Home Kalki Read Sivagamiyin Sabatham Part 1 Ch 33

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 33

77
0
Read Sivagamiyin Sabatham Part 1 Ch 33 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 1 Ch 33 சிவகாமியின் சபதம் முதல் பாகம்: பரஞ்சோதி யாத்திரை அத்தியாயம் 33: ஓலைத் திருட்டு

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 33

சிவகாமியின் சபதம்

முதல் பாகம்: பரஞ்சோதி யாத்திரை

அத்தியாயம் 33: ஓலைத் திருட்டு

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 33

வஜ்ரபாஹு சாவதானமான குரலில், “தம்பி பொறு! வேலைக் கைப்பற்றுவதற்குப் பதிலாகப் பொறுமையைக் கைப்பற்று. நாங்கள் பேய் பிசாசு இல்லை; ‘பிசாசு சொப்பனம் கண்டீரா?’ என்று என்னைப் பரிகாசம் செய்தாயே? நீ பிசாசு சொப்பனம் கண்டு அலறிய அலறலில் இந்த விடுதியிலுள்ள எல்லாரும் அல்லவா எழுந்திருக்க வேண்டியதாயிற்று?” என்றான். பரஞ்சோதி தான் அத்தகையை கனவு கண்டது உண்மை என்ற எண்ணத்தினால் வெட்கமடைந்து ஓர் அசட்டுச் சிரிப்புச் சிரித்தான். பிறகு, “பொழுது விடிந்து விட்டதா? புறப்படலாமா?” என்று கேட்டுக்கொண்டு எழுந்தான்.

“அழகுதான்! இப்போது அர்த்த ராத்திரி. விடுதியில் பத்திரமாய்ப் படுத்திருக்கும்போதே இப்படிப் பயந்து உளறுகிறவன், நடு நிசியில் தனி வழியே எப்படிப் போவாய்? அப்படிப் போவதாயிருந்தால், ‘அம்மா!’ அம்மா!’ என்று கனவிலே அலறினாயே, அந்தப் புண்ணியவதி எங்கே இருக்கிறாள் என்றாவது சொல்லி விட்டுப் போ! பிள்ளையின் கதியைப்பற்றி அன்னைக்குச் செய்தியாவது சொல்லி அனுப்புகிறோம்” என்றான் வஜ்ரபாஹு.

இந்த வார்த்தைகள் எல்லாம் கூரிய முட்களைப் போல் பரஞ்சோதியின் உள்ளத்தில் சுரீல் சுரீல் என்று தைத்தன. “நீங்கள் நேற்றுச் சாயங்காலம் பயங்கரமான கதைகளைச் சொன்னீர்கள் அல்லவா? அதனால்தான் சொப்பனம் காணும்படி ஆயிற்று” என்று பரஞ்சோதி சமாதானம் சொன்னான். “போகட்டும்! இனிமேலாவது சற்று நேரம் நிம்மதியாய்த் தூங்கு. இந்தத் தீபம் இங்கேயே இருக்கட்டும்” என்றான் வஜ்ரபாஹு என்னும் வீரன். அவ்விதமே தீபத்தை வைத்துவிட்டு வஜ்ரபாஹுவும் விடுதித் தலைவனும் அங்கிருந்து சென்றார்கள்.

அவர்கள் போன பிறகு பரஞ்சோதி கண்களை மூடிக்கொண்டு தூங்கப் பார்த்தான் ஆனால் தூக்கம் வரவே இல்லை. புரண்டு புரண்டு படுத்தான்; எழுந்து உட்கார்ந்தான்; மறுபடியும் படுத்தான் அப்படியும் தூக்கம் வரவில்லை. அவர்கள் வைத்துவிட்டுப் போன தீபம் ஒரு பக்கம் அவனுடைய கண்களைக் கூசச் செய்தது. விளக்கை அணைத்து விடலாமா என்று ஒருகணம் நினைத்தான். உடனே, வேறு ஒரு நினைவு பளிச்சென்று தோன்றியது. எழுந்து உட்கார்ந்து தலைமாட்டில் துணியைச் சுற்றி வைத்திருந்த மெல்லிய சிறு மூங்கிற் குழாயை எடுத்தான். அதற்குள்ளிருந்த ஓலைக் கற்றையை வௌியில் எடுத்துத் தீபம் வைத்திருந்த இடத்துக்கு அருகிலே சென்று உட்கார்ந்தான்.

