Jala Deepam Part 1 Ch37 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
ஜல தீபம் முதல் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 37 காவலன்
Jala Deepam Part 1 Ch37 | Jala Deepam | TamilNovel.in
நிமிட நேரத்தில் மாறிவிடக் கூடிய நிலையற்ற ஆனந்தத்தையும் நிகரற்ற அபாயத்தையும் அளிக்கும் ஆழ்கடல் பயணமென்னும் புது வாழ்வுக்குள் இதயசந்திரன் புகு முன்பு. கனோஜி ஆங்கரே அவனைச் சந்திக்கவே செய்தார். . ஒரு குப்பி மதுவைக் குடித்துவிட்டு மல்லாந்து விட்ட மானுவல் டி காஸ்ட்ரோ சொன்ன சேதிகளைக் கேட்டதாலும் விடியற்காலையில் ஜல தீபம் கிளம்பிவிடப் போவதாலும் தான் கனோஜியைச் சந்திக்க முடியுமோ முடியாதோ என்ற யோசனையுடன் காஸ்ட்ரோவின் அறையில் படுத்துக் கிடந்த அந்தத் தமிழக வாலிபனுக்குத் திடீரென மகாராஷ்டிர ஸார்கேலிடமிருந்து கிடைத்த அழைப்பு மிதமிஞ்சிய மகிழ்ச்சியைத் தந்தது. காஸ்ட்ரோ வைப்பற்றி அந்த இரவின் முன் பகுதியில் மஞ்சு கூறிய விஷயங்களிலிருந்து பலத்த கவலையையும் கனோஜியிடம் ஓரளவு சீற்றமும் கொண்டிருந்த இதயசந்திரன் பொழுது புலருவதற்கு அரை ஜாமத்திற்கு முன்பு கடற்படைத் தலைவரிடமிருந்து அழைப்பு வந்ததும் தனது ஆத்திரத்தை ஓரளவு தீர்த்துக் கொள்ளலாமென முடிவு கட்டினான். காஸ்ட்ரோவின் அறை தடதடவெனத் தட்டப்பட்டதும் அறைக் கதவைத் திறந்த தமிழக வாலிபனை நோக்கிய மாலுமியொருவன், ‘உங்களை அழைத்து வர உத்தரவு. உடனடியாகக் கிளம்புங்கள்’ என்று கூறினான்.
“யார். உத்தரவு? அதுவும் இந்த வேளையில் என்னை எழுப்பு? என்று சீறினான் தமிழன் முதலில்.
“எந்த வேளையிலும் யாரையும் எழுப்பவோ தண்டிக்கவோ உரிமையுள்ளவர் உத்தரவு” என்றான் மாலுமி.
மாலுமியின் தோரணையிலிருந்தே அவனை அனுப்பி யது யாரென்பதை உணர்ந்ததால் உள்ளே சென்று பல் துலக்கி முகம் கழுவி மாலுமி உடையணிந்து அந்த மாலுமி யுடன் கிளம்பிய இதயசந்திரன் கனோஜியின் மாளிகைக்கு வந்து சேர்ந்தான். அங்கிருந்த சூழ்நிலை அவனுக்குப் பெரு வியப்பை அளித்ததால் சற்று சுற்றுமுற்றும் பார்த்தான். முகத்திலும் வியப்புச் சுடர்விட விடியற்காலைகூட நெருங்காத அந்த நேரத்தில் மாளிகையின் விளக்குகள் பளிச்சென்று எரிந்து கொண்டிருந்தன. டச்சுக்கார. மகாராஷ்டிர. இஸ்லாமிய மாலுமிகள் பலரும் உள்ளே போய் வந்து கொண்டிருந்தார்கள். உறங்கிக் கிடந்த அந்த நகரத்துக்கு நேர் விரோதமாக அந்த மாளிகை மட்டும் பெரும் சுறுசுறுப்பைக் காண்பித்தது. இத்தனை துரிதத்துக்குக் காரணம் என்னவென்பதை அறியாமல் மாளிகைக்குள் நுழைந்த இதயசந்திரனைக் கடற்படைத் தலைவரின் அறைக்கு வெளியே தங்கச் சொல்லிவிட்டு, அவனை அழைத்து வந்த மாலுமி மட்டும் உள்ளே சென்றான். இரண்டு விநாடிகளில் வெளிவந்த அவன் இதயசந்திரனை நோக்கி, “இங்கேயே இருங்கள். ஸார்கேல் அழைப்பார்’ என்று கூறிவிட்டுச் சென்றான்.
