இளவரசரும் இருந்தார். மந்தாகினியின் விலாவில் ஒரு பக்கத்தில் பாய்ந்து இன்னொரு பக்கம் வெளி வந்திருந்த வேலின் முனையிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. சக்கரவர்த்தி படுத்திருந்த கட்டிலின் அருகில் மலையமான் மகள் வானமாதேவி காணப்பட்டாள். அவளுக்கு அருகில் சக்கரவர்த்தி தலை வைத்துச் சாய்ந்திருந்த தலையணையில் ஒரு கூரிய கத்தி செருகப்பட்டிருந்தது.

விளக்கு வந்ததும் மகாராணி கட்டிலை வெறிக்கப் பார்த்துவிட்டு, கரை காணாத அதிசயம் ததும்பிய கண்களினால் சக்கரவர்த்தி கீழே உட்கார்ந்திருந்ததைப் பார்த்தாள். அப்போது பொன்னியின் செல்வர் மந்தாகினியின் தலையை மெள்ளத் தூக்கிச் சக்கரவர்த்தியின் மடியில் வைத்தார். இளவரசர் அருள்மொழிவர்மரின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது. சக்கரவர்த்தியோ விம்மி விம்மி அழுது கொண்டிருந்தார்.

இவ்வளவையும் பூங்குழலி ஒரு கணநேரப் பார்வையில் பார்த்தாள். மறுகணத்திலேயே அங்கு நடந்த சம்பவங்களையெல்லாம் ஒருவாறு ஊகித்துத் தெரிந்து கொண்டாள். மேலேயிருந்து வேலை எறிந்தவன், அதை ஊமை ராணி தடைசெய்து விட்டதைக் கவனித்திருக்கிறான். உடனே மேலேயிருந்த தட்டு முட்டுச் சாமான்களை எடுத்தெறிந்து விளக்கை அணைத்து விட்டிருக்கிறான்.

அப்போது ஏற்பட்ட இருட்டில் கீழே குதித்து இறங்கிக் கட்டிலில் சக்கரவர்த்தி படுத்திருப்பதாக எண்ணிக் கத்தியினால் குத்திவிட்டு ஓடியிருக்கிறான். சக்கரவர்த்திக்கு ஆபத்து என்று அறிந்து கட்டிலின் அருகில் ஓடிய மகாராணியைத் தள்ளி விட்டுப் போயிருக்கிறான். அப்போதுதான் மகாராணி “ஐயோ” என்று கதறியிருக்கிறாள். பின்னர் அச்சதிகாரன் வாசற்படியின் பக்கம் ஓடி அங்கே அச்சமயம் பிரவேசித்துக் கொண்டிருந்த சின்னப் பழுவேட்டரையரையும் தள்ளி விட்டு ஓடிப்போயிருக்க வேண்டும். இவ்வளவையும் பூங்குழலி ஊகித்துத் தெரிந்து கொண்டாள். இந்தப் பாதகச் செயலைச் செய்து தப்பி ஓடியவனைத் தொடர்ந்து போய்ப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவள் மனத்தில் ஒரு பக்கத்தில் உதயமாயிற்று. அதைக் காட்டிலும் தன் அத்தையின் இறுதி நெருங்கி விட்டது என்ற நினைவு அவள் உள்ளத்தில் பெருங் கொந்தளிப்பை உண்டாக்கியது. ஆகையால் மந்தாகினி சக்கரவர்த்தியின் மடியில் தலை வைத்துப் படுத்திருப்பதையும் பொருட்படுத்தாமல் அவள் அருகில் சென்று மண்டியிட்டு உட்கார்ந்து “அத்தை! அத்தை!” என்று கதறினான்.

“ஐயோ! நீ சொன்னது உண்மையாகிவிட்டதே! பாவி நான் உன்னைத் தனியாக விட்டு விட்டுப் போனேனே!” என்று அழுது புலம்பினாள். ஆனால் மந்தாகினியோ அவள் இருந்த பக்கம் திரும்பிப் பார்க்கவே இல்லை. அவளுடைய கண்கள் சக்கரவர்த்தியின் திருமுகத்தை ஆவலுடன் அண்ணாந்து பார்த்த வண்ணமிருந்தன.

ஏன், அவளுடைய கரத்தைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் உகுத்த இளவரசர் மீதே அவளுடைய கவனம் செல்லவில்லை. பூங்குழலியைக் கவனிப்பது எப்படி?