ஓலையைப் பிரித்து வைத்துக்கொண்டு உற்றுப் பார்த்தான். ஆகா! என்ன ஏமாற்றம்! அதில் ஏதோ எழுதியிருந்தது! மிக நெருக்கமாக எழுதியிருந்தது! ஆனால், என்ன எழுதியிருந்தது? அது தான் தெரியவில்லை. அதில் எழுதி இருந்தது தமிழ் எழுத்து அல்ல. சமஸ்கிருதமோ, பிராகிருதமோ, பாலி பாஷையோ தெரியவில்லை. ஆகா! கல்வி ஒருவனுக்கு எவ்வளவு அவசியமானது! தாய்ப் பாஷை ஒன்று மட்டும் தெரிந்தால்கூடப் போதாது, ஒரு தேசத்தில் வழங்கும் மற்ற பாஷைகளும் தெரிந்திருக்க வேண்டும். இத்தனை காலமாகக் கல்வி பயிலாமல் தமிழைக் கூட நன்றாய்ப் பயிலாமல் காலம் கழித்துவிட்டதை நினைத்துப் பரஞ்சோதி அப்போது வருத்தப்பட்டான்.

இத்தனை காலம் கழித்துக் காஞ்சிக்குக் கல்வி பயிலுவதற்காகக் கிளம்பி வந்தோமே? அதாவது நடந்ததா? நாம் வந்த சமயத்தில்தானா இந்த யுத்தக் குழப்பங்கள் எல்லாம் வர வேண்டும்? இந்த ஆபத்தான காரியம் நம் தலையிலேயா அமர வேண்டும்? இப்படி எண்ணமிட்டுக் கொண்டேயிருந்தபோது பரஞ்சோதிக்குத் தூக்கம் வருகிறாற்போல் இருந்தது. கண்ணிமைகள் கனத்துத் தாமாகவே மூடிக்கொள்ளப் பார்த்தன. தீபத்தடியிலிருந்து எழுந்து ஏற்கெனவே படுத்திருந்த மேடைக்குப் போகப் பரஞ்சோதி எண்ணினான். ஆனால், அந்த எண்ணத்தை அவனால் நிறைவேற்ற முடியவில்லை. தூக்க மயக்கம் அவனை மீறி மேலோங்கிற்று. அப்படியே தரையில் படுத்தான் சிறிது நேரத்தில் நினைவற்ற நிலையை அடைந்தான். அவன் கையிலிருந்து நழுவிய ஓலை தரையில் கிடந்தது.

சற்றுப் பொறுத்து அறைக் கதவு மெதுவாகத் திறந்தது. வஜ்ரபாஹு ஓசைப்படாமல் உள்ளே வந்தான். தரையில் கிடந்த ஓலைச் சுருளை எடுத்துக்கொண்டு அறையின் கதவை மீண்டும் சாத்திவிட்டு வௌியேறினான். வௌியேறிய வஜ்ரபாஹு இரண்டு மூன்று அறைகளைக் கடந்து சென்று விடுதியின் ஒரு மூலையில் இருந்த பெரிய அறைக்குள் புகுந்தான். அங்கே குத்துவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அதன் அருகில் உட்கார்ந்து பரஞ்சோதியிடமிருந்து அபகரித்துக்கொண்டு வந்திருந்த ஓலையைக் கவனமாகப் படிக்கலானான்.

முதலில் சற்று நேரம் அவன் ஏட்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அவனுடைய புருவங்கள் நெரிந்தன; நெற்றி சுருங்கியது. சில சமயம் மேலே நிமிர்ந்து கூரையை நோக்கியவண்ணம் யோசித்தான். சில சமயம் கையை நெரித்துக் கொண்டு பூமியை நோக்கிய வண்ணம் சிந்தித்தான். சற்றுநேரம் தீபத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். கடைசியாக, அவனுடைய முகம் பளிச்சென்று மலர்ந்தது. உடனே, விரைவாகவும் உற்சாகத்துடனும் அந்த ஓலைக்கட்டிலிருந்து நாலு ஏடுகளையும் படித்து முடித்தான்.

பிறகு, பக்கத்தில் வைத்திருந்த வெற்று ஓலையில் நாலு எடுத்து அதே அளவில் கத்திரித்து வைத்துக்கொண்டு எழுதத் தொடங்கினான். துரிதமாக எழுதி முடித்துப் பரஞ்சோதி கொண்டு வந்திருந்த ஓலையையும் இதையும் ஒப்பிட்டு நோக்கினான். பரஞ்சோதியின் ஓலையை அவ்விடமே பத்திரப்படுத்தி வைத்துவிட்டுத் தான் எழுதிய ஓலையுடனே பரஞ்சோதியின் அறையை நோக்கிச் சென்றான். அங்கே பரஞ்சோதி இன்னும் தீபத்துக்குப் பக்கத்தில் மயங்கிக் கிடப்பதையும் தீபம் அணையும் தறுவாயில் இருப்பதையும் பார்த்தான். அறையில் அப்போது இலேசான புகை ஒருவித அபூர்வமணம் கமழ்ந்து கொண்டிருந்த புகை சூழ்ந்தது. மூக்கைத் துணியினால் மூடிக் கொண்டு வஜ்ரபாஹு அவ்வறைக்குள் நுழைந்தான். ஓலை முன்னே கிடந்த இடத்திலேயே தான் கொண்டு வந்த ஓலையைப் போட்டுவிட்டுத் தீபத்தில் பற்றி எரிந்து கொண்டிருந்த திரியை உள்ளுக்கு இழுத்து எண்ணெயில் நனைத்து அணைத்தான் இவ்வளவும் அதி சீக்கிரமாகச் செய்துவிட்டு மறுகணமே அந்த அறையைவிட்டு வௌியேறினான்.

