Read Thanneer Desam Ch 17
தண்ணீர் தேசம்
அத்தியாயம் 17
Read Thanneer Desam Ch 17
இந்தப் பிரபஞ்சத்தில் எதுவும்
நேரலாம். இன்று காண்பது
நாளை மாறலாம்.
மாற்றமே பரிணாமம்.
மாறுதல் ஒன்றுதான் உலகில்
மாறாதிருப்பது.
இந்தக் கிரகத் தொகுதியும்
கட்சி மாறலாம்.
வியாழனை முட்டித் துளைத்த
வால்நட்சத்திரத்தால் அங்கே
தண்ணீரும் உயிர்களும்
உற்பத்தியாகலாம்.
என்றேனும் ஒரு நாள் –
இந்தப் பூமி என்னும் கிரகம்
இடிகொண்ட முட்டையாய்ச்
சிதறுண்டு போக, இங்கிருந்து
தப்பிக்க வசதிகொண்ட
மனிதர்கள் வியாழன் கிரகத்தில்
வீடு வாங்கலாம்.
இதுவரைக்கும் பூமிக்கு வெயில்
தந்த பழைய சூரியனைப்
புறந்தள்ளிவிட்டு, இன்னொரு
சூரியக் குடும்பத்துக்கு
ஜீவராசிகள் இடம்
பெயரலாம்.
நிகழும் வரைக்கும்தான் ஒன்று
அதிசயம். நிகழ்ந்த பிறகு அது
சம்பவம்.
தொப்பூழ்க்கொடி அறுத்தது
முதல் அசைவக்
கலாசாரத்திலேயே வளர்ந்த
இசக்கி, அன்று முதல் தன்னைச்
சைவன் என்று
பிரகடனப்படுத்திக் கொண்டதும்
- எறும்பு செத்து மிதக்கும்
பாலைக்கூட அசைவமென்று
ஒதுக்கிய தமிழ் ரோஜா,
அன்று ஆமை ரத்தம் பருகக்
கேட்டதும் பழகியவர்களுக்கு
அதிர்ச்சியே தவிர
பண்பாட்டுக்கு அதிர்ச்சி அல்ல.
மனிதன் இயற்கையின் குழந்தை.
அவனது உணவை, உடையை,
உறையுளை ஏற்படுத்திக்
கொடுப்பதும் இயற்கைதான்.
மதுரையில் சட்டையில்லாத
உழவனைப் பார்த்து, இனி
சட்டை அணிவதில்லை என்று
வடநாட்டு உழவன் சபதம்
செய்தால், அது சரியான
சிந்தனை என்று கருத
முடியாது.
அந்த வெயில் பூமியில்
சட்டையில்லாமலிருப்பது ஓர்
உழவனின் செளகரியம்.
வடநாட்டுக் குளிரில் ஓர்
உழவன் சட்டையும்
தலைப்பாகையும்
அணிந்தே ஆக வேண்டும்.. அது
அவன் தேவை.
எனவே, சட்டை அணிவது –
அணியாதிருப்பது என்பதை
வானிலை தீர்மானிக்கிறது.
மனிதனின் ஆணைகள்,
மீறுவதற்காகவே
பிறப்பிக்கப்படுகின்றன.
இயற்கையின் ஆணைகள்
தேவைக்காகவே
படைக்கப்படுகின்றன.
ஆமைரத்தம் சைவமா
அசைவமா என்று
வாதாடுவதற்கான வாய்ப்பை,
தமிழ்ரோஜாவின் தாகம்
அவளுக்குத் தரவில்லை.
அவளைப் பொறுத்தவரை
அப்போது அவளுக்கு அது
திடதிரவம்.
குடித்தாள்.
குடித்துவிட்டுப் பால்குடித்த
குழந்தைபோல் இதழ்க்கடை
துடைத்தாள்.
அடுத்தொரு கேள்வியும் அவளே
கேட்டாள்.
