Home Kalki Read Sivagamiyin Sabatham Part 4 Ch 12

Read Sivagamiyin Sabatham Part 4 Ch 12

78
0
Read Sivagamiyin Sabatham Part 4 Ch 12 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 4 Ch 12 சிவகாமியின் சபதம் நான்காம் பாகம்: சிதைந்த கனவு அத்தியாயம் 12: நெடுமாறன்

Read Sivagamiyin Sabatham Part 4 Ch 12

சிவகாமியின் சபதம்

நான்காம் பாகம்: சிதைந்த கனவு

அத்தியாயம் 12: நெடுமாறன்

Read Sivagamiyin Sabatham Part 4 Ch 12

மங்கையர்க்கரசி கண்ட கனவின் பொருள் இன்னதென்று செம்பியன் வளவனால் கண்டுபிடிக்க முடியவில்லையல்லவா? இவள் தன் கனவைச் சொல்லிக் கொண்டிருந்த அதே நேரத்தில் காஞ்சிக்குத் தெற்கே பத்து காத தூரத்தில் வராக நதிக்கரையில் என்ன நடந்து கொண்டிருந்தது என்பதைப் பார்த்தோமானால், ஒரு வேளை அந்தக் கனவின் பொருளை நாம் ஊகித்தறிந்து கொள்ளலாம். நடுநிசியில் நிலவொளியில் வராக நதிக் கரையானது அதுவரையில் என்றும் கண்டறியாத காட்சி அளித்தது. மாபெரும் பாண்டிய சைனியம் அந்த நதிக்கரையில் தண்டு இறங்கி இருந்தது. ஆங்காங்கு அமைந்திருந்த கூடாரங்கள் மீது பறக்க விட்டிருந்த மீனக் கொடிகள், இளங்காற்றில் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தன. யானைகளும் குதிரைகளும் ரதங்களும் வண்டிகளும் கண்ணுக்கெட்டிய தூரம் காணப்பட்டன. குளிர் அதிகமில்லாத புரட்டாசி மாதமாகையால், வீரர்கள் பெரும்பாலும் திறந்தவெளியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். தூக்கம் வராதவர்கள் ஆங்காங்கே கும்பல் கூடி உட்கார்ந்து, கதை பேசிக் கொண்டிருந்தார்கள். நடுநிசியின் நிசப்தத்தைக் கலைத்துக் கொண்டு சில சமயம் அவர்களுடைய சிரிப்பின் ஒலி கேட்டது. அத்தகைய கூட்டம் ஒன்றின் அருகில் சென்று அவர்கள் என்ன விஷயத்தைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று தெரிந்து கொள்வோம்.

பொதுவாக அவ்வீரர்கள் சிறிது கவலையுடனேயே பேசிக் கொண்டிருந்தார்கள். மேலே காஞ்சியை நோக்கிப் போகாமல் மூன்று நாளாக அந்த வராக நதிக்கரையில் சைனியம் தங்கியிருப்பதைப் பற்றியும், அவர்களுடைய சேனாதிபதி நெடுமாற பாண்டியனுக்கு என்ன உடம்பு என்பது பற்றியும் அவர்கள் பேசினார்கள். “உடம்பு ஒன்றும் இல்லை; வேறு ஏதோ காரணம் இருக்கிறது!” என்று சிலர் காதோடு காரறுகச் சொன்னார்கள். “இளவரசருக்கு மோகினிப் பிசாசு பிடித்திருக்கிறது!” என்று ஒருவன் சொன்ன போது இலேசாகச் சிரிப்பு உண்டாயிற்று. “என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கிறது? நாளைக் காலையில் காஞ்சியிலிருந்து பல்லவர் படை கிளம்பப் போகிறது. நாம் நடு வழியில் உட்கார்ந்திருக்கிறோம்!” என்றான் இன்னொருவன். “இங்கிருந்து திரும்பி மதுரைக்குத்தான் போகப் போகிறோமோ, என்னவோ?” என்றான் இன்னொருவன். “அப்படித் திரும்பிப் போவதைக் காட்டிலும் இந்த வராக நதியில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ளலாம்!” என்றான் இன்னொருவன்.

“ஆகா! உயிரை மாய்த்துக் கொள்ள நல்ல வழி கண்டுபிடித்தாய்! இந்த வராக நதியில் தலைகீழாக நின்றால் தண்ணீர் மூக்கு வரையில் வரும். இந்த நதியில் மூழ்கி உயிரை மாய்த்துக் கொள்ள ரொம்பக் கெட்டிக்காரத்தனம் வேண்டும்” என்றான் இன்னொருவன். “எது எப்படியிருந்தாலும் நான் திரும்பிப் போகப் போவதில்லை. வாதாபியிலிருந்து அதைக் கொண்டு வருகிறேன்; இதைக் கொண்டு வருகிறேன் என்று என் காதலியிடம் சொல்லி விட்டு வந்திருக்கிறேன். வெறுங்கையோடு போனால் அவள் என்ன சொல்லுவாள்?” என்றான் வேறொருவன். “வீர பாண்டியர் குலத்தில் பிறந்தவருக்கு இப்படிப்பட்ட விளக்கெண்ணெய்ச் சுபாவம் எப்படி வந்ததோ?” என்று ஒருவன் கூதனுப் பெருமூச்சு விட்டான்.

