![Sivagamiyin Sapatham Part 4 Ch 37 சிவகாமியின் சபதம் நான்காம் பாகம்: சிதைந்த கனவு அத்தியாயம் 37: சத்ருக்னன் பீதி Read Sivagamiyin Sabatham Part 4 Ch 37 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story](https://i0.wp.com/tamilnovel.in/wp-content/uploads/2022/08/Sivagamiyin-Sapatham-Part-4-Ch-37.jpg?resize=640%2C360&ssl=1)
Read Sivagamiyin Sabatham Part 4 Ch 37
சிவகாமியின் சபதம்
நான்காம் பாகம்: சிதைந்த கனவு
அத்தியாயம் 37: சத்ருக்னன் பீதி
Read Sivagamiyin Sabatham Part 4 Ch 37
சக்கரவர்த்தியிடம் சேனாதிபதி கூறிய வண்ணமே அன்று சூரியன் அஸ்தமித்த ஒரு முகூர்த்த நேரத்துக்கெல்லாம் யுத்த பேரிகை முழங்கியது. வாதாபிக் கோட்டையைச் சுற்று நாற்புறமும் சூழ்ந்திருந்த பல்லவ வீரரின் மகா சைனியம் இடம் பெயர்ந்து கோட்டை மதிலை நோக்கி முன்னேறத் தொடங்கியது. காற்றில் அசைந்தாடும் கொடிகளாகிய அலைகளோடு கூடிய அந்தச் சேனா சமுத்திரமானது வாதாபிக் கோட்டையை மூழ்க அடிக்கும் நோக்கத்துடன் பொங்கி முன்னேறுவது போலக் காணப்பட்டது. பல்லவ சைனியத்தின் யானைப் படை நாலு கோட்டை வாசல்களையும் நோக்கிச் சென்ற காட்சி, கருங்குன்றுகள் இடம் பெயர்ந்து செல்லும் காட்சியையொத்திருந்தது.
இந்தச் சந்தர்ப்பத்துக்காகவே வெகு நாளாகப் பயிற்சி பெற்றுக் காத்துக் கொண்டிருந்த பிரம்மாண்டமான யானைகள் துதிக்கைகளில் இரும்புலக்கைகளையும் வைரம் பாய்ந்த மரத் தூண்களையும் தூக்கிக் கொண்டு அசைந்து அசைந்து சென்ற போது பூமி அதிர்ந்தது; புழுதிப் படலங்கள் கிளம்பி வானத்தை மறைத்தன. ஓர் இலட்சம் வீரர்களும் பத்தாயிரம் யானைகளும் சேர்ந்தாற் போல் இடம் பெயர்ந்து சென்றதனால் ஏற்பட்ட ஓசை, சண்டமாருதம் அடிக்கும்போது மகா சமுத்திரத்தில் உண்டாகும் பெருங் கோஷத்தை ஒத்திருந்தது. சற்று நேரம் வரையில் அவ்வளவு சைனியமும் இருட்டிலேயே இடம் பெயர்ந்து சென்றன. திடீரென்று இங்கொன்று அங்கொன்றாகத் தீவர்த்திகளும் தீப்பந்தங்களும் தோன்றலாயின. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அவை பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரம் என்ற கணக்கில் எரியத் தொடங்கின. அந்தத் தீவர்த்திகளிலும் தீப்பந்தங்களிலும் எழுந்த புகை, நாற்புறமும் பரவிச் சூழ்ந்து ஒரு பயங்கரமான மாயலோகக் காட்சியை அளித்தது.