பூங்குழலி மேலும் புலம்பத் தொடங்கியபோது இளவரசர் தமது விம்மலை அடக்கிக் கொண்டு, “சமுத்திர குமாரி! இது என்ன? உன்னை நீ மறந்துவிட்டாயா? நீ இருக்குமிடத்தை மறந்து விட்டாயா?” என்று சொல்லிக் கொண்டே எழுந்தார்.

பூங்குழலியும் சிறிது வெட்கமடைந்தவளாய்த் துயரத்தை அடக்கிக் கொண்டு எழுந்து நின்றாள். “அரசே! எனக்கு என் அத்தையைத் தவிர இவ்வுலகில் யாரும் கதி இல்லை!” என்று விம்மினாள்.

இளவரசர் தமது கண்ணில் பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டே, “பூங்குழலி! அவள் உனக்கு அத்தை! ஆனால் எனக்கு என் பெற்ற தாயைக் காட்டிலும் பதின் மடங்கு மேலான தாய்! என்னை அழைத்து வரச் சொல்லி உன்னை அனுப்பி வைத்தாள்! ஆயினும் என் முகத்தை அவள் ஏறிட்டுக்கூடப் பார்க்கவில்லை. இதன் காரணத்தை அறிந்தாயா? முப்பது வருஷங்களுக்கு முன்னால் பிரிந்த என் தந்தையும் தாயும் இன்று சேர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் தடையாக நிற்பதற்கு நாம் யார்?…” என்று கூறிவிட்டு, மகாராணி உள்பட எல்லாரையும் ஒரு தடவை இளவரசர் கூர்ந்து பார்த்தார்.

மீண்டும் பூங்குழலியை நோக்கி, “பெண்ணே! முன்னேயும் சில முறை எனக்கு நீ உதவி செய்திருக்கிறாய்! அந்த உதவியெல்லாம் அவ்வளவு முக்கியமானவையல்ல. இன்றைக்கு, என் தாயும் தந்தையும் ஒன்று சேரும் காட்சியைப் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கும்படி செய்தாய்! இதை நான் என்றும் மறக்கமாட்டேன்! சமுத்திர குமாரி! உன் அத்தை இன்று எவ்வளவு மகத்தான புண்ணியத்தைக் கட்டிக் கொண்டாள் என்பதை எண்ணிப் பார்! சதிகாரனுடைய கொலை வேல் என் தந்தையின் மேல் படாமல் காப்பாற்றினாள்! அந்த வேலைத் தன் உடம்பில் பாயும்படியும் செய்து கொண்டாள்! தன் உயிரைக் கொடுத்துச் சக்கரவர்த்தியின் உயிரைக் காப்பாற்றினாள்! ஒருமுறையல்ல. இருமுறை அவரைக் காப்பாற்றினாள்! உன் அத்தையின் மீது வேல் பாய்ந்ததைக் கண்டதும் மூன்று வருஷமாகச் சக்தி இழந்திருந்த என் தந்தையின் கால்களில் மீண்டும் சக்தி வந்தது. அவர் கட்டிலிருந்து எழுந்து வந்தார். அதனால் மறுபடியும் அவர் உயிர் தப்பியது. சதிகாரன் அவனுடைய குறி தப்பிவிட்டதாக எண்ணி விளக்கை அணைத்து விட்டுக் கீழே குதித்து வந்து மீண்டும் அவனுடைய பாதகத் தொழிலைச் செய்யப் பார்த்தான். ஆனால் சக்கரவர்த்தி எழுந்து வந்துவிட்டதால் அவனுடைய நோக்கம் நிறைவேறவில்லை. அதோ, என்னைப் பெற்ற தாய், மலையமான் குமாரி, கரைகாணா வியப்புடன் நிற்பதைப் பார்! உன் அத்தையின் மீது வேல் பாய்ந்ததை என்னைப் பெற்ற தாய் பார்த்தாள். மறுபடியும் அந்தக் கொலைகாரன் தன் சதித்தொழிலைச் செய்யலாம் என்று எண்ணி அவள் ஓடிவந்தாள். அத்தை செய்த உயிர்த் தியாகத்தைத் தானும் செய்ய வேண்டுமென்று எண்ணினாள். என் தந்தையைத் தன் உடலினால் மறைத்து அவர் மீது விழும் அடுத்த ஆயுதத்தைத் தான் தாங்கிக் கொள்ளவேண்டும் என்று நினைத்தாள். கட்டிலில் என் தந்தையைக் காணாதிருக்கவேதான் “ஐயோ” என்று அலறினாள். சக்கரவர்த்தி அங்கேயே இருந்திருந்தால், என் தந்தை, தாய் இருவரில் ஒருவர் இன்று இறந்திருப்பார்கள். சமுத்திரகுமாரி! உன் அத்தை இந்தச் சோழ குலத்துக்கும், சோழ நாட்டுக்கும் எவ்வளவு பெரிய சேவை செய்திருக்கிறாள் என்பதை இப்போது உணர்ந்தாயா? சதிகாரனுடைய ஆயுதத்தினால் சக்கரவர்த்தி மாண்டிருந்தால், சோழ சாம்ராஜ்யம் சின்னா பின்னப்பட்டுப் போய்விடும். பழுவேட்டரையர் குலத்துக்கு என்றென்றும் மாறாத பழிச் சொல் ஏற்படும் தன் தந்தையின் உயிரையும், தாயின் உயிரையும் மட்டும் உன் அத்தை காப்பாற்றவில்லை. பழுவேட்டரையரின் குலப் பெயரையும் காப்பாற்றினாள். சோழ நாட்டுக்கே பெரும் விபத்து நேராமல் காப்பாற்றினாள். சோழ வம்சத்துக்கே குல தெய்வம் ஆனாள். பூங்குழலி! உன் அத்தைக்காக இனி நான் ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விடப்போவதில்லை. அவளுக்காக நீயும் அழ வேண்டியதில்லை. வேறு யாரும் துக்கப்படவேண்டியதில்லை! இத்தகைய தெய்வ மரணம் யாருக்குக் கிடைக்கும்? முப்பது வருஷங்களாகப் பிரிந்திருந்த பதிக்காக உயிரைக் கொடுக்கும் பாக்கியம் யாருக்குக் கிடைக்கும்? அவருடைய மடியிலே தலையை வைத்துக்கொண்டு நிம்மதியாக உயிரைவிடும் பேறு யாருக்குக் கிடைக்கும்?” என்று கூறிவிட்டு இளவரசர் மீண்டும் ஒரு முறை சுற்று முற்றும் பார்த்தார்.

