Home Thanneer Desam Read Thanneer Desam Ch 18

Read Thanneer Desam Ch 18

93
0
Read Thanneer Desam free, Thanneer Desam is an story poem written by Vairamuthu. Read Thanneer Desam Ch 18, Download Thanneer Desam, Thanneer Desam PDF, Download Thanneer Desam PDF
Thanneer Desam Ch 18 தண்ணீர் தேசம் அத்தியாயம் 18

Read Thanneer Desam Ch 18

தண்ணீர் தேசம்

அத்தியாயம் 18

Read Thanneer Desam Ch 18

ஏ பகலே.
நாங்கள் என்ன தவறு
செய்தோம்?
பூமிக்கே வெளிச்சம்
கொண்டுவரும் நீ,
எங்களை மட்டும்
ஏன் விட்டுவிட்டு விடிகிறாய்?

எங்கள் ஒவ்வொரு
நம்பிக்கையையும் நீரில்
விழுந்த நிலவின் பிம்பமாய்க்
காட்டுவதுபோல் காட்டி
ஏன் கலைத்துவிடுகிறாய்?

ஏ கடலே.
கருணை காட்டி எங்களைக்
கரைசேர்…
அல்லது உன் வயிற்றுக்குள்
எங்களை உள்ளிழுத்துக்கொள்.
எங்களுக்கு
ஏதாவது ஒன்றுதான் வேண்டும்-
வாழ்வு அல்லது சாவு.

ஆனால் ஒன்று –
இரண்டில் எதுவென்றாலும்,
எமக்கு முழுமையாய் வேண்டும்.

ஒன்று – பூரண வாழ்வு
அல்லது பூரணச் சாவு.

வாழ்வென்றால் –
எதிலும் மிச்சம் வைக்காத
முழுவாழ்வு.

சாவென்றால் –
தவணை முறையில் இல்லாத
முழுச்சாவு.

கொஞ்சம் வாழ்வு –
கொஞ்சம் சாவு…
இந்த விளையாட்டெல்லாம்
வேண்டாம்.

மனித வாழ்வின் பெருந்துன்பம்
எது தெரியுமா?

மரணத்தைவிட வாழ்க்கை
பயமானது என்று தெரிந்த
பின்பும், வாழ்க்கையோடு
ஒட்டிக்கொண்டிருப்பதுதான்.

உடம்பு மெல்ல மெல்ல
உலர்ந்து கொண்டிருக்கிறது.
உயிர் மட்டும் எந்த வழியாக
வெளியேறுவது என்ற
தீர்மானத்துக்குப் பக்கத்தில்
திணறிக் கொண்டிருக்கிறது.

மிக ஆர்வமாய் – ஆனால்,
தீர்க்கமாய்க் கேட்டாள்
தமிழ்ரோஜா.
பேசாமல்
இறந்துவிடலாமா?

முகமெங்கும் முள்முள்ளாய்ப்
பூத்திருந்த தாடியைத்
தடவிக்கொண்டே
ஜீவன் இல்லாமல் சிரித்தான்
கலைவண்ணன்.

இதோ பார். தட்டுப்பட்ட
ஒரே ஒரு கப்பலையும்
தவறவிட்டதற்குத்தானே உன்
கண்கள் மரணக்கண்ணீர்
வடிக்கின்றன? ஓர்
அஸதமனத்துக்காக அழுது,
பூமிக்கு இனிமேல் பகலே
இல்லை என்று புலம்பினால்
எப்படி?

நாம் வாழ வேண்டுமென்று
நம்மைப் போலவே
இயற்கையும் ஆசைப்படுகிறது.
அந்த ஆசையின்
அடையாளங்களே ஆமையும் –
கப்பலும். நீ இடையில்
அடைந்த தைரியத்தை
இழந்துவிடாதே.
சந்தோஷத்தின் தேதி குறிப்பது
மட்டும்தான் மனிதகுலத்தின்
வேலை. சாவின் தேதி
குறிப்பது காலத்தின்
வேலை…

சாவதற்குக்கூட எனக்கு
உரிமையில்லையா?

