Home Thanneer Desam Read Thanneer Desam Ch 16

Read Thanneer Desam Ch 16

182
0
Read Thanneer Desam free, Thanneer Desam is an story poem written by Vairamuthu. Read Thanneer Desam Ch 16, Download Thanneer Desam, Thanneer Desam PDF, Download Thanneer Desam PDF
Thanneer Desam Ch 16 தண்ணீர் தேசம் அத்தியாயம் 16

Read Thanneer Desam Ch 16

தண்ணீர் தேசம்

அத்தியாயம் 16

Read Thanneer Desam Ch 16

ஒரு மனிதன் –
எத்தனை நாடுகள் கடந்தான்.
எத்தனை கடல்கள்
கடைந்தான்.
எத்தனை பேரைக்
கொன்றான்.
எத்தனை மகுடம் கொண்டான்.
எத்தனை காலம் இருந்தான்.
எத்தனை பிள்ளைகள் ஈன்றான்

  • என்பவை அல்ல அவன்
    எச்சங்கள்.

இவையெல்லாம் நான் என்ற
ஆணவத்தின் நீளங்கள்.

அவன் இன்னோர் உயிருக்காக
எத்தனைமுறை அழுதான்
என்பதுதான், அவன் மனிதன்
என்பதற்கான மாறாத
சாட்சி.

சலீம் அழுதான்.

அது சுயசோகத்திற்காகச்
சொட்டிய கண்ணீரன்று.
சுண்டெலியின் மரணத்திற்காகச்
சிந்தப்பட்ட சுத்தக் கண்ணீர்.

காணவும் தூங்கவும் மட்டுமே
கண்கள் என்று பலபேர்
தப்பாகக் கருதிக்
கொண்டிருக்கிறார்கள்.

இல்லை – கண்ணீருக்கும்
சேர்த்துத்தான் கண்கள்.

பார்த்தல் என்பது
கண்களின் வேலை.
கண்ணீர் என்பதே
கண்களின் தியானம்.

இதயம் கொதித்து
ஆவியாகும்போது இமைகளின்
முடி திறந்து கொள்கிறதே…
அதுதான் கண்ணீர்.

ஒருவன் தனக்காக அழும்
கண்ணீர் அவனைமட்டுமே
சுத்திகரிக்கிறது.
அடுத்த உயிருக்காக அழும்
கண்ணீர்
அகிலத்தையே சுத்திகரிக்கிறது.

அழாதே சலீம். அழாதே.
இசக்கியின்
தவறுக்காக நான் மன்னிப்புக்
கேட்கிறேன்

  • கலைவண்ணன் சலீமின்
    கரங்கள் பற்றிக் கெஞ்சினான்.

அவன் நிறுத்தவில்லை.
அவன் கண்களிலிருந்து
அறுந்துபோகாத அருவி
வடிந்து கொண்டேயிருந்தது.

இவன் எவ்வளவு மெல்லியவன்.
அனிச்சப்பூ மனசு கொண்டவன்.

பிள்ளை மாதிரி
வளர்த்தேனே.
பிடித்துத் தின்றுவிட்டானே.

  • அவன் எழுத்துக் கூட்டி
    அழுதான்.

விடு சலீம். ஒரு
சுண்டெலிக்காக இவ்வளவு
சோகப்படுகிறாயே.

  • பாண்டியின் சொற்களில்
    அலட்சியம் சொட்டியது.

சொல்லாதே. அதை
வெறும் சுண்டெலி என்று
சொல்லாதே. இந்தப் படகின்
ஏழாவது ஜீவன் என்று
சொல். உருவங்கள்
மாறலாம். ஆனால், உனக்கும்
எனக்கும் அதற்கும் உயிர்
ஒன்றுதான். நம் ஆறுபேரில்
யாராவது ஒருவர்
செத்திருந்தால் நீ அழாமல்
இருப்பாயா?
அப்படித்தான் அதுவும்

அவன் வாக்கிலிருந்த தர்க்கம்
அவர்களை
வாயைடைத்துவிட்டது.

அவன் அழுகை நிற்கவில்லை.