அந்த அறையிலும், வாசற்படி அருகிலும் நின்றவர்கள் அனைவரும் தம்முடைய வார்த்தைகளைக் கேட்டு கொண்டிருந்தார்கள் என்பதைப் பார்த்துக் கொண்டார். மேலும் கூறினார்:

“பூங்குழலி! உன் அத்தை இறந்து விட்டால் நீ அனாதை ஆகிவிடுவாய் என்று அஞ்ச வேண்டாம். நீ இன்று செய்த உதவியை நான் என்றும் மறக்கமாட்டேன். உன்னிடம் என்றென்றும் நன்றியுள்ளவனாயிருப்பேன். நான் ஒரு வேளை மறந்து விட்டாலும், சின்னப் பழுவேட்டரையர் மறக்க மாட்டார். உன் அத்தையும், நீயும் இன்று அவருக்கு எத்தகைய உதவிகள் செய்தீர்கள்! சக்கரவர்த்தியின் மீது வேலோ, கத்தியோ பாய்ந்திருந்தால் உலகம் என்ன சொல்லியிருக்கும்? தஞ்சைக் கோட்டைத் தளபதியான பழுவேட்டரையரையும் அந்தப் பாதகச் செயலுக்கு உடந்தை என்றுதான் ஊரார், உலகத்தார் சொல்லுவார்கள். கோட்டை வாசலில் கொடும்பாளூர் வேளார் வேறு காத்திருக்கிறார். பழுவூர்க் குலத்தை அடியோடு ஒழித்துக் கட்டுவதற்கு அவருக்கு வேண்டிய காரணம் கிடைத்திருக்கும். அவ்வளவு ஏன்? இன்றைக்கு நான் உன் உதவியினால் கோட்டைக்குள் வராதிருந்தால், கோட்டைத் தளபதியின் மேல் எனக்குக் கூடத்தான் சந்தேகம் உதித்திருக்கும். ஆகையால் சின்னப் பழுவேட்டரையர் மற்ற எல்லோரையும்விட உன்னிடம் அதிக நன்றி செலுத்த வேண்டும். அவரிடம் நீ என்ன பரிசு கேட்டாலும் கொடுப்பார். அவருடைய சொத்திலே பாதியைக் கேட்டாலும் கொடுத்து விடுவார்!”

இவ்வாறு இளவரசர் கூறியபோது சின்னப் பழுவேட்டரையரைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய கடமையை அவர் சரியாக நிறைவேற்றவில்லையென்பதை அவருக்கு உணர்த்த விரும்பியே மேற்கண்டவாறு பேசினார். அதைச் சின்னப் பழுவேட்டரையர் அறிந்து கொண்டார் என்பதை அவருடைய முகத்தில் தோன்றிய வேதனை நன்கு எடுத்துக் காட்டியது. அவருடைய முகத்தில் சாதாரணமாகக் குடி கொண்டிருந்த கம்பீரத் தோற்றம் போய்விட்டது. யாரையும் இலட்சியம் செய்யாத, எதற்கும் அஞ்சாத, வீரப் பெருமிதத்தின் அறிகுறி இப்போது அந்த முகத்தில் இல்லவே இல்லை.