சாவது என்பது உன்
உரிமையன்று. அது நியதி. நீ
உயிரோடு பூமியில் வந்து
விழுந்ததை எப்படி நீ முடிவு
செய்யவில்லையோ, அப்படியே

  • இந்த உடம்பைப் பூமியில்
    போட்டுவிட்டுப் போவதையும்
    நீ முடிவு செய்ய முடியாது.
    கொஞ்சம் போராடு…

போராடும் தெம்பு
போய்விட்டது. என் வாழ்க்கை
முடிந்துவிட்டது…

இல்லை – இனிமேல்தான்
உன் வாழ்க்கை
தொடங்கப்போகிறது.
நிச்சயம் நாம்
கரைமீள்வோம். பிறகு பார்.
மரணத்தின் வாசல்வரை சென்று
மீண்டவர்களுக்கே வாழ்வின்
பெருமை விளங்கும்.

நீ வாழ்க்கையைத்
துளித்துளியாய் ரசிப்பாய்.
வாழ்வின் ஒவ்வொரு கணமும்
உனக்குப் பெருமை
உடையதாகும். ஒவ்வொரு
புல்லிலும் பூவிலும் தீராத
வாழ்க்கை தேங்கி நிற்பது
தெரியும். தான் உதிரும் முதல்
நிமிஷம் வரைக்கும் – ஏன்…
உதிர்ந்து பூமியில்
விழும்வரைக்கும், இந்தப்
பிரபஞ்சத்தின் சந்தோஷத்தை
மட்டுமே காற்றோடு
பேசிக்கொண்டிருக்கும் ஒரு
தென்னங்கீற்றைப் போல –
இனி இன்பமன்றி உனக்கு வேறு
இராது.

முதன்முதலாக மலேசியா
வந்திறங்கிய ஓர் அரபி,
மழைத்துளிகளை நேசிப்பது
போல்- நீ நிமிஷங்களை
நேசிப்பாய். டிசம்பர்
மாதத்தின் இந்திய வெயிலை
நேசிக்கும் ஓர் எஸகிமோவைப்
போல் – நீ வாழ்க்கையை
ரசிப்பாய்.

ஒரு சிறைக்கைதிக்குத்தான்
தெரியும் – சுதந்திரத்தின்
பெருமை. நம்மைப் போன்ற
அலைக்கைதிகளுக்குத்தான்
தெரியும் – பூமியின் அருமை.
பொறு தமிழ். பொறு…
இரவில் நம்மைக் கடந்த
கப்பல், ஒரு பகலில்
கடவாதா?

அவளை அள்ளித் தழுவி ஆதரவு
செய்தான். காமமில்லாமல்
அவள் கழுத்தில் முத்தமிட்டான்.
அவள், அவன் மடியில் முகம்
புதைத்துப் பாதுகாப்பாய்
அழுதாள்.

ஓடிவாருங்கள்…
எல்லாரும் ஓடிவாருங்கள்.
பரதன் தலை சுற்றி
விழுந்துவிட்டான். பயமாக
இருக்கிறது. அவன் கண்ணில்
கருப்புமணிகள் காணவில்லை.
வெள்ளைவிழி தெரிகிறது.
கண்கள் செருகிவிட்டன.
ஓடிவாருங்கள்… எல்லாரும்
ஓடிவாருங்கள்…

  • உடம்பும் சொல்லும்
    நடுங்க நடுங்கத் துடித்துக்
    கத்தினான் இசக்கி.

எல்லோரும் சோர்வு மறந்து
அவனைச் சூழ்ந்தார்கள்.

அசைவற்ற கட்டையாய்க்
கிடந்தவன் முகத்தில், கடல்நீர்
பிழியவும் முனகினான்.

பிறகு சற்றே கண்விழித்தவன் –
பிசாசு, பிசாசு. படகு
பத்திரம். என்று கூறியது
கூறினான்.

உண்மை சொல் பரதன்,
என்ன கண்டாய்? என்ன
உளறுகிறாய்?

  • கலைவண்ணன் அவனை
    உலுக்கினான்.

அவன் தன் முகத்தைக்
கைகளால் முடிக்கொண்டே
குனிந்து பேசினான்.

நேற்றிரவு நீங்களெல்லாம்
தூங்கிவிட்டீர்கள். நான்
தூங்கவில்லை.
நள்ளிரவுக்குமேல் யாரோ
படகை உள்ளே பிடித்து
இழுப்பதாய்த் தோன்றியது.
படகு விட்டுவிட்டு
இழுக்கப்பட்டது.
படகு முழுக்க இழுக்கப்பட்டு
நாம் முழ்கிப் போவோம்
என்றே நினைத்தேன்.
சந்தேகமே இல்லை

  • அது கடல் பிசாசுதான்.
    கரையில் கதை கதையாய்ச்
    சொல்வார்கள்.
    முத்தாண்டிக் கிழவனும் அவன்
    பேரனும் அப்படித்தான் இறந்து
    போனார்கள். இரவெல்லாம்
    பயத்தில் என்னால் பேச
    முடியவில்லை. கடல் பிசாசு
    நம்மைக் கரையேற விடாது
    பேனாக்காரரே.