நீண்ட நேரம் காத்திருந்த அவன் மனம் எரிமலையாகிக் கொண்டிருந்தது. கனோஜியின் அறைக்குள் யார் யாரோ போய் வந்து கொண்டிருந்தார்கள். தன்னை மட்டும் அவர் அழைக்காதிருந்ததைக் கண்ட தமிழன், ஆங்கரே தன்னை அத்தனை நேரம் காக்க வைக்க வேண்டிய அவசியம் என்ன என்று எண்ணி எண்ணிச் சீற்றத்தின் வசப்பட்டு, ஆனால் ஏதும் செய்ய முடியாது தவித்துக் கொண்டிருந்தான். ஆங்கரேயிடமிருந்து உள்ளே வர அனுமதி வந்ததும் சீற்றத்தால் வெதும்பிக் கிடந்த சினத்துடன் உள்ளே நுழைந்தான். உட்புறத்தைக் கண்டதும் பிரமித்து நின்றான். கடற்படைத் தலைவரின் அறை என்றால் எப்படி இருக்கும் என்பதை முதன் முதலாகப் பார்த்தான்.
சுவர்களில் பல இடங்களில் கடல் வழியைக் குறிக்கும் சீலைப்படங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. சில சீலை களில் முக்கிய துறைமுகங்கள், கோட்டைகள், அவற்றின் இருப்பிடம், பலாபலம், அமைப்பு முதலியவற்றை விளக்கும் சித்திரங்கள் தீட்டப்பட்டிருந்தன. சில இடங்களில் சுவர்களில் நானாவித பெரும் துப்பாக்கிகளும் கைத் துப்பாக்கிகளும் ஆணிகளில் பல கோணங்களில் மாட்டப்பட்டிருந்தன. பல நாட்டுத் துப்பாக்கிகள், மரப்பிடி உள்ளவை. தந்தப்பிடி உள்ளவை. தங்கப்பிடி உள்ளவை. வெள்ளிப்பட்டை உள்ளவை. நீள இரும்பு வாய்களும் குட்டை குட்டையான வாய்களும் உள்ளவை. இப்படிப் பலதரப்பட்ட துப்பாக்கிகள் இருந்தன. வாட்கள் மட்டும் இரண்டே இரண்டு இருந்தன. அவை இரண்டும் மகாராஷ்டிரர் வளைவு வாட்கள்.
இவையனைத்தும் பார்த்து கனோஜியையும் பார்த்த இதயசந்திரனை நோக்கி கனோஜி “வாட்கள் இரண்டு போதுமா என்று பார்க்கிறாயா?” என்று வினவிப்யுன்முறுவல் கொண்டார்.
தன் மனத்திலுள்ளதை அப்படியே கேட்டுவிட்ட கனோஜியை வியப்படையும் விழிகளுடன் நோக்கிய இதயசந்திரன். ”ஆம்” என்ற ஒரு சொல்லை மட்டும் சொன்னான்.
“அவை இரண்டும் மகாராஷ்டிரர் வாட்கள்” என்று சுட்டிக் காட்டினார் கனோஜி.
”அது தெரிகிறது” என்றான் தமிழன்.
“துப்பாக்கிகளைப் போல் பல ரக வாட்களை வைக்க வில்லையே என்று யோசிக்கிறாயா?” என்று மீண்டும் கேட்டார் ஆங்கரே.
“ஆம்.”
“காரணம் சொல்ல முடியுமா உன்னால் “
“முடியாது. உங்கள் காரணம் உங்களுக்குத்தான் தெரியவேண்டும்.”
“காரணத்தை உன்னால் ஊகிக்க முடியாதா?”
“முடியவில்லையே.”
கனோஜி ஆங்கரேயின் பெருவிழிகளில் திடீரெனப் பெருமிதம் படர்ந்தது. அதில் ஓர் ஆனந்தம் கலந்திருந்தது. ”தமிழா! அவை மகாராஷ்டிரர் வாட்கள். வளைந்த. உடலுள்ளவை” என்று சுட்டிக் காட்டினார்.
” அது தெரிகிறது பார்க்கும்போதே” என்றான் தமிழன்.