போர்க்களத்திலிருந்து புறமுதுகிட்டு ஓடிவந்த வீரன் ஒருவன், பலர் ஏசும்படியாக இந்த உயிரைக் காப்பாற்றிக் கொண்டு வந்ததில் என்ன பயன் என்று வெட்கி மாழ்கும் பாவனை அவருடைய முகத்தில் இப்போது காணப்பட்டது.

இளவரசர் முதலில் கூறியதையெல்லாம் கேட்டு உள்ளமும் உடலும் உருகி நெகிழ்ந்து கொண்டிருந்த பூங்குழலி அவர் பரிசைப் பற்றிச் சொன்னதும் பழைய ஆக்ரோஷங்கொண்ட சமுத்திர குமாரியாகி விட்டாள்.

“இளவரசே! எனக்கு யாருடைய நன்றியும் தேவையில்லை; பரிசும் வேண்டியதில்லை. எனக்குத் தஞ்சம் அளிக்க சமுத்திர ராஜா இருக்கிறார். என் படகும் கால்வாய் முனையில் பத்திரமாயிருக்கிறது. இதோ நான் புறப்படுகிறேன். ஒருவேளை என் அத்தை உயிர் பிழைத்தால்? …இல்லை, அது வீண் ஆசை! காலையிலே என் அத்தை சொல்லிவிட்டாள். வரப்போவதை உணர்ந்துதான் சொன்னாள். இனி அவள் பிழைக்கப் போவதில்லை. எனக்கு இங்கே வேலையும் இல்லை என்றாவது ஒருநாள் தாங்களும் கொடும்பாளூர் இளவரசியும் கோடிக்கரைக்கு வந்தால்…” என்று கூறிப் பூங்குழலி வானதி இருந்த இடத்தை நோக்கினாள். அந்தப் பெண் அகல விரிந்த கண்களினால் தன்னையும் இளவரசையும் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தாள். “சீச்சீ! இது என்ன ஆசை? நான் போகிறேன்” என்று கூறிவிட்டு, வாசற்படியை நோக்கி விரைந்து நடந்தாள்.

இதுவரையில் திக்பிரமை கொண்டவளைப் போல் நின்றிருந்த வானதிக்கு அப்போதுதான் சிறிது தன்னுணர்வு வந்தது. அவள் பூங்குழலியின் அருகில் வந்து, “என் அருமைத் தோழி நீ எங்கே போகிறாய்? நானும் உன்னைப்போல் அநாதைதான்!…” என்று மேலும் பேசுவதற்குள், பூங்குழலி குறுக்கிட்டாள்: “தேவி நான் தங்கள் அருமைத் தோழியும் அல்ல. தாங்கள் என்னைப்போல் அநாதையும் அல்ல; சீக்கிரத்தில் பழையாறை இளையபிராட்டி வந்து விடுவார்!” என்றாள்.

வானதிக்கு அப்போதுதான் உண்மையில் இளைய பிராட்டியின் நினைவு வந்தது. “ஐயோ! அக்காவுக்கு இங்கு நடந்ததெல்லாம் ஒன்றும் தெரியாதே! செய்தி சொல்லி அனுப்ப வேண்டுமே?” என்றாள்.

“அதற்கும் ஒரு கவலையா? கோட்டை வாசலில் தங்கள் பெரிய தகப்பனார் இருக்கிறாரே? அவரிடம் சொன்னால் செய்தி அனுப்புகிறார்” என்று கூறிவிட்டுப் பூங்குழலி வழிமறிப்பவள்போல் நின்ற வானதியைக் கையினால் சிறிது நகர்த்தி விட்டு மேலே சென்றாள். வாசற்படிக்கு அருகில் சின்னப் பழுவேட்டரையர் மறுபடியும் அவளை வழிமறித்து நிறுத்தினார்.

“பெண்ணே! பொன்னியின் செல்வர் கூறியதையெல்லாம் நான் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் கூறியது முற்றும் உண்மை. பழுவூர்க் குலத்துக்கு அழியாத அபகீர்த்தி உண்டாகாமல் நீ காப்பாற்றினாய், உனக்கு நான் அளவில்லாத நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். நீ என்ன பரிசு வேண்டுமென்று கேட்டாலும் தருகிறேன்” என்றார்.