அவன் மெல்ல நடுங்கினான்.
குலுங்கி அழுதது குன்று.
கண்ணீர் அருவிகள் சிதறின.

கலைவண்ணன், அவன் கைகளை
வாரித் தன் தோள்களில்
இட்டுக்கொண்டான்.

ஒவ்வொரு விரலாய்ச்
சொடுக்கெடுத்துக்கொண்டே
சொன்னான்.

பயம் வேண்டாம் பரதன்.
இப்படிக் கடல் பிசாசு கண்டு
கலங்கும் பயம் உங்களுக்குமட்டுமல்ல, உலகம்
முழுவதுமிருக்கிறது. சற்றே
செவி கொடுங்கள், ஒரு
சரித்திரம் சொல்கிறேன்.
அட்லாண்டிக் சமுத்திரத்தில்
பெர்முடாஸ முக்கோணம்
என்றொரு மர்ம முக்கோணம்
இருக்கிறது. அதற்குள் நுழைந்த
கப்பல்கள் காணாமல்
போயின. காணாமல் போன
கப்பல்களைத் தேடப்போன
விமானங்கள், அந்த
எல்லைக்குள் நுழைந்தவுடன்
வெடித்துச் சிதறின.
அறுபத்திரண்டு கப்பல்களும்
பதினெட்டு விமானங்களும்
இரண்டாயிரம் மனிதர்களும்
அதற்குள் தொலைந்து
போனதாய்ச் சொன்னார்கள்.

தப்பிப் பிழைத்த ஒரு விமானி
சொன்னார்.
விமானத்தை ஏதோ ஒரு
சக்தி இழுத்தது. விமானமே
வேலைநிறுத்தம் செய்தது.
சற்று நேரத்தில்
வெடித்துவிட்டது…

பெர்முடாஸ முக்கோணத்துக்கு
மேலே பல மைல்
தூரத்துக்குப் பரவியிருக்கும்
காந்த சக்திதான் அதற்குக்
காரணம் என்ற ஒரு கற்பனை
முடிவுக்கு வந்தவர்கள்,
அதற்குள் பிளாஸடிக்
படகுகளைச் செலுத்தினார்கள்.
பிளாஸடிக் படகுகளையும்
பெர்முடாஸ சிதறுதேங்காய்
போட்டது. பிறகுதான்
பிசாசுகள் வாழும்
பெர்முடாஸ என்று உலகம்
பேசத் தொடங்கியது.

ஆனால், ரஷயர்கள் மட்டும்
அதை நம்பவில்லை. 1982-ல்
விட்யாஸ என்ற கப்பலில்
புறப்பட்டு, முக்கோண
எல்லைக்குச் சற்றே தூரத்தில்
நிறுத்தித் துப்பறிந்தார்கள்.
கொஞ்சம் முன்னேறவும்,
கப்பலில் இருந்தவர்களுக்குக்
கை-கால் விளங்கவில்லை.
புயலின் சின்னம்
எதுவுமில்லாமலே, புயல்
வீசுவதாய்க் கருவி காட்டியது.
அதன்பிறகுதான் உண்மை
அறியப்பட்டது.

பெர்முடாஸில் ராட்சச
நீர்ச்சுழிகள் உண்டாகி,
நிரந்தரமாய்ச் சுழல்கின்றன.
அதன்மேல் அசுரச் சூறாவளி
ஒன்று அமைதியாய்
வீசிக்கொண்டிருக்கிறது. அதுவே
கப்பல்களும் விமானங்களும்
கவிழக் காரணம். இந்த
விஞ்ஞான நெருப்பு
வீசப்பட்டவுடன், அதுவரை
நம்பப்பட்டு வந்த பிசாசு
இறந்துவிட்டது.

அதைப்போலத்தான் இதுவும்.
கடல்நீரின் ஏற்றவற்றத்தில்
படகு அமிழலாம்.
எழும்பலாம்.

அது பிசாசு அல்ல பரதன்.
பேசாமலிரு.
மனப்பேய்களையும்
மனிதப்பேய்களையும் தவிர,
மனிதப் பிரபஞ்சத்தில் வேறு
பேய்கள் இல்லை. எழுந்திரு
பரதன். எழுந்திரு.