அந்த ஆமைக்கறியைச்
சமைக்க முடியுமா?
மீனவர் நிமிர்ந்தனர்.
அதைப் பச்சையாகவே
சாப்பிடுவது என்று அவர்கள்
நெஞ்சுக்குள் நிறைவேற்றிக்
கொண்ட மெளனத் தீர்மானம்
சற்றே ஒத்தி வைக்கப்பட்டது.
இதைச் சமைக்கத்தான்
வேண்டுமா?
பச்சையாய் உண்டாலும்
அடிவயிற்றில் எரியும் அக்கினியில்
இது வெந்து போகாதா?
நெருப்பு என்பது அந்த
நிமிடத்தில் அவர்களுக்கு
ஆடம்பரம்.
அவர்களின் அந்த நேரத்து
அகராதியில் சமைத்தல் என்ற
சொல்லுக்கு நேரே,
காலவிரயம் அல்லது
படாடோ பம் என்று பொருள்
போட்டிருந்தது.
ஆனாலும், ஒரு சைவப்
பெண்ணின் அசைவத்
தேவைக்காக அவர்கள்
சமைக்க ஆயத்தமானார்கள்.
முன்று வருடங்கடந்து மழை
பெய்த ஒரு திருநாளில், தன்
பழைய கலப்பையைத் தேடுகிற
ஓர் ஏழை விவசாயியைப்போல
அவர்கள் திசைக்கொருவராய்ப்
பறந்து தீப்பெட்டி
தேடினார்கள்.
ஒரு குடியானவன் வீட்டு
உண்டியலின் கடைசிக்
காசைப்போல அது ஏதோ
ஓர் ஆழத்தில் அகப்பட்டது.
அது சற்றே ஈரம்பூத்திருந்தது.
உள்ளே- ரஷயப்
படையெடுப்பில் தோற்றுத்
திரும்பிய நெப்போலியனின்
படைவீரர்களைப் போல
எண்ணிக்கையில் குறைவாகவே
இருந்தன தீக்குச்சிகள்.
பற்றவைக்க முயன்றான்
பாண்டி.
முதலாம் தீக்குச்சி –
உடைந்தது.
இரண்டாம் தீக்குச்சி –
பட்டையில் ஒரு பாதி கிழித்துத்
தானும் தேய்ந்தது.
முன்றாம் தீக்குச்சி – சற்றே
பற்றிச் சட்டென்று அணைந்தது.
தீக்குச்சி நாலாவது –
பற்றியது. ஏமாற்றாமல்
எரிந்தது.
அடுப்பும் முகங்களும் ஒரே
நேரத்தில் ஒளிகொண்டன.
தண்ணீர் இல்லாததால் அதன்
ரத்தம் ஊற்றப்பட்டு
அவசரமாய்ச் சமைக்கப்பட்டது
ஆமைக்கறி.
தட்டேந்தி நிற்கவோ
பங்கிட்டுக் கொள்ளவோ
பொறுமையின்றி, ஆளுக்கொரு
துண்டாய் அவர்கள் அவசரமாய்
உண்ட பிறகுதான்
தெரிந்தது… வெந்திருப்பது
கறி அல்ல – அவர்களின்
நாக்குகள் என்று.
அவர்களின் உடம்பின் ஆழத்தில்
வற்றி வண்டலாகிப் போன
உயிர் ஒவ்வொரு சொட்டாய்
ஊறத் தொடங்கியது.
கரை.
மீனவர் சங்கம் மிதந்தது
சத்தத்தில்.
காணவில்லை என் மகனை.
கண்டுபிடிக்க மாட்டீர்களா?
- அந்தக் கோடையிலும்
நடுங்கியது ஒரு முதாட்டியின்
குரல்.
காணவில்லை என் கணவனை.
செத்தாரா இருக்கிறாரா…
செய்தி
சொல்லமாட்டீர்களா? –
இது ஒரு
கைக்குழந்தைக்காரியின்
கதறல்.