தண்ணீர் குடிக்காத தேகத்தில்
எப்படித்தான் அவ்வளவு
கண்ணீர் இருந்ததோ.
பாண்டியும் பரதனும் அவனைத்
தங்கள் மார்பில்
சாய்த்துக்கொண்டு வேர்வைப்
பிசுக்கில் சிக்கலாகிப்
போன அவன் கேசத்தில்
சிக்கெடுத்தார்கள்.

அந்த ஸபரிசம் அவனுக்குத்
தேவைப்பட்டது.

இசக்கி மட்டும்
பேசவேயில்லை.

அவன் தன்னைத் துண்டித்துத்
தனியனானான்.

ஆடும் படகின் விளிம்பில்
அசையாது உட்கார்ந்து
பிரமைப் பிடித்தவன்போல்
கடல் பார்த்தான்.

தன்னைத் தாங்கிய
மார்புகளுக்கு மத்தியில்
அழுது கொண்டேயிருந்தான்
சலீம்.

ஒரு முரட்டுக்கூட்டத்தில்
இப்படி ஓர் இதயமா?
தன் தாகம், பசி இரண்டையும்
மறந்து வியந்தாள்
தமிழ்ரோஜா.

உரிக்கப்பட்ட சுண்டெலியின்
தோலை மட்டும் சலீமால்
தூக்கி எறிய முடியவில்லை.

தான் வருவதற்கு முன்பே
அடக்கம் செய்யப்பட்டுவிட்ட
தாயின் பழைய புடவையைத்
தொட்டுப் பார்க்கும்
ஒரு பாசமுள்ள மகனைப்
போல – சுண்டெலியின்
தோலை
அவன் தடவிக்கொண்டிருந்தான்.

கைகளில் ஒட்டிய
ரத்தம்பார்த்துத் திடீரென்று
ஆவேசமானான்.

டேய், மனிதனாடா. நீ
மனிதனா? என்று கண்கள்
பிதுங்கக் கத்தி, இசக்கியை
நோக்கி
முன்னேறினான்.

இழுத்துக் கொண்டோ டியவனின்
வயிற்றில் கைவைத்து வளைத்து
நிறுத்தினான் கலைவண்ணன்.
அவனைத் தழுவித் தடவிச்
சாந்தம் செய்தான்.

இதோ பார் சலீம்.
சுண்டெலியைக் கொன்றது
பாவம்தான். உன் உணர்ச்சி
நியாயம்தான். ஆனாலும்
உனக்கொன்று சொல்வேன்.
இதை உன் உள்ளத்தில்
எழுதிக்கொள்.
எது நியாயம், எது பாவம்,
என்று தீர்மானிப்பவன்
மனிதனல்லன்.
இடமும் காலமும்தான்.

தாகத்தில் சாகப் போகும்
பாலைவனப் பயணிகள்,
தங்கள் ஒட்டகத்தையே
கொன்று அதன் உள்ளிருக்கும்
நீரை அருந்துவார்களாம்.
அங்கே ஒட்டகவதை என்பது
பாவமல்ல. பாலைவன
நியாயம்.

பசி உடம்பைத் தின்னத்
தொடங்கும் பஞ்சநாட்களில்
எறும்புப் புற்றை இடித்து,
அதன் மாரிக்காலச்
சேமிப்பான
தானியம் எடுத்துச்
சமைப்பார்களாம்.
அங்கே அது திருட்டு அல்ல.
அது பசியின் நியாயம்.

உணவு கிட்டாத காலத்தில்
உயிர்காக்க நினைக்கும்
இருளர்கள், களிமண்
தின்பார்களாம்.
அங்கே மண் தின்பது என்பது
பாவமல்ல.
பழக்க நியாயம்.

பயிர் செய்ய முடியாமல்
வருஷத்தில் பாதி நாட்கள்
பனிமுடிக் கிடக்கும்
பிரதேசங்களில்
துருவக்கரடிகளும் நாய்களும்கூட
அன்றாட உணவாகுமாம்.
அங்கே அசைவம் என்பது
பாவமல்ல. பூகோள
நியாயம்.