“தமிழா! சில ஆயுதங்களில் தான் அபிவிருத்தி உண்டு. கப்பல்களின் அமைப்பு நாளுக்கு நாள் மாறிக் கொண்டும் அபிவிருத்தியடைந்து கொண்டும் வருகிறது. துப்பாக்கி களின் அமைப்பும் அப்படித்தான். இங்கிருக்கும் ஒவ்வொரு துப்பாக்கிக்கும் ஒவ்வொரு கைத்துப்பாக்கிக்கும் வித்தியாச மிருக்கிறது. வெள்ளைக்கார நாடுகள் ஒவ்வோர் ஆண்டும் புதுப்புது ரக விதவிதமான துப்பாக்கிகளைத் தயாரிக்கிறார்கள். அந்தப் புது ரகம் எது கிடைத்தாலும் நான் சேர்க்கிறேன். அவற்றில் சுட்டுப் பயிலுகிறேன். ஆனால் வாட்களில் மகாராஷ்டிரர் வாளைவிடச் சிறந்த வாளை நான் பார்த்ததில்லை. ஆங்கிலேயர் வாட்கள் நீண்டவை. கனமானவை. கரம் வலுவாயிருந்தால் தூக்கி வீசலாம். ஆனால் அதில் அதிக துரிதத்தைத் காட்ட முடியாது…. அதன் வலு அதன் எடையிலிருக்கிறது. மகாராஷ்டிரர் வாளின் வலு, அதன் வளைவில், சுலப வீச்சில், அதன் கூர்மையிலிருக்கிறது. இளநீரைச் சீவுவதுபோல் தலையை வெகு லாகவமாகச் சீவலாம்” என்று விளக்கிய ஆங்கரே அந்த வாட்களில் ஒன்றைச் சுவரிலிருந்து எடுத்துத் தடவினார்.
இதயசந்திரனுக்கு அவருக்கு ஆயுதங்களிடத்திலிருந்த ஆராய்ச்சி, மகாராஷ்டிர வாளிடத்திலிருந்த ஒரு நேசம்.
இவை மதிப்பைத் தந்தாலும், இளநீர் சீவுவது போல் மனிதர்கள் தலைகளைச் சீவலாம் என்று கூறியது பிடிக்காததால் வெறுப்புடன் கேட்டான். ”மனிதன் தலையும் இளநீரும் ஒன்றுதானா?” என்று.
கனோஜி அவன் சொற்களிலிருந்த வெறுப்பைக் கண்டு புன்முறுவல் கொண்டார். ‘இல்லை” என்று கூறிக் கடகடவென நகைக்கவும் செய்தார்.
”எதற்கு நகைக்கிறீர்கள்?” என்று சீறினான் தமிழன்.
“நீ சுட்டிக் காட்டியதற்கு”
“என்ன சுட்டிக் காட்டினேன்?”
”என் தவறை.”
“என்ன தவறு?”
”மனிதன் தலையை இளநீர் என்று சொன்னதை ஆட்சேபித்தாயல்லவா?”
“ஆம்.”
“அது சரிதான். அதிலுள்ள இன்ப இளநீர் மனிதன் தலையில் ஏது? இல்லை. கிண்டித் தின்றால் தித்திக்கும் வழுக்கைதான் மனிதன் மண்டையில் உண்டா? கிடையாது தமிழா, கிடையாது. பாதி மண்டைகளில் இருப்பது களிமண்” என்ற ஆங்கரே பெரிதாக நகைத்தார்.
அவர் நகைத்ததை அவன் ரசிக்க முடியவில்லை யாகையால், “சரி எதற்கு என்னைக் கூப்பிட்டு அனுப்பினீர்கள்?” என்று விசாரித்தான் எரிச்சலுடன்.
ஆங்கரேயின் அலட்சியப் பெருவிழிகள் அவனை விநோதமாகப் பார்த்தன. தடித்த அவர் பெரு உதடுகளும் மேலிருந்த மீசையும் அகன்று விஷமப் புன்முறுவல் கொண்டன. மயிர் அடர்ந்த காட்டுப் புருவங்கள் ஏறி இறங்கின. ”உனக்கு விடை கொடுத்து அனுப்ப அழைத்தேன்” என்று மெல்லக் கூறிய ஆங்கரே கையிலிருந்த வாளை மீண்டும் சுவரில் மாட்டினார்.
“கடற்படைத் தளபதி சாதாரண மாலுமிகளுக்கு விடை கொடுத்தனுப்பும் வழக்கமுண்டா?” என்று வினவி னான் தமிழன் கோபம் சிறிதும் தணியாமல். “இல்லை” “பின் ஏன் எனக்கு விடை கொடுத்தனுப்புகிறீர்கள்?”