பதறாதீர்கள், ஒன்றும்
ஆகாது அவர்கள் உயிர்களுக்கு.
இன்றைக்கே தேட ஏற்பாடு
செய்வோம். எப்படியும்
கிடைப்பார்கள் – ஒரு
பிசிறில்லாத ஆண்குரல்
பேசியது.
அவனுக்கு மட்டும்
ஏதாவதானால் நான்
கடலாத்தா மடியில்
விழுந்துதான் செத்துப்
போவேன்.
தரையில் செத்தால் எனக்குக்
கொள்ளிவைக்கத்தான் வேறு
பிள்ளை இல்லையே.
பாவம். கிழவியின் பீளைக்
கண்களில் ஏழைக்கண்ணீர்.
கடல்.
நேற்றுச் சொன்னேனே..
அது நிஜமாகிவிட்டது தமிழ்.
என்ன சொன்னீர்கள்?
இயற்கை அளவற்ற
கருணையுடையது என்றேன்.
இயற்கை தன் கருணையை ஆமை
வடிவில் அனுப்பி வைத்ததா
இல்லையா?
ஒரு பட்டமரத்தில்
புறப்படும் முதல் தளிரைப்
போல எனக்குள் புதிய
நம்பிக்கை பூத்திருக்கிறது.
பூமியைப் பற்றிக்கொள்ளும்
வேர்களைப்போல நீ
நம்பிக்கையைப் பற்றிக்கொள்.
ஒரு பறவை உன் தலைக்கு
மேலே பறப்பதை உன்னால்
தடுக்க முடியாது. ஆனால்,
அது உன் தலையில்
கூடுகட்டாமல் உன்னால் தடுக்க
முடியும்.
அவள் பாதி உதட்டில்
புன்னகைத்தாள்.
அதில் தேவையான சதவிகிதம்
சிருங்காரம் இருந்தது.
அதுவரைக்கும் பசியில் உலர்ந்து
கிடந்த காதல், சின்னதாய்ச்
சிலிர்த்துச் சிறகு விரித்தது.
அவன் நெருங்கி வந்தான்.
பட்டாம்பூச்சி பிடிக்கும்
சிறுவனைப் போல அசையாமல்
அவளையே பார்த்தான்.
சட்டென்று குனிந்தான்.
அவள் அசைவ உதடுகளில்
அவசரமாய் முத்தமிட்டான்.
உதடுகளின் ஓப்பந்தம் சில
நிமிடங்கள் நீடித்தது.
கடைசியில் பார்த்தால்
கரித்தது முத்தம்.
அவனுக்குத் தெரியாமல் அவளும்
அவளுக்குத் தெரியாமல் அவனும்
அழுத துளிகள் பரஸபரம்
உதடுகளில்
பரிமாறப்பட்டிருந்தன.
ஆனந்தக் கண்ணீர் மட்டும்
இனிக்குமா என்ன?
மேகமற்ற ராத்திரி.
மெல்லிய பிறை. ஒற்றை
உதட்டால் சிரித்தது மேற்கு
வானத்தில்.
கலங்காதிரு பிறையே.
உனக்குள்தான்
பூரணச்சந்திரன்
புதைந்திருக்கிறான்
- மகாகவி இக்பாலின் இந்தக்
கவிதை சலீமுக்குத் தெரியாது.
தெரிந்திருந்தால் பிறையை
அவன் முழுமையாய்
ரசித்திருப்பான்.
வயிற்றுக்குள் ஆமையை
நிரப்பிக்கொண்ட ஆனந்தக்
களிப்பில் – ஒரு மயக்க
போதை போன்ற பாதி
உறக்கத்தில் தளத்தில் அவர்கள்
சுதந்திரமாய்ச் சிதறி,
உருண்டும் நெளிந்தும் புரண்டும்
கொண்டிருந்தபொழுதில்
தூரத்தில் தெரிந்தது ஓர் ஒளி
ஊர்வலம்.