சோமாலியாவின் பஞ்சத்தில்
எலும்பும் உயிரும் வெளியேறத்
துருத்திக் கொண்டிருக்கும்
உடம்புக்குச்
சொந்தக்காரர்கள்
ஒன்றும் கிடைக்காமல்
உடைகளையே தின்னத்
தொடங்கினார்களாம்.
அவர்கள் உடை தின்றது
பாவமல்ல. கால நியாயம்.

இசக்கி சுண்டெலியைக் கொன்று
தின்றதை நான்
நியாயப்படுத்த விரும்பவில்லை.
ஆனால், அவன் செய்தது
கொலை என்று
குற்றம்சாட்டவும்
முடியவில்லை.

சலீம் தன் அழுக்குச் சட்டையில்
வாய் புதைத்து
அழுகை அடக்கினான்.

அழுகை மெல்ல மெல்லக்
குறைந்து விசும்பலானது.

விசும்பல் மெல்ல மெல்லத்
தேய்ந்து மெளனமானது.

சுண்டெலியின் இறுதிச்
சடங்குக்குப்
படகு தயாரானது.

இறந்த உடம்பை இரண்டு
வகையில்
நிறைவு செய்யலாம்.

ஒன்று எரிப்பது அல்லது
புதைப்பது.

எரிப்பதென்றால் ஒரு தீக்குச்சி
செலவாகும்.
இருக்கும் சில தீக்குச்சிகளில்
ஒன்றை இழப்பது
அறிவுடைமை ஆகாது.

புதைத்தல் என்றால் அங்கே
பூமியில்லை.

யோசித்தார்கள்.

வீசுவது என்று
முடிவெடுத்தார்கள்.

எந்தக் கடுகுப்புட்டியின் முடியில்
அது ஆசையாக
உணவருந்துமோ அதே
கடுகுப்புட்டியில், அதன்
தோலையும் தலையையுமிட்டுக்
காற்றுப் புகாமல் முடினான்
கலைவண்ணன்.

அந்தக் கடுகுப் புட்டியைக்
கட்டிக் கொண்டு அழுதான்
சலீம்.

தாயின் மார்பகத்தோடு
ஒட்டிக் கொண்ட
குழந்தையைப் போல்
அவனிடமிருந்து அதைப் பிரிக்க
முடியவில்லை.

பாவம். அன்புள்ள அப்பாவி.

அவனைச் சிரமப்படுத்திப்
பிரித்து, அவன் விரல்களில்
ஒவ்வொன்றாய் விலக்கி, அதை
அத்தனை பேரும் பறித்துக்
கண்ணை முடிக்கொண்டு
கடலில் வீசினார்கள்.

சலீமோடு சேர்ந்து அலைகள்
சிலவும் அழுதன.

இசக்கி மட்டும் பிரமைப்
பிடித்தவன் போல்
உணர்ச்சியில்லாமல்
உட்கார்ந்திருந்தான்.

ஏ தமிழ்ரோஜா.
தலை கவிழ்ந்திருக்கும் என்
தங்கமே.
என்னை மன்னித்துவிடு.
ஆறுதலும் நம்பிக்கையும் தவிர
எதையும் தர முடியாத
ஏழையாகிவிட்டேன்.
உடுத்துவதற்கு மாற்று
ஆடையுமில்லை. உயிர்
பிழைப்பதற்கு
மாற்று வழியுமில்லை.
என்ன கலக்கம். ஏனிந்தக்
குழப்பம்.
உன் முகத்தில் என்ன பயத்தின்
முற்றுகை.
மீண்டும் தண்ணீர் பயமா?

இல்லை. மரணபயம்

  • அவள் லேசாய்ச்
    சிரித்தாள்.

சாவின் புன்னகை
இப்படித்தானிருக்குமோ?

அவன் ஒற்றைவிரல் கொண்டு
அவள் உதடு பொத்தினான்.

பேதையாய்க்கூட இரு.
கோழையாய் இருக்காதே.
இயற்கை அளவற்ற
கருணையுடையது.
நம்மை உயிரோடு வரவேற்ற
கடல் நம் பிணங்களைக்
கரை சேர்க்காது.

எனக்கும் அதுதான்
சந்தேகம்.
இங்கே இறந்தால் கரை
சேர்வதற்கு நம் உடலே
இருக்காது

நம்பிக்கை இழக்காதே
தமிழ்.
நாளை நம்முடையதே.