சேனாதிபதி பரஞ்சோதி தமது கூடாரத்துக்கு வெளியில் நாற்புறமும் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அமைதியின்றி அங்குமிங்கும் நடந்ததையும், கத்தியினால் பூமியைக் கீறிக் கோலம் போட்டதையும் பார்த்தால் அவர் யாரையோ, எதையோ எதிர் பார்த்துக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. அப்போது சடையனும் இன்னும் நாலு பேரும் வாதாபிக் கோட்டை வாசலிலிருந்த கணபதியைத் தூக்கிக் கொண்டு வந்து சேர்ந்தார்கள். விக்கிரகத்தைக் கூடாரத்துக்குள் கொண்டுபோய் வைக்கும்படி பரஞ்சோதி கட்டளை இட்டார். அவர்கள் பின்னால் பரஞ்சோதியும் உள்ளே சென்று சடையனைப் பார்த்து, “அப்பனே! நீயும் உன்னுடைய ஆட்களும் இங்கேயே இருந்து இந்தக் கணபதிராயனைப் பத்திரமாய்ப் பாதுகாக்கவேணும். என்னுடைய மனோரதம் நிறைவேறினால், சிவகாமி தேவிக்கு எவ்விதத் தீங்கும் நேரிடாமல் வாதாபிக் கோட்டைக்குள்ளேயிருந்து பத்திரமாகக் கொண்டு சேர்த்தேனேயானால், இந்த விநாயகப் பெருமானை என் கிராமத்துக்குக் கொண்டு போய்க் கோவில் கட்டி வைத்துத் தினம் மூன்று வேளை பூஜை செய்விப்பதாக வேண்டுதல் செய்து கொண்டிருக்கிறேன்!” என்றார். மீண்டும் அவர், “சடையப்பா! இங்கே இருந்து நீங்கள் இந்த விக்கிரகத்தைக் காத்துக் கொண்டிருப்பதனால் வாதாபிக் கொள்ளையில் உங்களுக்குப் பங்கு இல்லாமல் போய்விடும். அதற்கு நான் ஈடு செய்து கொடுக்கிறேன்!” என்றார். “சுவாமி! ஆக்ஞை எப்படியோ அப்படியே நடந்து கொள்ளுகிறோம்!” என்றான் சடையப்பன்.
சேனாதிபதி பரஞ்சோதி, பின்னர் கணபதியின் விக்கிரகத்தை நோக்கிக் கைகூப்பிக் கொண்டு கண்களை மூடிய வண்ணம் சிறிது நேரம் பிரார்த்தனை செய்தார். அதே சமயத்தில் வெளியில் யாரோ ஓடிவரும் சத்தம் கேட்டது. அடுத்த கணம் சத்ருக்னன் தலைவிரிகோலமாய் உள்ளே ஓடிவந்தான். அவனுடைய முகம் பேயடித்தவன் முகம் போல் இருந்தது. பரஞ்சோதி அவனைத் திரும்பிப் பார்த்து, “சத்ருக்னா! இது என்ன கோலம்? ஏன் இப்படிப் பீதி கொண்டவனைப்போல் இருக்கிறாய்? ஏதாவது பெரிய ஆபத்து நேர்ந்ததா? போன காரியத்தில் வெற்றி கிடைக்கவில்லையா?” என்று கேட்டார். “சேனாதிபதி! என் வாழ்க்கையில் எத்தனையோ பயங்கரமான ஆபத்துக்களில் சிக்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால், நேற்றும் இன்றும் எனக்கு ஏற்பட்ட ஆபத்தைப் போல் இதுவரையில் ஏற்பட்டதில்லை” என்று சொல்லிவிட்டுப் பக்கத்தில் நின்றவர்களைப் பார்த்தான்.
அந்தக் குறிப்பை உடனே உணர்ந்து சேனாதிபதி அவர்களை வெளியில் போகச் சொன்னார். அவர்கள் போனவுடன் சத்ருக்னனைப் பார்த்து, “சத்ருக்னா! கோட்டையைத் தாக்க ஆரம்பித்தாகிவிட்டது, சிறிதும் தாமதிக்க நேரமில்லை. உன்னுடைய கதையைச் சுருக்கமாகச் சொல்லிமுடி! போன காரியத்தில் வெற்றி அடைந்தாயா, இல்லையா? அதை முதலில் சொல்!” என்றார். “சேனாதிபதி! கோட்டைக்குள் போக இரகசியச் சுரங்க வழி இருக்கிறது. அது இருக்கும் இடத்தையும் கண்டுபிடித்து விட்டேன். ஆனால், அதன் வழியாகக் கோட்டைக்குள் போவது சுலபமான காரியமில்லை. கோட்டைத் தாக்குதலோ ஆரம்பமாகி விட்டது. இனிச் சுரங்க வழியில் போய்த்தான் என்ன பிரயோஜனம்? எல்லாவற்றிற்கும் தங்களிடம் யோசனை கேட்டுக் கொண்டு போக வந்தேன்!” என்று சொல்லி பிறகு, தான் வந்த வரலாற்றைக் கூறினான்.