மீண்டும் தன்னுடைய அறைக்குச் சென்று வஜ்ரபாஹு பரஞ்சோதியிடமிருந்து தான் அபகரித்த ஓலையை இன்னொரு தடவை நன்றாகப் படித்துப் பார்த்துவிட்டு, அதை ஏடு ஏடாக எடுத்து விளக்கின் ஜுவாலையில் காட்டித் தகனம் செய்தான். அப்படித் தகனம் செய்து கொண்டிருந்த போது அவனுடைய உள்ளம் தீவிரமாகச் சிந்தனை செய்து கொண்டிருந்தது என்பதை அவனுடைய முகக்குறி காட்டியது. நாலு ஏடுகளையும் எடுத்துச் சாம்பலாக்கிய பிறகு, இன்னும் நாலு வெற்று ஏடுகளை எடுத்து எழுத்தாணியினால் எழுதத் தொடங்கினான். முன்போல் இம்முறை இவன் வேகமாகவும் இடைவிடாமலும் எழுதவில்லை. இடையில் நிறுத்தி நிறுத்தி யோசித்து எழுதினான். அவன் எழுதி முடித்து ஓலை ஏடுகளைக் குழாயில் போட்டபோது, பலபலவென்று கிழக்கு வெளுத்தது. உச்சி வானத்துக்குச் சற்று மேற் காணப்பட்ட பாதி மதி பிரகாசத்தை இழந்து பாண்டு வர்ணம் அடைந்து கொண்டிருந்தது. விண்மீன்களும் ஒளி குன்றத் தொடங்கின. பட்சிகளின் தனிக் குரல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கேட்கலாயின.

பரஞ்சோதி கண்விழித்துப் பார்த்தபோது, அறைக்குள்ளே பலகணி வழியாக உதய நேரத்தின் இளம் வௌிச்சம் வந்து கொண்டிருந்தது. அருகில் தரையில் கிடந்த ஓலையை அவன் ஆர்வத்துடன் தாவி எடுத்துக்கொண்டு அதை உடனே குழாயில் போட்டு இடுப்பிலும் செருகிக்கொண்டான். முதல்நாள் இரவில் அவன் பயங்கரக்கனவு கண்டது, வஜ்ரபாஹுவும் விடுதித் தலைவனும் வந்து விளக்கு வைத்து விட்டுப் போனது, தூக்கம் பிடியாமல் விளக்கண்டை வந்து ஓலையைப் படிக்கத் தொடங்கியது. கண்ணைச் சுற்றிக் கொண்டு தூக்கம் வந்தது ஆகிய எல்லாம் அவனுடைய நினைவுக்கு வந்தன. இன்னமும் அவன், தலை இலேசாகச் சுற்றிக்கொண்டிருந்தது. வயிற்றிலும் கொஞ்சம் சங்கடம் இருந்தது.

ஏதோ ஓர் அபூர்வமான வாசனை அவ்வறையில் சூழ்ந்திருப்பதையும் அவன் உணர்ந்தான். ஆனால், இதிலெல்லாம் அவனுடைய கவனம் அதிக நேரம் நிற்கவில்லை. “ஓலையைத் தரையில் போட்டு விட்டு இவ்வளவு நேரம் தூங்கி விட்டோமே, என்ன அசட்டுத்தனம்!” என்கிற எண்ணத்தினால் ஏற்பட்ட வெட்கம் மற்ற நினைவுகளையெல்லாம் போக்கடித்தது. அதே சமயத்தில் குதிரையின் காலடிச் சத்தம் காதில் விழவே, விழுந்தடித்து எழுந்திருந்து வாசற்புறம் சென்றான். அங்கே விடுதித் தலைவனும் காவலர்களும் நின்று சற்றுத் தூரத்தில் போய்க் கொண்டிருந்த குதிரையைப் பார்த்த வண்ணம் இருப்பதைக் கண்டான். “ஓஹோ! வஜ்ரபாஹுவா போகிறார் அதற்குள்ளே புறப்பட்டு விட்டாரா?” என்று பரஞ்சோதி வினவியதைக் கேட்டு அவர்கள் அவன் பக்கம் திரும்பிப் பார்த்தார்கள்.