“நீ இன்னும் மாலுமியாகாததால்” என்ற ஆங்கரே மேலும் கூறினார். இதயசந்திரா! மாலுமியெனும் புது வாழ்வில் கடல் பயணப் புது வாழ்வில், இனிமேல் தான் தீ புகப்போகிறாய். நீ சிறந்த மாலுமியாக வந்தாலும் வரலாம். அல்லது அதற்கு லாயக்கில்லையென்று உன்னை காஸ்ட்ரோ தள்ளிவிட்டாலும் தள்ளிவிடலாம். விளைவு எனக்குத் தெரியாது. அது உன்னைப் பொறுத்தது. உன் உழைப்பைப் பொறுத்தது. உன் புத்தி கூர்மையைப் பொறுத்தது. எல்லாவற்றுக்கும் மேலாக உனக்குக் கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பொறுத்தது. திடீரென உன் கப்பல் தாக்கப்படலாம். அப்பொழுது நீ காட்டும் திறமை யில் மற்ற மாலுமிகள் மயங்கலாம். அப்படி மயங்கினால் யார் தயவும் இல்லாமல் நீ தலைவனாகிறாய்… உன் தவறால் கப்பல் எதிரிகள் சிறையில் வாடலாம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நல்ல புத்திக்கூர்மையும் தைரியமும் உள்ளவனுக்குக் கடல் அளிக்கும் வாய்ப்புகள் அனந்தம். உன் தைரியத்தில், உனது உறுதியில், திறமையில் எனக்கு நம்பிக்கையிருக்கிறது. தவிர வாழ்க்கையில் உனக்குக் குறிக்கோள் இருக்கிறது. ஒரு பெண்ணுக்குச் சேவை செய்ய, ஒரு தாய்க்கு உதவ நீ தமிழகத்திலிருந்து புறப்பட்டுப் பல ஆபத்துக்களில் சிக்கி மகாராஷ்டிரம் வந்திருக்கிறாய். இன்னும் அந்த முகவெட்டுக் காயக் காரனைப் பிடிப்பதில் கருத்துடனிருக்கிறாய். வாழ்வில் குறிக்கோள் உள்ளவன் சாவதில்லை. தோல்வியடைவ தில்லை
“தங்கள் பாராட்டுதலுக்கு நன்றி” என்று கூறித் தலை தாழ்த்திய இதயசந்திரன், ”எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது” என்றான்.
கனோஜியின் பெருவிழிகள் அவனை நோக்கின. அங்கிருந்த ஆசனத்தின் கைப்பிடியில் அவர் ஏறி உட்கார்ந்து கொண்டார். “கேள்” என்பதற்கு அறிகுறி யாகக் கையை அசைத்தார்.
“காஸ்ட்ரோ பெண்களைக் கற்பழிப்பலன், கொலைகாரன் என்று கேள்விப்பட்டேன்…” என்றான் இதய சந்திரன்.
ஆமென்பதற்கு அறிகுறியாகத் தலை அசைத்தார் ஆங்கரே.
”இன்று அறையில் அவன் பெரும் குடிகாரன் என்பதையும் உணர்ந்தேன்.”
அதையும் ஆமோதித்துத் தலையசைத்தார் ஆங்கரே. ”அப்படியிருக்க, அவனை மஞ்சுவின் கப்பலில் எதற்காக அனுப்புகிறீர்கள்? அதுவும் உபதலைவனாக” என்று வினவினான் இதயசந்திரன்.
அப்பொழுதுதான் வாயைத் திறந்தார் கனோஜி. “அவன் கப்பலை நடத்துவதிலும் கடற்போரிலும் இணையற்றவன். மஞ்சுவின் கப்பல் தாக்கப்பட்டால் அதைக் காக்கத் திறமையுள்ளவன் டி காஸ்ட்ரோ ஒருவன் தான்” என்று மெல்லக் கூறினார் கனோஜி.
”மஞ்சு பெண்ணல்லவா? இவன் ஒழுக்கம் கெட்டவனல்லவா?” என்றான் தமிழக வாலிபன்.
”இரண்டும் உண்மை” என்று ஒப்புக் கொண்டார் ஆங்கரே சர்வ சகஜமாக.
“அப்படியானால் இந்தப் புலியின் கையில் பெண்ணை ஒப்புவிக்கலாமா?” என்று வினவினான் தமிழன்.
”இதயசந்திரா!” என்று மெல்ல அழைத்தார் ஆங்கரே.
“என்ன தளபதி?”