நாளை நம்முடையதென்றால்
இன்று யாருடையதோ?

அவளுக்குத் தலை சுற்றியது.
மயக்கம் வந்தது.
கொஞ்சம் தண்ணீர்
கிடைக்குமா?
கொஞ்சம் தண்…
மிச்ச எழுத்துக்களை அவள்
சைகையில்
உச்சரித்துவிட்டு
முர்ச்சையானாள்.

தமிழ். தமிழ். –
அவன் பதறினான்

தமிழ். தமிழ். –
அவன் கதறினான்.

கலைவண்ணன் முதன் முதலாய்
அச்சப்பட்டான்.

எல்லோரும் ஓடி வந்தார்கள்

  • இசக்கியைத்தவிர.

சலீம் தன் மேல்துண்டைக்
கடல்நீரில் நனைத்துப்
பிழிந்து நீட்டினான்.

கலைவண்ணன் அவள் முகத்தில்
அதை ஒற்றி ஒற்றி
ஈரப்பசை காட்டினான்

முர்ச்சை தெளிந்து அவள்
முனகினாள்.

தலைக்குமேலே நாரைகளின்
மந்தை ஒன்று படபடவென்று
சிறகடித்துப் போனது.
அத்தனைபேரும் மொத்தமாய்
அண்ணாந்து பார்த்தார்கள்.

ஏ மனிதர்களே.
சிறகுகொண்டு கடல்கடக்கத்
தெரியாத நீங்கள்
எங்களைவிட எப்படி
உயர்ந்தவர்கள்?

உப்புத் தண்ணீர் பருகி
உயிர்வாழ முடியாத நீங்கள்
மீன்களைவிட எப்படி
உயர்ந்தவர்கள்.

ஒருவார தாகம் பொறுக்க
முடியாத நீங்கள்
ஒட்டகத்தைவிட எப்படி
உயர்ந்தவர்கள்.

எங்களைக் கொல்லுவதற்கும்
வெல்லுவதற்கும் ஆயுதம்
கண்டுபிடித்தீர்கள்.
அதனால் மட்டும்தானே நீங்கள்
உயர்ந்தவர்கள்?
இருந்துவிட்டுப் போங்கள்.

கொஞ்சம் தண்ணீர்…
கொஞ்சம் தண்ணீர்

முர்ச்சை தெளிந்தும்
தெளியாமலும்
அவள் புலம்பிக் கிடந்தாள்.

எங்கு போவது தண்ணீருக்கு?
என்ன செய்வது தண்ணீருக்கு?

கலைவண்ணனால் அப்போது
கொடுக்க முடிந்தது
தண்ணீரல்ல. தன்னை
மட்டும்தான்.

இசக்கி மட்டும் பிரமை
பிடித்தவனாய்க் கடலையே
வெறித்துப் பார்த்துக்
கொண்டிருந்தான்.

அந்தி வானத்தில் அஸதமனக்
கோடுகள் விழத் தொடங்கிய
வேளையில், படகின் விளிம்பில்
உட்கார்ந்திருந்த பரதன்
கடலிலும் வானத்திலும் தன்
கண்களை வீசி, ஆபத்தில்
உயிர் காக்கும் அடையாளம்
தேடினான்.

இருப்பது இறப்பது இந்த
இரண்டுக்கும் இடையிலான
வித்தியாசங்கள், அங்குலம்
அங்குலமாக அழிந்துகொண்டே
வருவதை அவன் உணர்ந்தான்.

தற்செயலாய்த் தலை
தாழ்த்தினான்.
ஆ. அவை என்ன?

தண்ணீர் மட்டத்துக்கு மேல்
தலைதூக்கும் அந்தப்
பிராணிகள் கடற்பாம்புகளா?

சற்றே உற்றுப் பார்த்தான்.
ஆமைகள். கடல்
ஆமைகள். என்று
கத்தினான்.

எல்லோரும் அவன் குரல்
கேட்டுக்
கூடுவதற்குள் அவன் கடலில் குதித்தான்.