தூங்குமுஞ்சி மரத்தின் இலைகள்
அதிகாலையில் மெல்ல மெல்ல
விரிவதுபோல், பரதன் மெல்ல
மெல்லப் பயம் தெளிந்தான்.
அவனுக்கு முன்னால் அவன்
நம்பிக்கை எழுந்து கொண்டது.

இந்தக் காதுமடல்
இருக்கிறதே. அது உடம்பின்
ஓர் உணர்ச்சிமயமான
பிரதேசம். மெல்லிய
குருத்தெலும்புகளாலான
மென்மையான பாகம்.

அந்தக் காலத்தில் பல
ஜமீன்தார்களுக்குக்
காதுமடல்களை யாராவது
வருடிக்கொடுத்தால்தான்
தூக்கம் வருமாம்.

பாலியல் பொழுதுகளிலும்
அதற்கொரு மன்மதப் பங்கு
உண்டு.

இமைகள் என்னும் முடி
கண்களுக்குண்டு.
இதழ்கள் என்னும் முடி
வாய்க்குண்டு.

முக்கையும்கூடக் கைகளின்
உதவியின்றியே முடிக்கொள்ள
முடியும்.
உடம்பின் பிற வாசல்களும்
அப்படித்தான். ஆனால், இந்த
உடம்பில் காதுகளுக்கு
மட்டும்தான் கதவுகளில்லை.

காதுகளை மட்டும்தான் முயற்சி
இல்லாமல் முட முடியாது.

கண்களையும் வாயையும்
காதுகளையும் தனித்தனியே
பொத்திக் கொண்டிருக்கும்
குரங்குச் சிலைகள் முன்று
தேவையில்லை.
கண்களை இமைகளாலும் வாயை
உதடுகளாலும் சுயமாக
முடிக்கொண்டு, காதுகளை
மட்டும் கைகளால்
பொத்திக்கொள்ளும் ஒரே ஒரு
குரங்குச் சிலை போதும்.

தொழிலாளிகளுக்குக் காதுமடல்
என்பது சேமிப்பு வங்கி.

பீடி, பென்சில், காது
குடையும் குச்சி – இவற்றைக்
காதுமடல்களில்
வைத்துக்கொள்வது அவர்களுக்கு
வசதி.

இசக்கியின் காதுமடலில்
தற்செயலாய்ப் பார்வை
ஓட்டிய சலீம், அண்ணே.
அது என்ன? என்று
ஆச்சரியம் காட்டினான்.

அதில் ஒரே ஒரு குச்சி –
காது குடைய வைத்திருந்த தீக்குச்சி

  • காணப்பட்டது.

எப்போதோ எடுத்து வைத்த
அந்தத் தீக்குச்சியும் அதன்
நுனியில் மருந்திருப்பதும்
அவனுக்கு மறந்து
போயிருந்தது.

அதைப் பாய்ந்துசென்று
பறித்துப் பரவசத்தில்
கூத்தாடினான் சலீம்.
தீக்குச்சி. தீக்குச்சி.
என்று கத்தினான்.

வேர்வைச் சொட்டுகளில்
நனைந்திருந்த அந்தத்
தீக்குச்சியை அந்திவெயிலில்
காயவைத்தார்கள்.
அதில் மட்டும் தீப்பந்தம்
பற்றிக்கொண்டால் ஒரு தீர்வு
கிடைக்கும் என்று
நம்பினார்கள்.

ஒரு தாய் தன் குழந்தைக்கு
மைதீட்டும் கவனத்தோடும்,
ஒரு காதலன் தன் காதலிக்கு
முதல் கடிதம் எழுதும்
ஆர்வத்தோடும் அவர்கள்
அதைப் பத்திரமாகப்
பற்றவைக்க, பற்றிக்கொண்டது
தீப்பந்தம்.

ஆகா. ஆகா.
இது நம்பிக்கைச் சுடர்.
வாழ்வின் ஜுவாலை.

இதை அணைய விடக்கூடாது.
இதை அணையவிட்டால், நம்
உயிர்த்தீயை அணையவிட்டோ ம்
என்று அர்த்தம்.

நெருப்பு ஓர் அபூர்வமாகவும்
அதிசயமாகவும் இருந்த
ஆதிகாலத்தில், பழைய
எகிப்திலும் கிரேக்கத்திலும்
ரோமிலும் ஊருக்கு மத்தியில்
ஒரே ஓர் இடத்தில்,
எப்போதும் நெருப்பு
எரிந்து கொண்டேயிருக்குமாம்.
எவர் தேவைக்கும் எடுத்துச்
செல்லலாமாம். அவர்கள்
அதை அணையவிட்டதில்லையாம்.