பூங்குழலி துயரப் புன்னகையுடன், “தளபதி! இங்குள்ளவர்களில் சிலருக்குச் சக்கரவர்த்தி உயிர் பிழைத்ததில் சந்தோஷம். சிலருக்கு அவர் நடமாடும் சக்தி பெற்றதில் சந்தோஷம். இன்னும் சிலருக்குப் பழுவேட்டரையர் குலம் அபகீர்த்திக்கு உள்ளாகாததில் மகிழ்ச்சி. என் அத்தைக்கு நேர்ந்த துர்மரணத்தைப் பற்றி யாருக்கும் கவலையிருப்பதாகத் தெரியவில்லை. நானாவது அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாமா! என் அத்தையைக் கொன்றவன் எங்கே போனான் என்று தேடிக் கண்டுபிடிக்கப் பார்க்கிறேன். தயவு செய்து எனக்கு வழியை விடுங்கள்!” என்றாள்.

பூங்குழலியின் இந்த வார்த்தைகள் கோட்டைத் தளபதி காலாந்தக கண்டரைத் தூக்கி வாரிப் போட்டன.

“பெண்ணே! உன்னிடம் நான் தோற்றேன். கொலைகாரனை விட்டுவிட்டுச் சும்மா நின்று கொண்டிருக்கிறேன். அவனைக் கண்டுபிடிக்காவிட்டால், சக்கரவர்த்தி பிழைத்ததினால் மட்டும் என் பழி தீர்ந்துவிடாது. உன் வார்த்தைகளில் நான் அவநம்பிக்கை கொண்டதே தவறு! கொலைகாரன் எங்கே போயிருப்பான்? என்னைத் தள்ளிவிட்டு ஓடினான். ஆம்! ஆம்! சுரங்க வழிக்குத்தான் போயிருப்பான். வா! எனக்கு உதவியாக வா! வேறு யாரையும் அழைத்துப் போக விருப்பம் இல்லை! அவன் மட்டும் என்னிடம் அகப்படட்டும்! என்ன செய்கிறேன், பார்!”

இவ்விதம் சொல்லிக்கொண்டே சின்னப் பழுவேட்டரையர் தம் இரும்புக் கையினால் பூங்குழலியையும் பிடித்து இழுத்துக் கொண்டு சிற்ப மண்டபத்தை நோக்கி விரைந்து சென்றார்.

அந்த அறையில் இருந்த மற்ற எல்லாரும் அப்படி அப்படியே நின்றார்கள். இளவரசர் விருப்பதை அறிந்து கொண்டு சக்கரவர்த்தியின் அருகில் போகாமல் தூரத்தில் ஒதுங்கி நின்றார்கள். எல்லாருடைய கண்கள் மட்டும் சக்கரவர்த்தியின் பேரிலும், அவர் மடியில் தலை வைத்துப் படுத்திருந்த மாதரசியின் பேரிலும் இருந்தன.