தன் உள்ளங்கைகளால் கண்களை
உரக்கத் தேய்த்துக்கொண்டு
மீண்டும் மீண்டும் பார்த்தான்
பாண்டி.
தன்னை மறந்து கத்தினான்.
கப்பல். கப்பல்.
தீப்பிடித்த வீடாய் அந்த
ஒரே சத்தத்தில்
விழித்துக்கொண்டது படகு.
கப்பல்தான். அது
கப்பல்தான். மென்மையாய்
மிதந்துபோகும் ஒரு
வெளிச்சத்தீவு.
அவர்கள் காத்துக்கிடந்த
நம்பிக்கை அதோ
கண்படுதூரத்தில்.
அதோ. அவர்களை உரசாமல்
போகிறது அவர்களின்
ஒளிமயமான எதிர்காலம்.
எப்படி அதை எட்டுவது?
ஒன்று – கப்பலை, அவர்கள்
சென்றுசேர வேண்டும்.
அல்லது –
கப்பல் அவர்களிடம்
வரவேண்டும்.
கப்பலை அவர்கள் சென்று
அடைய முடியாது.
அவர்களின் இருப்பையோ
கப்பல் அறியாது.
அது கெட்டிச்சாயம்
போட்டுக்கொண்ட ராத்திரி.
அவர்களின் இருப்பை
அவர்கள்தான் அறிவிக்க
வேண்டும்.
அவர்களாய் அறிவிப்பதற்கு
இரண்டே வழிகள்.
ஒன்று – ஒலி.
இன்னொன்று – ஒளி.
கப்பல் செல்வதோ ஒலி
எட்டாத தூரம்.
அப்படியே உயிரைத் திரட்டி
ஒலி செய்தாலும் கப்பலின்
எந்திர ஓசைகிழித்து அவர்களை
எட்டுமோ? எட்டாதோ?
அடுத்துள்ள ஒரே வழி – ஒளி.
வெளிச்சம் காட்டுவோம்-
அவர்கள் வேகமான,
விவேகமான முடிவுக்கு
வந்தார்கள்.
படகின் மின்கலம் சில
நாட்களுக்கு முன்பே
செத்துவிட்டது.
ஒரு தீப்பந்தம்
தயாரிக்கலாம் அவசரத்
தீர்மானம் நிறைவேறியது.
அடுத்த விநாடியே
பாய்மரக்கழி ஒன்று
உருவப்பட்டது.
துணி. துணி.
பாய்மரம் பிரிக்கப்பட்டது.
துண்டுகள் – துணிகள் –
லுங்கிகள்
கழியில் சுற்றப்பட்டன.
சற்று நேரத்தில் கழிக்குத்
தலை முளைத்தது.
சரி… சரி.
கொளுத்து.
இரு… இரு. டீசலில்
நனை.
நனைத்தார்கள்.
கொளுத்து.
நிறுத்து.
ஏன் தடுக்கிறாய்?
ஒருவேளை பந்தம்
பற்றாமல் போனால்..?
முதலில் அடுப்பைப்
பற்றவைப்போம். அதிலிருந்து
நெருப்பெடுப்போம்.
அதுதான் சரி.
அவசரமாய் அடுப்படியில்
கூடினார்கள்.
தீப்பெட்டி திறந்தார்கள்.
உள்ளே-
இரண்டே குச்சிகள் இருந்தன.
ஒருவர் முகத்தை ஒருவர்
பார்த்துக் கொண்டார்கள்.
சுற்றி அடிக்கும் காற்று
சுழற்றியது படகை.
தீக்குச்சிகளின் இரண்டு
நுனிகளிலும் அவர்களின்
எதிர்காலம்
திரண்டிருந்தது
ஏ தீக்குச்சிகளே. எங்கள் எதிர்காலத்தின்
மந்திரக்கோல்களே. கைகூப்புகிறோம்
உங்களை, கைவிட்டு விடாதீர்கள்.