குதிரை கண்ணுக்கு மறைந்த பிறகு, “ஐயா! வஜ்ரபாஹு என்கிறவர் யார்? உங்களுக்குத் தெரியுமா?” என்று பரஞ்சோதி காவலர்களைப் பார்த்துக் கேட்டான். “உன்னைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றல்லவா நினைத்திருந்தோம்!” என்று காவலர்களில் ஒருவன் கூறினான். “இன்னாரென்று தெரியாமலா நேற்றிரவு அவருக்கு அவ்வளவு மரியாதை செய்தீர்கள்?” “காரணமில்லாமல் மரியாதை செய்யவில்லை அவரிடம் சிங்க முத்திரை போட்ட இலச்சினை இருந்ததே, உனக்குத் தெரியாதா?” “சிங்க இலச்சினை என்றால் அதில் என்ன விசேஷம்?” “வெகு முக்கியமான இராஜாங்கக் காரியமாகப் போகிறவர்கள் சிங்க இலச்சினை வைத்திருப்பார்கள்!”

காவலர்களில் ஒருவன், “அவர் யாராக இருக்கும்?” என்று மற்றவர்களைப் பார்த்துக் கேட்டான். “அமைச்சர்களில் ஒருவராயிருக்கலாம்” என்றான் ஒருவன். “சேனாதிபதி கலிப்பகையை நீக்கிவிட்டு வேறொரு சேனாதிபதியைச் சக்கரவர்த்தி அனுப்பப் போவதாகக் கேள்வி. புதிய சேனாதிபதியாக இருந்தாலும் இருக்கலாம்” என்றான் ஒருவன். “சேனாதிபதியை மாற்றுவதற்கு என்ன காரணம்? உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான் விடுதித் தலைவன். “வேறு காரணம் வேண்டுமா, என்ன? வாதாபி சைனியம் வடபெண்ணையை நெருங்கிவிட்டதாகக் கேள்வி. அப்படி இருக்க, நம் சேனாதிபதி வடக்கு மண்டலத்துச் சைனியத்தை இருந்த இடத்திலேயே வைத்துக் கொண்டிருப்பது போதாதா?”

“சக்கரவர்த்தியிடம் யோசனை கேட்கச் சேனாதிபதி கலிப்பகை காஞ்சிக்கே போயிருக்கிறாராமே?” “அதனால்தான் சக்கரவர்த்திக்குக் கோபமாம். ‘நீர் சேனாதிபதி பதவி வகித்தது போதும்’ என்று சொல்லி விட்டாராம்!” இந்தச் சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த பரஞ்சோதி, “ஐயா! என் குதிரை எங்கே? நானும் கிளம்ப வேண்டும்” என்றான். பரஞ்சோதியைப் பற்றி அவர்கள் இன்னும் சிறிது விசாரித்து விட்டு, “நீ எங்கே போகிறாய்?” என்று கேட்டார்கள். “வடபெண்ணைக் கரையிலுள்ள பௌத்த மடத்துக்குப் போகவேண்டும். இன்னும் எவ்வளவு தூரம் இருக்கும்?” என்று பரஞ்சோதி வினவினான்.

அவர்கள் வஜ்ரபாஹு சென்ற திசையைக் காட்டி, “இந்த வழியே போனால் உச்சி வேளையில் வடபெண்ணையைச் சேரலாம். அங்கிருந்து கரையோடு மேற்கே போக வேண்டும். போனால் பாபாக்னி நதி வடபெண்ணையுடன் கலக்கும் இடத்தில் பௌத்தமடம் இருக்கிறது!” என்று கூறி அவனுடைய குதிரையையும் கொடுத்தார்கள். பரஞ்சோதி குதிரைமீதேறிக் கிளம்பியபோது, அடடா! வஜ்ரபாஹுவும் இதே வழியில் போகிறவராயிருக்க, சற்று முன்னாலேயே எழுந்து அவருடனே கிளம்பாமல் போனேனே! அவருடன் போயிருந்தால் வழிப் பிரயாணம் எவ்வளவு உற்சாகமாக இருந்திருக்கும்? களைப்பே தெரியாமல் கதை கேட்டுக் கொண்டே ஆனந்தமாய்ப் பிரயாணம் செய்திருக்கலாமே? என்று எண்ணமிட்டான்.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 1 Ch 32
Next articleRead Sivagamiyin Sabatham Part 1 Ch 34

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here