ஆனால் சுந்தர சோழரும், மந்தாகினியும் ஒருவரோடொருவர் பரிபூரணமாய்க் கலந்து போயிருந்தார்கள். மற்றவர்களைப் பற்றிய எண்ணமே அவர்களுடைய நெஞ்சில் புகுவதற்கு இடமிருக்கவில்லை. முப்பது வருஷத்து வாழ்க்கையைச் சில நிமிஷ நேரத்தில் நடத்த முடியுமா என்பது பற்றி மனோதத்துவ விற்பன்னர்கள் பொது முறையில் என்ன சொல்லுவார்களோ, தெரியாது. ஆனால் சுந்தர சோழரும் மந்தாகினியும் அந்தச் சில நிமிஷ நேரத்தில் பன்னெடுங்கால வாழ்க்கையை நடத்தினார்கள் என்பதில் சந்தேகம் சிறிதுமில்லை. முப்பது வருஷத்தில் ஒருவரோடொருவர் பேசக் கூடியதையெல்லாம் அவர்கள் பேசிக் கொண்டார்கள். மந்தாகினி தனக்குரிய நயன பாஷை மூலமாகவே பேசினாள். சுந்தர சோழர் பெரும்பாலும் அந்த பாஷையை அறிந்து கொண்டார். இளம்பிராயத்தில் பூதத்தீவிலே அவர் சில மாதகாலம் மந்தாகினியுடன் சொர்க்க வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த காலத்தில் அவளுடைய சமிக்ஞை பாஷையையும் நன்கு தெரிந்து கொண்டிருந்தார். அவற்றை அவர் இன்றளவும் மறந்து விடவில்லை. ஆகையால் மந்தாகினி இப்போது கண்களால் மட்டுமே பேசியபோதிலும் அவருடைய உள்ளம் அவள் மனத்தில் உதித்த எண்ணங்களை அக்கணமே தெரிந்துகொண்டது. அப்படி அதிகமாக மந்தாகினி விஷயம் எதுவும் சொல்லிவிடவும் இல்லை. “தங்கள் பேரில் எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. உலகையாளும் சக்கரவர்த்தியாகிய தாங்கள் எங்கே? கரையர் மகளும் ஊமையும் செவிடுமான நான் எங்கே? தங்கள் முன் வராமல் நான்தான் இத்தனை காலமும் மறைந்து திரிந்து கொண்டிருந்தேன். அவ்வப்போது தூரத்தில் நின்று தரிசித்து மனத்தைத் திருப்தி செய்து கொண்டிருந்தேன். உயிரை விடும் தருணத்தில் தங்கள் மடியில் படுத்து உயிரை விடும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததே? இதைக் காட்டிலும் எனக்கு வேறு என்ன வேண்டும்?” – இவ்வளவுதான் மந்தாகினி கூறியது. இதையே திருப்பித் திருப்பி அவளுடைய உள்ளமும் கண்களும் சொல்லிக் கொண்டிருந்தன. அவளுடைய முகத்திலோ எல்லையற்ற ஆனந்தம் ததும்பிக் கொண்டிருந்தது. விலாப் புறத்தில் வேல் குத்தி வெளியிலும் வந்திருந்ததினால் அவள் சிறிதும் வேதனைப் பட்டதாக அவள் முகக் குறியிலிருந்து தெரியவில்லை. அவள் அடியோடு தன் தேகத்தைப் பற்றிய நினைவை இழந்து விட்டிருந்ததாகக் காணப்பட்டது. பறவை, கூண்டிலிருந்து கிளம்பும் தருணம் நெருங்கிவிட்டது. இனி, கூண்டைப் பற்றி அந்தப் பறவைக்கு என்ன கவலை இருக்கப் போகிறது?

சுந்தர சோழரும் தமது உடம்பைப் பற்றிய நினைவை மறந்து விட்டிருந்தார். அதனால்தானே அவர் தமது கால்கள் பலவீனமடைந்திருந்ததைக் கூட மறந்து கட்டிலிலிருந்து இறங்கி மந்தாகினியிடம் ஓடிவர முடிந்தது!

ஆனால் சுந்தர சோழர் மந்தாகினியைப் போல் சில வார்த்தைகள் சொல்வதோடு திருப்தி அடையவில்லை. எத்தனை எத்தனையோ விஷயங்களை அவர் சொல்லிக் கொண்டேயிருந்தார். அவருடைய கண்கள் சொல்லிய விஷயங்களை அவருடைய உதடுகள் வார்த்தைகளாக முணு முணுத்துக்கொண்டேயிருந்தன. அந்த அறையிலிருந்த மற்றவர்களுக்கு அவர் பேசிய வார்த்தை ஒன்றுகூடப் புரியவில்லை. ஆனால் மந்தாகினிக்கு எல்லாம் விளங்கிக் கொண்டு வந்தது. ஆமோதிக்க வேண்டிய இடத்தில் தலையை ஆட்டி ஆமோதித்தாள்; மறுக்கவேண்டிய இடத்தில் தலையை ஆட்டி மறுத்தாள். ஆனந்தமடைய வேண்டிய இடத்தில் ஆனந்தப் பட்டாள்; ஆறுதல் கூறவேண்டிய இடத்தில் ஆறுதலும் தெரிவித்தாள்.