வெயிலில் ஒதுங்கவும். படகின் வயிற்றில்
படிந்திருக்கும் பாசிதின்னவும் படகை உரசிய
அந்த ஆமைகளை ஒவ்வொன்றாய்த்
தலைபற்றித் தளத்தில் வீசியெறிந்தான்..

தப்பித்தவை போகத் தளத்தில் விழுந்தவை
முன்று ஆமைகள். ஒவ்வொன்றும்
ஆறு கிலோ எடை இருக்கும்.

தலையும் காலும் வாலும் தவிர ஓட்டுக்கு
வெளியே ஒன்றும் தெரியவில்லை.

ஆகா. ஆகா. ஆமைகள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போதுதான்
படகில் பசிக்குரல் மறைந்து உயிர்க்குரல் கேட்டது.
கடலில் கிடந்த பரதன் தாவிக்குதித்து
மேலே வந்தான்.

சமையல்கட்டு சென்றான்.

கத்தியும் சட்டியும் கொண்டுவந்தான்.

ஆமைகளை நெருங்கினான்.

பார்த்து. கையைக் கடித்துவிடப்போகிறது
ஆமை.

அடப்போடா. ஆமைக்குப் பல்லில்லை
என்பது எனக்குத் தெரியாதா?

வெள்ளையாய்த் தெரிந்தது அடிவயிறு.

அதன் இதயப்பகுதியில் கத்தி வைத்தான்.
குத்தினான் – அழுத்தினான் – கீறினான் – கிழித்தான்.

முதலில் கசிய ஆரம்பித்த கருஞ்சிவப்பு
ரத்தம் குபுகுபுவெனக் கொட்டத் தொடங்கியது.

ஆமையின் தலைதுடிப்பதை அவனால் தாங்க
முடியவில்லை. அதை வெட்டி எறிந்தான்.

அப்படியே தூக்கிப் பிடித்துக் கவிழ்த்து
அதன் ரத்தத்தைச் சட்டியில் கொட்டினான்.

அவ்வாறே மற்ற ஆமைகளையும் பிளந்து
ரத்தமெடுக்க, நிரம்பிவிட்டது. பாதிச்சட்டி
பரதன் உற்சாகத்தில் கத்தினான்.
இப்போது இது ரத்தமல்ல. சிவப்பு தண்ணீர்
குடியுங்கள் – எல்லோரும் குடியுங்கள்.

அதுவரை இறந்துகிடந்த டம்ளர்களுக்கெல்லாம்
உடனே உயிர் வந்தது.

சட்டியில் விட்டு ஆளுக்கொரு டம்ளர்
ஆமை ரத்தம் அவசரமாய் மொண்டான்.

இந்தா பாண்டி. இது உனக்கு.
இந்தா சலீம். இது உனக்கு.
இதோ பேனாக்காரரே. இது உங்களுக்கு.

தூரத்தில் பிரமை பிடித்துப் பேசாதிருந்தான்
இசக்கி.

இந்தா இசக்கி இது உனக்கு.

அதுவரை திரும்பாதிருந்த இசக்கி திரும்பினான்.

அவன் கண்ணிலிருந்து ஒரு துளிக் கண்ணீர்
ஆமை ரத்தத்தில் விழுந்தது.

என்னை மன்னித்து விடுங்கள்.
இன்றுமுதல் நான் சாகும் வரைக்கும்
அசைவம் தொடமாட்டேன். நான் கொன்ற
சுண்டெலிக்கு ஆயுள் முழுதும் நான்
செலுத்தும் அஞ்சலி அதுதான்.

அசையவில்லை யாரும், அப்படியே
நின்றார்கள்

இசக்கி சைவமாகிவிட்டானா?

வேங்கைக்கு வெற்றிலை மட்டும் போதுமா?

இது என்ன புது அதிர்ச்சி.

அவர்கள் எதிர்பாராத திசையிலிருந்து
இன்னோர் அதிர்ச்சியும் வந்தது.

எனக்கும் கொடுங்கள் ஒரு டம்ளர்
ஆமை ரத்தம்.

திகைத்து திரும்பினார்கள்.
கேட்டவள் தமிழ்ரோஜா.

Source

Previous articleRead Thanneer Desam Ch 15
Next articleRead Thanneer Desam Ch 17

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here