இவ்வாறெல்லாம் மேற்படி வீரர்கள் அலுத்துச் சலித்துப் பேசுவதற்குக் காரணமாயிருந்த பாண்டிய இளவரசன் நெடுமாறனை வராக நதிக்கரையோரமாக அமைந்திருந்த அவனுடைய கூடாரத்துக்குச் சென்று பார்ப்போம். ஆம்! இதோ வீற்றிருக்கும் இந்தக் கம்பீரமான சுந்தர புருஷன்தான் நெடுமாறன். பல்லவ குலம் தோன்றியதற்கு எத்தனையோ காலத்துக்கு முன்னாலிருந்து வாழையடி வாழையாக வளர்ந்து வந்த பாண்டிய மன்னர் குலத்திலே பிறந்தவன். அவனுக்கு எதிரில் ஒரு திகம்பர சமணர் உட்கார்ந்திருக்கிறார். அவருக்கு அருகில் மயிலிறகுக்கத்தை, சுருட்டிய பாய், கமண்டலம் ஆகியவை இருக்கின்றன. கட்டையாகவும் குட்டையாகவும் மொட்டைத் தலையுடனும் விளங்கிய அந்தத் திகம்பர சமணரைப் பார்த்து நெடுமாறன், “சுவாமி! இன்னும் எத்தனை நேரம் காத்திருக்க வேண்டும்?” என்று கேட்டான். அவன் கேட்டு வாய் மூடுவதற்குள்ளே எங்கேயோ வெகுதூரத்திலிருந்து ஒரு மெல்லிய கம்பனசப்தம் உடுக்கு அடிப்பது போன்ற சப்தம் வரலாயிற்று. ‘தரிரிம்’ ‘தரிரிம்’ என்று ஒலித்த அந்தச் சப்தம் மெல்லியதாயிருந்தபோதிலும் காது வழியாக உடம்பிற்குள்ளே புகுந்து உடம்பின் ஒவ்வொரு அணுவையும் ஒரு குலுக்குக் குலுக்கியது. “அதோ! நமக்கு அழைப்பு வந்து விட்டது! இளவரசே, கிளம்புங்கள்!” என்றார் அந்தச் சமண முனிவர்.

நெடுமாறன் மறுமொழி கூறாமல் புறப்பட்டான். இருவரும் கூடாரத்திலிருந்து வெளியில் வந்து நதிக்கரையோரத்தை அடைந்தனர்! அங்கே ஒரு படகு காத்திருந்தது. அதன் இரு முனையிலும் இரு வீரர் துடுப்புடன் காத்திருந்தனர். நெடுமாறன் படகில் ஏறுவதற்கு முன் ஒருகணம் தயங்கினான். அதைப் பார்த்த சமணர் “இளவரசே! தங்களுக்கு அச்சமாயிருக்கிறதா? அப்படியானால் வர வேண்டாம்! திரும்பிப் போய் விடுங்கள்!” என்று கூறவும், நெடுமாறன் அவரைப் பார்த்து ஒரு தடவை அலட்சியமாக ‘ஹூம்’ என்று சொல்லி விட்டுப் படகில் முன்னதாகப் பாய்ந்து ஏறினான். சமண முனிவரும் ஏறிக் கொண்டார். வீரர்கள் சப்தம் அதிகமாகக் கேட்காத வண்ணம் துடுப்பை மெதுவாகப் போட்டு ஜாக்கிரதையாகப் படகைச் செலுத்தினார்கள். படகு அக்கரையை அடைந்தது. வீரர் இருவரையும் அங்கேயே படகுடன் காத்திருக்கும்படி சொல்லி விட்டு, நெடுமாறனும் சமண முனிவரும் மேலே சென்றார்கள்.

போகப் போக உடுக்கையின் ஒலி அதிகமாகிக் கொண்டு வந்தது. அந்த ஒலியானது ஒருவகைக் காந்த சக்தியைப் போல் நெடுமாறனைக் கவர்ந்து இழுத்தது. இனிமேல் அவன் விரும்பினாலும் திரும்பிப் போக முடியாதபடி அதன் சக்தி கணத்துக்குக் கணம் அதிகரித்துக் கொண்டிருந்தது. நெடுமாறனின் நடையும் விரைவாகிக் கொண்டு வந்தது. கடைசியில் அவனுடைய நடை ரொம்ப வேகமாகி ஓட்டமாகவே மாறியது. “இளவரசே! நில்லுங்கள், நாம் சேர வேண்டிய இடம் இதுதான்!” என்று சமண முனிவர் கூறியது கனவிலே கேட்பது போல் நெடுமாறன் காதில் கேட்டது.

நெடுமாறன் நின்றான்; அவனுக்கு எதிரே பாறையில் குடைந்த குகை ஒன்று காணப்பட்டது. குகையின் வாசலில் இரண்டு துவாரபாலர் நின்றார்கள். உண்மையில் கல்லில் செதுக்கிய சிலைகள் தாம் அவை. எனினும் மயக்கத்தில் ஆழ்ந்திருந்த இளவரசன் ஒருகணம் அவர்கள் உண்மையான காவலர்கள் என்றே நினைத்தான். குகைக்குள்ளேயிருந்து மங்கலான வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. உடுக்கையின் சப்தமும் அக்குகைக்குள்ளிருந்து தான் வந்தது. ஆம்! இந்தப் பாறையும் குகையும் துவாரபாலர் சிலைகளும் நாம் ஏற்கெனவே பார்த்தவைதாம். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஆயனச் சிற்பியார் குடைந்தெடுத்த குகைதான் அது. அந்தக் குகையைத் திகம்பரசமணர்கள் கைப்பற்றிக் கொண்டிருந்தார்கள்.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 4 Ch 11
Next articleRead Sivagamiyin Sabatham Part 4 Ch 13

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here