“என் உயிருக்கு உயிரானவளே! நீ இன்று எனக்காக உன் உயிரை விடுகிறாய்! என் உயிர் மட்டும் எத்தனை நாள் இருக்கும் என்று எண்ணுகிறாய்? நான் கல் நெஞ்சமுள்ள பாவிதான்; ஒத்துக்கொள்கிறேன். இராஜ்யம் ஆளும் விதிக்குப் பிறந்தவர்கள் இவ்விதம் நெஞ்சைக் கல்லாகச் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. இல்லாவிடில் இராஜ்ய நிர்வாகம் எப்படி நடக்கும்? பூதத்தீவில் நான் உன்னை விட்டு விட்டு வந்தது முதலில் நான் செய்த பெருங்குற்றம். அதன் விளைவாக இன்னும் பல குற்றங்களைச் செய்யவேண்டியதாயிற்று. அந்தச் சொர்க்கத்துக்கு இணையான தீவில் நாம் எவ்வளவு ஆனந்தமாக வாழ்ந்தோம்? அது நீடித்திருக்கக் கொடுத்து வைக்கவில்லையே? கடவுளே சதி செய்து விட்டாரே! என்னைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் சதி செய்து விட்டார்களே! யுவராஜ்ய பட்டாபிஷேகம் ஆனதும் உன்னைத் தேடி வரவேண்டுமென்றிருந்தேன். உன்னைத் தேடிக் கோடிக்கரை வரையில் ஓடிவந்தேன். பாவிகள் நீ கடலில் குதித்துச் செத்து விட்டாய் என்று சொன்னார்கள். என் பிராண சிநேகிதன் என்று எண்ணியிருந்த அநிருத்தனே ஏமாற்றிவிட்டான்… ஆமாம், ஆமாம்! நீ சொல்வது தெரிகிறது. நீ கடலில் குதித்தது உண்மைதான் என்றும் பிறகு யாரோ உன்னைக் காப்பாற்றியதாகவும் சொல்லுகிறாய். ஆனால் இது அநிருத்தனுக்குத் தெரிந்திருந்தும் அவன் சொல்லவில்லை. அதனால் வந்த விபரீதத்தைப் பார்! உன்னைப் பார்க்க நேர்ந்த போதெல்லாம் உன் ஆவியைப் பார்ப்பதாக எண்ணிக் கொண்டேன். என்னைப் பழி வாங்குவதற்காக வந்து சுற்றுகிறாய் என்று நினைத்துக் கொண்டேன். என் அருமைக் குமாரனை நீ காவேரி வெள்ளத்திலிருந்து எடுத்துக் காப்பாற்றியிருக்க, நீதான் அவனைக் காவேரியில் தள்ளிவிட்டாய் என்று எண்ணிக் கொண்டேன். ஆகா! நீ மட்டும் உயிரோடிருக்கிறாய் என்று அறிந்திருந்தால், என் வாழ்க்கை எப்படியெல்லாம் இருந்திருக்கும்? இந்தப் பெரிய சாம்ராஜ்யத்துக்காக உன்னை நான் கைவிட்டிருப்பேன் என்று நினைக்கிறாயா? ஒரு நாளும் இல்லை!…

இவ்விதம் சுந்தர சோழர் தம் உள்ளத்தில் பொங்கித் ததும்பிய எண்ணங்களையெல்லாம் வாய் வார்தைகளினால் முணு முணுத்துக் கொண்டே வந்தார். கடைசியாக அவர் கூறினார், “இரண்டு நாளைக்கு முன் நீ என் முன் வந்தபோது உன் மேல் விளக்கை விட்டெறிந்தேன். உன்னை மறுபடியும் பார்த்த போதெல்லாம் அருவருப்புக் காட்டினேன். அதற்காகவெல்லாம் நீ என்னை மன்னிக்கவேண்டும். பல வருஷ காலமாக நீ ஆவியாக வந்து என்னைத் துன்புறுத்துகிறாய் என்ற எண்ணத்தில் இருந்தேன். நள்ளிரவில் நீ இதே அறையில் என் முன் தோன்றி ஏதேதோ கூறினாய். என் மக்களை நீ சபிக்கிறாய் என்று எண்ணிக்கொண்டேன். அப்போது ஏற்பட்ட வெறுப்பு உன்னை நேரில் பார்த்தபோதும் தீரவில்லை. உண்மையில், நீ எங்கள் குலதெய்வமாக வந்தாய்! எனக்கும் என் மக்களுக்கும் தீங்கு நேராமல் தடுப்பதற்காக வந்தாய்! அதையெல்லாம் நான் தெரிந்துகொள்ளவில்லை. என் மகள் குந்தவை எடுத்துக் கூறிய பிறகுதான் தெரிந்தது. ஐயோ! எப்பேர்ப்பட்ட தவறு செய்தேன்! அதற்காகவெல்லாம் என்னை மன்னித்துவிடு. உன்னிடம் எனக்குள்ள அன்பை இனி எப்படிக் காட்டுவேன்? அதற்கு வழியில்லாமல் செய்து விட்டாயே! என் குமாரர்களுக்குப் பட்டம் கட்ட வேண்டாமென்று சொன்னாய். அதன் நியாயம் எனக்கே தெரிந்திருக்கிறது. ஏன் தலையை அசைக்கிறாய்? என் நன்மைக்காகவும், என் குலத்தின் நன்மைக்காகவுமே சொன்னாய்! அதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால் இங்குள்ளவர்கள் ஏதேதோ சொல்லி என்னைப் பைத்தியமாக அடிக்கப் பார்க்கிறார்கள். உனக்குக் குழந்தை பிறந்ததாகச் சொல்கிறார்கள். அது உண்மையானால் சொல்லிவிடு! உன் மகன் இருந்தால் சொல்லிவிடு. அவனுக்கு என்னாலியன்றதைச் செய்து உனக்குச் செய்த துரோகத்துக்குப் பரிகாரம் தேடுகிறேன்…”