நெருப்பை ஒரு சின்னக்குச்சியின் உச்சியில்
சேமித்து வைத்தவனே. உனக்கு எங்கள்
நன்றி.
இந்த நெருப்பை அடைவதற்கு எமக்கு
முன்னிருந்த மனிதஜாதி என்னென்ன
பாடுபட்டிருக்கும்?
ஒரு முங்கில்காடு பற்றுகிறவரைக்கும்
நெருப்புக்குக் காத்திருந்த
ஆதிமனிதர்களைப் போல் -சிக்கிமுக்கிக்
கல்லுக்குள்ளும் தீக்கடைகோலுக்குள்ளும்
நெருப்பைப் பிரசிவிக்கப் பாடுபட்ட
மனிதர்களைப் போல் – உரசியும் – தேய்த்தும்
-கடைந்தும் – குடைந்தும் தீயைத்தேடி
அடைந்த மனிதர்களைப்போல் – இதோ
நாங்களும் எங்கள் உயிரைக் கையில்
பிடித்துக் கொண்டு, எங்கள் ஜீவநெருப்பின்
ஜனனத்துக்குக் காத்திருக்கிறோம்.
தீக்குச்சியே பற்றிக்கொள்.
காற்றே அணைத்துவிடாதே.
தீப்பந்தமே எரி.
கப்பலே நில்.
பாண்டி முதல் குச்சியை எடுத்தான்,
அவனுக்குக் கை நடுங்கியது.
எல்லோரும் வட்டமாய் நின்று காற்றை
மறைத்து வீடு கட்டினார்கள்.
கப்பல் கடந்துவிடப்போகிறது..
உரசு பாண்டி. உரசு.
மென்மையாய் உரசினான்.
அது பற்றவில்லை.
சற்றே அழுத்தினான், ஒரு பாதி மருந்து
உராய்ந்து தேய்ந்தது,
மறுபக்கம் உரசினான்,
அவ்வளவுதான், அது சிரச்சேதமானது.
எல்லோரும் பதறினார்கள்.
இன்னும் ஒரே ஒரு குச்சி..
அவர்களின் உயிர்க்குச்சி.
ஒதுங்கு. என்னிடம் கொடு
தீப்பெட்டியைப் பரதன் வாங்கினான்.
அம்பின் நுனியில் மனம் குவிக்கும் ஒரு
வில்வீரனைப்போல முழு கவனத்தோடு
முனைந்தான்.
தன் உள்ளங்கை உஷணத்தைப்
பட்டைக்கும் தீக்குச்சிக்கும் பரிமாறித்
தீப்பெட்டியை இடக்கையில் இறுக்கிப் பற்றி,
வலக்கையில் தீக்குச்சி ஏந்தித் தன் ஒரு
விரலால் அதற்குப் பக்கபலம் சேர்த்துத்
தன் உள்ளத்தையெல்லாம் தீக்குச்சியில்
வைத்து உரசியபோது முன்றாவது உரசலில்
பொசுக்கென்று பூத்தது நெருப்பு.
ஆகா. உயிரின் ஒளிவடிவம்.
அந்தப் பரவசத்தோடு அதை அடுப்புத்
திரியில் பற்றவைக்கப் போன அந்த
விநாடியின் இரண்டாம் பாகத்தில், சந்துவழி
வந்த சுழற்காற்று அந்த உயிரின் சுடரைப்
பொசுக்கென்று அணைத்துவிட்டுப்
போய்விட்டது.
ஆ. அய்யோ. அய்யய்யோ.
எல்லோரும் பரபரவென்று ஒடிவந்து
விளிம்பில் நின்று பார்த்தபோது கப்பல்
கடந்துவிட்டது.
அவர்கள் நம்பிக்கையின் இறுதி
ஊர்வலமாய் அது தூரத்தில்
மறைந்துகொண்டிருந்தது.