”பெண்கள் இருக்கவேண்டிய இடம் எது?”
“வீடு.’’
”அதைவிட்டு ஒரு பெண் கடலில் செல்ல விரும்பு கிறாள், மாலுமி வாழ்க்கையை மேற்கொள்கிறாள்…”
”உம்.”
‘’அதில் வரும் அபாயங்களையும் அவள் மேற்கொள்ள வேண்டியதுதானே?”
இந்தக் கேள்விக்குப் பதில்ஒரு வி என்ன சொல்வதென்று தெரியாததால் இதயசந்திரன் னாடி அவரை உற்று நோக்கினான். “மஞ்சு உங்கள் பெண்ணல்லவா?” என்றும் வினவினான்.
“ஆம், இங்கிருக்கும்போது!”
“கடலில்?”
“மற்றவர்களைப்போல் அவளும் ஒரு மாலுமி.”
” ”ஆகவே
”அதன் விளைவுகளை அவள் எதிர் நோக்க வேண்டியதுதான், அனுபவிக்கவும் வேண்டியது தான்.”
”சாதாரணமாக வரும் விளைவுகளை எதிர் நோக்கட்டும். நீங்களாகக் காஸ்ட்ரோவைப் போன்ற அபாயத்தைப் புகுத்த வேண்டாமல்லவா?”
“அதைத் தவிர்க்க முடியாது. ஜலதீபத்தை இயக்க, காக்க, காஸ்ட்ரோ தேவை.”
“மஞ்சுவைக் காக்க?”
இந்தச் சமயத்தில் கனோஜி பதில் கூறவில்லை. உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து தூரத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு மரப் பெட்டியை நோக்கிச் சென்றார். அதைத் திறந்து அதற்குள்ளிருந்து ஒரு கைத் துப்பாக்கியை எடுத்து வந்தார். மற்றக் கைத்துப்பாக்கி களைவிட அது பெரியதாயிருந்தது. அதன் இரும்புக் கைப் பிடியில் தங்க வெள்ளிப் பட்டைகள் பொருத்தப் பட்டிருந்தன. அதை எதிரேயிருந்த மேஜைமீது வைத்தார். “இது உனக்கு” என்றும் கூறினார்.
”இது…’ என்று சந்தேகத்துடன் இழுத்தான் தமிழன்.
”ஒரு போர்ச்சுக்கீஸியனிடமிருந்து காஸ்ட்ரோ திருடியது” என்றார் கனோஜி.
”எனக்கு எதற்கு இது?” என்று வினவினான் இதயசந்திரன்.
“மஞ்சுவிடம் சரியாகக் காஸ்ட்ரோ நடந்து கொள்ளா விட்டாலோ கப்பலை எதிராளியிடம் காட்டிக் கொடுக்க முற்பட்டாலோ அவனை இதால் சுட்டுவிடு” என்று சர்வ சகஜமாகக் கூறினார் ஆங்கரே.
இதயசந்திரன் மலைத்து நின்றான். கனோஜி அவனருகில் வந்து அவன் தோளில் தனது இரும்புக் கையை வைத்தார். ”மஞ்சுவுக்குக் காவல் தேவையில்லை தமிழா! இருப்பினும் காஸ்ட்ரோ உடன் வருவதால் இந்த எச்சரிக்கை அவசியமாகிறது. அவன் எந்தத் தவறு செய்தாலும் தயை தாட்சண்யமின்றிச் சுட்டுவிடு” என்று திட்டமாக மீண்டும் ஒருமுறை வலியுறுத்தவும் செய்தார்.
”இது அநீதியல்லவா?” என்றான் இதயசந்திரன்.
“கடலின் நீதி நிலத்தின் நீதிக்குப் புறம்பானது. உன் புது வாழ்வில் நீயே புரிந்து கொள்வாய். போய் வா. எதை மறந்தாலும் நீ மஞ்சுவின் காவலன் என்பதை மட்டும் மறக்காதே. அவளைக் காக்க எதையும் செய்யத் தயங்காதே. நீதி, தயை, தாட்சண்யம் எல்லாம் அவள் நலனுக்குப் பிறகுதான் என்பதை நினைவில் வைத்துக் கொள்” என்று கூறி அந்தப் புதுக் கைத்துப்பாக்கியை எடுத்து அவன் இடைக் கச்சையில் செருகினார் ஸார்கேல். “இனி நீ போகலாம்” என்பதற்கு அறிகுறியாக வாயிற் படியைச் சுட்டியும் காட்டினார்.