இவ்விதம் சுந்தரசோழர் கூறியபோது மந்தாகினி பரக்கப் பரக்க அவரைப் பார்த்துவிட்டுப் பிறகு சுற்றுமுற்றும் பார்த்தாள். வாசற்படியின் அருகில் நின்ற பொன்னியின் செல்வர் மீது அவளுடைய பார்வை தங்கி நின்றது. உடனே இளவரசர் தந்தையும் தாயும் இருந்த இடத்தை நெருங்கி வந்தார். தாயின் அருகில் உட்கார்ந்தார்.

மந்தாகினி இளவரசரைத் தன் கையினால் தொட்டுக் கொண்டு சக்கரவர்த்தியின் திருமுகத்தைப் பார்த்தாள். “இவன் தான் என் புதல்வன்!” என்னும் பொருள் அந்தப் பார்வையிலிருந்து மிகத் தெளிவாக வெளியாயிற்று.

இவ்வாறு இரண்டு மூன்று தடவை மந்தாகினி சக்கரவர்த்தியையும் பொன்னியின் செல்வரையும் மாறி மாறிப் பார்த்தாள். பின்னர் கண்களை மூடிக் கொண்டாள். சிறிது நிமிர்ந்திருந்த அவளுடைய தலை, – சக்கரவர்த்தியின் மடியில், – நன்றாகச் சாய்ந்தது.

மந்தாகினியின் உயிர் அவளுடைய உடலை விட்டுப் பிரிந்தது. சுந்தர சோழ சக்கரவர்த்தி விம்மி அழுததை இன்றுவரை யாரும் பார்த்ததுமில்லை; கேட்டதுமில்லை. இன்றைக்கு அவர் ‘ஓ’ வென்று கதறி அழுததைப் பார்த்தும் கேட்டும் எல்லாரும் திகைத்துப் போனார்கள்.

இளவரசர் அருள்மொழிவர்மர் மட்டுமே மனத்தெளிவுடன் இருந்தார்.

அவர் சக்கரவர்த்தியைப் பார்த்துக் கூறினார்:- “தந்தையே! என் அன்னையின் மரணத்துக்காகத் தாங்கள் வருந்த வேண்டியதில்லை. அவர் மரணமடையவேயில்லை. தெய்வமாக அல்லவோ மாறியிருக்கிறார்? என்றென்றைக்கும் நம் சோழ வம்சத்துக்கு அவர் குல தெய்வமாக விளங்கி வருவார்!” என்றார்.

ஆயினும், சுந்தர சோழர் விம்மி அழுவது நின்ற பாடில்லை. மந்தாகினியின் மரணத்துக்காகத்தான் அழுதாரா? அல்லது அதே சமயத்தில் வெகு தூரத்தில் நடந்த இன்னொரு துயர சம்பவத்தின் அதிர்ச்சி அவர் உள்ளத்தில் தோன்றியதனால் அழுதாரா என்று சொல்ல முடியுமா?

இளவரசர் அருள்மொழிவர்மர் கூறிய தேறுதல் மொழி மட்டும் உண்மையாயிற்று. பொன்னியின் செல்வர் பிற்காலத்தில் இராஜராஜ சோழர் என்ற பெயருடன் சிங்காதனம் ஏறியபோது ‘ஈழத்து ராணி’ என்று அவர் அழைத்த மந்தாகினி தேவிக்காகத் தஞ்சையில் ஒரு கோயில் எடுப்பித்தார். அது சில காலம் ‘சிங்கள நாச்சியார் கோவில்’ என்ற பெயருடன் பிரபலமாக விளங்கி வந்தது. நாளடைவில் அதன் பெயர் திரிந்து ‘சிங்காச்சியார் கோவில்’ என்று ஆயிற்று. இன்றைக்கும் தஞ்சை நகரின் ஒரு பகுதியில் ‘சிங்காச்சியார் கோவில்’ என்ற பெயருடன் ஒரு சிறிய சிதிலமான கோவில் இருந்து வருவதைத் தஞ்சை செல்லுகிறவர்கள் விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம்.

Source

Previous articleRead Ponniyin Selvan Part 5 Ch 29
Next articleRead Ponniyin Selvan Part 5 Ch 31

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here