அப்படித்தான் இதுவும் –
பொதுநெருப்பு.
அணையாமல் காப்போம்.
அனைவரும் காப்போம்.

இரவு…
வானமங்கை தன் அடர்த்தியான
கூந்தலைப் பூமியில்
அவிழ்த்துவிட்டாள்.
நட்சத்திரங்களைக்
காணவில்லை.

ஆனால், அவர்கள்
நம்பிக்கையைப் போலவே,
பிறையும் சில மில்லிமீட்டர்
வளர்ந்திருந்தது.

அங்கங்கே கனத்த மேகங்கள்
வானத்தை மறைத்திருந்தன.

ஏ காலமே. எமக்குக்
கருணை காட்டு. நேற்று
எங்கள் கையில்
தீப்பந்தமில்லை.
எங்கள் பாதையில் ஒரு கப்பல்
கடக்கவிட்டாய். இன்று எங்கள் கையில்
தீப்பந்தமிருக்கிறது, தயவுசெய்து இன்னொரு
கப்பலைக் கடக்கவிடு.

இரவு முழுவதும் தீப்பந்தத்தை
ஒருவரையெருவர் மாற்றி மாற்றி உயர்த்திப்
பிடிப்பதாய் முடிவானது.

பாண்டியின் கையிலிருந்து பரதனுக்கும்,
பரதன் கையிலிருந்து இசக்கிக்கும் வந்த
தீப்பந்தம் நள்ளிரவுக்குப் பிறகு சலீம் கைக்கு
இடம் பெயர்ந்தது.

அவன் உறக்கத்தை உதறிவிட்டுத்
தீப்பந்தத்தை உயர்த்திப் பிடித்தான்,
மற்றவர்கள் உறங்கிவிட்டார்கள்.

நள்ளிரவு கடந்தபோது,
அந்த அதிசயம் நிகழ்ந்தது.

ஒரு கஞ்சனின் பையிலிருந்து அவனுக்குத்
தெரியாமல் விழுந்துவிட்ட வெள்ளிக்
காசைப்போல, மேகத்திலிருந்து அவிழ்ந்து
விழுந்தது ஒரு துளி.

பிறகு, ஒன்றிரண்டு முன்றென்று துளிகளின்
எண்ணிக்கை தொடர்ந்தது.

மழை. மழை.
என்று கத்தினான் சலீம்.

எல்லோரும் அலறியடித்து எழுந்தோடி
வரவும் வானம் கிழிந்து கொண்டது
கொட்டோ கொட்டேன்று கொட்டத்
தொடங்கியது.

ஆனந்தம் – அதிர்ச்சி – பரவசம் –
பதற்றம்…. அவர்களுக்கு ஒன்றுமே
தோன்றவில்லை.

படபடவென்று ஆளுக்கொரு பாத்திரம்
எடுத்தார்கள், பிடித்தார்கள்.

பீப்பாய் கொண்டுவந்து தளத்தில் வைத்தார்கள்
மழை. மழை.
விட்டுவிடக்கூடாது இந்த மழையை
எடுங்கள் தார்ப்பாயை.
நான்கு முனையை நான்கு பேர் ஏந்துங்கள்
சற்றே தார்ப்பாயைத் தளரவிட்டுக்
குழி செய்யுங்கள்,
தார்ப்பாயில் நிரம்பட்டும் தண்ணீர்.

அப்படியே செய்தார்கள்,
அதுவும் வழிந்தது.

ஒதுங்காதே தமிழ்.
வா, வெளியே வா.
கொட்டும் மழையில் முழுக்க முழுக்க
நனைந்துவிடு.
உன் ஆடைகளை நனைத்துத் தண்ணீரைச்
சேமி, பிறகு பிழிந்து கொள்ளலாம்,

அவளும் அப்படியே செய்தாள்.

அவர்கள் குதித்தார்கள் குளித்தார்கள்
கைதட்டினார்கள், கத்தினார்கள்.

மழை நின்றபோது, ஏறத்தாழ அவர்களின்
எல்லாப் பாத்திரங்களும் நிரம்பியிருந்தன.

ஆனால் அவசரத்தில் சலீம் ஓர் ஓரத்தில்
சாய்ந்து நிறுத்திய தீப்பந்தம் மட்டும் மழையில்
அணைந்து கிடந்தது.

Source

Previous articleRead Thanneer Desam Ch 17
Next articleRead Thanneer Desam Ch 19

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here